Saturday, December 31, 2011

ஓட்டம் - ஐம்பத்தைந்து வார்த்தை சிறுகதை



காலை ஆறு மணி. அர்ஜுன் அவசரமாக எழுந்து கடிகாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை நிறுத்தினான். நிமிடத்தில் கிளம்பி டிராக் சூட்டை எடுத்து மாட்டினான்.

டைனிங் மேஜை மீது காபி ரெடியாக இருந்தது.

போர்டிகோவில் வந்து காரை கிளப்பி, சரியாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்டடத்தின் வாசலில் நிறுத்தி உள்ளே சென்றான்.

அங்கு உடற்பயிற்சி செய்பவர்களை பார்த்தபடி, ட்ரெட்மில்லில் ஏறி இனிமேல் தினமும் ஜிம்முக்கு வந்து அரைமணி நேரமாவது ஓடவேண்டும் என்று மனதிற்குள் கூறியபடி ஓட்டத்தை துவக்கினான்.


பின் குறிப்பு:

உங்களில் பலருக்கு இந்தக் கதையில் நான் சொல்லவந்தது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மேலும் சில வார்த்தைகளை சேர்த்து, அர்ஜுன் செய்ததை நியாயப்படுத்த என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. உங்களிடம் வேறு எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.


Friday, December 30, 2011

கூட்டாஞ்சோறு - Dec 30, 2011


நாட்டு நடப்பு:

சில நாட்களுக்கு முன்பு நாணயம் விகடனில் 'எகிறும் கைடுலைன் வேல்யூ... சுருளும் ரியல் எஸ்டேட்!'. தமிழகம் முழுவதும் சொத்துக்களுக்கான கைடுலைன் வேல்யூ (அரசு வழிகாட்டி மதிப்பு) கூடிய விரைவில் ஐந்து முதல் பத்து மடங்கு உயரப்போகிறது என்று கூறி இருக்கிறார்கள். இதனால் தாறுமாறாக விலை ஏறி இருக்கும் நில மதிப்பு குறைந்து அதனால் தங்கள் வருமானம் பாதிக்க படுமோ என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் கலங்கிதான் போய் இருக்கிறார்கள்.  அதென்னமோ தெரியவில்லை நம்  மக்களுக்கு நிலத்தின் விலையும், தங்கத்தின் விலையும் குறையவே குறையாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வால் அரசுக்கு கூடுதல் வருமானம், மற்றும் கருப்பு பண பரிமாற்றம் குறைய வாய்ப்பிருகிறது என்றே தோன்றுகிறது. இந்த கைடுலைன் வேல்யூ மாற்றத்தால் நிலம் மற்றும் பிளாட் வாங்கும் விலை குறையுமா, கைடுலைன் வேல்யூ -வை விட குறைவாக பத்திர பதிவு செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அஜய் பிரமல் அவரிடம் உள்ள பணத்தை எப்படி உபயோகிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் இருகிறாராம்.  எந்த ஒரு பெரிய வர்த்தக முதலீட்டிலும் தெளிவான வழிமுறைகள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் அவருடைய ஹெல்த்கேர் நிறுவனத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் சுமார் $3.8 பில்லியன் விற்றிருக்கிறார். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி, அதை 53 -ஆல் பெருக்கி, இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்கு போட்டு பாருங்கள்). அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய ரசாயன தொழிற்சாலை ஒன்றை பெரிது படுத்த விரும்புகிறார். ஆனால் அதை செயல்படுத்த கிட்டதட்ட ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். இதை வேலையை சீனாவில் சுமார் இரண்டாண்டுகளில் செய்து விடலாம் என்று கூறுகிறார். எதுக்கு நம்ம ஊருலே மட்டும் ஐஞ்சு வருஷம் ஆகுது, ஒருவேளை இவர் சிவாஜி தி பாஸ் மாதிரி அந்த ப்ராஜெக்ட் வேல்யுலே ரெண்டு பெர்சென்ட் வளர்ச்சி நிதிக்கு கொடுக்க மாட்டேனு சொல்லி இருப்பாரோ ?


அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு பொருளை வாங்கிவிட்டு (உபயோகப்படுத்தியப் பின் கூட) நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த கடைக்கு சென்று திருப்பி கொடுத்து விடலாம். ஒரு கேள்வியும் கேட்க்காமல், வரிகள் உட்பட மொத்த பணத்தையும் உடனே திருப்பி கொடுத்துவிடுவார்கள்.  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக ஏதாவது பொருளைக் கொடுக்கும் போது, அந்தப் பொருளுக்கான கிப்ட் ரெசிப்ட் ஒன்றையும் கொடுத்துவிடுவார்கள். பரிசைப் பெற்ற நபருக்கு அந்தப் பொருள் பிடிக்கவில்லை என்றால் அதைத் திருப்பி கொடுத்துவிட்டு வேறு பொருளோ அல்லது அதற்கு சமமான தொகையை கிப்ட் கார்டு ஆகவோ வாங்கிகொள்ளலாம். பொதுவாக மக்கள் யாரும் இந்தச் சலுகையை தவறாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.  இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவில் அதிகமான மக்கள் தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை ரிடர்ன் செய்திருகிறார்கள். மந்தமான பொருளாதாரமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.


அறிவியல் பிட்ஸ்: 

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்று உங்களைக் யாரவது கேட்டால், இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நினைத்துகொண்டு 24 மணி நேரம் என்று சொல்வீர்கள் தானே. ஆனால் உண்மையில் பூமி தன் அச்சில் ஒருமுறை சுழல இருபத்தி மூன்று மணி, 56 நிமிடங்கள், 4 வினாடிகள் தான் எடுத்துக் கொள்கிறது. இதை வானவியல் வல்லுனர்கள் 'Sidereal Day' என்கிறார்கள். அப்படி என்றால் மீதி நான்கு நிமிடங்கள் என்ன ஆகிறது என்ற கேள்வி எழும். பூமி தன் அச்சில் சுழலும் அதே நேரத்தில் சுமார் 1° முன்னோக்கி நகர்கிறது. இதை வேறு விதமாக சொல்லவேண்டும் என்றால் சூரியன் 1° பின்னோக்கி நகர்கிறது. சூரியனின் இந்த சிறு நகர்தல் மற்றும் பூமி தன் அச்சில் சுழலும் வேகத்தையும் கூட்டினால் வருவது தான் இருபத்தி நான்கு மணி நேரம். இதை 'Solar Days' என்கிறார்கள்.  இந்த விஷயம் மேலும் சிக்கலானது, இதை எளிமையாக புரிந்திகொள்ள மிகவும் சுருக்கமாக கூறி இருக்கிறேன். 




சினிப் பட்டறை:



ஏழாம் அறிவு படம் பார்த்து, போதி தர்மரை பற்றி தெரிந்ததும் கொஞ்சம் பெருமையாக இருந்தது. இவரை எப்படி வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யாமல் விட்டார்கள். நம்ம கார்டூனிஸ்ட் மதன் கூட 'வந்தார்கள் வென்றார்கள்' போன்ற வரலாற்று புத்தகத்தில் இதை சொல்லாம விட்டுட்டாரே என்று நினைத்துகொண்டேன். அதன் பிறகு இணையத்தில் தேடிப் பார்த்ததில், போதி தர்மர் பாரசீகத்தில் இருந்து வந்தவர், புத்த மதத்தை சார்த்தவர் அல்லது பல்லவ மன்னனாகவும் இருக்கலாம் என்பது விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தவிர அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் கடல் வழியாக சீனாவை அடைந்தார் என்றும் கூறுகிறது. போதி தர்மரைப் பற்றி சரியான விவரம் எது என்று தெரியவில்லை. சரி சினிமாவைப் பொறுத்தவரை உண்மைகள் நிகழ்வுகளை கற்பனை கலந்து மாற்ற ஒரு இயக்குனருக்கு க்ரியேடிவிடி என்ற பேரில் உரிமை இருக்கிறது.  ஆனால் படம் ஆரம்பிக்கும் போது ஊரில் ஒரு தமிழனுக்கும் போதி தர்மனை பற்றி தெரியவில்லை, ஆனால் சீனாக்காரன், ஜப்பான்காரன் எல்லாருக்கும் தெரியுது என்பது போல தன் கோபத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பதிவு செய்திருக்கிறார். முருகதாஸ் அண்ணே, எங்களுக்கு தான் இவ்வளவு நாள் போதி தர்மரைப் பத்தி தெரியாம போச்சு, உங்களுக்குக்கும் இப்போ தானே தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு போதி தர்மரைப் பற்றி எப்படி தெரிந்தது என்பதிலேயே பல சர்ச்சைகள் ஓடிகிட்டு இருக்கு. சரி அப்படியே, உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு தமிழனா இந்தப் படத்தை தானே உங்க முதல் படமா எடுத்திருக்கணும், அதுவும் இல்லாம நீங்க, இந்தப் படத்திலே தெலுங்கிலே போதி தர்மர் குண்டூர்லே பிறந்ததாகவும், ஹிந்திலே தாரவிலே பிறந்தாதகவும் சொல்லி இருக்கீங்கனு கேள்விப்பட்டேன். அவர் தமிழ் நாட்டிலே காஞ்சிபுரத்திலே பிறந்தவர் என்று மற்ற மொழிகளிலும் சொல்லி இருக்கலாமே. என்ன இருந்தாலும் நீங்க உண்மையான தமிழண்ணே, உங்க வியாபாரத்திலே சரியா இருப்பீங்க. கஜினி படத்தின் கதையையே சுயமா யோசிச்சு நீங்களே எழுதுனது போல பேட்டி கொடுத்த ஆளு தானே நீங்க. அதை பார்க்கும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.  சரி படத்தில் எது எப்படி இருந்தாலும் சூரியாவின் உழைப்பிற்கு ஒரு சல்யுட் அடித்தே ஆகவேண்டும்.

