Tuesday, May 24, 2011

துரோக சங்கிலி - சிறுகதை


இது சிறுகதை கிடையாது. ஆனா சிறுகதை மாதிரி....என்ன ரொம்ப குழப்பமா இருக்கா. எனக்கு கதை மாதிரி தோன்றி சில நிகழ்வுகளை இங்கு எழுதி இருக்கிறேன். படித்திவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

இனி இதோ துரோக சங்கிலி உங்கள் பார்வைக்கு.....
-------------------------------------------------------------
தருண், காலேஜ்லே படிக்கும் போது உன்னை காதலிச்சது என்னமோ உண்மை தான். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்படி அடிக்கடி மீட் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணாதே. என்னோட அப்பா அம்மா கட்டாயத்தினாலதான் அவங்க சொன்னவரை கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் மேலே உயிரையே வெச்சு இருக்குற அவருக்கு நான் உண்மையா இருக்கேன். என்னோட ஹஸ்பண்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்கமாட்டார். என்னை இப்படி  கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை பண்ணாதே. உனக்கு மொத்தமா எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு, எப்படியாவது நான் கொடுக்குறேன்.

அதை கேட்டு தருண் கடகடவென்று சிரித்தான். ப்ரியா நீ ஒரு தங்க முட்டை போடுற வாத்து, உன்கிட்டே அப்பப்போ வந்து எனக்கு தேவையானதை வாங்கிட்டு போறது தான் எனக்கு பிடிச்சிருக்கு, இப்படி ஒரே பேமன்ட் கொடுத்து என்னை கழட்டி விட பாக்காதே.

ப்ளீஸ் தருண், என்னாலே ஒவ்வொரு தடவையும் எதாவது பொய் சொல்லி பணம் கேக்க முடியாது.  என்னோட வாழ்கையை கெடுக்காதே. என்னை தயவு செஞ்சு விட்டுரு.

இதோ பாரு ப்ரியா,  இந்த பணத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்டு தானே என்னோட காதலை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனே, என்னை விட்டுட்டு போகதேன்னு உன்னை நான் எவ்வளவு கெஞ்சினேன். நீ மட்டும் எனக்கு கிடைச்சு இருந்தா, எனக்கும் ஒரு  குடும்பம் வாழ்க்கைன்னு இருந்திருக்கும். நீ எப்போ உங்க வீட்டுல பாத்த பணக்கார மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்க படிப்பை பாதில நிறுத்திட்டு போனியோ அன்னிக்கே என்னோட படிப்பும் போச்சு. படிப்பு இல்லாம ஒரு நல்ல வேலை இல்லாம,  இன்னிக்கு நான் இந்த நிலைமைலே நிக்கறதுக்கு நீயும் ஒரு காரணம். உன் புருஷனுக்கு தான் கோடி கோடியா சொத்து இருக்கே, அதுலே இருந்து எனக்கு தேவை படும்போது கொஞ்சம் பணம் கொடுகறதுலே நீ ஒன்னும் குறைஞ்சு போக  மாட்டே. அப்பிடி குடுக்கலேனா  நாம எடுத்துகிட்ட போட்டோஸ், லெட்டர் எல்லாம் உன் புருசனுக்கு அனுப்பிருவேன்.  அதான் எப்பவும் பாதுகாப்பா அதை எல்லாம்  என் கையிலேயே வெச்சுட்டு சுத்துறேன் என்று போட்டோஸ், லெட்டர் அடங்கிய  கவரை எடுத்து ப்ரியாவின் முன்னே ஆட்டினான்.
அய்யோ தருண், அப்பிடி எல்லாம் பண்ணிடாதே,  இந்தா இப்போதைக்கு இதை வச்சுக்கோ, என் ஹஸ்பண்ட் வர நேரம் ஆச்சு, நீ சீக்கிரம் கிளம்பு என்று அவசரமாக கூறினாள் ப்ரியா.

என்ன ப்ரியா, நாம லவ் பண்ணும்போது என் கூடவே இருக்கணும்னு சொல்லுவே, இப்போ இப்படி துரத்துறியே, சரி நான் அப்புறமா உன்கிட்டே போன்லே பேசுறேன் என்று கூறி கதவருகே சென்றதும், அந்த ஆட்டோமாடிக்  டோர் வெளியில் இருந்து யாரோ சாவி போட்டு திருகியதால் ப்ளக் என்று ஓபன் ஆனது.

அடுத்த வினாடி உள்ளே நுழைந்தவனை பார்த்து பிரியா அவசரமாக, எ..எ...என்னங்க சீக்கிரம் வேலை முடிஞ்சிருச்சா, அதுக்குள்ளே வந்துடீங்க, இது என்னோட காலேஜ்லே கூட படிச்ச தருண் என்று அறிமுகப்படுத்தினாள்.

