Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, May 7, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் நான்கு




இந்த அத்தியாயத்தை ஆரம்பிபதற்கு முன்பு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதை படித்த சிலர் 'ஆட்டோ-பயோகிராபியா ?' என்று கேட்டார்கள்.. அவர்களுக்கு நன்றி. ஆனால் இந்த எண்ண ஓட்டங்கள் தொடர் ஒரு ஆட்டோ-பயோகிராபி அல்ல. அதெல்லாம் பெரிய விஷயம். ஆட்டோ-பயோகிராபி இஸ் எ பிரிவிலெஜ்ட் வேர்ட். அந்த அளவிற்கு நான் இன்னும்  வளர்ந்து விடவில்லை மேலும் என் வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிரும் தைரியமோ தகுதியோ எனக்கு இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய முதல் மாரத்தான் ஓட்ட அனுபவத்தை பற்றி எழுதும் முயற்சியில் என் வாழ்கை ஓட்டத்தில் உள்ள சுவாரசியம் என்று நான் கருதும் அனுபவங்களைக் கலந்து ஒரு ஜிகிர்தண்டாவாக கொடுக்க நினைக்கிறேன். அவ்வளவே. இனி அத்தியாயம் நான்கு.

ஸ்ரீதர் (பெயர் மாற்றப்படவில்லை). நம் வாழ்கைப் பாதையில் சற்று பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒருவர் நம் வாழ்கையின் திருப்பு முனையாக அமைந்திருப்பார்கள் . என் வாழ்க்கையில் பலர் அந்த வகையில் திருப்பு முனையாக இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீதர். இதை அவரிடம் நேரடியாக சொன்னதில்லை, மேலும் இப்போது அவருக்கும் எனக்கும் இப்போது நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் அவ்வபோது மனதின் ஒரு ஓரத்தில் வந்து தலைகாட்டி செல்லும் ஒரு சிலரில் ஸ்ரீதரும் இருக்கிறார். அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். படிப்பில் பெரிய பிடிப்பு இல்லாமல் ஏனோ தானோ என்று படிதுக் கொண்டிருந்த நேரம். ஸ்ரீதர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அந்த நேரத்தில் ஸ்ரீதர் தன் நண்பர்கள் அறிவழகன், மணிசேகர், கிச்சா என சில நண்பர்களுடன் சேர்த்து மாலை நேரத்தில் டியூஷன் எடுக்க ஆரம்பித்து இருந்தார். பெரிய இடம் எதுவும் இல்லாததால், சென்னை சைதாபேட்டையில் இருந்த (இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறன்) 'உதயம் மெடிகல்ஸ்' மேலே இருந்த ஒரு மொட்டை மாடியில் டியூஷன் ஆரம்பித்து இருந்தார்கள். அப்போது சும்மா மாலை நேரங்களில் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் என்னையும் சேர்த்து சில நண்பர்களைப் பார்த்து 'டேய் ஐஞ்சு மணிக்கு டியூஷன், வந்துருங்க' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார். முதல் நாள் பயந்து கொண்டே வேண்டா வெறுப்பாக சென்றேன். பள்ளிக்கூடத்தில் சுமார் நாற்பதுக்கும் மேல் மாணவர்கள் உள்ள வகுப்பில் சந்தடியில்லாமல் சென்று திரும்பும் எனக்கு, ஒன்-டு-ஒன் டியூஷன் எல்லாம் பெரும் பயத்தைக் கிளப்பிய காலகட்டம் அது. நமக்கு தெரியாதது எல்லாம் என்னவென்று மற்றவர்களுக்கு தெரிய வந்தால் ரொம்ப கேவலமாக இருக்குமே என்று கவலை தான் அதற்க்கு காரணம். பயந்து கொண்டே சென்ற என்னை அழைத்து சென்று தரையில் உட்கார்ந்து கணக்கு புத்தகத்தைப் திறந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் ஸ்ரீதர். ஹீரோ பேனாவில் பர்புள் கலர் இங்கில் முத்து முத்தான கையெழுத்தில் எழுதிய முதல் மனிதனை அன்று தான் பார்த்தேன். வெரி யுனிக் கலர். தனக்கு ஒரு விஷயம் தெரிந்தாலும் அதை மற்றவருக்கு புரியும் வகையில் கற்றுக் கொடுப்பது ஒரு கலை. ஒரு மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்த இளைஞனுக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுப்பதில் இவ்வளவு திறமையா என்று பின்னர் நான் வியக்காத நாள் இல்லை. ஸ்ரீதர் கற்றுக்கொடுக்கும் போது எனக்கு அதுவரை புரியாத கணக்கு பாடம் புரிந்தது. கணக்கு அடிப்படையிலே புரிதலில் அதல பாதாளத்தில் இருந்த என்னை பத்தாவது பாடத்திட்டத்திலே கூட இல்லாத பாலிடெக்னிக் பாடத்திட்ட கணக்குகளை போட வைத்தார். ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த விதத்தில் அல்ஜீப்ரா அல்வா சாப்பிடுவது போல இருந்தது. ட்ரிக்ணாமெட்ரி பொழுது போக்காக மாறியது. ஸ்ரீதரின் உதவியால் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றி எட்டு மதிப்பெண் எடுத்தேன். அந்த இரண்டு மதிப்பெண் கூட ஒரு சில்லி மிஸ்டேக்கினால் கோட்டை விட்டேன். பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்ததுமே ரெண்டு மார்க் போச்சுன்னு உணர்ந்து என்னையே நான் மனதில் திட்டிக்கொண்டு இருந்தேன். அதன் பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஸ்ரீதரிடம் தான் படித்தேன். ஸ்ரீதருக்கு நல்ல வேலை கிடைத்து பிஸியாக இருந்த நேரத்திலும் மாலை நேரத்தில் என்னையும் சேர்த்து பாலாஜி, சத்யா என பல நண்பர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுகொடுத்த அடிப்படை தான் பின்னர் அனைத்து தொழில்முறை சார்ந்த விஷயங்களில் எனக்கு உதவியது. இப்படி என் வாழ்வில் மிக முக்கிய திருப்பு முனையாக இருந்த ஸ்ரீதருக்கு இந்தப் பதிவின் மூலமாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கணக்கில் நல்ல மார்க் எடுத்தாலும் மற்ற சப்ஜெக்டில் எல்லாம் சுமார் மார்க் தான். இப்ப எல்லாம் பத்தாவது பாஸ் பண்ணின யாரை கேட்டாலும் ஐந்நூறுக்கு நானூற்றி ஐம்பது மதிப்பெண்ணுக்கு மேல் சொல்கிறார்கள். இப்படிதான் ஒருவர் பையன் மார்க் கம்மிதான், நானூத்தி ஐம்பத்தி ஐஞ்சு தான் எடுத்திருக்கான் என்றார். நானும் 'சென்னை 28' படத்தில் சின்ன பசங்களுடன் கிரிக்கெட்விளையாடும் சீனில், சிவா 'நானூறு ரூபா தான் இருக்கா', என்று லேசாக இழுத்தபடி கூறுவது போல, என்ன நானூத்தி ஐம்பத்தி அஞ்சு தானா, பரவால்லே பிளஸ் டூ லே இன்னும் நல்லா படிக்க சொல்லுங்க என்று நம்ம பத்தாவது டோட்டல் எல்லாம் இனிமேல் வெளியே சொல்லவே முடியாது போல மனதளவில் சொல்லிகொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். பத்தாவது முடித்ததும் கூட இருந்த எல்லாப் பயல்களும் எம்ப்லோய்மென்ட் எக்ஸ்சேஞ்ஜில் பதிய ஓடி நின்றபோது, நான் ஏனோ அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அடிச்சி பிடிச்சி பிளஸ் ஒன்னில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு எடுத்தேன். ஏன் கம்புயுட்டரை தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. டேய் பையாலஜி எடு அப்பத்தான் மெடிக்கல் எண்டரன்ஸ் எழுதலாம் என்று சொன்ன சிலரின் நம்பிக்கையை நினைத்து பெருமையாக இருந்தது. நம்மளையும் ஒரு டாக்டரா எல்லாம் எப்படி இவங்களால கற்பனை பண்ண முடியுது என்று நினைத்துக் கொண்டேன். கணக்கு நன்றாக புரிந்ததாலோ என்னவோ கம்ப்யூட்டர் கண்ணா பின்னா என புரிந்தது. அதற்கு கம்ப்யுடர் சையன்ஸ் மாஸ்டர் ஜான் முக்கிய காரணம். அவருக்கு அப்போது  ஒரு இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். பார்பதற்கு லேசாக தாடியெல்லாம் வைத்துக்கொண்டு பெரிய ஆள் போல இருந்தாலும் பாடம் நடத்தும் விதத்தில் என்னமோ நம்ம கூடப் படிக்குற ஒரு ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது போல இருக்கும். யோசிச்சு பாத்தீங்கனா, எக்ஸாமுக்கு முன்னாடி நாள் ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது நல்லா புரியும், ச்சே இதையா இவ்வளவு நாள் புரியாமே குழம்பிக்கிட்டு இருந்தோம் என்று தோன்றும். ஜான் சார் பாடம் எடுப்பதும் அப்படிதான். பாடம் இருக்கும் போதே எதாவது அவர் வாழ்கையில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை சொல்லி கிளாசையே ஒரு கலக்கு கலக்கி விடுவார். அது இல்லாவிட்டால் கிளாசில் யாரையாவது உதாரண புருஷனாக்கி அவனை கலாய்த்து விடுவார். ஒரு முறை பேசிக் ப்ரோக்ராம்மிங் பற்றி பாடம் எடுத்து கொண்டிருந்தார். அதில் GoSub/Return என்று ஒரு ஸ்டேட்மண்ட் வரும். அதை அவர் சொல்லிக் கொடுத்த விதமே தனி. எப்படி என்றால்...

ஒரு பொண்ணு வீட்டுல தனியா படிச்சிட்டு  இருக்கு. அப்ப நம்ம விஜயானந்த் போய் கதவை தட்டுறான்.

சார், என்னை ஏன் சார் இப்ப இழுக்குறீங்க ?

இருடா, ஒன்னும் இல்லை. அப்ப அந்த பொண்ணு என்ன பண்ணும். படிச்சிட்டு இருக்குற புக்க வைச்சிட்டு வந்து கதவை திறந்து விஜயானந்த் முன்னாடி நிக்கும்.

வேண்டாம் சார், வேற எக்சாம்பிள் வெச்சு சொல்லுங்க சார், என்று விஜயானந்த் கதறுவான். சார் கண்டின்யு பண்ணுங்க,  கண்டின்யு பண்ணுங்க  கிளாசே உற்சாகத்தில் சத்தம் போடும்.

அந்தப் பொண்ணு வாசல்லேயே விஜயானந்த நிக்க வெச்சு பேசி அணிப்பிட்டு திரும்பவும் போய் அது என்ன படிச்சிட்டு இருந்துச்சோ அதை கண்டின்யு பண்ணும். இது தாண்டா GoSub/Return. கம்ப்யூட்டர்லே GoSub-னா சொல்ற எடத்துக்கு போகும், அங்கே வேலை முடிஞ்சதும் Return சொன்னா  திரும்பவும் வந்து என்ன பண்ணிட்டு இருந்துச்சோ அதைப் பண்ணும்.

இது ஒரு சின்ன உதாரணம். அந்த வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும் இது மறந்திருக்காது. முன்னமே சொல்லியது போல சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் சரியாக செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் எதையும் புரிய வைக்கலாம். அவர் சொல்லிக் கொடுத்த அடிப்படை தான் இன்றைக்கும் கம்புயடரில் என் புரிதலுக்கு வித்து என்று சொல்லலாம்.

என்னதான் படிப்பு, விளையாட்டு, வேலை, திருமணம், குழந்தைகள் என்று காலச் சுழற்சியில் ஒரு இலைபோல காற்றடித்த திசையில் எல்லாம் நாம் பறந்து கொண்டது இருந்தாலும், எதோ ஒன்றை நாம் செய்ய நினைத்து அது சரியாக செட் ஆகாமல் இருந்திருக்கும். ஆனாலும் எவ்வளவு வயதானாலும் அதை தொடர்ந்து செய்யும் ஒரு ஆசை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி எனக்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான இடத்தில் இருந்த/இருக்கின்ற ஒரு விஷயம் பாட்டு. அதைப் பற்றி அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

ஓட்டம் தொடரும்.....