ஒருமுறை சுஜாதா அவர்களிடம் வெற்றிப் படத்திற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு அவர், அது ஒரு 'தங்க விதி'. இத்தனை வருடம் சினிமா இன்டஸ்டிரியில் இருக்கிறேன் இன்னும் எனக்கு புரியவில்லை என்றாராம். மக்களிடம் எது வெற்றி பெரும் என்பது யாருக்கும் தெரியாது. கொலைவெறி பாடலும் அதைப் போலதான். இவ்வளவு பெரிய வரவேற்ப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வெற்றியால் தனுஷிற்கு, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருகிறது (ஹ்ம்ம், என்னத்தை சொல்ல) என்பதை பார்க்கும் போது 'தங்க விதி' இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டிருகிறது.

கருத்து கந்தசாமி: 

வார்த்தைகளும் தண்ணீர் போலதான், சுலபமாகக் கொட்டிவிடலாம் திரும்ப அல்ல முடியாது.

ரசித்த வீடியோ:


இதை பலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தினமும் நடக்கும் அணிவகுப்பு. இந்த அணிவகுப்பில் உள்ள ராணுவ வீரர்களை மிகுந்த கவனத்துடன்,  முக அமைப்பு மற்றும்  மீசை போன்றவற்றை பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்களாம். இவர்கள் காலை உயர்த்தி அடிக்கும் வீச்சினால் பிற்காலத்தில் அவர்கள் கால்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால் இப்போது கொஞ்சம் வீச்சின் வேகத்தை குறைத்து இருக்கிறார்களாம்.





Friday, December 9, 2011

கண்டிப்பா சிரிப்பீங்க....




இதை ஆங்கிலம் தெரியாதவர்களை கேலி செய்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சும்மா ஒரு நகைச்சுவைக்காக...


Wednesday, December 7, 2011

கூட்டாஞ்சோறு - Dec 07, 2011

நாட்டு நடப்பு:

அமெரிக்காவில் உயிர் காக்கும் அவசர உதவி தேவை என்றால் 9-1-1 என்ற நம்பருக்கு போன் செய்தால் போதும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை, போலிஸ் என தேவைப்படும் உதவிக்கு ஏற்ப அனைத்தும் சில நிமிடங்களில் வந்து நிற்கும். போன் செய்து பேசவேண்டும் என்று கூட அவசியம் இல்லை, அந்த நம்பரை அழுத்தி விட்டு போனை வைத்து விட்டால் கூட போதும், சில நிமிடங்களில் இவர்கள் வந்து நம் வீட்டு வாசலில் நிற்பார்கள். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி ஒன்றை என்னால் நம்பவே முடியவில்லை. அது டென்நெஸ்ஸே (Tennessee) மாகாணத்தில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போதும் - அந்த வீட்டின் உரியமையாளர்கள் அருகில் இருக்கும் போதே, அங்குள்ள உள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் பார்த்துகொண்டு சும்மா இருந்தார்களாம். ஏனென்றால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு செலுத்த வேண்டிய வருடந்திர கட்டணம் $75 -ஐ செலுத்தவில்லையாம். இதை நம்பவே முடியவில்லை.  அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு தான் உண்மையான விவரம் தெரிந்து இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியை டிவியில் பார்த்தேன். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் திறமை பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். இது போன்ற குழந்தைகள் பங்கேற்று பாட்டு, காமெடி, மிமிக்ரி போன்றவைகளை செய்யும் போது ஒரு பல நேரங்களில் நன்றாக இருந்தாலும், சில சமயம் அவர்களின் வயதிற்கு மீறிய பேச்சு/பாடல் மகா எரிச்சலை ஏற்படுத்துகிறது. திண்டுகல்லு, திண்டுகல்லு பெரிய பூட்டு...என்று தொடங்கும் மோசமான இரட்டை அர்த்தப் பாடலை ஒரு ஏழு வயது குழந்தை பாடுவதைப் பார்த்து எப்படித் தான் அதன் பெற்றோர்கள் வாயெல்லாம் சிரிப்புடன் பூரித்துப் போகிறார்களோ தெரியவில்லை. இது கூட பரவாயில்லை, அதற்கு ஜட்ஜஸ் கொடுக்கும் கமெண்ட், நல்லா பாடி இருக்கே...ஆனாலும், இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி பாடணும் என்பது தான். இந்த மாதிரி பாட்டை எப்படி சின்னக் குழந்தையால் பீல் பண்ணி பாட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்றால், ஓன்று இவர்கள் பாடலின் வரிகளில் எல்லாம் கவனம் செலுத்துவது கிடையாது, இல்லை இதைப் போல பாடல்களைக் கேட்டு கேட்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்பதையே உணர முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பைத் தவிர மற்ற கலைகள் கற்றுத் தேர்வதில் எந்தத் தவறும் இல்லை. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியையும் தோல்வியையும் சந்திப்பதிலும் தவறு இல்லை. ஆனால் பங்கேற்கும் குழந்தைகள் வயதிற்கு ஏற்ப தரமான பாடல்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

அறிவியல் பிட்ஸ்:

நிலவை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:

  • சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் குடும்பம் தோன்றிய காலகட்டத்தில், பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவுள்ள ஒரு பாறை மோதியதால் உருவானது நிலவு.
  • முதலில் தோன்றியபோது நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை விட பல மடங்கு பெரிதாக தோன்றி இருக்கும்.
  • நிலவு வருடந்தோறும் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர்கள் விலகிச்சென்று கொண்டு இருக்கிறது. இது இப்படியே தொடரும் போது, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து முழுவதும் விலகிச் சென்றுவிடும்.
  • நிலவு பூமியை மணிக்கு 3683 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
  • பூமி தன் அச்சில் சுழலும் வேகமும், நிலவு தன் அச்சில் சுழலும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால், பூமியில் இருந்து நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
  • நிலவில் பிரதிபலிக்கும் ஒளி பூமியை வந்தடைய 1.3 வினாடிகள் ஆகும். (சூரிய ஒளி பூமிய வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும்)
  • நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைப் போல 1/6 பங்கு தான். உங்கள் எடை பூமியில் 75 கிலோ என்றால், நிலவில் 12.5 கிலோ மட்டுமே இருக்கும். இந்தக் குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக நிலவில் வலுவான வளிமண்டலம் கிடையாது.
  • பூமியின் மீது உள்ள நிலவின் ஈர்ப்பு விசை, பூமி ஒரே அச்சில் நிலையாக சுழல உதவுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுழலும் அச்சு சுமார் 90 டிகிரி வரை மாறக்கூடும். அப்படி மாறினால் பூமியில் சீதோசன நிலையில் பலத்த மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
  • நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் மட்டுபடுத்தப் படுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமி மேலும் வேகமாகச் சுழலக்கூடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய ஒரு நாள் 6 மணி நேரமே என்ற அளவிற்கு குறைந்துவிடும். அப்படி பூமி வேகமாக சுழலும் பட்சத்தில் நீடித்த வலுவான காற்று, தாவரங்களின் வளர்ச்சி, தூக்கம் போன்ற பல விஷயங்களில் மாறுதல்கள் ஏற்படும்.

சினிப் பட்டறை:


எந்திரன் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கம் நண்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஒரு பாடல் காட்சியில் எந்திரன் ரோபோ கெட்டப்பிலும், இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் தோன்றுகிறாராம். ரஜினி மற்றும் கமலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பாடல் காட்சியில் எடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கிறது. விஜயுடன் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக படத்தில் வேலை செய்தவர்கள் கூறி இருகிறார்களாம். ஒரு சில நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனேவே கேட்ட மாதிரி இருக்கே என்று தோன்ற வைக்கும். இதில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்தது இந்தக் கொலைவெறிப் பாடல். பதினெட்டு லட்சம் ஹிட், அன்பரசன் முதல் அமிதாபச்சன் வரை பாராட்டுகிறார்கள்...ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். அது ஏன் என்று தான் புரியவில்லை. ஒரு பாட்டை ஓன்று அதன் இசைக்காக ரசிக்கலாம் அல்லது பாடல் வரிகளுக்காக ரசிக்கலாம். அது வேகமான இசையோ அல்லது மிதமான மெலடி என்று எதுவானாலும் ரசிக்கலாம். உதாரணத்திற்கு, சிம்புவின் 'எவண்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்தப் பாட்டில் உள்ள இசையின் வேகம் பிடித்திருந்தது. (நான் சிம்புவின் ரசிகன் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயவைத் தவிர சிம்புவின் எந்தப் படத்தையும் நான் ரசித்ததில்லை). அப்படி இசை பெரிதாக பேசும்படி இல்லாவிட்டால் கூட அதன் வரிகளுக்காக ரசிக்கலாம். உதாரணம் 'அவள் அப்படிதான்' படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை' பாடல். இந்தப் பாடலின் வீடியோ இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். ஆனால் இவை இரண்டுமே இல்லாததாக எனக்குத் தோன்றும் கொலைவெறிப் பாட்டை ஊரே ஏன் ரசிக்கிறது என்று புரியவில்லை. இதைதான் ஜெனரேஷன் கேப் என்று கூறுகிறார்களோ என்று தெரியவில்லை. இன்னும் இதே மாதிரி எத்தனை பாட்டு வரப்போகிறதோ. என்னை மாதிரி உங்களில் யாருக்காவது கொலைவெறி பாட்டு பிடிக்காவிட்டால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா,  மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.