போதும் நிறுத்து பிரியா, இவ்வளவு நேரம் வெளிலே இருந்து நீங்க பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். இந்த விஷயத்தை  என்கிட்டே முன்னாடியே ஏன் நீ சொல்லலே, இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விட கூடாது. டேய் யாருக்கு தாண்டா பழைய காதல் இல்லை. நீ உண்மையா ப்ரியாவை காதலிச்சு இருந்தீனா இப்படி அவளை தொல்லை பண்ணுவியா. மரியாதையா அந்த போட்டோஸ், லெட்டர் எல்லாத்தையும் கொடுத்துட்டு இங்கே இருந்து போயிரு, என்று கூறியபடி தன் கைபெட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்து தருண் முகத்துக்கு நேரே நீட்டினான்.

பயத்தில் தருணின் முகம் வெளிறியது, சார் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க, இந்தாங்க எல்லாத்தையும் நீங்களே வெச்சுக்கோங்க, நான் இங்கே இருந்து போய்டுறேன் என்று தன் கையில் இருந்த கவரை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு விறுவிறுவென்று  திரும்பி பார்க்காமல் வெளியில் சென்றான்.

தருண் வெளியே சென்றதும் பெரிதாக புன்னகைத்த பிரியா, இப்ப தான் நிம்மதியா இருக்கு கிஷோர். எப்படி இந்த தருண் கிட்டே இருந்து தப்பிபோம்னு ஒரே கவலைலே இருந்தேன். நல்ல வேலை நம்ம பிளான் பண்ணினா மாதிரி, அவர் பிசினஸ் விஷயமா வெளிநாடு போய் இருக்குற நேரத்துல,  நீ  என் ஹஸ்பண்ட் மாதிரி நடிச்சு அவன் கிட்டே இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டே. அந்த கவரை இங்கே கொடு நான் கிழிச்சு போடுறேன்.

இல்லை பிரியா, இதை வீட்டுகுள்ளேயே வெச்சு கிழிச்சு போடுறது அவ்வளவு சேப் கிடையாது. நான் கொண்டு போய் வெளிலே எங்காவது டிஸ்போஸ் பண்ணிடுறேன். நீ போய் ரெஸ்ட் எடு என்று கூறியபடி ப்ரியாவை மேலும் ஏதும் பேசமுடியாதபடி அங்கிருந்து கிளம்பினான் கிஷோர்.

அவன் சென்றதும், அப்பாடி இனிமேல் இந்த தருண் தொல்லை இருக்காது என்று ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் விழுந்தாள். இந்த கிஷோர் பரவாயில்லை, சின்ன வயசிலே இருந்து பக்கத்துக்கு வீட்டுலே ஒண்ணா வளர்ந்ததாலே கூட பொறந்தவன் மாதிரி, எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாம இவ்ளோ பெரிய ஹெல்ப் செஞ்சு இருக்கான். அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அனுப்பிட்டேன் என்று ஏதேதோ நினைத்தபடி தூங்கினாள்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து காலை உணவு சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்து ஒரு துண்டு இட்லியை வாயில் எடுத்து போட்டவுடன் அருகில் இருந்த செல்போன் அடித்தது. போனை எடுத்தும் மறுமுனையில் கிஷோர் குரல் கேட்டது.

ஹலோ பிரியா, நான் கிஷோர் பேசுறேன், நேத்து தருண் கிட்டே இருந்து வாங்கின கவரை டிஸ்போஸ் பண்ணலாம்னு தான் போனேன், ஆனா எனக்கு உன்னோட உதவி கொஞ்சம் தேவைப்படுது, அதனாலே எதுக்கும் இருக்கட்டுமேனு நானே அதை வெச்சு இருக்கேன். எனக்கு பணம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம், அப்புறமா வேணும்னா கேட்டு வாங்கிக்குறேன்.  ஆனா இப்போ உங்க வீட்டுகாரரோட கம்பெனிலே ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்துரு. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. ஒரு நல்ல வேலைலே இருந்தாதானே எனக்கும் கொஞ்சம் மதிப்பா இருக்கும்.  நான் ஈவ்னிங் வந்து நேர்லே மீட் பண்ணி விவரமா சொல்றேன் என்று போனை வைத்தான். அதை கேட்டவுடன் வாயில் போட்ட இட்லியை முழுங்காமல் விக்கித்து அமர்ந்திருந்தாள் பிரியா. ச்சே இந்த கிஷோரை நல்லவன்னு நெனைச்சோம், எவ்ளோ நம்பினோம், இப்படி பண்ணிட்டானே. வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் தான் பல பேரு நல்லவங்களா இருக்காங்க. இனிமேல் அவ்வளவு சீக்கிரத்துலே யாரையும் நம்ப கூடாது. சிறிது நேரத்தில் ஏதோ முடிவுக்கு வந்தவளாக செல்போனை எடுத்து தன் கணவனை அழைத்தாள். என்னங்க நீங்க இன்னிக்கே கிளம்பி இங்கே வர முடியுமா, நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும்.

