Sunday, September 11, 2011

9/11 - என் நினைவுகள்


 
அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் இருக்கும். செப்டம்பர் 11 - பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு காலை வேலையில், சுமார் ஏழு மணிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு பாஸ்டன் நகரப் போக்குவரத்தில் கலந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் அனைவரும் அவரவர் திசையில் பயனித்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது பார்த்துகொண்டிருந்த வேலையில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தேவையான வேலையை முடித்து கொடுத்துவிட்டு திரும்ப வேண்டி இருந்தது. அன்று போகவேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணிக்க வேண்டும். சுமார் எட்டரை மணிக்கு அந்த அலுவலகத்தை அடைந்து சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கினேன். மணி அப்போது காலை 10:30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த அறையில் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எனக்கு பின்னால் இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர் இருக்கையில் இருந்து துள்ளி, 'ஹேய், லுக் ஹியர்' என்று அவசரமாக அவருடைய கம்ப்யுடர் திரையை பார்க்க அழைத்தார். உடனே சென்று பார்த்தால், அவர் காட்டிய புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களும் இடிந்து பாதி தெரிந்தது. அதன் மேலிருந்து பெரிய புகை மூட்டம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த போதே என்னுடைய கம்புயடரில் இருந்து MSN Messanger-ல் இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். உனக்கு எல்லாம் ஓகே தானே என்று விசாரித்தார். அதற்குள் மற்றொரு இந்திய நண்பர் சாட் செய்தார். அவருடைய கசின் நியுயார்க்கில் வேலை செய்வதாகவும், அவர்களை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை, இது தான் அவர்கள் போன் நம்பர், கொஞ்சம் அவர்களை அழைத்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க முடியுமா என்று கூறினார். அவருக்கு இதோ உடனே செய்கிறேன் என்று கூறி அந்த நம்பரை அழைத்துப் பார்த்தேன், ஆனால் லைன் போகவில்லை. என்னாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் கூறினேன். வீட்டிற்கு அழைத்து வெளியில் எங்கும் போகவேண்டாம் என்று கூறி விட்டு, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அலுவலகத்தில் இருந்து கிளம்ப விருப்பம் உள்ளவர்கள் கிளம்பலாம் என்று அறிவித்தனர்.

அங்கிருந்து கிளம்பி திரும்பவும் பாஸ்டன் நகரை நோக்கி காரை செலுத்திகொண்டிருந்தேன். வழக்கமாக டோல் (Toll) வசூலிக்கும் இடங்களில் அன்று இலவசம் யாரும் நிற்கத் தேவையில்லை என்று அறிவிப்பு கண்ணில் தென்பட்டது. நிலைமையின் விஸ்தீரணம் அப்போது நன்றாகப் புரிந்தது. வீட்டிற்கு வந்து தொலைக்கட்சியில் செய்திகள் பார்த்து ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்திருகிறார்கள் என்று தெரிந்த போது மனதை ஏதோ செய்தது. இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, நீங்க நல்லா இருக்கீங்க இல்லே என்று கேட்டு பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு சிலர் பேசாமே நீங்க இங்கே கிளம்பி வந்துருங்க என்று கூட கூறினர். எதாவது ஒரு இடத்தில், உயிருக்கு உத்திரவாதம் என்று மட்டும் இருந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று நினைத்துகொண்டு, அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று, அதெல்லாம் எதுக்கு இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி அவர்களை சமாதனப்படுத்தினேன். இன்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய நிகழ்வுகள் மனதை ரீங்காரமிட்டபடி இருந்ததால் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



Saturday, September 10, 2011

வாழ்க்கை



சுகமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து
ஐம்பது இன்ச் டிவியில் ஆங்கிலப்படம்,

மாலை சிற்றுண்டி விழுங்கி
சூடான காபியை ரசித்து குடித்து,

காரில் ஏறி அமர்ந்து
ஏ.சி. போதாமல் சற்றே கூட்டி,

வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க
இசையின் ஒலியைச் சற்று அதிகப்படுத்தி,