கருத்து கந்தசாமி:

நண்பர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள், உங்களைத் தான் அவர்கள் பிரதிபலிப்பார்கள்.

ரசித்த வீடியோ:





Sunday, December 4, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #3

பிரபஞ்சப் புதிர்கள் இரண்டாம் பாகத்தில் நியூட்டன் வகுத்த விதிகளைப் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டிருகிறது. பலர் கடவுள் படைத்தது என்று நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் ஒரு பெரும் வெடிப்பின் காரணமாகத் தோன்றியது என்று நம்புகின்றனர். பெருவெடிப்பு என்று கூறுவதை விட பெரும் விரிவு என்று கூறிவது சரியாக இருக்கும். ஒரு பலூனை ஊதினால் எப்படி விரிவடைகிறதோ அதைப் போல இந்தப் பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டிருகிறது. இனி பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்று பார்ப்போம்.




பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது என்று வானவியல் வல்லுனர்கள் உணர்ந்தபோது, அதற்கு முன்பு அது சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர். பல வானவியல் வல்லுனர்கள் பெருவெடிப்பு சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது என்று கருதுகிறார்கள். சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தப் பிரபஞ்சமே ஒரு குண்டூசியின் நுனி அளவை விட பல ஆயிரம் மடங்கு சிறிதாக இருந்திருக்கிறது. இது ஒருவித ஒருமை நிலை (ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள்). இந்த நிலை ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதற்கு சரியான பதில் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் பிரபஞ்சம், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு வெப்பமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் அது திடீர் என்று விரிவடையத் தொடங்கியிருகிறது. அந்த கணத்தில் தான் நம் பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்ந்தது. காலம், வெளி, பொருள் (matter) போன்றவைகள் பிறந்திருக்கிறது. பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஏதோ ஓன்று வெடித்து அதனால் பல பொருட்கள் விண்வெளியில் பறந்து சென்றதாக கருத்தில் கொள்ளக் கூடாது. பெருவெடிப்பிற்க்கு முன்னர் வெளி (space) என்பதே கிடையாது. அதற்கு முன்னாள் காலமும் (time) கிடையாது, ஆம் காலம் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கிய போது தான் உருவானது. இந்தப் விரிவடைதல் தொடங்கி சில வினாடிகளில் பிரபஞ்சம் ஒரு நட்சத்திர மண்டலத்தின் அளவிற்கு விரிவடைந்து விட்டது. இப்படி விரிவடைதல் தொடர்ந்து கொண்டு அதே நேரத்தில் குளிரவும் தொடங்கியது. அந்தக் குளிர்ச்சி தான் நாம் வாழும் இந்த பூமி, நம் சூரிய மண்டலம், நம்மை சுற்றி அண்டவெளியில் உள்ள வாயுக்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் போன்றவை உருவாகக் காரணம்.




சரி பெருவெடிப்புக் கொள்கை கேட்பதற்கு பரபரப்பாகத் தான் இருக்கிறது. இது உண்மையா, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கருதப்படும் இந்த பெருவெடிப்பு உணமையிலேயே நிகழ்ந்ததா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தாலும் அது மூன்று பெரிய தடயங்களை கொடுத்திருகிறது. 

முதல் தடயம், முக்கியமான தடயம். அது என்னவென்றால் பிரபஞ்சத்தின் இயக்கம் (motion). அதாவது பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லும் நிலை. பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களின் வெளிப்படும் ஒளியை வைத்து அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன என்று வானவியல் வல்லுனர்களால் கூறமுடிகிறது. இந்த ஒளி விலகிச் செல்லும் விஷயத்தைப் பற்றி பின்னர் விவரமாக பார்க்கலாம்.

இரண்டாவது தடயம், பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள ஹீலியம் தனிமம். பெருவெடிப்பை பொறுத்தவரை முதலில் தோன்றிய பொருட்கள் ஹீலியம் தனிமமும், ஹைட்ரஜன் வாயுவும் கொண்டதாக இருந்தன. ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. பின்னர் 1995 -ல்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தொலை நோக்கி மூலமாக நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வாயுக்களை சோதித்தபோது சரியாக ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. 

மூன்றாவது தடயம், பிரபஞ்சத்தில் உள்ள பின்னணி கதிர்வீச்சு (background radiation). பிரபஞ்சம் பிறந்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு நாளடைவில் குளிர்ந்து வெகுவாக குறைந்து இருந்தாலும், இன்றளவிலும் அந்த கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் உள்ளது. அறிவியல் உபகரணங்கள் மூலமாக விஞ்ஞானிகள் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.  வானவியல் அறிவியலைப் பொறுத்தவரை, மற்ற அறிவியல் துறைகளைப் போல சோதனைச் சாலைக்கு கொண்டுவந்து எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. நம் பிரபஞ்சத்தின் உள்ள தடயங்களின் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வருகிறது என்ற ரீதியில் தான் பல விஷயங்கள் நிரூபிக்க முடிகிறது. ஆனாலும் அறிவியல் வளர்ச்சியின் மூலமாக இன்று நிறைய விஷயங்கள் உறுதியாக நிரூபிக்கும் நிலைக்கு வளர்த்திருக்கிறது.

சரி இப்போது தொலைதூர நட்சத்திர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம்மை விட்டு விலகிச்செல்லும் விஷயத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியை நிறமாலை மூலமாக சிவப்பில் இருந்து ஊதாவரை வேறு வேறு நிறங்களில் பிரிக்க முடியும். ஒளி நகரும் போது அலைகளாக பல்வேறு நிறங்களில் நகர்கிறது.  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலையளவு (wavelength) இருக்கிறது. சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதா நிறத்தின் அலையளவு நீளம் குறைந்ததாகவும் இருக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியளைகளை நிறமாலையைக் கொண்டு சோதிக்கும் போது அவை சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. இதற்கு காரணம் அந்த நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிசெல்வதால் தான். 



நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிச்செல்லும் வேகம் அவற்றின் தூரத்தைப் பொருத்து அமைகிறது. அதாவது எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றன. நீங்கள் இந்த வரிகளைப் படித்துகொண்டிருக்கும் நேரத்தில் தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் நம்மைவிட்டு நகர்ந்து சென்றிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சப் புதிர்கள் மூன்று பாகங்கள் வரை வந்த பிறகும் ஒரு முக்கியமான நபரை பற்றி இன்னும் நான் கூறவில்லை. அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் பற்றியும் அவருடைய கொள்கைப் பற்றியும் விரிவாக அடுத்தப் பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:
பிரபஞ்சப் புதிர்கள் #1

Thursday, November 24, 2011

திருமணச் சந்தை - 55 வார்த்தை சிறுகதை




என்னங்க இந்த இடமாவது நமக்கு அமையணுமேன்னு பதைபதைப்பா இருக்கு.


நம்ம கையிலே என்ன இருக்கு ரஞ்சிதம். நமக்குன்னு எங்கே அமையணும்னு இருக்கோ அங்கே தான் அமையும். இதோ போன் கூட அடிக்குது பாரு...அவங்கதான் கூப்புடுறாங்க.

ஹலோ, சொல்லுங்க சார். அ... அப்பிடியா.... சரி, சரி...வெச்சுடுறேன்.

இந்த இடமும் அமையலே ரஞ்சிதம். அவங்களுக்கு வரதட்சணையா நகையோ பணமோ கொடுக்கக்கூடாதுன்னு நம்ம பையன் போடுற கண்டிசன் பிடிக்கலையாம். பையனுக்கு எதாவது குறை இருக்குமோனு அவங்க உறவுகாரங்க சொல்றாங்களாம்.


--------------------------------------

பின் குறிப்பு:

சரி, கதையை ஒரு வழியாக ஐம்பத்தைந்து வார்த்தைகளில் முடித்துவிட்டேன். இனி என் கருத்து. இந்த கதையின் கருவில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. முற்போக்குவாதி போல பேசும் பல இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், வரதட்சணை வாங்காவிட்டால் தங்கள் மகனிடம் ஏதோ குறை உள்ளது என்று பெண்வீட்டார் பேசுவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் சாமர்த்தியமாக, உங்க பொண்ணு... உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி என்ன செய்யணுமோ செய்யுங்க என்று பெண்வீட்டாரின் சுயமரியாதைக்கு சவால் விடுவர். 

வரதட்சணை வாங்காமல் ஒருவனால் திருமணம் செய்ய முடியாதா. எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பம் இல்லைதான், ஆனா வாங்கலேன்னா எங்களையே இந்த சமூகம் சந்தேகபடுகிறது என்று பிள்ளை வீட்டார் கூறுவது உண்மையா இல்லை வெறும் சப்பைகட்டா.  நீங்களே சொல்லுங்கள்.