ஒ என்ன பிரியா இது, சின்ன குழந்தை மாதிரி சொல்றே. நான் இன்னும் ரெண்டு நாள் இங்கே தாய்லாந்த்லே இருக்கணும், நிறைய முக்கியமான வேலைங்க இருக்கு என்றான் நீச்சல் குளத்தில் இரண்டு அழகிகளின் அணைப்பில் இருந்தபடி செல்போனில் பேசிய ப்ரியாவின் கணவன்.

-------------------------------------------------------------
ஓகே, படிச்சிட்டீங்களா...இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த கதையில் வரும் சில கதாபாத்திரங்கள் மற்றவருக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள். யார் செய்தது மிக பெரிய துரோகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படி நினைக்க என்ன காரணம் என்றும் முடிந்தால் கூறுங்கள்.

Sunday, May 22, 2011

செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல்

ப்ளாக் சைட் ஆரம்பித்துவிட்டு  ரொம்ப நாள் எழுதவில்லேயே என்ற குற்ற உணர்வு அவ்வபோது மனதை உறுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், எதேச்சையாக செய்திகளை மேய்ந்துகொண்டிருக்கும் போது,  இந்தியாவின் புதிய நவீன செயற்கைக்கோள் GSAT-8, மே 21, 2011 சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்ற செய்தியை காண நேர்ந்தது. இதை பார்த்ததும் செயற்கைக்கோள் மற்றும் அதன் சுற்றுப்பாதை பற்றி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று மனம் பரபரத்தது. தொழில் முறையில் இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொந்த ஆர்வத்தில் அங்கங்கு படித்து அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். சரி இனி விஷயத்திற்கு நேராக செல்கிறேன். 

முதலில் செயற்கைக்கோள் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய பொருளை (object) மற்றொரு சிறிய பொருள் சுற்றி வந்தால் அதை ஆங்கிலத்தில் சாட்டிலைட் என்று அழைகின்றனர். நம் பூமி சூரியனின் சாட்டிலைட், நிலவு பூமியின் சாட்டிலைட். இவைகள் நேச்சுரல் சாட்டிலைட் என்று அழைக்கபடுகின்றன. மனிதன் செயற்கையாக பூமியின் சுற்று பாதையில் சுழல விடும் பொருளை ஆர்டிபிசியல் சாட்டிலைட் அல்லது செயற்கைக்கோள் என்று அழைக்கிறோம். ஆனாலும் பொதுவாக சாட்டிலைட் என்று ஆர்டிபிசியல் சாட்டிலைட்டை மட்டுமே கூறுகின்றனர். பூமியை சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைகோள்கள் சுற்றி வருகின்றன. அவை தொலை தொடர்பு, வானிலை பற்றி தகவல் அறிய, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் காண என பல்வேறு வகைகளில் நம் வாழ்வில் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கைக்கோள் நம் அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது.

சரி செயற்கைக்கோள் பற்றி ஒரு சிறிய விளக்கம் பார்த்தாகிவிட்டது, இப்போது  சுற்று பாதை என்றால் என்ன என்று  பார்க்கலாம். சுற்றுப்பாதையை பற்றி புரிந்துகொள்ள முதலில் க்ராவிடி எனப்படும்  ஈர்ப்பு விசையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஈர்ப்பு விசை என்பது அனைத்து பொருட்களையும் தன்னுள்  இழுத்துகொள்ளும் ஒருவித சக்தி ஆகும். இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு சக்தி உள்ளது. இந்த சக்தி அந்தந்த பொருளில் உள்ள நிறை (Mass) கொண்டு மாறுபடும். உதாரணத்திற்கு உங்களுக்கு என்று ஒரு ஈர்ப்பு களம் உண்டு. உங்கள் அருகில் இருக்கும் மேஜை நாற்காலி போன்ற பொருட்களுக்கும் ஈர்ப்பு களம் உண்டு. ஆனால் உங்களுக்கும் நாற்காலிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் வலிமையற்றதாக உள்ளதால் அதை உணர முடிவதில்லை. பூமி போன்ற பெரிய கோளின் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது என்பதால் அதை உணர முடிகிறது.  பூமி தன்னை சுற்றி உள்ளை அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி ஈர்த்துக்கொண்டிருகிறது. ஒரு கல்லை வானத்தை நோக்கி தூக்கி போட்டால் அது வேகமாக கீழே வந்து விழுகிறது. அந்த கல் வந்து விழும் விசையை F=mg என்ற சூத்திரத்தால் குறிக்கின்றனர். இதில் m என்பது அந்த பொருளின் நிறை, g என்பது புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity). பூமியில் கடல் மட்ட அளவில் புவிஈர்ப்பு முடுக்க அளவு 9.81 m/s 2ஆகும்.