மிதமான வேகத்தில் செல்லும்போது
கண்ணில் பட்டது அந்த காட்சி,

சாலையோரத்தில் தாயின் மடியில்
பசியால் கதறும் குழந்தைக்கு பின்னே,

தலைவர் படத்தின் ரிலீஸ்-போஸ்டர்
மனதில் ஒரு உற்சாக சிலிர்ப்பு,

எவ்வளவு செலவானாலும் சரி
முதல் நாளே பார்த்துவிட வேண்டும்.


Thursday, September 8, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #2



நியூட்டன் மரத்தில் இருந்து ஆப்பிள் விழுந்ததும் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பது நம் பலருக்குத் தெரியும். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆப்பிள் தரையை நோக்கி இழுக்கப்பட்டது. அதன் விசை பூஜ்யத்தில் இருந்து ஏதோ ஒரு வேகத்திற்கு உயர்ந்து பின்னர் தரையை நோக்கி வந்து விழுந்தது. ஏதோ ஒரு விசை ஆப்பிளை இழுத்திருகிறது, இந்த விசை தான் ஈர்ப்பு விசை.


உங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கும் சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கும் இடையே கூட ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கு அருகே இருக்கும் மேஜை, நாற்காலி இப்படி பல பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. அப்படி என்றால் ஏன் நம்மை சூரியனோ, சந்திரனோ அல்லது மற்ற கோள்களோ தன்னை நோக்கி இழுத்துகொள்ளவில்லை. ஏன் பூமிலேயே இருக்கிறோம். ஏனென்றால் பூமியின் ஈர்ப்பு விசை மற்றவற்றின் ஈர்ப்பு விசையை விட நம்மேல் அதிகமாக இருப்பதால் தான். பூமியைப் பொறுத்தவரை அது தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி இழுக்க முயற்சிகிறது. அதனால் தான் பூமியில் எந்தப் பகுதியிலும் ஒருவர் நிற்க முடிகிறது. அப்படி என்றால் விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி செல்கிறார்களே அது எப்படி ? அவர்கள் ஈர்ப்பு விசையை தாண்டிப் போகவும் இல்லை அங்கு ஈர்ப்பு விசை இல்லாமலும் இல்லை. விண்வெளி வீரர்கள் தொடர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் எடையற்றை தன்மையை உணர்கிறார்கள். இதேபோலத்தான் செயற்கை கோள்களும் பூமியில் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றி செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.

நியூட்டன் கூறுவது என்னவென்றால், இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றின் நிறையையும் அவையிடையே உள்ள தூரத்தையும் பொருத்ததாகும். இந்த ஈர்ப்பு விசையே பூமி சூரியனை சுற்றி வருவதற்கும், சந்திரனை பூமி சுற்றி வருவதற்கும் காரணம்.  பிரபஞ்சத்தை பற்றிய நம் புரிதலுக்கு பெரிதும் உதவிய நியூட்டன் வகுத்த மூன்று விதிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதால், அவற்றை இங்கு சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

முதல் விதி:

பந்து பாட்டுக்கு சும்மா இருக்குது, அதை ஏன் எட்டி உதைக்கணும்

இது எளிமையான விதி. அசைவில் இருக்கும் ஒரு பொருள் அதன் அசைவு நிலையிலேயோ, ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருள் அதன் ஒய்வு நிலையிலேயோ தொடர்ந்து இருக்கும். மற்றொரு விசை வெளியில் இருந்து இந்த பொருளின் மீது செலுத்தப்பட்டால் தான் அதன் நிலை மாறும்.