Friday, November 11, 2011

டமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை


 
குமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.

இல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.

நீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.

ஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.

Saturday, November 5, 2011

மனிதம் தொலையவில்லை


உங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்.  நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ,  புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

நாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.

முதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே  தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது.  அதே போல, எந்த நிறுவனமும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது.  ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.

Wednesday, October 26, 2011

தீபாவளி - சைதாபேட்டை நினைவுகள்





அனைவருக்கும், என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பல வருடங்களாக மனதில் நான் மெல்ல ஆசைப் போட்டுகொண்டிருந்ததை இன்று எழுத்தில் கூற முயற்சிக்கிறேன். இவை அத்தனையும் இனிமையான நினைவுகள் அல்ல, என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, நினைவில் பதிந்து என்னை விட்டு விலகாத நிகழ்வுகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இதோ என் தீபாவளி நினைவுகள்....

எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று சாதரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் வயிற்று போக்கிற்கு அரசு மருத்துமனையில் சேர்த்த என் தந்தை இளவயதிலேயே காலமாகிவிட்டார். விவரம் புரியாத வயதில், நான் முதன் முதலில்  பார்த்த உயிர் இழப்பு அது.  வீட்டில் தந்தையின் சடலம் கிடத்தப்பட்டு சுற்றி அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அவ்வபோது எல்லோரும் அழுவதைப் பார்த்து நானும் புரியாமல் அழுதேன். அழாதேடா, அப்பா எங்கேயும் போகலே, இன்னும் கொஞ்ச நாளில் வந்திடுவாரு என்று என்னை சமாதனப்படுத்த யாரோ கூறிய பொய்யை நம்பி என் அம்மாவிடம் சென்று அழாதேம்மா என்று கண்ணை துடைத்துவிட்டேன். ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகளுடன் வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படி விளையாடி கீழே விழுந்து மண்டையை வேறு உடைத்துகொண்டேன். என்னைத் தூக்கி கொண்டு டாக்டரிடம் ஓடியது ஒரு கூட்டம். தந்தையின் இழப்பின் வலி அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்காத போதும், இன்று வரை அந்த நினைவு என்னை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. தந்தையின் முகம் என்றாலே அன்று உயிரற்ற சடலமாகப் பார்த்தது தான் என் நினைவில் உள்ளது. அந்த வகையில் நான் கொஞ்சம் பரவாயில்லை. என்னை விட இரண்டு வயது இளையவனான என் சகோதரனுக்கு தந்தையின் முகம் என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது. தந்தை காலமாவதற்கு சில மாதங்கள் முன்பு தான் பல்லாவரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தோம். பல இடங்களில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டில் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் சுற்றி இருந்த உறவுகள் ஒவ்வொருவராக சென்றனர். தந்தையின் நினைவுகள் மற்றும் கடன் தொல்லையினால் அங்கு இருக்க முடியாமல், அதற்கு முன்பு இருந்த சைதாபேட்டையில் வாடகை வீடு பார்த்துக் குடியேறினோம்.

அங்கு குடியேறிய சில நாட்களில் தீபாவளி திருநாள் வந்தது. தந்தை இல்லாத முதல் தீபாவளி, அம்மா ஒருபுறம் அழுது கொண்டிருக்க, என் மனமோ புதுத்துணி, பட்டாசு என்று அலை பாய்ந்துகொண்டிருந்தது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது நாங்கள் சுற்றி யாரும் இல்லாமல் தனித்தீவில் விடப்பட்டது போல இருந்தது. அப்பொழுது தான் தந்தையில் இழப்பு லேசாகப் புரிந்தது. அது சுயநலம் தான், மறுக்கவில்லை. ஆனால் அந்த சுயநலம் தான், அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றியது. வீட்டில் ஒரு ஓரத்தில் அழுது கொண்டே முடங்கிக் கிடந்த நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவை திறக்க சென்ற அம்மாவின் பின்னல் நானும் ஓடினேன். கதவைத் திறந்ததும் அங்கு ஒருவர் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கௌரி பார்மசிலே இருந்து சேட் குடுத்து அனுப்பி இருகாரும்மா, ஸ்வீட், பசங்களுக்கு துணி, பட்டாசு எல்லாம் இருக்கு என்று அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார். அம்மாவிற்கு கண்ணில் கண்ணீர், எனக்கோ மனதில் மகிழ்ச்சி. அவசரமாக பெட்டியை திறந்து பார்த்து பூரித்தேன். வித விதமான பட்டாசுகள், ஸ்வீட் மற்றும் புதுத்துணி.  எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன்.  இத்தனையும் கொடுத்து அனுப்பிய, கௌரி பார்மசி சேட் வேறு யாரும் இல்லை, என் தந்தையின் நெருங்கிய நண்பர். மார்வாடி இனத்தை சேர்ந்த சேட் கண்டிப்பாக திருக்குறள் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பறிந்து காலத்தினால் செய்த உதவி அது. அன்று அந்த தீபாவளியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகு வசதியும் வாய்ப்பும் பெருக, எத்தனையோ தீபாவளி சிறப்பாக கொண்டாடினாலும், அவை எதுவும் என் நினைவில் அந்த அளவு நிற்கவில்லை. அந்த ஒரு துயரமான நேரத்தில் கிடைத்தப் புது துணிக்கும், பட்டாசுக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நினைக்கும் போது இப்போது சற்று வெட்கமாக இருந்தாலும், அந்த நிகழ்வை எங்காவது பதிய வேண்டும் என்று பல வருடங்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்ததின் விளைவே இந்த பதிவு. 


Sunday, October 23, 2011

கடன் ________ நெஞ்சம்போல (55 வார்த்தை சிறுகதை)

என்னங்க இப்படி சொல்றீங்க, நம்ம பொண்ணோட தலை தீபாவளி செலவுக்கு பணத்துக்கு என்ன பண்றது.

அதான் தெரியலே... கட்டாயம் கொடுக்குறேன்னு சொன்ன ராகவனை பிடிக்கவே முடியலே, நான் நேர்லயே போய் கேட்குறேன்.

சில மணி நேரத்தில் ராகவன் வீட்டில் - இப்படி திடீர்னு இல்லேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன் ராகவா, என் பொண்ணு தலை தீபாவளி செலவுக்காக லோன் போட்டு வெச்சுருந்த பணத்தை, உன் அவசரத்தேவைக்காக கொடுத்தேன். இப்போ நான் திருப்பி கேட்கும் போது கொடுக்கலேனா எப்படி...

பின் குறிப்பு: தலைப்பில் உள்ள ____________ -ஐ இப்போது உங்களாலேயே நிரப்பிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

Monday, September 26, 2011

குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில்


சன் டிவியின் கல்யாணமாலை நிறுவனர் திரு மோகன் மற்றும் கல்யாணமாலை நிறுவன இயக்குனர் திருமதி மீரா நாகராஜன் அவர்களும் சென்ற சனிக்கிழமை, தங்கள் வட அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கனக்டிகட் வந்திருந்தனர். கனக்டிகட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில் கல்யாணமாலை நிகழ்ச்சி பற்றி ஒரு குறும்படமும் அதைத் தொடர்ந்து ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது. பட்டிமன்றத் தலைப்பு - இந்தியக் குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில். அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா அல்லது இந்தியாவில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா என்பது தான் தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசினேன் என்பது எனக்கே சற்று ஆச்சரியமான விஷயம். சாதாரணமாக புதியவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டேன். இந்த நிலையில் பட்டிமன்றத்தில் பேசுவது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தில் இருந்து நண்பர் ஒருவர் அட சும்மா வந்து பேசுங்க என்று கூறியதால் சரி போய் பேசித்தான் பார்ப்போம் என்று ஒரு அசட்டு துணிச்சலில் சென்று கலந்துகொண்டேன். ஓரளவுக்கு சுமாராக பேசினேன் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு பேசும் வாய்ப்பு கடைசியில் கிடைத்ததால் நேரமில்லாமல் நான் பேச வேண்டும் என்று நினைத்ததை அனைத்தையும் பேச வாய்ப்பில்லாமல் போனது. அதனால் நான் பேச நினைத்தது அனைத்தையும் உங்கள் முன்னால் கொட்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். படித்துவிட்டு இந்தப் பதிவைப் பற்றியோ அல்லது பட்டிமன்றத் தலைப்பை பற்றியோ உங்கள் கருத்தை முடிந்தால் கூறுங்கள்.

சரி இனி என் பேச்சு இங்கே எழுத்தில்...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க. சாதரணமா உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாறிப் போய் வாழ்வது சற்று சிரமம் தான். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டுக்கு ஒருவன் ஓடுவது எதற்காக. அப்படிக் கிளம்பும் யாரும், 'எனக்கு வெளிநாட்டில் யாரவது மூதாதையர் இருக்கிறார்களா என்று கண்டு பிடிக்கப் போகிறேன்னு' சொல்லிவிட்டு போவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் வெளிநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகத்தான் சென்றார்கள். இந்தக் காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். இங்கு அடிப்படை நோக்கம் பொருள் ஈட்டுவது தான் அதாவது பணம் சம்பாரிக்கத் தான் ஒருவன் வெளிநாட்டிற்கு செல்கிறான். அவன் நினைப்பெல்லாம் தனக்கு கிடைக்கப்போகும் சம்பளத்தை முப்பதைந்தாலோ அல்லது நாற்பதைந்தாலோ பெருக்கி, இந்தியா ரூபாயில் கணக்குப் போடுவது தான். பல நேரங்களில் புதிதாகச் செல்பவர்கள், வெளிநாட்டில் செலவு செய்யபோவது இந்தியா ரூபாயில் அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள்.