ஒரு கல்லை வேகமாக உங்கள் எதிரே வீசினால் அது சிறிது தூரம் சென்று கீழே விழுகிறது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் ஓரளவு விசையுடன் வீசப்பட்ட கல் A என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. மேலும் சற்று விசையுடன் வீசினால் B என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. கல் வீசப்படும் விசை மேலும் மிக அதிகமாக கூட்டினால் C எனபடும் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அப்படி ஒரு சுற்று பாதையில் சுற்ற முதலில் சரியான விசையுடன் கல்லை வீசவேண்டும். 


இங்கு A மற்றும் B -ல் கல் விழுவதற்கு காரணம் காற்றின் உராய்வால் வேகம் குறைந்து பூமியின் புவிஈர்ப்பு விசையால் கீழே இழுக்கபடுகிறது. அதே நேரத்தில் அந்த கல் வேகமாக எறியப்பட்டு பூமியின் வளிமண்டலத்தை தாண்டி வெளியே சென்று விட்டால் அங்கு தடுப்பதற்கு காற்று மண்டலம் இல்லாததால் அது சீராக ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கவேண்டும். இது நியூட்டனின் முதலாம் விதி. ஒரு பொருள் ஒய்வு நிலையில் இருக்கும் போது அதே ஒய்வு நிலையில் இருக்கும் அல்லது அந்த பொருள் நகர்ந்துகொண்டிருந்தால் அதே வேகத்தில் மற்றும் திசையில்  நகர்ந்துகொண்டிருக்க வேண்டும். எதாவது ஒரு விசை வெளியில் இருந்து அந்த பொருளை தாக்காதவரை அதன் நிலை அப்படியே இருக்கவேண்டும். இதன் படி வளிமண்டலத்தை தாண்டி வீசி எறியப்பட்ட கல் தடுப்பதற்கு வேறு விசை இல்லாததால் நேராக செல்ல முயலும். ஆனால் பூமியின் புவிஈர்ப்பு அந்த கல்லை கீழே இழுக்கும். அதனால் திசை மாறி கல் கீழே ஆனால் வேகம் குறையாமல் பயணிக்கும். கீழே உள்ளே படத்தில் உள்ள புள்ளி அதன் வேகத்தில் நேராக செல்ல முயற்சிகிறது. ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் திசை மாறி பயணிக்கிறது. இது தொடர்ந்து நடப்பதால் சுற்றுப்பாதை உருவாகிறது. 


இப்படி புவிஈர்ப்புக்கும் கல் சென்று கொண்டிருக்கும் வேகத்திற்கும் இடை நடக்கும் போர் தான் சுற்றுப்பாதை உருவாக காரணம். இங்கு நான் எளிமை கருதி வளிமண்டலத்தை தாண்டி கல்லின் வேகத்தை தடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறேன். வளிமண்டலத்தை தாண்டியும் கண்ணுக்கு தெரியாத பல சங்கதிகள் வேகத்தை தடுக்க உள்ளது ஆனாலும் அது காற்றின் உராய்வு போன்று வலிமையானது அல்ல. இப்படி உருவாகும் சுற்றுப்பாதை வட்டமாகவோ நீள் வட்டமாகவோ எறியப்பட்ட வேகத்தை பொருத்து அமைகிறது. 

இந்த பாணியிலேயே செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் விடப்படுகிறது. அதை கொண்டு சென்று சுற்றுப்பாதையில் விட ராக்கெட்டை பயன்படுத்துகின்றனர். பொதுவாக சுற்றுப்பாதையில் எறியப்பட்ட செயற்கைக்கோள் அதன் பாதையில் சீராக சென்று கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் வளிமண்டலத்தின் ஈர்ப்பால் பாதை மாறி கீழே வர சாத்தியம் உண்டு. அது போன்ற நேரங்களில் சிறிது உந்துதல் கொடுத்து மீண்டும் சரியான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

பல இடங்களில் எளிமை கருதி நுணுக்கமான அறிவியல் தகவல்களை தரவில்லை.  ஏதேனும் பிழை இருந்தால் தவறாமல் சுட்டிகாட்டுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...