அத்தியாயம் ஓன்று 
அத்தியாயம் இரண்டு 
அத்தியாயம் மூன்று 






























Thursday, April 9, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் மூன்று




இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த எண்ண ஓட்ட தொடர்கள் ஒரே நேர் கோட்டில் பயணிக்காது. அதாவது வயது வாரியாக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சி அல்ல. எண்பதுகளில் நிகழ்ந்த நிகழ்வினை இரண்டாயிரத்து பதினைந்துடன் முடிச்சு போடும் சாத்தியம் இந்தத் தொடர்களில் உண்டு. அதனால் நான் பத்தாவது படித்துகொண்டிருக்கும் போது நடந்த ஒரு விஷயத்தை சொல்லும் போது அதற்கான காரணம் ஆறாவது படிக்கும் போது ஏற்பட்டிருக்கலாம். அதை மேற்கோள் காட்ட ஆறாம் வகுப்பிற்கு தாவ வேண்டும் இருக்கு. சரி, இனி என்ன ஓட்டங்கள் அத்தியாயம் மூன்றைப் பார்போம்.

அத்தியாயம் மூன்று

முகத்தின் மேல் குளோரோபார்ம் நிறைந்த பையை அழுத்த அதன் வினோத நெடி நாசியில் ஏறியது. அந்த நெடியை உணரும் அதே நேரத்தில் உடைந்த வலது கையை யாரோ பிடித்து தூக்குவதை உணர முடிந்தது. ஆனால் அது வரை இருந்த வலி தூக்கும் போது இல்லை. அதன் பின்னர் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, நினைவு திரும்பியதும் முதலில் லேசாக குளிரை உணர்ந்தேன். கண்களை திறக்க முடியவில்லை. மேலே மின்விசிறி வேகமாக சுழல்வதை உணர முடிந்தது. உடல் குளிரில் லேசாக நடுங்கியது. என்ன மதினி இப்படி நடுங்குது என்று என் அம்மாவின் குரல் கேட்டது. கையில் ஏதோ கடினமாக கட்டபட்டிருந்தை வலியுடன் உணர்ந்தேன். லேசாக கண்களை திறந்து பார்க்க முடிந்தது. என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கையைப் பார்த்ததில் பெரிய மாவு கட்டு, மணிக்கட்டில் இருந்து கிட்டத்தட்ட தோள் வரைப் போடப்பட்டிருந்தது. ச்சே, ஒரு நிமிச விளையாட்டு புத்தி எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பார் என்று என் மனதிற்குள் என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் ஆட்டோவில் வீடு நோக்கி பயணம். வீட்டில் நுழைந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வாசலில் வந்து நின்று விட்டனர். எல்லோரும் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என்று கேட்டபடி ஒரே கூச்சல். ஸ்விம்மிங் பூல் போய் கையை ஒடச்சிகிட்டான், எதுக்கு இவனுக்கு ஸ்விம்மிங் எல்லாம் என்று அவர்களாகவே பேசிக் கொண்டனர்.  நானோ மனதிற்குள்  ஸ்விம்மிங் பூல் போய் வரும் வழியில் தான் கை உடைந்தது அதற்கும் ஸ்விம்மிங்கிற்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். 

நான் அந்த வருடம் பத்தாவது வகுப்பில் படித்துகொண்டிருந்தேன். ஏற்கனேவே படிப்பில் சுமார்.  இப்போது கை வேறு உடைந்து விட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன், ஆறாம் வகுப்பில் இருந்து இங்கிலீஷ் மீடியம். எல்லாவற்றையும் தமிழ் படித்துகொண்டிருந்த நான், கணக்கு முதற்கொண்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளானதும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலதான் முதலில் உணர்ந்தேன். அது சரியாகி ஓரளவிற்கு ஆங்கிலம் பிடிபட்டது ஒன்பதாம் வகுப்பில் தான். பத்தாவது எப்படியாவது நன்றாக படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்ட நேரத்தில் இப்படி நிகழ்ந்தது பெரும் கவலையைத் தந்தது. ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்லிகொள்ளும் நிலையும் தேவையும் இல்லாத ஒரு கால கட்டம் அது. அன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தியதை இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் பாடம் சரியாக நடத்தியதே இல்லை. முக்கால்வாசி நேரம் மரத்தடியில் தான் வகுப்பு. அதுவும் அறிவியல் போன்ற பாடங்களில் யாரவது ஒரு மாணவனை எழுந்து படிக்க சொல்வார்கள். அவ்வபோது தோன்றும் போது எதாவது சொல்லி புரிந்ததா என்று ஒரு கேள்வி. அவ்வளவு தான் அங்கே நான் கற்ற பாடம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வில் முப்பது ஐந்து மதிப்பெண் எடுத்தவர்கள் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு அப்போது அந்த பள்ளியில் இருந்திருந்தால் என்னையும் சேர்த்து வகுப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ் ஆகி இருக்க மாட்டார்கள். மிக மிக மோசமாக படிக்கும் மாணவர்களைத் தவிர எல்லோரையுமே அடுத்த வகுப்பிற்கு தூக்கி போட்டு விடுவார்கள். இது இப்படி இருக்க, நான் சந்திந்த எல்லா தமிழ் ஆசிரியர்களும் மிகவும் சிறப்பாக பாடம் நடத்தினர். அதில் தட்சிணாமூர்த்தி என்ற ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அழகே தனி. ஒவ்வொரு மாணவனுக்கும் அழகாக தமிழில் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார். உதாரணத்திற்கு, சைதாபேட்டையில் உள்ள கொசத்தெரு என்ற தெருவில் இருந்து வரும் மாணவனை வாடா கொசத்தெரு கோமகனே என்று கூப்பிடுவார்.

ஆனாலும் அப்போது எனக்கு தமிழ் மேல் பெரிய ஆர்வம் என்றெல்லாம் இல்லை. ஒரே விஷயம் கண்ணா பின்னா என திருக்குறள் படித்தேன். அதுவும் திருக்குறள் போட்டி ஒன்றில் ஆறாவது படிக்கும் போது கலந்துகொண்டேன். அதில் முதல் பரிசும் பெற்றேன். அதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அந்த போட்டிக்காக திருக்குறள் நிறைய படித்தேன். திருக்குறளைப் போன்ற ஒரு பொக்கிஷத்தை தமிழன் பெற்றது ஒரு வரப்ரசாதம். அதில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தனைக்கும் விடை இருக்கிறது. தந்தையின் கடமை, பிள்ளைகளின் கடமைகளில் தொடங்கி மருத்துவன், அரசன், காதலன் என வாழ்வின் அத்தனை நிலைகளிலும் நம்மை வழி நடத்தும் தகவல்கள் திருக்குறளில் உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் ஒரு திருக்குறள் புத்தகத்தையாவது வாங்கி வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.  இப்படி நான் படித்துகொண்டிருந்த நிலையில் கையையும் உடைத்துக் கொண்டேன். அதுவும் வலது கை, எழுத முடியாது. சுமார் மூன்று மாதங்கள் கை கட்டுடன் வீட்டிற்குள் இருந்தேன். பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்ததில் பொழுது போகாமல் ஒரு நாள் வரலாறு பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். நன்றாகப் புரிந்தது. நல்லாதானே இருக்கு,  இத்தனை நாள் ஏன் நாம இதை படிக்கலே என்று தோன்றியது. வலது கையில் எழுத முடியாததால் சில நாட்கள் இடது கையில் எழுத பழகினேன். ஆனாலும் கணக்கு மட்டும் புரியவே இல்லை. சரியான அடிப்படை கணிதம் கூட தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. கணக்கு புரியாததால் அறிவியலும் முழுவதுமாகப் புரியவில்லை.  படிக்காவிட்டால் வாழ்கை திசை மாறிப் போய்விடும் என்ற புரிதல் இருந்தது,  ஆனால் படித்தால் புரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த வேளையில்  என் வாழ்வில் நுழைந்தவர் ஸ்ரீதர்.

ஓட்டம் தொடரும்.....


Monday, April 6, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு

 
இசை, நடனம், ஓவியம், எழுத்து போன்ற விஷயங்கள் மனிதனுக்கு கிடைத்த வரம். சில நேரங்களில் வாழ்கை ஓட்டத்தில் இது போன்ற அரிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது பெரும் பாடாகி விடுகிறது. எண்ண ஓட்டங்கள் என்ற தொடரின் முதல் அத்தியாயம் எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இப்போது தான் அடுத்த அத்தியாயம் எழுத முடிந்திருக்கிறது. இது என் மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கிக்கிடக்கும் எண்ண அலைகளை வார்த்தைகளாக்கும் ஒரு முயற்சியே. இதை படிப்பதால் உங்களுக்கு பெரிய பலன் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த கால கட்டத்தில் என்னுடன் கை கோர்த்து நடந்த ஒரு உணர்வை அளிக்கும் முயற்சி தான் எண்ண ஓட்டங்கள். இதைப்பற்றி தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல், நினைவுகளைக் கிளறி மனம் போன்ற போக்கில் எழுத முனைகிறேன். இனி எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு...

ஆனால், நான் பிடித்து ஆடிய விழுது அறுந்து கீழே விழுந்தேன். என்னுடைய உடல் பாரம் முழுவதும் வலது கையின் மேல் இருக்கும்படி விழுந்ததில் மணிக்கட்டுக்கு சற்று மேலே வலது கையில் எலும்பு முறிந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் கை பெரிதாக வீங்கி விட்டது. வலது கையின் பாரத்தை தாங்க முடியாமல், இடது கையால் தாங்கியபடி நடந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கூட இருந்தனர், ஆனால் அவர்களும் மிரட்சியில் இருந்தார்கள். பின்னர் மெதுவாக நடந்து குருநாத் ஸ்டோர் அருகே வந்ததும் ஒரு ரிக்சா வண்டி வந்தது. நண்பர்கள் அவரிடம் பேசி என்னை ரிக்சாவில் ஏற்றி விட்டனர். ஒரு வழியாக வீட்டின் அருகே வந்து சேர்ந்து வாசலில் இருந்த ஒரு கடையில் போட்டிருந்த ஸ்டூலில் மிகுந்த வலியுடன் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் என்னை சுற்றி கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் ஐயோ பாவம் என்று சொல்லியபடி பார்த்துகொண்டு நின்றார்கள். இதை சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார். அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கண் முன்னே ஒருவன் வலியால் துடித்துகொண்டிருக்கும் போது  பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டு நிற்பது சாத்தியமில்லாதது. ஆனால் அங்கே ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக அங்கு வந்த ரங்கண்ணன் (ரங்கன் என்பது அவர் பெயர் அதனுடன் அண்ணனை சேர்த்து நாங்கள் ரங்கண்ணா என்று கூப்பிடுவோம்), என்னடா ஆச்சு என்று பதறியபடி கேட்டார். கை முறிந்திருப்பதைப் பார்த்து அடப்பாவி என்று உரக்க கூறியபடி வீட்டின் உள்ளே சென்று ஒரு துணியை நனைத்து கையின் மேலே லேசாக சுற்றினார். என்னை கைதாங்கலாக அழைத்தபடி அருகில் இருந்த கௌரி பார்மசி சேட்டிடம், 'சேட்டு, ஒரு இருநூறு ரூபா குடு, பையன் கையை ஒட்சினு வந்து நிக்குறான்' என்றார். சேட் என் தந்தையின் நெருங்கிய நண்பர். மறு பேச்சு பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தார். கௌரி பார்மசி சேட் குணத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்தப் பதிவை படிக்கவும்.
 
பணம்  கிடைத்தவுடன் புத்தூர் போகலாமா அல்லது ராயபேட்டா மருத்துவமனை போகலாமா என்று எழுந்த விவாதத்தில், ரங்கண்ணன் உடனடியாக  சின்னபையன் புத்தூர் ட்ரீட்மென்ட் வலி தாங்க மாட்டான், ராயபேட்டாவே போயிறலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை கூட்டிச் சென்றார். ராயப்பேட்டை மருத்துவமனையை நெருங்கும் முன்னரே அதன் நெடி நாசியை துளைக்க ஆரம்பித்தது. அந்த நெடியே அடிவயிற்றில் ஒரு பயத்தைக் கிளப்பியது. எலும்பு முறிவுப் பிரிவிற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அங்கிருந்த மருத்துவர் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த மருத்துவர் என் கையைப் பார்த்ததும், பையனை பெட்லே படுக்க வெச்சு கையை தூக்கி கட்டுங்க என்றார். யாரோ ஒருவர் வந்து என்னை அழைத்துச்சென்று கையை தூக்கி ஒரு கம்பியில் கட்டி விட்டார். எனக்கோ வலது கையில் எலும்பு முறிவு, அவரோ ஒரு பெரிய கம்பியை என் இடது புறம் வைத்துக் அதில் வலது கையை தொங்கவிட்டார். ஏற்கனவே கையில் சொல்ல முடியாத அளவிற்கு வலி, அதில் ஒரு மாதிரி ஒருக்களித்துப் படுத்து இருந்தது மேலும் வலியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தனர். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் குளோரோபார்ம் நிறைந்த ரப்பர் பை போன்ற ஒன்றை என் முகத்தில் அழுத்தினார்.
 