சரி வெளிநாட்டிற்கு சென்றாகிவிட்டது.  அங்கு அவன் கொஞ்சம் நிலைத்து நின்றதும், என்ன செய்கிறான். அண்ணனாக இருந்தால் தம்பியை கூப்பிடுவான், தம்பியாக இருந்தால் அண்ணனை கூப்பிடுவான். இரண்டும் இல்லாமல் திருமணம் ஆகதவனாக இருந்தால் கல்யாணம் செய்துகொண்டு மனைவியை அழைத்து வருவான். இதை தவறென்று கூறவில்லை. அடிப்படையில் பார்த்தால் அவன் மனது முழுவதும் அவன் வாழ்ந்து வளர்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலையைத் தான் தேடுகிறது. அவனை சிரிக்க வைக்க, மகிழ வைக்க, நெகிழ வைக்க அவனை சுற்றிலும் உறவுகள் தேவைபடுகிறது. தன் சொந்த உறவுகளை அழைத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்திய நண்பர்களை சேர்த்துக் கொள்கிறான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் வாழ்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் கிடைக்காததால் தன்னால் இயன்ற அளவு தன் வீட்டிற்குள் ஒரு இந்தியக் குடும்பத்தை செயலவில் மெய்யாக்கதக்க சூழ்நிலையை உருவாக்கி அதில் மகிழ்ச்சி அடைகிறான். அது முழுமையான மகிழ்ச்சி அல்ல. சூரிய ஒளியை நிலவு பிரதிபலிப்பது போல இந்திய குடும்ப சூழலை சிறிய அளவு பிரதிபலித்து, அதுதான் மேன்மையானது என்று தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திகொள்ளும் ஒரு முயற்சி.

ஒரு சிறிய நாற்றை கூட ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் பிடுங்கி நடும்போது அதன் தாய் மண்ணோடு தான் நடுவார்கள். அப்படி நட்டால் தான் அது புதிய மண்ணில் முதலில் சிறிது வாட்டம் கண்டாலும் பின்னர் பட்டுபோகாமல் நன்கு வளரும். நம் குடும்பம் என்பது அந்த தாய்மண் போன்றது. அதுதான் அவன் வளர்ச்சிக்கு ஆதாரம். அந்த ஆதாரத்தை ஸ்திரபடுத்திக் கொள்வதற்கு தான் அவன் வெளிநாட்டிற்கே செல்கிறான். அவன் சம்பாரிபதையும் முடிந்த அளவு தன் குடும்பத்திற்கு கொடுக்கிறான். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி நாம் அன்பு செலுத்துபவர்களை மகிழ்விப்பது தானே. இப்படி பொருள் சேர்க்க சொந்த பந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு சென்று தன் தேவை எவ்வளவு என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லாமல் வாழ்க்கையில் ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். இந்த மாயையிலே சிக்கி கார், வீடு, நகை, நிலபுலன் என்று வாங்கி (கடன் வாங்கி) பொருளாதாரச் சங்கிலியில் புலி வாலைப் பிடித்தது போல மாட்டிக்கொள்கிறான். இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. எங்கே புலியின் வாலை விட்டுவிட்டால் இதே வேகத்தில் தொடர்ந்து ஓடமுடியமா அல்லது எங்கே புலி தன்னை கடித்துவிடுமோ என்கிற பயம் தான் முக்கிய காரணம். சிலர் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் வெளியில் வரத் தயங்குகிறார்கள்.

முதலில் குடும்பம் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும். அண்ணன், அண்ணி, மாமன், மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி இப்படி பல உறவுகள் ஒரு நல்லது கெட்டது என்றால் ஓன்று கூடி, பேசி, சிரித்து, அழுது, சண்டைபோட்டு, பின்னர் சமாதானமாகி...இப்படி பல வகை வேறுபாட்டு நிலைகளை கொண்டதுதான் உண்மையான குடும்பம். வெளிநாட்டில் வாழும் பல குழந்தைகளுக்கு (சில நேரங்களில் பெரியவர்களுக்கும்) தெரிந்த உறவு எல்லாம் ஆண்டி, அங்கிள் தான். பல இடங்களில் பிறந்து சிலவாரங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இதே குழந்தை இந்தியக் குடும்பச் சூழலில் பிறந்திருந்தால் அதன் சித்தியோ, பெரியம்மாவோ, அத்தையோ, பாட்டியோ யாரவது ஒருவர் வீட்டிலேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் அந்தக் குழந்தை தன் பாட்டியின் மடியின் கதகதப்பிலே தூங்குவது சுகமா அல்லது ஒரு செவிலித்தாய் கண்காணிப்பில் பத்தோடு பதினொன்றாக இருப்பது சுகமா. இது பிறந்த குழந்தைகளின் நிலை. அவர்கள் வளரும் போதும் கிட்டத்தட்ட இதே நிலைதான் பாட்டு, டான்ஸ், கராத்தே, கீ போர்டு அப்படி இப்படி என்று பல வகுப்புகளில் சேர்த்துவிடுவார்கள். முக்கியமாக பக்கத்துக்கு வீட்டு இந்தியக் குடும்பத்தில் உள்ள குழந்தைச் செல்லும் கிளாசிற்கு கண்டிப்பாக அனுப்பி விடுவார்கள். இதையெல்லாம் தவிர இந்திய புராண கதைகள், பஜனை போன்றவற்றை கற்றுக் கொடுக்க தனியாக ஒரு கிளாஸ் அனுப்புவார்கள். அதாவது சாமி எப்படி கும்பிடுவது என்பதற்கே ஒரு கிளாஸ். இது போன்ற விஷயங்களை இந்தியக் குடும்ப சூழ்நிலையில் தாத்தா பாட்டியே அந்த குழந்தைகளை தூங்கவைக்கும் போது தலை முடியை கோதி விட்டுக்கொண்டே சொல்லித் தந்துவிடுவார்கள்.

எத்தனை வித கொண்டாட்டங்கள், பண்டிகைகள், திருமணங்கள். நம் குடும்பத்துடன் சேர்ந்து குதுகலிக்க எத்தனை விஷயங்கள். வெளிநாட்டில் இருந்து தீபாவளி, பொங்கல் என்றால் ஸ்கைப்பில் பேசிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியதுதான். இதெற்கெல்லாம் மேல் இன்றளவிலும் இந்தியக் குடும்ப வாழ்க்கை மேலோங்கி இருப்பதால் தான், இன்றைய இளைய சமுதாயம், தன்னை பெற்று, வளர்த்து, ஆளாகிய தன் பெற்றோர்கள் தங்களுக்கு சரியான வாழ்கை துணையைத் தேடித்தருவார்கள் என்று அந்தப் பொறுப்பை தன் பெற்றோர்களிடமும் விட்டிருகிறார்கள். அதற்கு கல்யாணமாலை போன்ற நிகழ்ச்சியே சான்று. நம் நாட்டில் நடப்பது போல இத்தனை பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. அதெல்லாம் அந்தக் காலம் இப்போதெல்லாம் இந்தியாவிலேயே யாரும் ஓன்று கூடி பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, பலர் காதல் திருமணம் தான் செய்கிறார்கள், விவாகரத்துகள் அதிகரித்து விட்டன என்று நீங்கள் கூறுவதாக இருந்தால்...அவர்கள் அனைவரும் இந்திய குடும்ப சூழலில் வாழாமல் மேற்கத்திய மோகத்தில், மேற்கத்திய வாழ்கை முறையை கடைபிடிக்க முயற்சிகிறார்கள் என்பதே என் பதில். சில இடங்களில் தவறுகள் நேரத்தாலும் இந்தியக் குடும்ப முறை மேலோங்கி இருப்பது இந்தியாவிலே என்று கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

Sunday, September 25, 2011

கூட்டாஞ்சோறு - Sep 25, 2011

நாட்டு நடப்பு:

தனியொருவனுக்கு உணவில்லை எனில் என்று தன் கோபத்தை காட்டிய பாரதி, இன்றைய நிலையை பார்த்தால் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தி இரண்டு கோடியாக இருந்தது. தற்போது இது நாற்பது கோடியாக உயர்ந்திருக்கிறது. அதுவும் இதை எப்படி கணக்கு எடுக்கிறார்கள் தெரியுமா, நகர் புறங்களில் 965 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் 781 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளை கருதப்படுவதில்லை. இப்படி இருக்கையில் உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிகையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அனைவருக்கும் தரமான கல்வி அளித்திருந்தால் இந்த நிலை கண்டிப்பாக ஓரளவிற்காவது மாறி இருக்கும் என்று தோன்றுகிறது. ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளிக்கு அருகே அந்தப் ஊராட்சியின் கழிவுகள் மட்டும் இல்லாமல் பல வணிக நிறுவனகளின் உணவுக்கழிவுகளும் கொட்டப்படுகின்றனவாம். சுமார் 1800 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இந்த பள்ளியை அவ்வப்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் விடுமுறை விட்டு விடுவார்களம். நல்லா சூழ்நிலையில் படிக்கும் போதே மாணவர்களின் கவனம் சிதறும், இப்படி ஒரு நிலையில் எப்படி படிக்க முடியும். அங்குள்ள ஆசிரியர்கள் தான் எப்படி பாடம் நடத்த முடியும்.