இரண்டாம் விதி:


இதுதான் விதி

இந்த விதியை ஒரு சிறிய கதை மூலம் விளக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பயணம் செய்யும் பஸ் பிரேக் டவுன் ஆகி உங்களை இறங்கி கொஞ்சம் தள்ள சொல்லி இருக்கிறார்களா. அப்படி தள்ளி இருந்தால் அது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது ஒய்வு நிலையில் இருக்கும் பஸ்ஸை நகரச் செய்ய பல பேர் சேர்ந்து விசையை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு காரை தள்ளுவது எப்படி இருக்கும். அதுவும் சற்று சிரமம் தான் ஆனால் பஸ்ஸை விட சற்று சுலபமாக இருக்கும். சரி இப்போது பஞ்சராகி நின்று போன சைக்கிளை தள்ளிக்கொண்டு போவது எப்படி இருக்கும். ஓரளவு சுலபம் தான், தனியாளாக தள்ளிவிடலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன, ஏன் பஸ்ஸை பலர் சேர்ந்து சிரமப்பட்டு தள்ள வேண்டி இருக்கிறது, அதே நேரத்தில் சைக்கிளை மிக எளிதாக ஒருவராலேயே தள்ள முடிகிறது. அதற்க்கு முக்கிய காரணம் அந்த பொருளின் நிறை ஆங்கிலத்தில் மாஸ் (mass) என்கிறார்கள். பஸ்சின் நிறை சைக்கிளை விட பல மடங்கு அதிகமானது. அதை நகர வைக்க அல்லது முடிக்கம் கொடுக்க அதிக விசை தேவைப்படுகிறது. ஒரு முக்கிய விஷயம் இங்கே கவனிக்கவும். நிறை என்பது ஒரு பொருளின் அளவு அல்ல. அதாவது பஸ் பெரிதாக இருக்கிறது அதனால் அதிக நிறை கொண்டது என்று அர்த்தம் இல்லை.  ஒரு பெரிய பஞ்சு மூட்டையை சற்று சுலபமாக தூக்கி விடலாம். பெரிய பஞ்சு மூட்டை என்றாலும் அதன் நிறை குறைவு, அதனால் சிறிது விசை கொடுத்தாலே அதை தூக்கலாம் அல்லது நகர்த்தி விடலாம். சரி புரிகிறது, அதிக எடை உள்ள பொருளை நகர்த்த சிரமப்பட வேண்டி இருக்கிறது,  எடை குறைவாக இருந்தால் எளிதாக நகர்த்தி விடலாம். அதை விட்டு விட்டு நிறை என்று ஏன் குறிப்பிடுகிறேன். எடையும் நிறையும் ஒன்றா அல்லது வித்தாயசம் உள்ளதா என்ற கேள்வி உங்களுக்கு இதற்குள் தோன்றி இருந்தால், என் சார்பில் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள். எடையும் நிறையும் ஒன்றல்ல. நிறை என்பது ஒரு பொருளின் உள்ளே எவ்வளவு விஷயம் (ஆங்கிலத்தில் matter) உள்ளது என்கிற அளவு. எடை என்பது அந்தப் பொருளை ஈர்ப்பு விசை எவ்வளவு வலுவாக இழுக்கிறது என்பதாகும். நீங்கள் பூமியில் இருந்து, உங்கள் எடையை ஒரு எடை பார்க்கும் மெசினில் பார்த்து விட்டு, பின்னர் சில நாட்கள் பயணித்து சந்திரனில் இறங்கி அதே எடை பார்க்கும் மெசின் வைத்து உங்கள் எடையைப் பார்த்தீர்கள் என்றால் அது சற்று குறைவாகக் காட்டும். அதற்க்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை விடக் குறைவு. அதனால் தான் சந்திரனில் நடக்கும் விண்வெளி வீரர்கள் சற்று குதித்து குதித்து நடக்கின்றனர். சுருக்கமாக, உங்கள் மொத்த உருவம் நிறை. அது எந்த இடத்திலும் மாறது. ஆனால் எடை நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். இவ்வளவு ஏன், விண்வெளியில் பயணிக்கும் போது எடையே இல்லாமல் உணர்வீர்கள். 