ஓட்டம் தொடரும்.....


Wednesday, May 15, 2013

நீயா நானா கோபிநாத்தும் நானும்



பாஸ்டனில் உள்ள நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய நீயா நானா கோபிநாத்தின் விவாத மேடையில் சென்ற வாரம் கலந்து கொண்டேன். வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா என்ற தலைப்பில் விவாதம். முதலில் தலைப்பை கேட்டவுடன் எனக்குள் இருந்த தத்துவஞானி விழித்துகொண்டார். ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும். இதில் பெரிது சிறிது என்று எப்படி பார்க்க முடியும். சூழ்நிலையைப் பொருத்து பெரிது சிறிது என்பது மாறுபடுமே. குளிர் அடிக்கும் ஊரில் வெயில் வந்தால் பெரிது, வெயில் அடிக்கும் ஊரில் குளிர் வந்தால் பெரிது. இப்படி இருக்கும்போது எதைப் பெற்றோம் எதை இழந்தோம் என்று எப்படி முடிவு செய்வது என்று கண்ணா பின்னவென்று பிதற்றிகொண்டிருந்தேன்.

பொதுவாக இது போன்ற மேடையில் பேசுகின்ற விஷயம் என்றால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவிடுவேன். எவ்வளவுதான் அட்டகாசமாக தயார் படுத்தி இருந்தாலும் சில நேரங்களில பேசும் போது நாக்கு மேலன்னதில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் இது போன்ற விவாத நிகழ்ச்சிகளில் பேச்சு எந்த திசையில் போகும் என்றே தெரியாத போது மேலும் சிரமம். இதையெல்லாம் யோசித்து இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தேன். இதை எங்க வீட்டம்மாவிடம் சொன்னதும், என்னங்க இப்படி சொல்றீங்க ? தமிழ் சங்க நிகழ்ச்சி வேற...நீங்க கலந்துக்க வேண்டாமா என்று கேட்டது வேறு மனதை நிரடிகொண்டே இருந்தது. சரி என்ன பெருசா...ஒரு கை பாத்துருவோம் என்று மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச பெயரை கொடுத்தேன். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு...ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது என்ற பராசக்தி சிவாஜி வசனம் மனதில் மின்னல் போல் வெட்டி வெட்டி சென்றதால், பாசிடிவாக 'பெற்றது தான் அதிகம்' என்று பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் சங்க வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்யும் போது எந்தப்பக்கம் பேசப் போகிறோம் என்று குறிப்பிட முடியவில்லை. சரி பின்னாடி யாராவாது நம்மை தொடர்பு கொண்டு கேட்பார்கள் என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். சில நாட்களில் தமிழ் சங்கத்தில் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. நீங்கள் விவாத மேடையில் கலந்து கொண்டு  'இழந்தது அதிகம்' என்ற பக்கத்தில் பேசப்போகிறீர்கள் என்று அதில் கூறியிருந்தார்கள். என்னடா இது வம்பா போச்சு, நான் இதை செலக்ட் செய்யவில்லையே என்று எனக்குள் சில நாட்கள் புலம்பிகொண்டிருந்தேன். சரி, பெற்றது அதிகம் பக்கம் பேச நிறைய பேர் இருக்காங்க போல இருக்கு, அதான் நம்மள இந்தப் பக்கம் போட்டு இருக்காங்க என்று ஒரு வழியா சமாதானம் ஆகி எதையெல்லாம் இழந்தோம் என்று இழந்தது அதிகம் பக்கம் பேச தயார் ஆக ஆரம்பித்துவிட்டேன். அந்த நேரத்தில், செம்பருத்தி படத்தில் ராதாரவி கூறும், 'நரம்பில்லாத நாக்கு மொதலாளி, எப்படி வேணும்னாலும் பேசும்' என்கிற டயலாக் அடிக்கடி நினைவிற்கு வந்தது. அந்த படம் வந்த புதிதில் என்னடா இது, நாக்குல அவ்ளோ நரம்பு இருக்குனு சொல்றாங்க, இந்த ஆளு நரம்பில்லாத நாக்குன்னு சொல்றாரே என்று நினைத்ததுண்டு. அதன் பின்னர் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னர், தமிழ் சங்கத்தில் இருந்து இன்னொரு ஈமெயில் வந்தது. அதில் என்ன விஷயம்னா, ஐயா மகாஜனங்களே, உங்களில் நிறைய பேருக்கு நாங்களே எந்த பக்கம் பேசுறீங்கன்னு முடிவெடுத்து அனுப்பி இருந்தோம். இப்ப உங்களுக்கு அந்தப் பக்கம் பேச விருப்பம் இல்லை என்றால் மாற்றிகொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். இதைப் பார்த்ததும் அடப் போங்கையா இதுக்கு மேல என்னால கட்சி மாற முடியாது என்று 'இழந்தது அதிகம்' பக்கமே பேசலாம்னு விட்டுட்டேன். அதன் பின் சில நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியில் என்ன பேசலாம் என்று மனதில் அசைப் போட்டுகொண்டிருந்தேன். அடுத்த சில நாட்கள், பார்க்கும் சில நண்பர்களுக்கெல்லாம் விஷயம் தெரிந்து (உபயம் தங்கமணி) அவர்களும் நிகழ்ச்சியை பார்க்க வருவதாக கூறி டென்ஷனை அதிகப்படுத்தினார். 
நிகழ்ச்சி நாள். ஒரு சனிக்கிழமை மாலை. நிகழ்ச்சி மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இருந்தது. நம்ம ஆளுங்க நடத்துகிற நிகழ்சிகள் எப்பவும் ஒரு அரைமணி நேரம் கழித்து தான் ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் சரியாக மூன்று மணிக்கு சென்றோம். அரங்கத்திற்கு முன்னாள் ரெண்டு மூணு டேபிள் போட்டு பட்டு புடவையில் இந்திய் பெண்கள் தெரிந்தனர். அதில்  ஒருவரிடம் சென்று இந்த மாதிரி நிகழ்ச்சியில் பேசப் போறேன் என்று கூறினேன். அவரும் கையில் இருந்த ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து சரி பார்த்து ஒரு சின்ன சீட்டில் என் பெயர், மற்றும் மனைவி குழந்தைகளின் பெயர் எழுதிக் கொடுத்தார். அதைக் வைத்துகொண்டு என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. அரங்கத்தின் நுழைவு வாசலில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கேட்டால், அவர் சலான் வாங்கிடீன்களா என்று கேட்டார். சலான்...சலான்...இதை எங்கேயோ கேட்டு இருக்கேனே...என்று சுஜாதா 'ஸ்ரீரங்கத்து கதைகளில்' சொல்வது போல என் அத்தனை நியுரான்களிலும் தேடினேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு...சின்ன வயசிலே தி.நகர் துரைசாமி பிரிட்ஜ் கிட்டே இருக்கிற இந்தியன் பேங்க்லே கேட்டு இருக்கேன். முதன் முதலில் தனியாக பேங்க் போய் பணம் எடுக்கும் போது மிரண்டு போயிருக்கிறேன். யாரையாவது எப்படி என்று கேட்டால், அங்கே போய் சலான் போட்டுட்டு, கௌண்டர்லெ கொடு. அவங்க டோக்கன் கொடுப்பாங்க. அப்புறம் உன்னோட டோக்கன் நம்பர் அந்த டிஸ்ப்ளேலே வரும் போது, உடனே போய் கௌண்டர்லே கொடுத்தா பணம் தருவாங்க. அவங்க முன்னாடியே சரியாய் இருக்கானு எண்ணி பாத்துரு என்று ஸ்டெப் பை ஸ்டெப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்து இன்னும் குழப்பி விடுவார்கள். ஒரு முறை எனக்கு முன்னால் இருந்த ஒரு பையன், தினமும் வந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு இருந்ததை காஷியர் திட்டிகொண்டிருப்பதை பார்த்து, நம்ம எதாவது தப்பா சலானில் எழுதி இருந்தால் அதற்கும் திட்டுவாரோ என்று பயந்திருக்கிறேன். இப்படி சலான் பற்றி ஒரு பிளாஷ் பேக் பளீரென்று வந்து போகவும், உடனடியாக என்னங்க சலானா...அது எங்கே வாங்கணும் என்று கேட்டேன். பின்னர் அவரே என் கையில் இருந்த பேப்பரை பார்த்து, நீங்க கையிலே வெச்சு இருக்கீங்களே, அது தான் சலான் என்று வயிற்றில் பாலை வார்த்தார். சலானை கொடுத்து டிக்கெட் வாங்கிகொண்டோம். ஏனோ இந்த ப்ராசஸ் கொஞ்சம் காம்ப்ளிகேட்டடாக (பழைய பேங்க் போல) தோன்றியது. அரங்கின் உள்ளே நுழைந்து சீட்டை தேடி அமர்ந்ததுமே, என் பெயரை மைக்கில் அழைத்து மேடைக்கு பின்புறம் வரச்சொன்னார்கள். என்ன இது இவ்வளவு அவசரமாக அழைக்கிறார்கள், கோபிநாத் அதற்குள் வந்துவிட்டாரா என்று அவரச அவசரமாக மேடைக்கு பின்புறம் ஓடினேன். அங்கு கோபிநாத் இல்லை. ஆனால் விவாதத்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்கள் நின்று நின்றுகொண்டிருந்தனர். இரண்டு பக்கமும் நாற்காலிகளைப் போட்டு அதில் பங்கேற்ப்பவர்களின் பெயரை எழுதி ஒட்டி வைத்திருந்தனர். ஏனோ என் பெயர் வரிசையில் கடைசியில் இருந்தது. அதில் என்ன அரசியலோ என்று தோன்றியது. சிறிது நேரம் கழிந்து திரையை திறந்ததும் அனைவரும் அமர்ந்து கோபிநாத்தின் வருகைக்காக காத்திருந்தோம். ஒரு பதினைந்து நிமிடத்தில் மேடையின் ஓரத்தில் வந்த கோபிநாத் யாருடனோ பேசிகொண்டிருந்தார். அங்கு அவர் நின்றிருந்த இடம், மேடையில் ஒரு புறம் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்வையாளர்களுக்கு தெரியாது. டிவியில் பார்த்ததை விட கொஞ்சம் பருமன் குறைவாகவே தோற்றம் அளித்தார். கோட் அணியாமல் இருந்தது தான் காரணமா என்று தெரியவில்லை. மைக்கை காதில் மாட்டிக்கொண்டு அவர் பெயரை அறிவபாளர் அறிவிப்பதற்காக காத்து நின்றிருந்தார். சிறிது நேரத்தில் கோபிநாத்தை அறிவிப்பாளர் அழைத்தவுடன் கூட,  ஏனோ கோபிநாத்  அமைதியாக நின்று கொண்டிருந்தார். என்னடா இவர் கூப்பிட்டதை கவனிக்கவில்லையா என்று தோன்றியது. அப்புறம் தான் அவர் ஒரு என்ட்ரி மியூசிக் போட்டதும் தான் நடந்து வருவார் என்று தெரிந்தது. நம்ம தமிழ் பட ஹீரோ அறிமுக காட்சியில் வரும் மியூசிக் போல ஒரு மியூசிக் போட்ட பின்னர், அவர் மேடையின் நடுவே வந்து நின்று பேச ஆரம்பித்தார். அவர் வந்து நின்றதுமே நம்ம மக்கள் கோபிநாத் கோட் எங்கே, கோட் எங்கே என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.  தமிழன் எங்கே போனாலும் இந்த கேள்வியை கேக்காமல் விடமாட்டன், கோட்டை வேட்டுலே வெச்சு இருக்கேன் என்று கொஞ்சம் காமெடியா பேச்சை ஆரம்பித்தார். அவர் என்ன பேசினார், விவாதம் எப்படி சென்றது என்பதை எல்லாம் விளக்கி உங்களை போரடிக்க போவதில்லை. ஆனால் நிகழ்ச்சியை பற்றியும் கோபிநாத்தை பற்றியும் என் கருத்தை மட்டும் கூறுகிறேன். நிகழ்ச்சி நீயா நானா அளவிற்கு சுவாரசியமாக இல்லை. இரண்டு பக்கமும் சேர்த்து ஒரு இருபது பேர் தான் இருப்போம். ஆனால் அவர்கள் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன என்று கூறுவதற்கு அனைவருக்கும் ஒரு நிமிடம் கூட அளிக்கவில்லை. ஒரு சிலரை மட்டும் கேட்டு விட்டு பின்னர், வேறு எதாவது விஷயத்திற்கு தாவி விடுகிறார். அதைத்தவிர ,ஏனோ தமிழ் சங்க கமிட்டியில் அவருக்கு இரண்டு நாட்கள் முன்னரே அறிமுகமானவர்களை நிறையை பேசி வைத்தாரோ என்று தோன்றியது. மேலும் இரண்டு பக்கத்திலும் இருப்பவர்களை விவாதிக்க நிறைய இடம் கொடுக்காமல், பல நேரங்களில் அவரே நம்மிடம் ஓவரா ஆர்க்யு பண்ணி, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற ரீதியில் பேசுகிறார். நீயா நானாவின் வழக்கம் போல தீர்ப்பு எதுவும் கூறாமல், ரெண்டு பக்கத்துக்கும் கொஞ்சம் அறிவுரை கொடுத்து விட்டு, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர் அவருடன் போட்டோ எடுக்க மொத்த கூட்டமும் மேடைக்கு வந்து விட்டது. அவரோ அவசரமாக அடுத்த நிகழ்ச்சிக்கு நியூஜெர்சி செல்லவேண்டும் என்று கூறிக்கொன்டிருந்தார். அங்கிருந்த தமிழ் சங்க மெம்பெர் ஒருவரிடம், என்னங்க கொஞ்சம் பார்த்து ஆர்கனைஸ் பண்ணி இருக்க கூடாதா, இப்போ நான் எப்படி பதினைந்து நிமிடத்தில் கிளம்புவது என்று கடிந்து கொண்டார். கோபிநாத்தை அந்த நேரத்தில் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது. இவர்களுக்கு கிடைத்த பெரும் புகழுமே இவர்களை இந்தப் பாடு படுத்துகிறதே என்று மனதில் நினைத்த படி மேடையில் இருந்து நகர்ந்தேன். 