கடந்த சில நாட்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு விறுவிறுவென்று ஏறிவிட்டது. இப்போது ஒரு டாலரின் மதிப்பு சுமார் 50 ருபாய். அமெரிக்காவில் வசிக்கும் சில இந்தியர்கள் இந்த செய்தியை பெரும் மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் இது இந்தியவிற்கு உண்மையிலேயே நன்மையாகத் தேரியவில்லை (ஒரு சில வர்த்தகங்களைத் தவிர). இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் 680 மேல் குறைந்துவிட்டது. பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாக கொடுக்க நகை வாங்கிய பெற்றோர்கள் இதனால் - ச்சே கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அறிவியல் பிட்ஸ்:

சர்வதேச விண்வெளி மையம்:


மனிதன் தயாரித்து விண்வெளியில் உள்ள மிகப் பெரிய பொருள் சர்வதேச விண்வெளி மையம் தான். பூமியிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மையம் பூமியைச் சுற்றி மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஒரு நாளில் 16 முறை பூமியைச் சுற்றி வரும் இந்த மையம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா என மேலும் பல நாடுகளின் கூட்டு தயாரிப்பின் உருவானது. இதில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அவர்களுக்கு தேவையான சாதனங்கள் பூமியில் இருந்து அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் சுமார் ஆறு மாத காலம் வரை தொடர்ச்சியாக தங்கி இருந்து ஆராய்சிகளை மேற்கொள்கிறார்கள். பிற்காலத்தில் நிலவில், செவ்வாய் கிரகத்தில் தங்கி இருப்பதற்கு பயிற்சிக் களமாக இந்த விண்வெளி மையத்தை உருவாக்கி இருகின்றனர். விண்வெளியில் தொடர்ந்து தங்கி இருக்கும்போது தசைகள் இழப்பும் எலும்புகளின் நிறை குறைவும் வெகு விரைவில் ஈர்ப்பதும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்பதற்காக ஒவ்வொரு விண்வெளி வீரரும் ஒரு நாளில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்தாகவேண்டும். 

 

சினி பட்டறை:


மங்காத்தா பட வெற்றிக்கு பின் சத்தமில்லாமல் 'தல' அஜித் தன் அடுத்த படமான பில்லா 2 -வில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதில் அஜித் இருபது வயது இளைஞாக தோற்றமளிக்க வேண்டி இருப்பதால் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்கிறாராம். முதல் கட்ட படபிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படபிடிப்புக்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இதன் இயக்குனர் சக்ரி டோளிடி கூறி இருக்கிறார்.



சூர்யா, ஸ்ருதிஹாசன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் முதல் பதினைந்து நிமிடம் பிரமாண்டமாக இருக்கப் போகிறதாம். நிமிடத்திற்கு ஒரு கோடி என பதினைந்து நிமிட காட்சிக்கு பதினைந்து கோடி ருபாய் செலேவ செய்திருக்கிறார்களாம். இதில் சூர்யா மூன்று பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ஏழாம் அறிவு வரும் அக்டோபர் 26 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

கருத்து கந்தசாமி:

ஒரு ஜென் துறவியும் அவர் சீடனும் ஒரு ஆற்றின் கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த ஆற்றில் உள்ள மீன்களைப் பார், எவ்வளவு சந்தோசமாக நீந்திக் கொண்டிருகின்றனர் என்று சீடனை பார்த்துக் கூறினார்.

அதற்கு சீடன், குருவே நீங்கள் அந்த மீன் இல்லையே, அவை உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் நீந்திக் கொண்டிருகின்றன என்று எப்படி உங்களுக்கு தெரியும் என்றான்.

அதற்கு அவர், நீ நான் இல்லையே,  அவை மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு தெரியாது என்பது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டார்.

ரசித்த வீடியோ:






Friday, September 23, 2011

தீபாவளி - 55 வார்த்தை சிறுகதை


தீபாவளி. புதுச்சீலையில் மின்னிய அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன்.

அவள் முகத்தில் பெருமை, நான் வாங்கிக் கொடுத்ததாம். அருகில் அப்பா பளீர் வேட்டி சட்டையில். அவர்கள் பின்னால் அண்ணன், அண்ணி, அக்கா, மற்றும் குழந்தைகள் பட்டாளம். இடையிடையே வெடிச்சத்தம். 

அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதேச்சையாக மணி பார்த்தேன், இரவு பதினொன்று. நேரமாச்சு, நான் காலைலே சீக்கிரம் எழுந்து, நியூயார்க் ஆபீசுக்கு போகணும். நான் நாளைக்கு பேசுறேன் என்று ஸ்கைப் திரையில் தெரிந்த முகங்களை மனமில்லாமல் மூடினேன்.


Sunday, September 11, 2011

9/11 - என் நினைவுகள்


 
அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் இருக்கும். செப்டம்பர் 11 - பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு காலை வேலையில், சுமார் ஏழு மணிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு பாஸ்டன் நகரப் போக்குவரத்தில் கலந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் அனைவரும் அவரவர் திசையில் பயனித்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது பார்த்துகொண்டிருந்த வேலையில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தேவையான வேலையை முடித்து கொடுத்துவிட்டு திரும்ப வேண்டி இருந்தது. அன்று போகவேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணிக்க வேண்டும். சுமார் எட்டரை மணிக்கு அந்த அலுவலகத்தை அடைந்து சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கினேன். மணி அப்போது காலை 10:30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த அறையில் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எனக்கு பின்னால் இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர் இருக்கையில் இருந்து துள்ளி, 'ஹேய், லுக் ஹியர்' என்று அவசரமாக அவருடைய கம்ப்யுடர் திரையை பார்க்க அழைத்தார். உடனே சென்று பார்த்தால், அவர் காட்டிய புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களும் இடிந்து பாதி தெரிந்தது. அதன் மேலிருந்து பெரிய புகை மூட்டம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த போதே என்னுடைய கம்புயடரில் இருந்து MSN Messanger-ல் இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். உனக்கு எல்லாம் ஓகே தானே என்று விசாரித்தார். அதற்குள் மற்றொரு இந்திய நண்பர் சாட் செய்தார். அவருடைய கசின் நியுயார்க்கில் வேலை செய்வதாகவும், அவர்களை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை, இது தான் அவர்கள் போன் நம்பர், கொஞ்சம் அவர்களை அழைத்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க முடியுமா என்று கூறினார். அவருக்கு இதோ உடனே செய்கிறேன் என்று கூறி அந்த நம்பரை அழைத்துப் பார்த்தேன், ஆனால் லைன் போகவில்லை. என்னாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் கூறினேன். வீட்டிற்கு அழைத்து வெளியில் எங்கும் போகவேண்டாம் என்று கூறி விட்டு, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அலுவலகத்தில் இருந்து கிளம்ப விருப்பம் உள்ளவர்கள் கிளம்பலாம் என்று அறிவித்தனர்.

அங்கிருந்து கிளம்பி திரும்பவும் பாஸ்டன் நகரை நோக்கி காரை செலுத்திகொண்டிருந்தேன். வழக்கமாக டோல் (Toll) வசூலிக்கும் இடங்களில் அன்று இலவசம் யாரும் நிற்கத் தேவையில்லை என்று அறிவிப்பு கண்ணில் தென்பட்டது. நிலைமையின் விஸ்தீரணம் அப்போது நன்றாகப் புரிந்தது. வீட்டிற்கு வந்து தொலைக்கட்சியில் செய்திகள் பார்த்து ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்திருகிறார்கள் என்று தெரிந்த போது மனதை ஏதோ செய்தது. இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, நீங்க நல்லா இருக்கீங்க இல்லே என்று கேட்டு பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு சிலர் பேசாமே நீங்க இங்கே கிளம்பி வந்துருங்க என்று கூட கூறினர். எதாவது ஒரு இடத்தில், உயிருக்கு உத்திரவாதம் என்று மட்டும் இருந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று நினைத்துகொண்டு, அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று, அதெல்லாம் எதுக்கு இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி அவர்களை சமாதனப்படுத்தினேன். இன்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய நிகழ்வுகள் மனதை ரீங்காரமிட்டபடி இருந்ததால் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



Saturday, September 10, 2011

வாழ்க்கை



சுகமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து
ஐம்பது இன்ச் டிவியில் ஆங்கிலப்படம்,

மாலை சிற்றுண்டி விழுங்கி
சூடான காபியை ரசித்து குடித்து,

காரில் ஏறி அமர்ந்து
ஏ.சி. போதாமல் சற்றே கூட்டி,

வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க
இசையின் ஒலியைச் சற்று அதிகப்படுத்தி,

மிதமான வேகத்தில் செல்லும்போது
கண்ணில் பட்டது அந்த காட்சி,

சாலையோரத்தில் தாயின் மடியில்
பசியால் கதறும் குழந்தைக்கு பின்னே,

தலைவர் படத்தின் ரிலீஸ்-போஸ்டர்
மனதில் ஒரு உற்சாக சிலிர்ப்பு,

எவ்வளவு செலவானாலும் சரி
முதல் நாளே பார்த்துவிட வேண்டும்.


