Wednesday, August 22, 2012

முக்கோண நட்பு - சிறுகதை (மாதிரி)





ரொம்ப நாளா பதிவு எழுத வர முடியலை. வீட்டு வேலை, அலுவலக வேலை என பல காரணங்களை கூறி மனம் சமாதானம் செய்தாலும், எழுதுவது இல்லை, எழுதுவது இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு கோரஸ் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மனதில் அசை போட்டு கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று எழுதலாம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கதை மாதிரி தான். முக்கோண காதல் மாதிரி, இது முக்கோண நட்பு. இது முழுக்க முழுக்க கற்பனை என்றெல்லாம் பொய் சொல்ல மனமில்லை. என் நண்பன் அவனுக்கு நிகழ்ந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டு என்னுடைய அபிப்ராயம் கேட்டான். அதை சற்று கற்பனை கலந்து உங்கள் முன் வைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. நான் என்னுடைய கருத்தை அவனுக்கு சொல்லிவிட்டேன், ஆனால் நான் கூறிய கருத்து சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்கள் கருத்து ஒரு நல்ல நட்பை சேர்த்து வைக்கும் வாய்ப்புள்ளது. இனி கதைக்கு செல்வோம்.

------------------------------

சென்னையில் வசிக்கும் சரவணனும், குமரனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் இருவரின் மனைவிகளும் மேலும் நெருங்கிய சினேகிதிகள். இப்படி இரண்டு  குடும்பகளும் பல வருடங்களாகப் பழகி வந்தன. 

இப்படி இருக்கும் போது சரவணனின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் மற்றொரு நண்பன் ராம் காலப்போக்கில் குமரனுக்கும் அறிமுகமாகிறான். புதிய நட்பு என்பதால் குமரன் மற்றும் ராம், தாங்கள் படித்த புத்தகங்கள், பின் நவீனத்துவம், இசை, பாடல்கள் என தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிக நேரம் தனியாக செலவழிப்பதைப் பார்த்த சரவணன் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஒருநாள் குமரனிடம் சென்று...

குமரா, நீ இப்ப எல்லாம், ராம் கூட தான் ரொம்ப பேசுறே. எப்பவும் என்னை ஒதுக்கி வெச்சுட்டு, நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க. 

டேய், அப்படி எல்லாம் இல்லடா. நானும் ராமும் இப்பதான் புதுசா பழகுறோம். ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு. இதுலே சீக்ரெட் எதுவும் இல்லே, நீயும் வந்து தாராளமா கலந்துக்கலாம்.

அந்தப் பிரச்சனை அதோடு முடிந்தது. அதன் பின்னர் சில மாதங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் சென்றது. இதற்கிடையில் ராமின் அலுவலகத்தில் வேலை மாற்றத்தினால் பெங்களூருக்கு குடும்பத்துடன் அடுத்த சில மாதங்களில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சரவணன் செய்தான். அதனால் ராமும் சரவணனும் தனியாக அதிக நேரம் செலவு செய்ய நேர்ந்தது. இதைப் பற்றி அறிந்த குமரனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அதை நேரடியாக சரவணனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் ராமிடம் மட்டும், இப்பல்லாம் சரவணன் உன்னோட நேரத்தை நிறைய எடுத்துக்குறான். நீயும் நானும் பேசவே முடியறது இல்லே. ஞாயித்துகிழமை கூட உன்னாலே என்னை பாக்க வர முடியலே.

அதெல்லாம் ஒன்னும் இல்லே குமரா. உனக்கே தெரியும் பெங்களூர் மாத்தி போறதுனாலே வீட்டுல ஏகப்பட்ட வேலை. அதான் ஞாயித்துகிழமை பாக்க வர முடியறதில்லை.

என்னவோ சொல்ற, நீ பெங்களூர் கிளம்பி போனதும் அவன் என்கிட்டே தானே வருவான். என்னாலே எல்லாத்தையும் மறந்துட்டு உடனே பழக முடியாது. கொஞ்சம் டைம் ஆகும் என்றான் குமரன். 