Thursday, May 9, 2013

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஓன்று



சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் யாரவது வந்து மாரத்தான் ஓடினேன் என்று கூறி இருந்தால், ஓ அப்படியா! என்று ஒரு போலியான ஆச்சர்ய கேள்வி கேட்டுவிட்டு, அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என் சடார் என்று ட்ராக் மாறி இருப்பேன். ஆனால், இப்போ கொஞ்ச நாட்களாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பலவற்றிகாக அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும், புதிதாக ஒருவன் ஓடுவதற்காக நேரத்தை ஒதுக்கும் போது பல புருவ உயர்வுகளை சந்திக்க நேர்கிறது. என்ன சார், திடீர்னு ஓடறீங்க என்று சிலர் ஆச்சர்ய கேள்வி எழுப்பினர். ரன்னிங் பண்றது கால் மூட்டுகளுக்கு அவ்வளவு நல்லதில்லைங்க என்று சிலர் திடீர் டாக்டர்களாக மாறி அறிவுரை கூறினார்கள். என்னால எல்லாம் ஓட முடியாது என்று சிலர் தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்கள். சில நேரங்களில் எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று உடனடி பதில் சொல்ல முடியாது. ஏன் ஓடுகிறோம் என்ற கேள்வியை என்னையே நான் பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பல வித பதில்கள் மனதில் வந்து விழுகின்றன.என் எண்ண ஓட்டங்களை முடிந்த அளவு சுவாரசியமாக எழுத்தில் பகிர முயற்சிக்கிறேன். பொதுவாக ஓடுவதற்கு முன்னால் எந்த திசையில், எவ்வளவு தூரம் என்று மனதில் கணக்கு போட்டுகொண்டு செல்வேன். ஆனால் இந்த பதிவு எந்த திசையில் செல்லும், என்ன எழுதுவேன், எத்தனை அத்தியாயம் எழுதுவேன் என்று தெரியவில்லை. இனி என் ஓட்டம், உங்கள் பார்வைக்கு....



அத்தியாயம் ஓன்று - நீச்சல்

படிப்பு மட்டும் தான் முக்கியம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகள் எல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் என்று சொல்லாமல் சொல்லும் நடுத்தர வர்க்க குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்கு தெரிந்து எண்பதுகளில், நம்ம ஊரில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இருந்தது இல்லை. (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா ?).  அதுவும் நடுத்தர வர்கத்தில் உள்ள ஒருத்தன் சுமாரா படிச்சிட்டு, கிரிக்கெட் மட்டும் விளையாடுறேன்னு சொன்னா வீடு கூட்டும் தொ. கட்டையை எடுத்து அடிக்க வருவாங்க. மற்றபடி ஓட்டப்பந்தயம், கால்பந்து, நீச்சல் போன்றவைகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இங்கு அமெரிக்காவில் குழந்தைக்கு நடை பழக கற்றுகொடுப்பது போல சர்வ சாதாரணமாக நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஸ்விம்மிங் கற்று கொடுக்கிறார்கள். என் எட்டு வயது இளைய மகள், டைவிங் போர்டில் இருந்து குதித்து பதிமூன்று அடி ஆழத்தில் உள்ளே சென்று வெளியே வருவதை மகா ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு நிற்பேன். நமக்கு தெரிந்தது எல்லாம் கடப்பாரை நீச்சல் தான். கடப்பாரையை தண்ணீரில் போட்டால் கொஞ்ச தூரம் சென்று எப்படி நிற்குமோ அப்படி கொஞ்ச தூரம் நீந்தி பின் நின்று விடுவேன். என் உயரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு முடிந்த அளவு செல்ல மாட்டேன். அதுவும் சிறிய வயதில் நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்டதால் தான் சாத்தியமாகியது. சிறு வயதில் ஒரு முறை, சென்னை நந்தனம் அருகே இருக்கும் YMCA வில் உள்ள ஸ்விம்மிங் பூல் செல்லலாம் என்று கூறியதற்கு, சாராமாரியாக பலரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது. அப்படியும் திருட்டுதனமாக நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்று நீந்துவது ஒரு சுகமானா அனுபவம். அப்போது அங்கே அனுமதி கட்டணம், ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ என்று நினைக்கிறேன். ஸ்விம்மிங் பூல் உள்ளே சர்வ சாதாரணமாக நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும் மோதிக்கொண்டும் நீச்சல் அடிப்போம்.  சென்னை , சைதாபேட்டையில் இருந்து டீச்சர்ஸ் காலேஜ், தாடண்டர் நகர் வழியாக (சில நேரங்களில் B கிரௌண்ட் வழியாக) YMCA -விற்கு  நடந்தே அங்கு செல்வோம். அப்போது அங்கு நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். ஒரு முறை கமல் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படம் பெயர் வெற்றிவிழாவா அல்லது சூரசம்ஹாரமா என்று சரியாக நினைவில்லை. அநேகமாக வெற்றிவிழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். கமலை மிக அருகில் பார்த்த நானும் என் நண்பர்களும் ரொம்ப குஷியாகிவிட்டோம். ஆனால் கிட்டே போய் பேச பயம். அப்போது கமல் வேறு பயங்கரமா எக்சர்சைஸ் பண்ணி ஆர்ம்ஸ் ரெண்டையும், எங்களில் பலருக்கு அப்போதிருந்த தொடை சைஸ் -க்கு வைத்திருந்தார். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோகிராப் வாங்கலாம் என்று நினைக்கும் போது, கையில் பேப்பர் பேனா எதுவும் இல்லை. ஆமா ஸ்சூலுக்கு படிக்க போகும்போதே பேப்பர் பேனா கொண்டு போகாதவனுங்க, ஸ்விம்மிங் பூல் போகும் போதா கொண்டு போவோம். அப்படி இப்படி என்று பேப்பர், பேனா எல்லாம் யார்கிட்டயோ தேத்தி, கமல் கிட்டே போநூறு கலாம்னு பார்த்தா, அவர் ஒரு வேனில் உட்கார்ந்து சுவாரசியமாக பூரி மசாலை உள்ளே தள்ளிகொண்டிருந்தார். சரி, அவரை ப்ரீயா விட்டுரலாம்னு எங்களுக்குள்ளேயே பெருந்தன்மையா முடிவெடுத்து, அருகில் வெண்ணிற ஆடை மூர்த்தியை வைத்து படமாக்கிக் கொண்டிருந்த ஒரு உப்பு சப்பு இல்லாத காட்சியை பார்த்துவிட்டு நகர்ந்தோம். 

இப்படி அப்பப்ப போய் நீச்சல் கத்துகிட்டு வந்தோம். ஆனால் அதற்கும் சில நாட்களில் வேட்டு வந்துவிட்டது. ஒரு நாள் நீச்சல் அடிச்சிட்டு திரும்பி வரும் போது வழக்கமா தண்ணீர் குடிக்கும் குழாயில் தண்ணீர் குடித்து பின்னர் அருகில் இருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, செந்தில்னு ஒருத்தன் ரஜினி மாதிரி இந்த விழுதுலே தொங்கி ஆடலாமனு கேட்டான் (பத்தவெச்சுட்டியே பரட்டை!). அப்போ வேற டிவியில் அடிக்கடி போடுற 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினி ஒரு பாட்டில் கௌபாய் மாதிரி உடையில் ஆலமரத்துக்கு கீழே குதிரையில் வந்துட்டே இருப்பார். குதிரையில் வேகமாக வரும்போதே அப்படியே தாவி ஆலமர விழுதை பிடிப்பார். குதிரை பாட்டுக்கு முன்னாடி போயிரும். ரஜினியோ அப்பிடியே கொஞ்ச தூரம் தொங்கியபடி முன்னாடி போய் நேரா குதிரை மேலே உட்காருவார். எப்டி போறான் பார்றா என்று நாங்கள் நண்பர்கள் சிலாகிதுக்கொள்வோம். ரஜினி கமலுக்கு எல்லாம் அவர் இவர் என்று மரியாதை கொடுத்து நாங்கள் தள்ளி வைத்ததில்லை. எம்ஜியார் சிவாஜி என்றால் மரியாதை கொடுத்து பேசுவோம். இந்தப் பய ஆலமர விழுதிலே ஆடலாம்னு சொன்னதும் எனக்கு அந்தக் காட்சி நியாபகம் வந்தது. உடனே நான் முதல்லே பண்றேன்னு ஒரு நான்கடி உயர சிறிய சுவற்றின் மேல் இருந்து குதித்து ஆலமர விழுதை பிடித்து ஆட நினைத்தேன். அதையெல்லாம் விட ரிஸ்கான கில்லி தாண்டு, பம்பரம், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆடும் எங்களுக்கு அது ஒரு ஜுஜுபி -யாக அந்த நேரத்தில் தோன்றியது.  சரி என்று முதல் ஆளாக சுவற்றில் ஏறினேன், தாவி விழுதை பிடித்தேன். நான்கைந்து முறை விழுதில் ஆடிவிட்டு கீழே குதித்து நின்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்...

ஓட்டம் தொடரும்...




Tuesday, January 1, 2013

2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்





அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சென்ற வருடம் புத்தாண்டு அன்று, எழுத ஆரம்பித்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரிசா எதுவும் இல்லாவிட்டாலும் ஐம்பது பதிவு எழுதிவிட்டேன் என்று எழுத முடிந்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல, 2012-ல் மொத்த வருடத்திற்குமே ஐந்து பதிவுகள் தான் எழுத முடிந்தது. ஏன் என்று யோசித்து பார்த்தால் அலுவலக வேலை பளு, வீடு இடம் மாறியது, பிள்ளைகள் படிப்பு அது இது என்று பல காரணங்களை மனம் கூறி சமாதானம் செய்கிறது. எதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. நீ ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டால், உன் மனம் அதற்கு சாதகமான ஆயிரம் காரணங்களை அடுக்கும். ஆனால் எழுத வேண்டாம் என்று நினைத்து எழுதாமல் இருந்ததில்லை. எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் டிராப்டில் பல பதிவுகள் உட்கார்ந்து இருகின்றன. ஏனோ சரிவர நேரத்தை ஒதுக்கி எழுத முடியவில்லை. மேலும் 2012 -ல் வெற்றிகரமாக ஒரு முழு மாரத்தான் ஓடியதும் இதற்கு காரணமாக இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கடுமையாக பயிற்சி எடுத்து அக்டோபர் மாதம் 26.2 மைல்கள் (42.2 கிலோமீட்டர்கள்) வெற்றிகரமாக ஓடினேன். அந்த அனுபவத்தை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன். இந்த வருடம் நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வேண்டும், நிறைய இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