Thursday, September 8, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #2



நியூட்டன் மரத்தில் இருந்து ஆப்பிள் விழுந்ததும் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பது நம் பலருக்குத் தெரியும். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆப்பிள் தரையை நோக்கி இழுக்கப்பட்டது. அதன் விசை பூஜ்யத்தில் இருந்து ஏதோ ஒரு வேகத்திற்கு உயர்ந்து பின்னர் தரையை நோக்கி வந்து விழுந்தது. ஏதோ ஒரு விசை ஆப்பிளை இழுத்திருகிறது, இந்த விசை தான் ஈர்ப்பு விசை.


உங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கும் சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கும் இடையே கூட ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கு அருகே இருக்கும் மேஜை, நாற்காலி இப்படி பல பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. அப்படி என்றால் ஏன் நம்மை சூரியனோ, சந்திரனோ அல்லது மற்ற கோள்களோ தன்னை நோக்கி இழுத்துகொள்ளவில்லை. ஏன் பூமிலேயே இருக்கிறோம். ஏனென்றால் பூமியின் ஈர்ப்பு விசை மற்றவற்றின் ஈர்ப்பு விசையை விட நம்மேல் அதிகமாக இருப்பதால் தான். பூமியைப் பொறுத்தவரை அது தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி இழுக்க முயற்சிகிறது. அதனால் தான் பூமியில் எந்தப் பகுதியிலும் ஒருவர் நிற்க முடிகிறது. அப்படி என்றால் விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி செல்கிறார்களே அது எப்படி ? அவர்கள் ஈர்ப்பு விசையை தாண்டிப் போகவும் இல்லை அங்கு ஈர்ப்பு விசை இல்லாமலும் இல்லை. விண்வெளி வீரர்கள் தொடர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் எடையற்றை தன்மையை உணர்கிறார்கள். இதேபோலத்தான் செயற்கை கோள்களும் பூமியில் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றி செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.

நியூட்டன் கூறுவது என்னவென்றால், இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றின் நிறையையும் அவையிடையே உள்ள தூரத்தையும் பொருத்ததாகும். இந்த ஈர்ப்பு விசையே பூமி சூரியனை சுற்றி வருவதற்கும், சந்திரனை பூமி சுற்றி வருவதற்கும் காரணம்.  பிரபஞ்சத்தை பற்றிய நம் புரிதலுக்கு பெரிதும் உதவிய நியூட்டன் வகுத்த மூன்று விதிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதால், அவற்றை இங்கு சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

முதல் விதி:

பந்து பாட்டுக்கு சும்மா இருக்குது, அதை ஏன் எட்டி உதைக்கணும்

இது எளிமையான விதி. அசைவில் இருக்கும் ஒரு பொருள் அதன் அசைவு நிலையிலேயோ, ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருள் அதன் ஒய்வு நிலையிலேயோ தொடர்ந்து இருக்கும். மற்றொரு விசை வெளியில் இருந்து இந்த பொருளின் மீது செலுத்தப்பட்டால் தான் அதன் நிலை மாறும்.

இரண்டாம் விதி:


இதுதான் விதி

இந்த விதியை ஒரு சிறிய கதை மூலம் விளக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பயணம் செய்யும் பஸ் பிரேக் டவுன் ஆகி உங்களை இறங்கி கொஞ்சம் தள்ள சொல்லி இருக்கிறார்களா. அப்படி தள்ளி இருந்தால் அது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது ஒய்வு நிலையில் இருக்கும் பஸ்ஸை நகரச் செய்ய பல பேர் சேர்ந்து விசையை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு காரை தள்ளுவது எப்படி இருக்கும். அதுவும் சற்று சிரமம் தான் ஆனால் பஸ்ஸை விட சற்று சுலபமாக இருக்கும். சரி இப்போது பஞ்சராகி நின்று போன சைக்கிளை தள்ளிக்கொண்டு போவது எப்படி இருக்கும். ஓரளவு சுலபம் தான், தனியாளாக தள்ளிவிடலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன, ஏன் பஸ்ஸை பலர் சேர்ந்து சிரமப்பட்டு தள்ள வேண்டி இருக்கிறது, அதே நேரத்தில் சைக்கிளை மிக எளிதாக ஒருவராலேயே தள்ள முடிகிறது. அதற்க்கு முக்கிய காரணம் அந்த பொருளின் நிறை ஆங்கிலத்தில் மாஸ் (mass) என்கிறார்கள். பஸ்சின் நிறை சைக்கிளை விட பல மடங்கு அதிகமானது. அதை நகர வைக்க அல்லது முடிக்கம் கொடுக்க அதிக விசை தேவைப்படுகிறது. ஒரு முக்கிய விஷயம் இங்கே கவனிக்கவும். நிறை என்பது ஒரு பொருளின் அளவு அல்ல. அதாவது பஸ் பெரிதாக இருக்கிறது அதனால் அதிக நிறை கொண்டது என்று அர்த்தம் இல்லை.  ஒரு பெரிய பஞ்சு மூட்டையை சற்று சுலபமாக தூக்கி விடலாம். பெரிய பஞ்சு மூட்டை என்றாலும் அதன் நிறை குறைவு, அதனால் சிறிது விசை கொடுத்தாலே அதை தூக்கலாம் அல்லது நகர்த்தி விடலாம். சரி புரிகிறது, அதிக எடை உள்ள பொருளை நகர்த்த சிரமப்பட வேண்டி இருக்கிறது,  எடை குறைவாக இருந்தால் எளிதாக நகர்த்தி விடலாம். அதை விட்டு விட்டு நிறை என்று ஏன் குறிப்பிடுகிறேன். எடையும் நிறையும் ஒன்றா அல்லது வித்தாயசம் உள்ளதா என்ற கேள்வி உங்களுக்கு இதற்குள் தோன்றி இருந்தால், என் சார்பில் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள். எடையும் நிறையும் ஒன்றல்ல. நிறை என்பது ஒரு பொருளின் உள்ளே எவ்வளவு விஷயம் (ஆங்கிலத்தில் matter) உள்ளது என்கிற அளவு. எடை என்பது அந்தப் பொருளை ஈர்ப்பு விசை எவ்வளவு வலுவாக இழுக்கிறது என்பதாகும். நீங்கள் பூமியில் இருந்து, உங்கள் எடையை ஒரு எடை பார்க்கும் மெசினில் பார்த்து விட்டு, பின்னர் சில நாட்கள் பயணித்து சந்திரனில் இறங்கி அதே எடை பார்க்கும் மெசின் வைத்து உங்கள் எடையைப் பார்த்தீர்கள் என்றால் அது சற்று குறைவாகக் காட்டும். அதற்க்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை விடக் குறைவு. அதனால் தான் சந்திரனில் நடக்கும் விண்வெளி வீரர்கள் சற்று குதித்து குதித்து நடக்கின்றனர். சுருக்கமாக, உங்கள் மொத்த உருவம் நிறை. அது எந்த இடத்திலும் மாறது. ஆனால் எடை நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். இவ்வளவு ஏன், விண்வெளியில் பயணிக்கும் போது எடையே இல்லாமல் உணர்வீர்கள். 

நிலவில் மனிதன் ஓடுவதை இந்த வீடியோவில் பாருங்கள்.



நியூட்டன் இரண்டாம் விதி என்ன சொல்கிறது என்றால், நிறை அதிகமுள்ள ஒரு பொருளை முடிக்க (அல்லது நகர்த்த என்று எடுத்துக்கொள்ளலாம்) அதிகமான விசை தேவைப்படும். அதற்கு ஒரு சூத்திரமே கொடுத்திருகிறார் நியூட்டன்.

F=ma

இதில் 'm' என்பது பொருளின் நிறை, 'a' என்பது முடிக்கம். F என்பது விசை.

மூன்றாம் விதி:

மிக எளிமையான விதி. சற்று தத்துவார்த்தமானதும் கூட. ஒவ்வொரு விசை அல்லது இயக்கத்திற்கும் அதே அளவு சமமான எதிர்வினையான இயக்கம் இருக்கும். சிறிய உதாரணம், நீச்சல் அடிக்கும் போது கையால் நீரை பின்னோக்கி தள்ளினால் முன்னால் செல்கிறோம்.

சரி, நியூட்டன் மூன்று விதிகளை பார்த்தாகிவிட்டது, இனி பிரபஞ்சத்திற்கு வருவோம். நியூட்டன் புவி ஈர்ப்பு தத்துவத்தின் படி பூமி மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றவற்றை ஈர்த்துகொண்டிருகிறது. இப்படி இருக்கையில் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு என்று இருந்தால், ஒவ்வொரு பொருளிலும் உள்ள ஈர்ப்பு விசை மற்றதை ஈர்த்து மொத்த பிரபஞ்சமே ஓன்று சேர்ந்து நிலை குலைந்துவிடும். இது நடக்கவில்லை, எனவே பிரபஞ்சம் முடிவில்லாதது என்று கருதினார். இந்த பிரபஞ்சம் முடிவில்லாதது என்பதெல்லாம் சரி, இதற்கு ஆரம்பம் என்று ஒரு இருக்கவேண்டுமே அது என்ன என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். அதற்கு பதில் தான் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory). இதைப்பற்றி விரிவாக அடுத்தப்பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:

பிரபஞ்சப் புதிர்கள் #1

Wednesday, September 7, 2011

மனசு - 55 வார்த்தை சிறுகதை



ஏண்டா இப்படி சின்னக் குழந்தைங்க மாதிரி அடிசுக்குறீங்க...நீங்களே பாருங்க வசந்தி அக்கா - பன்னெண்டு வயசுக்கு மேலே ஆச்சு, ரெண்டும் இப்படி அடிச்சிகிட்டு இருக்குதுங்க.