இதைக்கேட்டு ராம் சற்று அதிர்ச்சி அடைந்தான். என்னடா இதே பிரச்சனை தானும் குமரனும் பழகுவதால் வந்தது. சரி நாம் இங்கிருந்து பெங்களூர் கிளம்பி விட்டால், இவர்கள் இருவரும் எப்படியும் ஓன்று சேர்ந்து விடுவார்கள். அதைத்தவிர ஏற்கனவே முன்பு இதேபோல் நடந்த பிரச்சனையை அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொண்டார்கள். அப்படி இல்லாவிட்டாலும் இருவரின் மனைவிகளும் நெருங்கிய சினேகிதிகள், அவர்கள் பேசி சேர்த்து வைப்பார்கள். தானே கனியும் பழத்தை தடியை எடுத்து அடிப்பானேன். அவர்கள் இருவரும் பல வருடங்களாக பழகும் நண்பர்கள், இதில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து சரவணனிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விட்டான்.

சில மாதங்களில் ராம் பெங்களூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சென்று விட்டான். அவ்வபோது தொலைபேசியில் இரு நண்பர்களிடமும் தொடர்பில் இருந்தான். குமரன் முன்பு கூறியதைப் போல சரவணனிடம் சற்று விலகியே இருந்தான். 

குமரன் ஏன் இப்படி இருக்கிறான் என்று குழம்பிய சரவணன், ஒரு நாள் தனியே சந்தித்து...

குமரா, அப்படி என்னதான் கோபம் என் மேலே, நீயா போன் பண்றதில்லை, நான் பேசினாலும் பட்டும் படாம தான் பேசுறே. என்ன ஆச்சு உனக்கு ?

நீயே யோசிச்சு பாரு, நீயும் ராமும் சேந்துகிட்டு என்னை ஒதுக்கி வெச்சீங்க. அன்னைக்கு ஒருநாள் அவனுக்கு நான் மெசேஜ் பண்ணினேன், அவன் உன் வீட்டுல இருக்கறதா எனக்கு ரிப்ளை பண்றான். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருக்கீங்க.

அதன் பின்னர் ஒருவழியாக சரவணனும் குமரனும்  ஏதேதோ பேசி சமாதானம் ஆகி விட்டார்கள்.  இப்போது பிரச்சனை என்னவென்றால் சரவணன் குமரன் இருவருமே ராமிடம் பேசுவதில்லை. சரவணனாவது அவ்வப்போது  தொடர்பு கொள்வான். ஏனோ தெரியவில்லை குமரன் சுத்தமாக ராமின் தொடர்பை துண்டித்து விட்டான். எப்படியும் காலபோக்கில் பேசுவார்கள் என்று காத்திருந்த ராம் ஒரு நாள் பொறுமை இழந்து சரவணனை அழைத்தான்.

சரவணா, என்னதான் அப்படி மனசில் நினைசிகிட்டு என்கிட்டே பேசாமே இருக்கே ?

குமரனுக்கு என்கிட்டே பிரச்சனைன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்லே, அதை ஏன் என்கிட்டே சொல்லலே. என்னை நீ நல்லா ஏமாத்திட்டே. என் வீட்டுல இருந்துட்டே அவனுக்கு மெசேஜ் பண்றே, என்கிட்டே சொல்ல கூட இல்லை. குமரன் என் மேலே கோவமா இருக்குறதை, என் கூடவே இருந்துகிட்டே எப்படி உன்னாலே மறைக்க முடிஞ்சது. உனக்கு முன்னாடியே நானும் குமரனும் பிரண்ட்ஸ், நாங்க சண்டை போட்டு பிரியறது உனக்கு சந்தோசம். அதான் என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் கண்களில் பொங்கிய அழுகையை அடக்கியபடி, அப்படி இல்லே சரவணா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பிரண்ட்ஸ். நான் பெங்களூர் கிளம்பியதும், எப்படியும் நீங்க ஒன்னா சேர்ந்துருவீங்க. இதுலே நான் எதுக்கு நடுவுலே புகுந்து குட்டையை குழப்பனும்னு தான் சொல்லலே. நான் சொல்லாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே பிரச்னை இருக்குனு நீங்க உணர்ந்து இருப்பீங்க. ஏற்கனவே இதுக்கு முன்னாடி வந்த பிரச்னையை நீங்களே தான் பேசி தீர்த்துகிட்டீங்க. அதே மாதிரி, இதையும்  நீங்களே எப்படியும் பேசி சால்வ் பண்ணுவீங்கனு தான் சொல்லலே. மத்தபடி நம்ம மூணு பேருமே எப்பவும் ஒன்னா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்.

ஆனால், ராம் என்ன கூறியும் சரவணன் சமாதானம் ஆகவில்லை.