தமிழில் பேசுவது எழுதவது குறைந்துவிட்டது, யாருக்கும் ழகரம் உச்சரிக்க வரவில்லை என்று இப்போது புலம்ப போவதில்லை. தமிழ் கூட பரவாயில்லை. நம் மக்கள் கையில் ஆங்கிலம் படும் பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. What = wat, This=dis, the=d, இப்படி அடுக்கிகொண்டே போகலாம். ஸ்பெல்லிங் தெரியாமல் தப்பாக அடிக்கிறானா, இல்லை ஸ்டைல் என்ற பேரில் இப்படி அடிக்கிறானா(ளா) என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி இருந்தால் இந்நேரம், ஆங்கிலம் இனி மெல்ல...என்று எழுதி இருப்பார். உங்களுக்கு இதை எப்படி நான் புரிய வைப்பேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு. 'Going out, just made dress' - வெளிலே போறாங்களாம், இப்போதான் டிரஸ் பண்ணாங்களாம். கிண்டலுக்காக சொல்லவில்லை, ஒரு ஆதங்கத்தில் தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் ஒன்றும் இல்லை, பலர் டிகிரி முடித்து பன்னாட்டு நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே பேசி வேலை செய்பவர்கள்.  அது சரி, இவ்வளவு வாய் கிழிய சொல்றியே, நீ என்ன பெரிய தமிழ் புலவனா, இங்கிலீஷ்லே எல்லாம் கரைச்சு குடிச்சிட்டியா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை நான் ஸ்பெஷல் இல்லை , அதே சாதா தோசை தான் (உபயம் BigFM RJ பாலாஜி). ஆறாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, பின்னர் ஆங்கிலத்தில் படித்தேன். தமிழும், ஆங்கிலமும் தட்டு தடுமாறி தான் கற்றுகொண்டேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை ஓரளவிற்கு வார்த்தைகளை கொலை செய்யாமல் சரியாக உபயோகிக்கிறேன். இதை எல்லாம் இவர்களிடம் சொல்லவும் பயமாக இருக்கிறது. அப்படியே சொன்னாலும், எனக்கு எல்லாம் நல்லாத் தெரியுமே என்று பதிலடி கொடுகிறார்கள். ஒரு விஷயம் தெரியாமல் இருப்பது தவறில்லை, அது தெரியவில்லை என்றால் அதை உணர்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும் என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து. இப்படி அட்வைஸ் செய்வதையும் இந்த வருடம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பல வருட அமெரிக்க வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக மாறியிருக்கிறேன் என்றால் அது வெளிப்படையாக பேசுவது. நான் ஒரு இன்றோவேர்ட்/ அவ்வளவாக யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். அப்படி பேசினால் மனதில் நினைப்பதை முலாம் பூசாமல் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். இது நம்ம ஆட்களுக்கு பிடிக்கவில்லை. அதுவும் அவர்களின் நலனுக்காக சொல்வதுதான். உதாரணதிற்கு,  நீ ரொம்ப நாள் உயிர் வாழனும் என்றால், கண்டிப்பா டெய்லி உடற்பயிற்சி செய். இப்படி சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை. என்ன நல்ல நாள் அதுவுமா இவன் உயிரை பத்தி எல்லாம் பேசுறான் என்று நினைகிறார்கள். இப்படிதான் எதோ எழுத ஆரம்பித்து மனதை நிலைப்படுத்தாமல் என்னனமோ எழுதுவது வழக்கமாகிவிட்டது. மற்றபடி இந்த வருடம் நிறைய எழுத முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Wednesday, August 22, 2012

முக்கோண நட்பு - சிறுகதை (மாதிரி)





ரொம்ப நாளா பதிவு எழுத வர முடியலை. வீட்டு வேலை, அலுவலக வேலை என பல காரணங்களை கூறி மனம் சமாதானம் செய்தாலும், எழுதுவது இல்லை, எழுதுவது இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு கோரஸ் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மனதில் அசை போட்டு கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று எழுதலாம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கதை மாதிரி தான். முக்கோண காதல் மாதிரி, இது முக்கோண நட்பு. இது முழுக்க முழுக்க கற்பனை என்றெல்லாம் பொய் சொல்ல மனமில்லை. என் நண்பன் அவனுக்கு நிகழ்ந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டு என்னுடைய அபிப்ராயம் கேட்டான். அதை சற்று கற்பனை கலந்து உங்கள் முன் வைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. நான் என்னுடைய கருத்தை அவனுக்கு சொல்லிவிட்டேன், ஆனால் நான் கூறிய கருத்து சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்கள் கருத்து ஒரு நல்ல நட்பை சேர்த்து வைக்கும் வாய்ப்புள்ளது. இனி கதைக்கு செல்வோம்.

------------------------------

சென்னையில் வசிக்கும் சரவணனும், குமரனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் இருவரின் மனைவிகளும் மேலும் நெருங்கிய சினேகிதிகள். இப்படி இரண்டு  குடும்பகளும் பல வருடங்களாகப் பழகி வந்தன. 

இப்படி இருக்கும் போது சரவணனின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் மற்றொரு நண்பன் ராம் காலப்போக்கில் குமரனுக்கும் அறிமுகமாகிறான். புதிய நட்பு என்பதால் குமரன் மற்றும் ராம், தாங்கள் படித்த புத்தகங்கள், பின் நவீனத்துவம், இசை, பாடல்கள் என தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிக நேரம் தனியாக செலவழிப்பதைப் பார்த்த சரவணன் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஒருநாள் குமரனிடம் சென்று...

குமரா, நீ இப்ப எல்லாம், ராம் கூட தான் ரொம்ப பேசுறே. எப்பவும் என்னை ஒதுக்கி வெச்சுட்டு, நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க. 

டேய், அப்படி எல்லாம் இல்லடா. நானும் ராமும் இப்பதான் புதுசா பழகுறோம். ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு. இதுலே சீக்ரெட் எதுவும் இல்லே, நீயும் வந்து தாராளமா கலந்துக்கலாம்.

அந்தப் பிரச்சனை அதோடு முடிந்தது. அதன் பின்னர் சில மாதங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் சென்றது. இதற்கிடையில் ராமின் அலுவலகத்தில் வேலை மாற்றத்தினால் பெங்களூருக்கு குடும்பத்துடன் அடுத்த சில மாதங்களில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சரவணன் செய்தான். அதனால் ராமும் சரவணனும் தனியாக அதிக நேரம் செலவு செய்ய நேர்ந்தது. இதைப் பற்றி அறிந்த குமரனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அதை நேரடியாக சரவணனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் ராமிடம் மட்டும், இப்பல்லாம் சரவணன் உன்னோட நேரத்தை நிறைய எடுத்துக்குறான். நீயும் நானும் பேசவே முடியறது இல்லே. ஞாயித்துகிழமை கூட உன்னாலே என்னை பாக்க வர முடியலே.

அதெல்லாம் ஒன்னும் இல்லே குமரா. உனக்கே தெரியும் பெங்களூர் மாத்தி போறதுனாலே வீட்டுல ஏகப்பட்ட வேலை. அதான் ஞாயித்துகிழமை பாக்க வர முடியறதில்லை.

என்னவோ சொல்ற, நீ பெங்களூர் கிளம்பி போனதும் அவன் என்கிட்டே தானே வருவான். என்னாலே எல்லாத்தையும் மறந்துட்டு உடனே பழக முடியாது. கொஞ்சம் டைம் ஆகும் என்றான் குமரன். 

இதைக்கேட்டு ராம் சற்று அதிர்ச்சி அடைந்தான். என்னடா இதே பிரச்சனை தானும் குமரனும் பழகுவதால் வந்தது. சரி நாம் இங்கிருந்து பெங்களூர் கிளம்பி விட்டால், இவர்கள் இருவரும் எப்படியும் ஓன்று சேர்ந்து விடுவார்கள். அதைத்தவிர ஏற்கனவே முன்பு இதேபோல் நடந்த பிரச்சனையை அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொண்டார்கள். அப்படி இல்லாவிட்டாலும் இருவரின் மனைவிகளும் நெருங்கிய சினேகிதிகள், அவர்கள் பேசி சேர்த்து வைப்பார்கள். தானே கனியும் பழத்தை தடியை எடுத்து அடிப்பானேன். அவர்கள் இருவரும் பல வருடங்களாக பழகும் நண்பர்கள், இதில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து சரவணனிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விட்டான்.

சில மாதங்களில் ராம் பெங்களூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சென்று விட்டான். அவ்வபோது தொலைபேசியில் இரு நண்பர்களிடமும் தொடர்பில் இருந்தான். குமரன் முன்பு கூறியதைப் போல சரவணனிடம் சற்று விலகியே இருந்தான். 

குமரன் ஏன் இப்படி இருக்கிறான் என்று குழம்பிய சரவணன், ஒரு நாள் தனியே சந்தித்து...

குமரா, அப்படி என்னதான் கோபம் என் மேலே, நீயா போன் பண்றதில்லை, நான் பேசினாலும் பட்டும் படாம தான் பேசுறே. என்ன ஆச்சு உனக்கு ?

நீயே யோசிச்சு பாரு, நீயும் ராமும் சேந்துகிட்டு என்னை ஒதுக்கி வெச்சீங்க. அன்னைக்கு ஒருநாள் அவனுக்கு நான் மெசேஜ் பண்ணினேன், அவன் உன் வீட்டுல இருக்கறதா எனக்கு ரிப்ளை பண்றான். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருக்கீங்க.

அதன் பின்னர் ஒருவழியாக சரவணனும் குமரனும்  ஏதேதோ பேசி சமாதானம் ஆகி விட்டார்கள்.  இப்போது பிரச்சனை என்னவென்றால் சரவணன் குமரன் இருவருமே ராமிடம் பேசுவதில்லை. சரவணனாவது அவ்வப்போது  தொடர்பு கொள்வான். ஏனோ தெரியவில்லை குமரன் சுத்தமாக ராமின் தொடர்பை துண்டித்து விட்டான். எப்படியும் காலபோக்கில் பேசுவார்கள் என்று காத்திருந்த ராம் ஒரு நாள் பொறுமை இழந்து சரவணனை அழைத்தான்.

சரவணா, என்னதான் அப்படி மனசில் நினைசிகிட்டு என்கிட்டே பேசாமே இருக்கே ?

குமரனுக்கு என்கிட்டே பிரச்சனைன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்லே, அதை ஏன் என்கிட்டே சொல்லலே. என்னை நீ நல்லா ஏமாத்திட்டே. என் வீட்டுல இருந்துட்டே அவனுக்கு மெசேஜ் பண்றே, என்கிட்டே சொல்ல கூட இல்லை. குமரன் என் மேலே கோவமா இருக்குறதை, என் கூடவே இருந்துகிட்டே எப்படி உன்னாலே மறைக்க முடிஞ்சது. உனக்கு முன்னாடியே நானும் குமரனும் பிரண்ட்ஸ், நாங்க சண்டை போட்டு பிரியறது உனக்கு சந்தோசம். அதான் என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் கண்களில் பொங்கிய அழுகையை அடக்கியபடி, அப்படி இல்லே சரவணா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பிரண்ட்ஸ். நான் பெங்களூர் கிளம்பியதும், எப்படியும் நீங்க ஒன்னா சேர்ந்துருவீங்க. இதுலே நான் எதுக்கு நடுவுலே புகுந்து குட்டையை குழப்பனும்னு தான் சொல்லலே. நான் சொல்லாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே பிரச்னை இருக்குனு நீங்க உணர்ந்து இருப்பீங்க. ஏற்கனவே இதுக்கு முன்னாடி வந்த பிரச்னையை நீங்களே தான் பேசி தீர்த்துகிட்டீங்க. அதே மாதிரி, இதையும்  நீங்களே எப்படியும் பேசி சால்வ் பண்ணுவீங்கனு தான் சொல்லலே. மத்தபடி நம்ம மூணு பேருமே எப்பவும் ஒன்னா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்.

ஆனால், ராம் என்ன கூறியும் சரவணன் சமாதானம் ஆகவில்லை.

இப்பொழுது என் கேள்வி. 
  1. ராம் நிலையில் இருந்து பார்க்கும்போது, அவன் செய்தது சரியா அல்லது தவறா.
  2. கோபப்பட்டு பேசாமல் இருந்த குமரனிடம் நட்பு பாராட்டும் சரவணன், இதற்கு நடுவில் ஒரு பார்வையாளன் போல இருந்த ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
  3. எந்தக் காரணமும் கூறாமல் குமரன் ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
சரியா, தவறா என்று கூறி அது ஏன் என்று விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும். 


Sunday, March 11, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு புரிந்த ஐந்து விஷயங்கள்




சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் எழுதி இருந்த 'அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்' என்று ஒரு பதிவைப் படித்தேன். சரி அவருக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பது அவரது உரிமை. சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமலிடம் ரசிகர் ஒருவர் மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரடி போட்டியின் போது கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

சார், ஹேராம் படத்திலே கடைசி சில காட்சிகளில் எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு பக்கம் நெருப்பு எரியும் போது அதை மட்டும் கலரில் காட்டி இருப்பீர்கள். அது ஏன் என்று புரியவில்லை.