நிலவில் மனிதன் ஓடுவதை இந்த வீடியோவில் பாருங்கள்.



நியூட்டன் இரண்டாம் விதி என்ன சொல்கிறது என்றால், நிறை அதிகமுள்ள ஒரு பொருளை முடிக்க (அல்லது நகர்த்த என்று எடுத்துக்கொள்ளலாம்) அதிகமான விசை தேவைப்படும். அதற்கு ஒரு சூத்திரமே கொடுத்திருகிறார் நியூட்டன்.

F=ma

இதில் 'm' என்பது பொருளின் நிறை, 'a' என்பது முடிக்கம். F என்பது விசை.

மூன்றாம் விதி:

மிக எளிமையான விதி. சற்று தத்துவார்த்தமானதும் கூட. ஒவ்வொரு விசை அல்லது இயக்கத்திற்கும் அதே அளவு சமமான எதிர்வினையான இயக்கம் இருக்கும். சிறிய உதாரணம், நீச்சல் அடிக்கும் போது கையால் நீரை பின்னோக்கி தள்ளினால் முன்னால் செல்கிறோம்.

சரி, நியூட்டன் மூன்று விதிகளை பார்த்தாகிவிட்டது, இனி பிரபஞ்சத்திற்கு வருவோம். நியூட்டன் புவி ஈர்ப்பு தத்துவத்தின் படி பூமி மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றவற்றை ஈர்த்துகொண்டிருகிறது. இப்படி இருக்கையில் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு என்று இருந்தால், ஒவ்வொரு பொருளிலும் உள்ள ஈர்ப்பு விசை மற்றதை ஈர்த்து மொத்த பிரபஞ்சமே ஓன்று சேர்ந்து நிலை குலைந்துவிடும். இது நடக்கவில்லை, எனவே பிரபஞ்சம் முடிவில்லாதது என்று கருதினார். இந்த பிரபஞ்சம் முடிவில்லாதது என்பதெல்லாம் சரி, இதற்கு ஆரம்பம் என்று ஒரு இருக்கவேண்டுமே அது என்ன என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். அதற்கு பதில் தான் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory). இதைப்பற்றி விரிவாக அடுத்தப்பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:

பிரபஞ்சப் புதிர்கள் #1

Wednesday, September 7, 2011

மனசு - 55 வார்த்தை சிறுகதை



ஏண்டா இப்படி சின்னக் குழந்தைங்க மாதிரி அடிசுக்குறீங்க...நீங்களே பாருங்க வசந்தி அக்கா - பன்னெண்டு வயசுக்கு மேலே ஆச்சு, ரெண்டும் இப்படி அடிச்சிகிட்டு இருக்குதுங்க.

நீ ஒன்னும் கவலைப்படாதே, அதெல்லாம் போகப்போக சரி ஆயிடும்... சரி நீ சொல்லு, உன்னைப் பத்தி இப்படிப் பேசி இருக்கா அவ, சும்மாவா விட்டே நீ .

அதெப்படி விட முடியும், அவ வீட்டுக்கே போய் நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்துட்டேன், ஆனா நான் சொல்லவே இல்லைன்னு சாதிக்கிறா அவ.


USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவரா நீங்கள்...



USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி. கனக்டிகட் தமிழ் சங்கத்தின் இருபதாவது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னிசையுடன் கொண்டாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இசை சங்கமம் 2011, ஜெயா டிவி புகழ் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்று கலக்க போகும் இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை அக்டோபர் 8 -ம் தேதி கனக்டிகட்டில் உள்ள  Glastonbury High School -ல் நடக்கவிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

http://www.cttamilsangam.org/images/Deepavali_Flyer_2011.pdf




Saturday, September 3, 2011

கூட்டாஞ்சோறு - Sep 03, 2011

நாட்டு நடப்பு:

இன்னும் சில வாரங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களின் விநியோகம் ஆரம்பித்து விட இருக்கிறார்கள். இது உண்மையிலேயே ஏழை எளியவர்களுக்கு மட்டும் சென்றடைந்தால் நல்லது தான். மன்னன் படத்தில் கவுண்டமணி, 'செயினையும், மோதிரத்தையும் உள்ளே வாங்கி வெளியே வித்துர வேண்டியதுதான்' என்று சொல்வது போல, பல இடங்களில் வசதி படைத்தவர்களும் இந்த ஆட்டத்தில் நுழைந்து வாங்கிய பொருட்களை வெளியே பாதி விலைக்கு விற்று விடுகிறார்கள். அரசின் கேபிள் திட்டமும் அமலுக்கு வந்துவிட்டது, 150 முதல் 200 ருபாய் வரைக் கட்டிவந்த கேபிள் சந்தா 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஏற்ப்படும் நஷ்டம், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கா இல்லை தமிழக அரசுக்கா என்று புரியவில்லை.

காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் ஏன் இப்போது சமீபத்தில் தாத்தப் பாட்டி தினம் என்று கூட மதுரையில் கொண்டாடி இருக்கிறார்கள். இது போன்ற வரிசையில் சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் என்று ஒரு தினம் இருப்பதாக இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் மாணவர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றினர். உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையை பாதுகாப்பது நல்லது தான்.  நிறைய குப்பைதொட்டிகளை நிறுவினால் நன்றாக இருக்கும். இந்த அவசர உலகில், குப்பைத் தொட்டி அருகில் இருந்தாலே போய் போட சோம்பேறித்தனம் கொண்ட நம் மக்கள், குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று தேடித் போய் போடப் போவதில்லை. எப்படியோ மெரீனா சுத்தமானால் சரி.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே கிழே கண்டெடுத்த பையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை நான்கு நண்பர்கள், போலீசார் வசம் ஒப்படைத்தார்கள் என்று செய்தியில் படித்தேன். இந்தக் காலத்தில் இவ்வளவு நேர்மை இருப்பது, ஒரு பெரிய விஷயம். அதுவும் யாராவது ஒருவர் கண்டெடுத்து ஒப்படைத்து இருந்தால் கூட பரவாயில்லை, நான்கு நண்பர்களும் சேர்ந்து ஒரு மனதாக இந்த காரியத்தை செய்திருப்பது அவர்கள் நல்ல மனதை காட்டுகிறது. இந்த செய்தியை படித்ததும், ஒவ்வையின் மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

அறிவியல் பிட்ஸ்:

சும்மா கார்லே பறக்குறானே என்று நிஜமாகவே காரில் பறக்கும் ஒருவரைப் பற்றிச் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆம் டெர்ராபுஜியா (Terrafugia) என்ற அமெரிக்க கம்பெனி அடுத்த வருடத்தில் இந்த கார் சந்தைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. விலை ருபாய் ஒரு கோடிக்கு மேல் எகிறுகிறது. அதற்குள் நூறு பேருக்கு மேல் இந்தக் காரை வாங்க முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதை எந்த ஒரு நேர் சாலையிலும் ஒட்டி டேக் ஆப் செய்ய முடியும். அதே போல தரை இறங்கியவுடன் பதினைந்து நொடிகளுக்குள் இறக்கைகளை மடக்கிவிடலாம். விண்ணில் பறக்கும் போது அதிகபட்சம் மணிக்கு 115 மைல்கள் வேகத்திலும், தரையில் ஓடும் போது அதிகபட்சம் 62 மைல்கள் வேகத்திலும் செல்லக்கூடியது. இதற்கு பெட்ரோல் சாதாரண பெட்ரோல் பங்குகளில் நிரப்பிக் கொள்ளலாம். இதை ஓட்ட சிறு விமானங்களை ஓட்டத் தகுதி பெற்ற லைசென்ஸ் தேவை. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பறக்கும் காரை பாருங்கள்.