நீ ஒன்னும் கவலைப்படாதே, அதெல்லாம் போகப்போக சரி ஆயிடும்... சரி நீ சொல்லு, உன்னைப் பத்தி இப்படிப் பேசி இருக்கா அவ, சும்மாவா விட்டே நீ .

அதெப்படி விட முடியும், அவ வீட்டுக்கே போய் நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்துட்டேன், ஆனா நான் சொல்லவே இல்லைன்னு சாதிக்கிறா அவ.


USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவரா நீங்கள்...



USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி. கனக்டிகட் தமிழ் சங்கத்தின் இருபதாவது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னிசையுடன் கொண்டாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இசை சங்கமம் 2011, ஜெயா டிவி புகழ் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்று கலக்க போகும் இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை அக்டோபர் 8 -ம் தேதி கனக்டிகட்டில் உள்ள  Glastonbury High School -ல் நடக்கவிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

http://www.cttamilsangam.org/images/Deepavali_Flyer_2011.pdf




Saturday, September 3, 2011

கூட்டாஞ்சோறு - Sep 03, 2011

நாட்டு நடப்பு:

இன்னும் சில வாரங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களின் விநியோகம் ஆரம்பித்து விட இருக்கிறார்கள். இது உண்மையிலேயே ஏழை எளியவர்களுக்கு மட்டும் சென்றடைந்தால் நல்லது தான். மன்னன் படத்தில் கவுண்டமணி, 'செயினையும், மோதிரத்தையும் உள்ளே வாங்கி வெளியே வித்துர வேண்டியதுதான்' என்று சொல்வது போல, பல இடங்களில் வசதி படைத்தவர்களும் இந்த ஆட்டத்தில் நுழைந்து வாங்கிய பொருட்களை வெளியே பாதி விலைக்கு விற்று விடுகிறார்கள். அரசின் கேபிள் திட்டமும் அமலுக்கு வந்துவிட்டது, 150 முதல் 200 ருபாய் வரைக் கட்டிவந்த கேபிள் சந்தா 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஏற்ப்படும் நஷ்டம், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கா இல்லை தமிழக அரசுக்கா என்று புரியவில்லை.

காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் ஏன் இப்போது சமீபத்தில் தாத்தப் பாட்டி தினம் என்று கூட மதுரையில் கொண்டாடி இருக்கிறார்கள். இது போன்ற வரிசையில் சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் என்று ஒரு தினம் இருப்பதாக இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் மாணவர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றினர். உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையை பாதுகாப்பது நல்லது தான்.  நிறைய குப்பைதொட்டிகளை நிறுவினால் நன்றாக இருக்கும். இந்த அவசர உலகில், குப்பைத் தொட்டி அருகில் இருந்தாலே போய் போட சோம்பேறித்தனம் கொண்ட நம் மக்கள், குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று தேடித் போய் போடப் போவதில்லை. எப்படியோ மெரீனா சுத்தமானால் சரி.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே கிழே கண்டெடுத்த பையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை நான்கு நண்பர்கள், போலீசார் வசம் ஒப்படைத்தார்கள் என்று செய்தியில் படித்தேன். இந்தக் காலத்தில் இவ்வளவு நேர்மை இருப்பது, ஒரு பெரிய விஷயம். அதுவும் யாராவது ஒருவர் கண்டெடுத்து ஒப்படைத்து இருந்தால் கூட பரவாயில்லை, நான்கு நண்பர்களும் சேர்ந்து ஒரு மனதாக இந்த காரியத்தை செய்திருப்பது அவர்கள் நல்ல மனதை காட்டுகிறது. இந்த செய்தியை படித்ததும், ஒவ்வையின் மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

அறிவியல் பிட்ஸ்:

சும்மா கார்லே பறக்குறானே என்று நிஜமாகவே காரில் பறக்கும் ஒருவரைப் பற்றிச் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆம் டெர்ராபுஜியா (Terrafugia) என்ற அமெரிக்க கம்பெனி அடுத்த வருடத்தில் இந்த கார் சந்தைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. விலை ருபாய் ஒரு கோடிக்கு மேல் எகிறுகிறது. அதற்குள் நூறு பேருக்கு மேல் இந்தக் காரை வாங்க முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதை எந்த ஒரு நேர் சாலையிலும் ஒட்டி டேக் ஆப் செய்ய முடியும். அதே போல தரை இறங்கியவுடன் பதினைந்து நொடிகளுக்குள் இறக்கைகளை மடக்கிவிடலாம். விண்ணில் பறக்கும் போது அதிகபட்சம் மணிக்கு 115 மைல்கள் வேகத்திலும், தரையில் ஓடும் போது அதிகபட்சம் 62 மைல்கள் வேகத்திலும் செல்லக்கூடியது. இதற்கு பெட்ரோல் சாதாரண பெட்ரோல் பங்குகளில் நிரப்பிக் கொள்ளலாம். இதை ஓட்ட சிறு விமானங்களை ஓட்டத் தகுதி பெற்ற லைசென்ஸ் தேவை. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பறக்கும் காரை பாருங்கள்.


சினி பட்டறை:


சிம்பு தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக கூறும் ரகத்தை சேர்ந்தவர். மங்காத்தா படத்தை முதல் நான் முதல் ஷோ சென்னை சத்யம் திரைஅரங்கில் சென்று விசிலடித்துப் பார்த்தாராம். பார்த்துவிட்டு வந்தவுடன் தன் பேஸ்புக் இணையதளத்தில் 'தல படத்தில் பணத்தை மட்டும் கொள்ளை அடிக்கவில்லை, மொத்த படத்தையும் ஆக்கிரமித்து எங்கள் மனதை கொள்ளை அடித்துவிட்டார், தல டா, மங்காத்தா டா' என்று குறிபிட்டிருக்கிறார்.


'த்ரீ இடியட்ஸ்' தமிழ் ரீமேக்கான நண்பன் திரைப்படத்தை, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இவ்வளவு பெரிய இயக்குனர் ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தது பெரிய விஷயம் தான். எந்திரன் படப்பிடிப்பின் டென்ஷனுக்கு இடையே 'த்ரீ இடியட்ஸ்' பார்த்து மிகவும் பிடித்து போனாதால் இதற்கு சம்மதித்தாராம். படம் ரஷ் பார்த்தேன் சூப்பரா வந்திருக்கு என்கிறார். நாங்களும் பார்க்க காத்திருக்கிறோம் சார். இங்கே சில நண்பன் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்பட்டங்கள் காணலாம்.




கருத்து கந்தசாமி:

கடவுள் தான் நமக்கு உறவினர்களை கொடுத்தார்.
நன்றி கடவுளே, எங்கள் நண்பர்களை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.

ரசித்த வீடியோ:




Friday, September 2, 2011

வாயேஜர் 1 விண்கலம்

வாயேஜர் 1 - கடந்த முப்பத்தி நான்கு வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் விண்கலம். 1977 -ம் ஆண்டு சுமார் 700 கிராமே எடையுள்ள இந்த விண்கலம், சூரிய குடும்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றளவில் பூமியில் இருந்து செலுத்தபடும் கட்டளைகளைப் பெற்றுகொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 114,155 மைல்கள் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும், இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறுகிறார்கள். மனிதத் தயாரிப்பில் அதிக தூரம் பயணித்த ஒரே சாதனம் இந்த வாயேஜர் 1 விண்கலம் தான். இதுவரை 100 AU (Astronomical Unit) மேல் தாண்டி பயணித்துக் கொண்டிருகிறது. ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு, சுமார் 93 மில்லியன் மைல்கள். இந்த வேகத்தில் பயணிக்கும் வாயேஜர் 1, இன்னும் ஓரிரு வருடங்களில் சூரிய குடும்பத்தின் எல்லையை கடந்து வெளியே சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலும் இந்த விண்கலம் தான் பூமிக்கு அனுப்புகிறது. வாயேஜர் 1 எடுத்த புகைப்படங்கள் சில இங்கே...



1977 -ல், பூமியையும் சந்திரனையும் சேர்த்து ஒன்றாக எடுத்த முதல் புகைப்படம் 

1979 -இல் எடுத்த ஜுபிட்டர் கிரகத்தின் புகைப்படம். ஜுபிடரின் ஒரு சந்திரனையும், மற்றொரு சந்திரனின் நிழலையும் காணலாம்  

1981 -ல் எடுத்த சனி கிரகத்தின் புகைப்படம் 


இந்தப் படம் மிகவும் முக்கியமானது. பூமியில் இருந்து சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படம். இவை சூரியனில் இருந்து ப்ளுடோவை விட அதிக தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.

வாயேஜர் ப்ளுட்டோவை மட்டும் படம் பிடிக்க முடியவில்லை. திருவாளர் ப்ளுட்டோ அவர்கள் தன் 248 வருட சுற்றுப் பாதையில் எங்கேயோ தள்ளி இருந்தார். 

Wednesday, August 31, 2011

ஒரு பதிவரின் கதை


அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.

ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.

இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...

சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...