அதற்கு கமல் - நீங்கள் பிடிக்கலை என்று சொல்லாமல் புரியலை என்று சொல்லியதே நீங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ளத் தயாராக இருக்குறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. என்னுடைய சமூகக் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தன்னுள் கனன்று கொண்டுருந்த கோபத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு காட்டினேன் என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதை விட அவர் ஏன் அதை செய்கிறார் என்று அறிந்து கொண்டால் நம் அறிவும் வளரும் அந்த உறவில் சிக்கல் ஏற்பாடாமலும் இருக்கும். இது போல தனிப்பட்ட பதிவைப் பற்றி என் கருத்துக்களை நான் இதுவரை நேரடியாக எழுதியதில்லை. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது. அந்த பதிவரின் கருத்துக்களை // அடைப்பிற்குள்ளும், என் புரிதலை அதற்கு கீழேயும் கொடுத்திருக்கிறேன்.


//# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.//

இதில் எதுவும் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் குளிர் வாட்டும். அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் பள்ளிகளிலேயே முதலில் எப்படி மூக்கை சுத்தமாக சிந்தி அந்த நாப்கின்னை பத்திரமாக குப்பை தொட்டியில் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதலில் படிப்பை விட அவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொல்லிக் கொடுகிறார்கள். உதாரணதிற்கு எப்படி நன்றி சொல்வது, குளிருக்கு அணியும் கோட்டை எப்படி பத்திரமாக மாட்டுவது, ஒருவர் உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொது இடங்களில் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். நம்ம ஊரில் சாப்பிட்டுவிட்டு எல்லோர் முன்னிலையிலும் பெரிதாக ஏப்பம் விடுவதைப் போல் அமெரிக்கர்கள் செய்வதில்லை. அப்படியே மீறி ஏப்பம் வந்தாலும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்கள். பொது இடங்களில் லஜ்ஜை இல்லாமல் சிறுநீர் கழிப்பதில்லை. நீங்களே யோசித்து பாருங்கள், சளி வந்தால் போகிற போக்கில் சாலையில் துப்புவதை விட, எந்த இடம் என்றாலும் நாப்கினை உபயோகித்து சிந்தி அதைக் குப்பைத் தொட்டியில் போடுவது மேல் இல்லையா.

//# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.//

ஐயா ஓரிரு மாதத்திற்கு பின் அல்ல, குழந்தை பிறந்ததில் இருந்தே தனியாகத் தான் படுக்க வைப்பார்கள். இதற்கு காரணம் குழந்தையின் மீது உள்ள அக்கறையால் தான். குழந்தையை கூடப் படுக்க வைப்பதால் போர்வை மூடியோ அல்லது தலையணை மூடியோ மூச்சுத் திணறி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம ஊரில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லையா, அது போல் தான் இங்கு தனியாக கிரிபில் படுக்க வைப்பது. குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் அதற்கு பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவர்களும் இதையே பரிந்துறைக்கிறார்கள். இதை போய் ஐந்தறிவு ஆறறிவு பாசம் போன்றவற்றை சொல்லி குழப்பிக் கொள்ளகூடாது. குழந்தைகளைத் தனியாகப் படுக்கவைப்பதால் அவரகளுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

//# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//

பணம் இல்லாதாதால் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்ற நிலை எனக்குத் தெரிந்து எந்த அமெரிக்க குடிமகனுக்கும் வந்ததாக தெரியவில்லை. ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கும் என்றில்லை, அது இல்லாதவர்களுக்கும் பல இலவச முகாம்கள் இருக்கின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மேலும் இது விவாதத்திற்குரிய தலைப்பு.

//# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).//

எல்லா ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்கையை வைத்து கணக்குப் போடக் கூடாது. அமெரிக்காவில் உள்ள எலும்பைத் துளைக்கும் குளிரில் ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றினால் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து ஜன்னி வந்துவிடும் ஐயா. மேலும் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டியிருப்பார்கள். அதனால் நம்ம ஊரைப் போல் பாத்ரூமில் தண்ணீரை எல்லாம் ஊற்ற முடியாது. அப்படி ஊற்றினால் கிழே உள்ள தளத்தில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் உபயோகித்து நேரடியாக கழிவுகளைத் தொடாமல் பேப்பரை உபயோகித்து பின்னர் சோப்பு போட்டு கை கழுவுவதால் அதனால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பும் குறைவு.


//# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.//

அவர்களைப் பொறுத்தவரை தான் சரி என்று நினைப்பதை யோசிக்காமல் செய்வார்கள். ஐயோ நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. என்னதான் நினைத்த நேரம் விவாகரத்து செய்து கொண்டாலும், திருமண வாழ்க்கையில் கணவனோ மனைவியோ வேறொரு நபரிடம் உறவு வைத்துக்கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள். கணவனோ மனைவியோ நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே அடுத்த பெண்ணுடனோ, ஆடவனுடனோ உறவு வைத்துக் கொள்வதை விட பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு போவது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் இருதார மனம் எல்லாம் சட்டப்படி குற்றம். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருப்பதில்லை, அதனால் விவாகரத்து பெருகுகிறது. இப்போது இந்தியாவிலும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. அந்தக் காலத்தைப் போல கணவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலை இப்போது இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்.


Sunday, January 1, 2012

2012 புது வருடமே வருக



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் பதிவு எழுத தொடங்கி ஒரு வருடம் ஒடிவிட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், அப்படி இப்படி என்று ஐம்பது பதிவுகளுக்குமேல் எழுதியாகி விட்டது. முதலில் எழுத ஆரம்பிக்கும் போது நம்மால் ஒழுங்காக நேரத்தை ஒதுக்கி உருப்படியா எழுத முடியுமா என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழுந்துகொண்டு இருந்தது. அவ்வப்போது கொஞ்சம் பிரேக் விட்டாலும் தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னது ப்ளாக் எழுதுறியா ? எதுக்காக, என்னத்தை பத்தி, எவ்வளவு ஹிட்ஸ் என்று சிலர் கேட்பார்கள். எவ்வளவு ஹிட்ஸ் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. யாரவது பத்து பேர் படித்து ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தால் சரி. ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் - அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் எழுதினால் ஏதோ ஒருவித திருப்தி கிடைக்கிறது. மேலும் அறிவியல் பதிவுகளைப் படித்துவிட்டு சில மாணவர்களுக்கு அவை பயனுள்ளதாக இருப்பதாக வரும் பின்னூட்டங்கள் மற்றும் மின்னசல்களைப் பார்க்கும் போது அந்த திருப்தி பல மடங்காகிறது. இரண்டாவது காரணம் பதிவுகளைப் படித்துவிட்டு பாராட்டவோ, தவறை சுட்டிக்காட்டவோ வரும் கருத்துக்கள். இந்த உலகில் உள்ள அனைவருமே ஒரு சிறு பாராட்டுக்கு தானே ஏங்கிக் கிடக்கிறோம், நான் அதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாவது காரணம் கொஞ்சம் நீளமானது. எழுத ஆரம்பித்த புதிதில் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்த பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்ட ஒரு கேள்வி - தமிழில் எல்லாம் எப்படி எழுதுறே, அதுவும் அமெரிக்காலே இருந்துட்டு எப்படி இது மாதிரி எழுத முடிகிறது போன்ற கேள்விகள் தான். நான் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் பதிவு எழுதி இருந்தால் கூட இவ்வளவு ஆச்சரியப் பட்டிருக்க மாட்டார்கள் போல இருக்கிறது. அது என்னமோ தெரியலே, தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் தெரியவில்லை என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. எப்படிதான் நம்ம ஆளுங்க மட்டும் ஹலோ ஐ ஆம் திருநாவுகரசு...ஐ ஆம் செந்தில்வேலன் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்திலேயே பேசிகொண்டிருக்க முடிகிறதோ.

அது மட்டும் இல்லாமல், இன்றைய சூழ்நிலையில் 'ழகரம்' என்பதே வழகொழிந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது. பலருக்கு அது தவறென்றே தெரியவில்லை, பள்ளிகூடத்தில் எல்லாம் தமிழ் வாத்தியார்கள் ஒன்றும் சொல்லமாட்டார்களா ? நான் படித்த காலகட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது திடீர் என்று யாரையாவது ஒரு மாணவனை எழுந்து பாடத்தையோ, செய்யுளையோ படிக்க சொல்வார். கொஞ்சம் உச்சரிப்பு தவறினாலும் விட மாட்டார்கள், அதையே ஒரு காமடியாக்கி சம்மந்தப்பட்ட மாணவனுக்கு உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இது கூட பரவாயில்லை, எனக்கு தெரிந்த தமிழ்நாட்டில் வாழும் ஒரு நண்பர் ஒருவர் - என் மகள் பேசும் போது அவள் நினைப்பதை ஆங்கிலத்தில் தான் சரளமாக கூற முடிகிறது என்று கூறினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன். அவரும் தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார். இதைப் பற்றி இவர்களிடம் நேரடியாக பேசினால் கூட, 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். இதை எல்லாம் சொல்வதால் நான் தான் தமிழை மெத்த அறிந்தவன் என்றோ மற்றவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்றோ கூறவில்லை. நம்மை சிந்திக்க வைக்கும் நம் தாய் மொழியை இகழ்ச்சி செய்பவர்களை பார்த்துகொண்டு என்ன செய்வது. இது ஒரு உதாரணம் மட்டுமோ, இது போல பல சமூக நிகழ்வுகள் என்னை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும்.  இது போன்ற தருணங்களில் என் கருத்துகளை நேரடியாக வெளிபடுத்த இயலாத நேரத்தில், அந்த சமூகக் கோபத்தை காட்ட சுயநலத்துடன் ஒரு வடிகாலாகவும் பதிவுகளை எழுதுகிறேன். எது அப்படி இருந்தாலும், நம் எண்ண ஓட்டத்தை சிரமமில்லாமல் தமிழிலேயே இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் இந்த பதிவுலக வாய்ப்பினால் தமிழ் நீண்ட நெடுங்காலம் வாழும் என்பது நிதர்சனமான உண்மை.

உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.



Saturday, November 5, 2011

மனிதம் தொலையவில்லை


உங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்.  நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ,  புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

நாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.

முதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே  தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது.  அதே போல, எந்த நிறுவனமும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது.  ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.

Monday, September 26, 2011

குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில்


சன் டிவியின் கல்யாணமாலை நிறுவனர் திரு மோகன் மற்றும் கல்யாணமாலை நிறுவன இயக்குனர் திருமதி மீரா நாகராஜன் அவர்களும் சென்ற சனிக்கிழமை, தங்கள் வட அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கனக்டிகட் வந்திருந்தனர். கனக்டிகட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில் கல்யாணமாலை நிகழ்ச்சி பற்றி ஒரு குறும்படமும் அதைத் தொடர்ந்து ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது. பட்டிமன்றத் தலைப்பு - இந்தியக் குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில். அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா அல்லது இந்தியாவில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா என்பது தான் தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசினேன் என்பது எனக்கே சற்று ஆச்சரியமான விஷயம். சாதாரணமாக புதியவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டேன். இந்த நிலையில் பட்டிமன்றத்தில் பேசுவது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தில் இருந்து நண்பர் ஒருவர் அட சும்மா வந்து பேசுங்க என்று கூறியதால் சரி போய் பேசித்தான் பார்ப்போம் என்று ஒரு அசட்டு துணிச்சலில் சென்று கலந்துகொண்டேன். ஓரளவுக்கு சுமாராக பேசினேன் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு பேசும் வாய்ப்பு கடைசியில் கிடைத்ததால் நேரமில்லாமல் நான் பேச வேண்டும் என்று நினைத்ததை அனைத்தையும் பேச வாய்ப்பில்லாமல் போனது. அதனால் நான் பேச நினைத்தது அனைத்தையும் உங்கள் முன்னால் கொட்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். படித்துவிட்டு இந்தப் பதிவைப் பற்றியோ அல்லது பட்டிமன்றத் தலைப்பை பற்றியோ உங்கள் கருத்தை முடிந்தால் கூறுங்கள்.

சரி இனி என் பேச்சு இங்கே எழுத்தில்...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க. சாதரணமா உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாறிப் போய் வாழ்வது சற்று சிரமம் தான். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டுக்கு ஒருவன் ஓடுவது எதற்காக. அப்படிக் கிளம்பும் யாரும், 'எனக்கு வெளிநாட்டில் யாரவது மூதாதையர் இருக்கிறார்களா என்று கண்டு பிடிக்கப் போகிறேன்னு' சொல்லிவிட்டு போவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் வெளிநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகத்தான் சென்றார்கள். இந்தக் காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். இங்கு அடிப்படை நோக்கம் பொருள் ஈட்டுவது தான் அதாவது பணம் சம்பாரிக்கத் தான் ஒருவன் வெளிநாட்டிற்கு செல்கிறான். அவன் நினைப்பெல்லாம் தனக்கு கிடைக்கப்போகும் சம்பளத்தை முப்பதைந்தாலோ அல்லது நாற்பதைந்தாலோ பெருக்கி, இந்தியா ரூபாயில் கணக்குப் போடுவது தான். பல நேரங்களில் புதிதாகச் செல்பவர்கள், வெளிநாட்டில் செலவு செய்யபோவது இந்தியா ரூபாயில் அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள்.