சினி பட்டறை:


சிம்பு தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக கூறும் ரகத்தை சேர்ந்தவர். மங்காத்தா படத்தை முதல் நான் முதல் ஷோ சென்னை சத்யம் திரைஅரங்கில் சென்று விசிலடித்துப் பார்த்தாராம். பார்த்துவிட்டு வந்தவுடன் தன் பேஸ்புக் இணையதளத்தில் 'தல படத்தில் பணத்தை மட்டும் கொள்ளை அடிக்கவில்லை, மொத்த படத்தையும் ஆக்கிரமித்து எங்கள் மனதை கொள்ளை அடித்துவிட்டார், தல டா, மங்காத்தா டா' என்று குறிபிட்டிருக்கிறார்.


'த்ரீ இடியட்ஸ்' தமிழ் ரீமேக்கான நண்பன் திரைப்படத்தை, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இவ்வளவு பெரிய இயக்குனர் ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தது பெரிய விஷயம் தான். எந்திரன் படப்பிடிப்பின் டென்ஷனுக்கு இடையே 'த்ரீ இடியட்ஸ்' பார்த்து மிகவும் பிடித்து போனாதால் இதற்கு சம்மதித்தாராம். படம் ரஷ் பார்த்தேன் சூப்பரா வந்திருக்கு என்கிறார். நாங்களும் பார்க்க காத்திருக்கிறோம் சார். இங்கே சில நண்பன் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்பட்டங்கள் காணலாம்.




கருத்து கந்தசாமி:

கடவுள் தான் நமக்கு உறவினர்களை கொடுத்தார்.
நன்றி கடவுளே, எங்கள் நண்பர்களை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.

ரசித்த வீடியோ:




Friday, September 2, 2011

வாயேஜர் 1 விண்கலம்

வாயேஜர் 1 - கடந்த முப்பத்தி நான்கு வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் விண்கலம். 1977 -ம் ஆண்டு சுமார் 700 கிராமே எடையுள்ள இந்த விண்கலம், சூரிய குடும்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றளவில் பூமியில் இருந்து செலுத்தபடும் கட்டளைகளைப் பெற்றுகொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 114,155 மைல்கள் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும், இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறுகிறார்கள். மனிதத் தயாரிப்பில் அதிக தூரம் பயணித்த ஒரே சாதனம் இந்த வாயேஜர் 1 விண்கலம் தான். இதுவரை 100 AU (Astronomical Unit) மேல் தாண்டி பயணித்துக் கொண்டிருகிறது. ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு, சுமார் 93 மில்லியன் மைல்கள். இந்த வேகத்தில் பயணிக்கும் வாயேஜர் 1, இன்னும் ஓரிரு வருடங்களில் சூரிய குடும்பத்தின் எல்லையை கடந்து வெளியே சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலும் இந்த விண்கலம் தான் பூமிக்கு அனுப்புகிறது. வாயேஜர் 1 எடுத்த புகைப்படங்கள் சில இங்கே...



1977 -ல், பூமியையும் சந்திரனையும் சேர்த்து ஒன்றாக எடுத்த முதல் புகைப்படம் 

1979 -இல் எடுத்த ஜுபிட்டர் கிரகத்தின் புகைப்படம். ஜுபிடரின் ஒரு சந்திரனையும், மற்றொரு சந்திரனின் நிழலையும் காணலாம்  

1981 -ல் எடுத்த சனி கிரகத்தின் புகைப்படம் 


இந்தப் படம் மிகவும் முக்கியமானது. பூமியில் இருந்து சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படம். இவை சூரியனில் இருந்து ப்ளுடோவை விட அதிக தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.

வாயேஜர் ப்ளுட்டோவை மட்டும் படம் பிடிக்க முடியவில்லை. திருவாளர் ப்ளுட்டோ அவர்கள் தன் 248 வருட சுற்றுப் பாதையில் எங்கேயோ தள்ளி இருந்தார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...