இப்பொழுது என் கேள்வி. 
  1. ராம் நிலையில் இருந்து பார்க்கும்போது, அவன் செய்தது சரியா அல்லது தவறா.
  2. கோபப்பட்டு பேசாமல் இருந்த குமரனிடம் நட்பு பாராட்டும் சரவணன், இதற்கு நடுவில் ஒரு பார்வையாளன் போல இருந்த ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
  3. எந்தக் காரணமும் கூறாமல் குமரன் ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
சரியா, தவறா என்று கூறி அது ஏன் என்று விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும். 


Monday, April 9, 2012

ஸ்கூல் - 55 வார்த்தை சிறுகதை


எனக்கு இந்த ஸ்சூலுக்கு போறது கொஞ்சம் கூட பிடிக்கலை. பாடம், பரீட்சை இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டாலே எரிச்சலா வருது. நாள் முழுக்க நாலு சுவர்களுக்கு மத்தியிலே உட்கார முடியலே.

இன்னிக்கு அப்பாவிடம் இதைப் பத்தி பேசிடனும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன். அப்பா...எனக்கு ஸ்சூலுக்கு போகவே பிடிக்கலே. பேசாமே, இந்த டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.



Sunday, March 11, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு புரிந்த ஐந்து விஷயங்கள்




சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் எழுதி இருந்த 'அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்' என்று ஒரு பதிவைப் படித்தேன். சரி அவருக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பது அவரது உரிமை. சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமலிடம் ரசிகர் ஒருவர் மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரடி போட்டியின் போது கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

சார், ஹேராம் படத்திலே கடைசி சில காட்சிகளில் எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு பக்கம் நெருப்பு எரியும் போது அதை மட்டும் கலரில் காட்டி இருப்பீர்கள். அது ஏன் என்று புரியவில்லை.

அதற்கு கமல் - நீங்கள் பிடிக்கலை என்று சொல்லாமல் புரியலை என்று சொல்லியதே நீங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ளத் தயாராக இருக்குறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. என்னுடைய சமூகக் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தன்னுள் கனன்று கொண்டுருந்த கோபத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு காட்டினேன் என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதை விட அவர் ஏன் அதை செய்கிறார் என்று அறிந்து கொண்டால் நம் அறிவும் வளரும் அந்த உறவில் சிக்கல் ஏற்பாடாமலும் இருக்கும். இது போல தனிப்பட்ட பதிவைப் பற்றி என் கருத்துக்களை நான் இதுவரை நேரடியாக எழுதியதில்லை. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது. அந்த பதிவரின் கருத்துக்களை // அடைப்பிற்குள்ளும், என் புரிதலை அதற்கு கீழேயும் கொடுத்திருக்கிறேன்.


//# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.//

இதில் எதுவும் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் குளிர் வாட்டும். அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் பள்ளிகளிலேயே முதலில் எப்படி மூக்கை சுத்தமாக சிந்தி அந்த நாப்கின்னை பத்திரமாக குப்பை தொட்டியில் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதலில் படிப்பை விட அவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொல்லிக் கொடுகிறார்கள். உதாரணதிற்கு எப்படி நன்றி சொல்வது, குளிருக்கு அணியும் கோட்டை எப்படி பத்திரமாக மாட்டுவது, ஒருவர் உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொது இடங்களில் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். நம்ம ஊரில் சாப்பிட்டுவிட்டு எல்லோர் முன்னிலையிலும் பெரிதாக ஏப்பம் விடுவதைப் போல் அமெரிக்கர்கள் செய்வதில்லை. அப்படியே மீறி ஏப்பம் வந்தாலும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்கள். பொது இடங்களில் லஜ்ஜை இல்லாமல் சிறுநீர் கழிப்பதில்லை. நீங்களே யோசித்து பாருங்கள், சளி வந்தால் போகிற போக்கில் சாலையில் துப்புவதை விட, எந்த இடம் என்றாலும் நாப்கினை உபயோகித்து சிந்தி அதைக் குப்பைத் தொட்டியில் போடுவது மேல் இல்லையா.

//# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.//

ஐயா ஓரிரு மாதத்திற்கு பின் அல்ல, குழந்தை பிறந்ததில் இருந்தே தனியாகத் தான் படுக்க வைப்பார்கள். இதற்கு காரணம் குழந்தையின் மீது உள்ள அக்கறையால் தான். குழந்தையை கூடப் படுக்க வைப்பதால் போர்வை மூடியோ அல்லது தலையணை மூடியோ மூச்சுத் திணறி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம ஊரில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லையா, அது போல் தான் இங்கு தனியாக கிரிபில் படுக்க வைப்பது. குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் அதற்கு பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவர்களும் இதையே பரிந்துறைக்கிறார்கள். இதை போய் ஐந்தறிவு ஆறறிவு பாசம் போன்றவற்றை சொல்லி குழப்பிக் கொள்ளகூடாது. குழந்தைகளைத் தனியாகப் படுக்கவைப்பதால் அவரகளுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

//# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//

பணம் இல்லாதாதால் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்ற நிலை எனக்குத் தெரிந்து எந்த அமெரிக்க குடிமகனுக்கும் வந்ததாக தெரியவில்லை. ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கும் என்றில்லை, அது இல்லாதவர்களுக்கும் பல இலவச முகாம்கள் இருக்கின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மேலும் இது விவாதத்திற்குரிய தலைப்பு.

//# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).//

எல்லா ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்கையை வைத்து கணக்குப் போடக் கூடாது. அமெரிக்காவில் உள்ள எலும்பைத் துளைக்கும் குளிரில் ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றினால் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து ஜன்னி வந்துவிடும் ஐயா. மேலும் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டியிருப்பார்கள். அதனால் நம்ம ஊரைப் போல் பாத்ரூமில் தண்ணீரை எல்லாம் ஊற்ற முடியாது. அப்படி ஊற்றினால் கிழே உள்ள தளத்தில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் உபயோகித்து நேரடியாக கழிவுகளைத் தொடாமல் பேப்பரை உபயோகித்து பின்னர் சோப்பு போட்டு கை கழுவுவதால் அதனால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பும் குறைவு.


//# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.//

அவர்களைப் பொறுத்தவரை தான் சரி என்று நினைப்பதை யோசிக்காமல் செய்வார்கள். ஐயோ நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. என்னதான் நினைத்த நேரம் விவாகரத்து செய்து கொண்டாலும், திருமண வாழ்க்கையில் கணவனோ மனைவியோ வேறொரு நபரிடம் உறவு வைத்துக்கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள். கணவனோ மனைவியோ நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே அடுத்த பெண்ணுடனோ, ஆடவனுடனோ உறவு வைத்துக் கொள்வதை விட பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு போவது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் இருதார மனம் எல்லாம் சட்டப்படி குற்றம். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருப்பதில்லை, அதனால் விவாகரத்து பெருகுகிறது. இப்போது இந்தியாவிலும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. அந்தக் காலத்தைப் போல கணவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலை இப்போது இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்.


Saturday, March 10, 2012

ஏன் சார் எழுதறதே இல்லை - 55 வார்த்தை சிறுகதை



என்ன சார், ரொம்ப நாளா புதுசா எதுவும் எழுதலே போல இருக்கு, என்ன ஆச்சு என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

அட நம்ப எழுதலேன்னு, இதே கேள்வியை நிறைய பேரு கேக்குறாங்களே என்கிற ஆச்சர்யம் தான்.

எங்கே சார், ஆபீஸ் வேலை ஏற்கனவே அதிகம், இப்போ ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதனாலே வேலை இன்னும் அதிகம். கண்டிப்பா எழுதுறேன்.

வீட்டிற்க்கு  வந்ததும்...எவன் கண்ணு பட்டுதோ ரெண்டு மாசமா எழுத முடியவில்லை என்று நினைத்தபடி தலைப்பை எழுதினேன் - தேவையற்ற  மூடநம்பிக்கைகள்.