சரி வெளிநாட்டிற்கு சென்றாகிவிட்டது.  அங்கு அவன் கொஞ்சம் நிலைத்து நின்றதும், என்ன செய்கிறான். அண்ணனாக இருந்தால் தம்பியை கூப்பிடுவான், தம்பியாக இருந்தால் அண்ணனை கூப்பிடுவான். இரண்டும் இல்லாமல் திருமணம் ஆகதவனாக இருந்தால் கல்யாணம் செய்துகொண்டு மனைவியை அழைத்து வருவான். இதை தவறென்று கூறவில்லை. அடிப்படையில் பார்த்தால் அவன் மனது முழுவதும் அவன் வாழ்ந்து வளர்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலையைத் தான் தேடுகிறது. அவனை சிரிக்க வைக்க, மகிழ வைக்க, நெகிழ வைக்க அவனை சுற்றிலும் உறவுகள் தேவைபடுகிறது. தன் சொந்த உறவுகளை அழைத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்திய நண்பர்களை சேர்த்துக் கொள்கிறான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் வாழ்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் கிடைக்காததால் தன்னால் இயன்ற அளவு தன் வீட்டிற்குள் ஒரு இந்தியக் குடும்பத்தை செயலவில் மெய்யாக்கதக்க சூழ்நிலையை உருவாக்கி அதில் மகிழ்ச்சி அடைகிறான். அது முழுமையான மகிழ்ச்சி அல்ல. சூரிய ஒளியை நிலவு பிரதிபலிப்பது போல இந்திய குடும்ப சூழலை சிறிய அளவு பிரதிபலித்து, அதுதான் மேன்மையானது என்று தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திகொள்ளும் ஒரு முயற்சி.

ஒரு சிறிய நாற்றை கூட ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் பிடுங்கி நடும்போது அதன் தாய் மண்ணோடு தான் நடுவார்கள். அப்படி நட்டால் தான் அது புதிய மண்ணில் முதலில் சிறிது வாட்டம் கண்டாலும் பின்னர் பட்டுபோகாமல் நன்கு வளரும். நம் குடும்பம் என்பது அந்த தாய்மண் போன்றது. அதுதான் அவன் வளர்ச்சிக்கு ஆதாரம். அந்த ஆதாரத்தை ஸ்திரபடுத்திக் கொள்வதற்கு தான் அவன் வெளிநாட்டிற்கே செல்கிறான். அவன் சம்பாரிபதையும் முடிந்த அளவு தன் குடும்பத்திற்கு கொடுக்கிறான். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி நாம் அன்பு செலுத்துபவர்களை மகிழ்விப்பது தானே. இப்படி பொருள் சேர்க்க சொந்த பந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு சென்று தன் தேவை எவ்வளவு என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லாமல் வாழ்க்கையில் ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். இந்த மாயையிலே சிக்கி கார், வீடு, நகை, நிலபுலன் என்று வாங்கி (கடன் வாங்கி) பொருளாதாரச் சங்கிலியில் புலி வாலைப் பிடித்தது போல மாட்டிக்கொள்கிறான். இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. எங்கே புலியின் வாலை விட்டுவிட்டால் இதே வேகத்தில் தொடர்ந்து ஓடமுடியமா அல்லது எங்கே புலி தன்னை கடித்துவிடுமோ என்கிற பயம் தான் முக்கிய காரணம். சிலர் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் வெளியில் வரத் தயங்குகிறார்கள்.

முதலில் குடும்பம் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும். அண்ணன், அண்ணி, மாமன், மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி இப்படி பல உறவுகள் ஒரு நல்லது கெட்டது என்றால் ஓன்று கூடி, பேசி, சிரித்து, அழுது, சண்டைபோட்டு, பின்னர் சமாதானமாகி...இப்படி பல வகை வேறுபாட்டு நிலைகளை கொண்டதுதான் உண்மையான குடும்பம். வெளிநாட்டில் வாழும் பல குழந்தைகளுக்கு (சில நேரங்களில் பெரியவர்களுக்கும்) தெரிந்த உறவு எல்லாம் ஆண்டி, அங்கிள் தான். பல இடங்களில் பிறந்து சிலவாரங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இதே குழந்தை இந்தியக் குடும்பச் சூழலில் பிறந்திருந்தால் அதன் சித்தியோ, பெரியம்மாவோ, அத்தையோ, பாட்டியோ யாரவது ஒருவர் வீட்டிலேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் அந்தக் குழந்தை தன் பாட்டியின் மடியின் கதகதப்பிலே தூங்குவது சுகமா அல்லது ஒரு செவிலித்தாய் கண்காணிப்பில் பத்தோடு பதினொன்றாக இருப்பது சுகமா. இது பிறந்த குழந்தைகளின் நிலை. அவர்கள் வளரும் போதும் கிட்டத்தட்ட இதே நிலைதான் பாட்டு, டான்ஸ், கராத்தே, கீ போர்டு அப்படி இப்படி என்று பல வகுப்புகளில் சேர்த்துவிடுவார்கள். முக்கியமாக பக்கத்துக்கு வீட்டு இந்தியக் குடும்பத்தில் உள்ள குழந்தைச் செல்லும் கிளாசிற்கு கண்டிப்பாக அனுப்பி விடுவார்கள். இதையெல்லாம் தவிர இந்திய புராண கதைகள், பஜனை போன்றவற்றை கற்றுக் கொடுக்க தனியாக ஒரு கிளாஸ் அனுப்புவார்கள். அதாவது சாமி எப்படி கும்பிடுவது என்பதற்கே ஒரு கிளாஸ். இது போன்ற விஷயங்களை இந்தியக் குடும்ப சூழ்நிலையில் தாத்தா பாட்டியே அந்த குழந்தைகளை தூங்கவைக்கும் போது தலை முடியை கோதி விட்டுக்கொண்டே சொல்லித் தந்துவிடுவார்கள்.

எத்தனை வித கொண்டாட்டங்கள், பண்டிகைகள், திருமணங்கள். நம் குடும்பத்துடன் சேர்ந்து குதுகலிக்க எத்தனை விஷயங்கள். வெளிநாட்டில் இருந்து தீபாவளி, பொங்கல் என்றால் ஸ்கைப்பில் பேசிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியதுதான். இதெற்கெல்லாம் மேல் இன்றளவிலும் இந்தியக் குடும்ப வாழ்க்கை மேலோங்கி இருப்பதால் தான், இன்றைய இளைய சமுதாயம், தன்னை பெற்று, வளர்த்து, ஆளாகிய தன் பெற்றோர்கள் தங்களுக்கு சரியான வாழ்கை துணையைத் தேடித்தருவார்கள் என்று அந்தப் பொறுப்பை தன் பெற்றோர்களிடமும் விட்டிருகிறார்கள். அதற்கு கல்யாணமாலை போன்ற நிகழ்ச்சியே சான்று. நம் நாட்டில் நடப்பது போல இத்தனை பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. அதெல்லாம் அந்தக் காலம் இப்போதெல்லாம் இந்தியாவிலேயே யாரும் ஓன்று கூடி பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, பலர் காதல் திருமணம் தான் செய்கிறார்கள், விவாகரத்துகள் அதிகரித்து விட்டன என்று நீங்கள் கூறுவதாக இருந்தால்...அவர்கள் அனைவரும் இந்திய குடும்ப சூழலில் வாழாமல் மேற்கத்திய மோகத்தில், மேற்கத்திய வாழ்கை முறையை கடைபிடிக்க முயற்சிகிறார்கள் என்பதே என் பதில். சில இடங்களில் தவறுகள் நேரத்தாலும் இந்தியக் குடும்ப முறை மேலோங்கி இருப்பது இந்தியாவிலே என்று கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

Sunday, September 11, 2011

9/11 - என் நினைவுகள்


 
அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் இருக்கும். செப்டம்பர் 11 - பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு காலை வேலையில், சுமார் ஏழு மணிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு பாஸ்டன் நகரப் போக்குவரத்தில் கலந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் அனைவரும் அவரவர் திசையில் பயனித்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது பார்த்துகொண்டிருந்த வேலையில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தேவையான வேலையை முடித்து கொடுத்துவிட்டு திரும்ப வேண்டி இருந்தது. அன்று போகவேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணிக்க வேண்டும். சுமார் எட்டரை மணிக்கு அந்த அலுவலகத்தை அடைந்து சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கினேன். மணி அப்போது காலை 10:30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த அறையில் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எனக்கு பின்னால் இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர் இருக்கையில் இருந்து துள்ளி, 'ஹேய், லுக் ஹியர்' என்று அவசரமாக அவருடைய கம்ப்யுடர் திரையை பார்க்க அழைத்தார். உடனே சென்று பார்த்தால், அவர் காட்டிய புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களும் இடிந்து பாதி தெரிந்தது. அதன் மேலிருந்து பெரிய புகை மூட்டம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த போதே என்னுடைய கம்புயடரில் இருந்து MSN Messanger-ல் இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். உனக்கு எல்லாம் ஓகே தானே என்று விசாரித்தார். அதற்குள் மற்றொரு இந்திய நண்பர் சாட் செய்தார். அவருடைய கசின் நியுயார்க்கில் வேலை செய்வதாகவும், அவர்களை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை, இது தான் அவர்கள் போன் நம்பர், கொஞ்சம் அவர்களை அழைத்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க முடியுமா என்று கூறினார். அவருக்கு இதோ உடனே செய்கிறேன் என்று கூறி அந்த நம்பரை அழைத்துப் பார்த்தேன், ஆனால் லைன் போகவில்லை. என்னாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் கூறினேன். வீட்டிற்கு அழைத்து வெளியில் எங்கும் போகவேண்டாம் என்று கூறி விட்டு, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அலுவலகத்தில் இருந்து கிளம்ப விருப்பம் உள்ளவர்கள் கிளம்பலாம் என்று அறிவித்தனர்.

அங்கிருந்து கிளம்பி திரும்பவும் பாஸ்டன் நகரை நோக்கி காரை செலுத்திகொண்டிருந்தேன். வழக்கமாக டோல் (Toll) வசூலிக்கும் இடங்களில் அன்று இலவசம் யாரும் நிற்கத் தேவையில்லை என்று அறிவிப்பு கண்ணில் தென்பட்டது. நிலைமையின் விஸ்தீரணம் அப்போது நன்றாகப் புரிந்தது. வீட்டிற்கு வந்து தொலைக்கட்சியில் செய்திகள் பார்த்து ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்திருகிறார்கள் என்று தெரிந்த போது மனதை ஏதோ செய்தது. இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, நீங்க நல்லா இருக்கீங்க இல்லே என்று கேட்டு பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு சிலர் பேசாமே நீங்க இங்கே கிளம்பி வந்துருங்க என்று கூட கூறினர். எதாவது ஒரு இடத்தில், உயிருக்கு உத்திரவாதம் என்று மட்டும் இருந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று நினைத்துகொண்டு, அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று, அதெல்லாம் எதுக்கு இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி அவர்களை சமாதனப்படுத்தினேன். இன்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய நிகழ்வுகள் மனதை ரீங்காரமிட்டபடி இருந்ததால் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



Friday, August 26, 2011

உங்க பிரெண்ட்ஸ் இந்த லிஸ்ட்லே இருக்காங்களா ?



பேஸ்புக் அக்கௌன்ட்லே இருநூறு முன்னூறு பிரண்ட்ஸ் வெச்சு இருக்கறவங்களை பார்த்தா ஆச்சரியமா இருக்கும். எப்படி இத்தனை பேரை நியாபகம் வெச்சு அவங்க கூட பழகுறாங்கன்னு. இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் வெப்சைட்லே அம்பது பேருக்கு மேலே பிராக்டிகலா பராமரிக்கறது ரொம்ப கஷ்டம்னு ஏதோ ஒரு ஆர்டிகல் படிச்சேன். சரி இந்த பதிவு பேஸ்புக் பத்தி இல்லை. இப்போ விஷயத்திற்கு வரேன். எல்லோருக்கும் பிரண்ட்ஸ் இருப்பாங்க. ஒவ்வொரு ப்ரெண்டும் ஒவ்வொரு ரகம். அப்பிடி இருக்குற வித விதமான பிரண்ட்ஸ் டைப் பத்தி என்னோட அனுபவத்துலே தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துக்குறேன்.