Sunday, January 1, 2012

2012 புது வருடமே வருக



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் பதிவு எழுத தொடங்கி ஒரு வருடம் ஒடிவிட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், அப்படி இப்படி என்று ஐம்பது பதிவுகளுக்குமேல் எழுதியாகி விட்டது. முதலில் எழுத ஆரம்பிக்கும் போது நம்மால் ஒழுங்காக நேரத்தை ஒதுக்கி உருப்படியா எழுத முடியுமா என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழுந்துகொண்டு இருந்தது. அவ்வப்போது கொஞ்சம் பிரேக் விட்டாலும் தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னது ப்ளாக் எழுதுறியா ? எதுக்காக, என்னத்தை பத்தி, எவ்வளவு ஹிட்ஸ் என்று சிலர் கேட்பார்கள். எவ்வளவு ஹிட்ஸ் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. யாரவது பத்து பேர் படித்து ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தால் சரி. ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் - அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் எழுதினால் ஏதோ ஒருவித திருப்தி கிடைக்கிறது. மேலும் அறிவியல் பதிவுகளைப் படித்துவிட்டு சில மாணவர்களுக்கு அவை பயனுள்ளதாக இருப்பதாக வரும் பின்னூட்டங்கள் மற்றும் மின்னசல்களைப் பார்க்கும் போது அந்த திருப்தி பல மடங்காகிறது. இரண்டாவது காரணம் பதிவுகளைப் படித்துவிட்டு பாராட்டவோ, தவறை சுட்டிக்காட்டவோ வரும் கருத்துக்கள். இந்த உலகில் உள்ள அனைவருமே ஒரு சிறு பாராட்டுக்கு தானே ஏங்கிக் கிடக்கிறோம், நான் அதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாவது காரணம் கொஞ்சம் நீளமானது. எழுத ஆரம்பித்த புதிதில் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்த பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்ட ஒரு கேள்வி - தமிழில் எல்லாம் எப்படி எழுதுறே, அதுவும் அமெரிக்காலே இருந்துட்டு எப்படி இது மாதிரி எழுத முடிகிறது போன்ற கேள்விகள் தான். நான் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் பதிவு எழுதி இருந்தால் கூட இவ்வளவு ஆச்சரியப் பட்டிருக்க மாட்டார்கள் போல இருக்கிறது. அது என்னமோ தெரியலே, தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் தெரியவில்லை என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. எப்படிதான் நம்ம ஆளுங்க மட்டும் ஹலோ ஐ ஆம் திருநாவுகரசு...ஐ ஆம் செந்தில்வேலன் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்திலேயே பேசிகொண்டிருக்க முடிகிறதோ.

அது மட்டும் இல்லாமல், இன்றைய சூழ்நிலையில் 'ழகரம்' என்பதே வழகொழிந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது. பலருக்கு அது தவறென்றே தெரியவில்லை, பள்ளிகூடத்தில் எல்லாம் தமிழ் வாத்தியார்கள் ஒன்றும் சொல்லமாட்டார்களா ? நான் படித்த காலகட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது திடீர் என்று யாரையாவது ஒரு மாணவனை எழுந்து பாடத்தையோ, செய்யுளையோ படிக்க சொல்வார். கொஞ்சம் உச்சரிப்பு தவறினாலும் விட மாட்டார்கள், அதையே ஒரு காமடியாக்கி சம்மந்தப்பட்ட மாணவனுக்கு உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இது கூட பரவாயில்லை, எனக்கு தெரிந்த தமிழ்நாட்டில் வாழும் ஒரு நண்பர் ஒருவர் - என் மகள் பேசும் போது அவள் நினைப்பதை ஆங்கிலத்தில் தான் சரளமாக கூற முடிகிறது என்று கூறினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன். அவரும் தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார். இதைப் பற்றி இவர்களிடம் நேரடியாக பேசினால் கூட, 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். இதை எல்லாம் சொல்வதால் நான் தான் தமிழை மெத்த அறிந்தவன் என்றோ மற்றவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்றோ கூறவில்லை. நம்மை சிந்திக்க வைக்கும் நம் தாய் மொழியை இகழ்ச்சி செய்பவர்களை பார்த்துகொண்டு என்ன செய்வது. இது ஒரு உதாரணம் மட்டுமோ, இது போல பல சமூக நிகழ்வுகள் என்னை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும்.  இது போன்ற தருணங்களில் என் கருத்துகளை நேரடியாக வெளிபடுத்த இயலாத நேரத்தில், அந்த சமூகக் கோபத்தை காட்ட சுயநலத்துடன் ஒரு வடிகாலாகவும் பதிவுகளை எழுதுகிறேன். எது அப்படி இருந்தாலும், நம் எண்ண ஓட்டத்தை சிரமமில்லாமல் தமிழிலேயே இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் இந்த பதிவுலக வாய்ப்பினால் தமிழ் நீண்ட நெடுங்காலம் வாழும் என்பது நிதர்சனமான உண்மை.

உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...