டிஸ்கி: இதை மத்தவங்களை குத்தம் சொல்றா மாதிரி பாக்காதீங்க. எல்லார் கிட்டேயும் நிறை குறைகள் இருக்கு. நம்ம நண்பர்கள் கிட்டே குறைன்னு நாம நினைப்பதை, எடுத்து சொல்லலாம் இல்லேன்னா அந்த ஏரியாவை மட்டும் அவாய்ட் பண்றது நல்லது. எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கேன். இந்த வகையில் சில நேரங்களில் நானும் இருப்பேன். சும்மா ஜாலியா எடுத்துட்டு, உங்களோட அனுபவத்தையும் சொல்லுங்க. 


பொசசிவ் பொன்னுமணி / பொன்னமா:

இவங்க எப்படினா, நாம இவங்க கிட்டே மட்டும்தான் பிரெண்டா இருக்கணும்னு நினைப்பாங்க. மத்த யார் கிட்டேயும் பழகினா இவங்களுக்கு பிடிக்காது. அப்பிடி பழகினாலும் இவங்களையும் கூட்டு சேத்துகிட்டா ஓகே, இல்லேனா ஒரு வழியாக்கிடுவாங்க. அதே சமயம் இவங்க நம்மளை தவிர்த்துட்டு நிறைய பேர் கிட்டே பழகுவாங்க, அதை நாம ஒன்னும் கேட்க கூடாது.

திடீர் தங்கப்பன் / தங்கம்மா:

இவங்க ஆரம்பத்தில நல்லா பழகுற மாதிரி இருக்கும். அப்புறம் சில நாட்கள் கழிச்சு தான் அவங்க சுயரூபம் ஓரளவுக்கு புரியும். திடீர்னு காரணமே இல்லாம நம்மளை கண்டுக்க மாட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு நாள் திடீர்னு பாசமழை பொழிவாங்க. நம்மளாலே இன்னும் ஒரு மாசம் கழிச்சு ஏதாவது வேலை ஆகணும்னா, இன்னிக்கே பிட்டை போட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே இன்னொரு விஷயம் என்னனா, சில நேரங்கள்லே இந்த மாதிரி இடைவெளி விட்டு பேச ஆரம்பிக்கும் போது,  என்ன நீங்க எங்க கூட எல்லாம் பேசறதே இல்லேன்னு நம்ம மேலேயே பழியை தூக்கி போட்டு நம்மளை ஒரு நிமிஷம் கண்புயுஸ் பண்ணிருவாங்க.

போட்டு கொடுக்கும் பொன்னம்பலம் / பொன்னாத்தா:

இவங்க எப்படினா, யாரையாவது பத்தி தப்பா ஒரு வார்த்தை நம்ம கிட்டே எடுத்து விடுவாங்க. நம்மளும் உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் கரெக்டு, அவங்க சரியில்லை என்று ஓவரா கொட்டிவிட்டோம் என்றால் அவ்வளவு தான். அடுத்த நாளே அந்த விஷயம் நாம் யாரை குறை கூறி பேசினோமோ அவர்கள் காதுக்கு சென்றடையும்.

பா(யா)ச மணி:

சூப்பர்ஸ்டார் நடிச்ச வள்ளி படத்தை பார்த்தவங்களுக்கு இந்த கேரக்டர் ஈசியா புரியும். அதிலே பயில்வான் ரங்கசாமி ஒரு கூட்டத்தோட மரத்தடியிலே உக்காந்து பேசிட்டு இருப்பார். பேசிட்டு இருந்ததிலே, யாராவது ஒருத்தன் எழுந்து போனா, அவனை பத்தி கேவலமா பேசுவார். அதே டைப் ஆளுங்க நிறைய பேரு நாட்டுலே இருக்காங்க. நம்மளை பத்தி மத்தவங்க கிட்டே தப்பா பேசுவாங்க, நம்மளை நேர்ல பாத்தா, வாயிலையே பாயசம் வைப்பாங்க.

தங்கமணி பிரியன்:

இவர் எப்படினா தன் மனைவி யார்கிட்டே பழக சொல்றாங்களோ அவங்க கிட்டே மட்டும் தான் பேசுவாரு, பழகுவாரு. பல நாள் பழகினவரா இருந்தாலும், பெண்களுக்குள்ளே ஒரு பிரச்சனைனா, இவர் அந்த நட்பை முறித்து கொள்வார். (நான் இப்படி கிடையாது...ஹி ஹி...)

பல்டி பரந்தாமன்:

பல வருடங்களுக்கு முன்னர் படித்த ஜோக்:

அவர்: என்ன சார், குழந்தைய கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க ?
இவர்: கோர்ட்லே சாட்சிகள் எல்லாம் பல்டி அடிக்கிறாங்கன்னு பேப்பர்லே பாத்தேன், அதான் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்.

பல்டி பரந்தாமன் எப்படினா, எதாவது ஒரு விஷயத்திற்கு முதலில் சரி என்று தலையாட்டுவார். பின்னர் அவர் மனைவி வேண்டாம் என்று சொன்னால் அப்படியே பல்டி அடித்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார். உதாரணதிற்கு ஒரு சிறிய கதை இங்கே...

பரந்தாமனிடம் அவர் நண்பர் ஒருவர், அண்ணே, வரீங்களா, வேலூர்லே ஒரு வேலை இருக்கு, போயிட்டு வரலாம். எவ்வளவு நேரம்ணே ஆகும் போய்ட்டு வர்றதுக்கு...

அதுக்கு என்னடா, வரேன். இங்கே இருந்து பாரிஸ் கார்னர் போக ஒரு அரைமணி நேரம். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சா மூணு மணி நேரத்துலே வேலூர். வேலையை முடிஞ்சதும், சாப்பிட்டிட்டு கிளம்பினா சாயங்காலம் ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துரலாம்.

இதற்குள் பரந்தாமனின் மனைவி - என்னங்க கொஞ்சம் இங்கே உள்ளே வாங்க - உள்ளே சென்ற பரந்தாமனிடம், கிசிகிசுப்பாக, உங்களுக்கு வேறே வேலையே இல்லேன்னு நினைப்பா, இப்போ ஒன்னும் வேலூர்க்கு போக வேண்டாம். ஒழுங்கா வீட்டுல இருங்க.

பரந்தாமன் வெளியே வந்து, அது...வந்து...இந்த வேலூர்க்கு இன்னிக்கே போகணுமாடா...இப்பவே மணி எட்டரை ஆச்சு, இன்னும் குளிச்சு, சாப்பிட்டிட்டு கிளம்பி பஸ் ஸ்டான்ட் போய், பஸ் பிடிச்சி பாரிஸ் கார்னர் போக எப்படியும் பதினொன்னு ஆகிடும். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சாலும், எப்படியும் சாப்பாடுக்கு, அரை மணிநேரம் போடுவான். நாம அங்கே போய் சேரவே மணி மூணு ஆகிடும். அதுக்கப்புறம் உன்னோட வேலைய முடிச்சுட்டு கிளம்பி வர நைட் பதினோரு மணி ஆகிடும். இன்னொரு நாள் பாத்துக்கலாமே என்றார்.

இன்னும் நிறைய டைப் இதை போல சொல்லிகொண்டே போகலாம். உங்கள் அனுபவத்தில் இதை போல பிரண்ட்ஸ் டைப் இருந்தால் பின்னூட்டத்தில் எடுத்து விடுங்கள். 

Tuesday, August 9, 2011

இந்திய பயணம், பாரிஸ் மற்றும் பதிவு எழுதுவது


ஒரு வழியா இந்திய பயணத்தை முடிச்சிட்டு, அமெரிக்க வாழ்க்கையிலே ஓடுறதுக்கு திரும்பி வந்தாச்சு. ஏர்போர்டுக்கு வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் கண்கள் கலங்கி சிவந்து இருந்ததை கண்டு, நாங்களும் கலங்கி போய் கனத்த மனதுடன் தான் விடைகொடுத்தோம். இது போன்ற நேரங்களில் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன சொல்ல இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை தவிர...சரி சொல்ல வந்ததை விட்டுவிட்டு, இப்படி சீரியஸ் ட்ராக்குக்கு போகலே. இந்தியா வரும் வழியில் பாரிஸ் ட்ரான்சிட்-ல்  சுமார் பதினோரு மணிநேர டைம் இருந்ததால், ரொம்ப நாள் பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்த ஈபில் டவர் போய் பாத்துட்டு வந்தோம். பாரிஸில் அன்று அவ்வபோது மழை பெய்தது, ஆனாலும் ரெயின் கோட் வாங்கி அணிந்து கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம். பாரிஸில் ஈபில் டவர் தவிர இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்குனு உள்ளே போய் பாத்தாதான் தெரியுது. எல்லாம் அவ்வளவு அழகு. ஊருக்கு போனதும், ஒழுங்கா பிரெஞ்சு வரலாற்றை பற்றி படிக்கணும்னு நினைச்சுகிட்டேன். எதாவது நல்ல புத்தகம் தெரிந்தால் சொல்லுங்க.

பாரிஸ் போயிட்டு வர விசயத்திலே, முதல்லே ஏர்போர்ட் விட்டு வெளிலே போய்ட்டு திரும்பி நேரத்துலே வந்து பிளைட் பிடிக்க முடியுமான்னு ஒரே குழப்பமா இருந்தது. சரி இருக்கவே இருக்கு நம்ம ப்ளாக் சைட், அதுலே ஒரு பதிவு போட்டு கேட்டு பார்ப்போம். நம்மை பதிவையும் மதிச்சு படிக்க வருபவர்களில், யாரவது ஒருத்தர் பாரிஸ்லே இருந்து பதில் சொல்ல மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்க, யாரோ ஒருத்தர் பேர் சொல்லாம அனானி முகவரிலே இருந்து பதில் போட்டு இருந்தாரு. பாரிஸ் பற்றி விவரங்கள் அளித்த அந்த அன்பருக்கு என் நன்றிகள், நீங்க இந்த பதிவை படித்தீர்கள் என்றால் உங்கள் பெயரை குறிப்பிட  வேண்டுகிறேன். நம்ம ப்ளாக் எழுதறதுல எப்படி எல்லாம் உதவி கிடைக்குது பாத்தியா என்று தங்கமணியிடம் சொல்லி ரெண்டு நாள் சிலாகித்துகொண்டிருந்தேன். ஆமாம் கூகிள்லே போட்டா பதில் வந்து தானா விழுது, இதுக்கு போய் அந்த கம்ப்யுட்டரை முறைச்சு முறைச்சு பாத்துகிட்டு ப்ளாக் எழுதறது தேவையா என்று ஒரு முனுமுனுப்பு கேட்டது. ப்ளாக் எழுதுவதில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை இருக்குனு தெரியலே, நான் எப்போ ப்ளாக் எழுத உக்காந்தாலும் உடனே இதை பண்ணலியா அதை பண்ணலியா என்று வீட்டுலே இருக்கிற நண்டு சிண்டுங்க கூட வந்து வேறே எதாவது வேலை தருவாங்க. எனக்கெல்லாம் எழுத தோணுவதே பெரிய விஷயம், அதை எழுத ட்ரை பண்ணும் போது அதுக்கு வர தடைகள் இருக்குதே, எப்பா சொல்லி மாளாது. அதுலே தங்கமணி சொல்ற இன்னொரு விஷயம், 'நீங்க எழுதும் போது நீங்க ரொம்ப டென்சனா இருக்குற மாதிரி இருக்கு, எதுக்கு அப்பிடி டென்சனா எழுதணும்' என்று அக்கறையா கேக்குற கேள்விக்கெல்லாம் என்னத்தை பதில் சொல்றது. ஏதோ நான் எதையாவது எழுதி/கிறுக்கி முடித்தால் ஒரு வித திருப்தி கிடைகிறது. அதைவிட திருப்தி அதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது கிடைகிறது. அதனால் முடிந்த வரை நேரத்தை ஒதுக்கி மனதிற்கு தோன்றியதை எழுதுகிறேன். சரி இப்படி நான் பதிவு எழுதும் கதையை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். நான் சொல்லவந்ததை விட்டு விட்டு திரும்பவும் ரூட் மாறுகிறேன். என்ன சொல்லவந்தேன் ? ஆங்...இந்திய பயணம் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பொதுவாக நன்றாக கழிந்தது. எப்போதும் போல பயண நினைவுகளை அசை போட்டுகொண்டு அடுத்து முறை செல்வதற்காக காத்திருப்பு தொடர்கிறது. இங்கே சாம்பிளுக்கு ஒரு ஈபில் டவர் படம், மற்ற படங்களை தனியாக இன்னொரு பதிவில் போடுகிறேன்.



மேகமூட்டமான வானிலையில் ஈபில் டவர்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...