Saturday, June 25, 2011

தினைத் துணை - சிறுகதை


ஞாயிற்றுகிழமை சாயங்காலம் சினிமா தியேட்டர் -ல் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிவாவின் செல்போன் ஒலித்தது. போனில் நவீன்...மாப்ளே, நம்ம குமாரை பாத்தேண்டா,  மலேசியாலே இருந்து நேத்து தான் வந்தானாம், உன்கிட்டே எதோ பண விஷயமா உடனே பேசணும்னு போன் நம்பர் கேட்டான். உன்னோட வீட்டு நம்பரும், செல் நம்பரும் குடுத்திருக்கேன்.

நீ ஏண்டா போன் நம்பரை அவனுக்கு குடுத்தே, நானே அவன் கூட பேசி வருஷ கணக்குல ஆச்சு...எப்பவும் பணம் கேட்டு என்னை நச்சரிப்பான்...இப்போ தான் கொஞ்ச நாளா அவன் தொல்லை இல்லாமல் இருந்தேன்.

இல்லடா சிவா, பாக்க பாவாமா இருந்தது, நீயும் அவனும் தானே ஸ்கூல்லே இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ்...ஏதாவது பிரச்சனையோ என்னமோ, என்கிட்டே சொல்ல தயங்குறான், அதான் உன் நம்பரை கொடுத்தேன்.

சார், நீங்க போன் பேசணும்னா கொஞ்சம் வெளிலே போய் பேசுங்க, இங்கே உக்காந்து பேசி ஏன் எல்லாருக்கும் தொல்லை குடுக்குறீங்க, பின்னால் இருந்து ஒரு குரல் வர...சற்று மெதுவாக...நவீன்...நான் இப்போ தியேட்டர் -லே இருக்கேன், அப்புறம் உனக்கு கால் பண்ணுறேன்...வெச்சுரு.  போனை வைத்த பின்னர் படத்தில் கவனமே ஓடவில்லை. இப்போ எதுக்கு இவன் பேசணும்னு சொல்றான் என்று குமாரின் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

சிவாவின் குடும்பம் விருதுநகரில் ஓரளவு வசதியான குடும்பம். அப்பா சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்தார்.  தாயார் வீட்டின் அருகிலேயே அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்தார். வீட்டின் அருகே இருந்த காரணத்தால் அதே பள்ளியில் சிவாவை சேர்த்து படிக்க வைத்தனர். அந்த பள்ளியில் தான் குமார் சிவாவின் நட்பு சிறு வயதிலேயே துளிர் விட துவங்கியது. குமாரின் தந்தை கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளியாக இருந்தார். குமாரும் தன் குடும்பத்தின் நிலை உணர்ந்து நன்றாக படித்தான். வகுப்பில் எப்போதும் அவன்தான் முதல் ரேங்க் வருவான். படிப்பிலும் விளையாட்டிலும் சரி குமார் பல நேரங்களில் சிவாவிற்கு குருவாக இருந்திருக்கிறான். கணக்கு அறிவியல் என பாடத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல் விளையாட்டில் பம்பரம் விடுவது, கில்லி விளையாடுவது, கிரிக்கெட்டில் ஸ்பின் போடுவது என பலவற்றை சிவாவிற்கு சொல்லிக்கொடுப்பான். சிவாவும் புத்தகங்கள், பென்சில், பேனா, விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள், தீபாவளி பட்டாசு என எல்லாவற்றையும் குமாருடன் பகிர்ந்து கொள்வான்.  இப்படி இருவரும் பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தனர். பள்ளிபடிப்பு முடிந்து  சிவா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சேர்ந்தான். சிவாவை விட ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றும் குமார் வசதி மற்றும் அவன் தந்தை உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதன் பிறகு இருவருக்கும் தொடர்பு அவ்வளவாக இல்லாமல் போனது. அவ்வபோது எதாவது அவசரத்தேவை என்றால் சிவாவிடம் வந்து பணம் வாங்கி செல்வான் குமார். ஆனால் கண்டிப்பாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவான். சிவாவும் முகம் சுழிக்காமல் முடிந்த அளவு அவனுக்கு உதவி வந்திருக்கிறான். கல்லூரி படிப்பு முடிந்து சிவா சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி -ல் சேர்ந்துவிட, குமாரிடம் நட்பு மேலும் படிபடியாக குறைந்தது. சிறு வயதில் பணம், அந்தஸ்து என்று பார்க்காமல் இருந்த சிவாவின் மனம் ஏனோ சற்று மாற தொடங்கியது. நகர வாழ்கையும் அங்கு கிடைத்த நட்பு வட்டாரத்தின் கவர்ச்சியும் குமாரின் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அவ்வபோது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தொலைபேசியில் அழைப்பதை கூட நிறுத்திவிட்டான். இதனிடையே குமார் யார் கையை காலையோ பிடித்து  மலேசியாவில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தான். அவன் மலேசியா செல்வதற்கு முன்பணமாக கட்ட வேண்டிய இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை, சிவாவை சந்தித்து பேசி கடனாக வாங்கி இருந்தான். மலேசியா சென்றதும் எப்படியாவது உடனே பணத்தை திருப்பி கொடுக்கிறேன் எனகூறி சென்றவன்தான், அதன் பின்னர் ஓரிரு முறை அழைத்து பேசி இருக்கிறானே தவிர அதன் பின்னர் பேசவும் இல்லை பணத்தை திருப்பி அனுப்பவும் இல்லை. சிவாவை பொறுத்த வரை இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும்,  நண்பன் ஏமாற்றி விட்டானோ என்று ஒரு சிறு எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் ஒடி விட்டது.

இவ்வளவு நாட்கள் ஒரு தொடர்பும் இல்லாமல் இப்போது மட்டும் எங்கிருந்து இவனுக்கு என் நினைப்பு வந்தது என்று சிவா தன் மனதில் கோபபட்டுகொண்டே காரை ஒட்டியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சிவா எண்டா இவ்வளவு லேட்டு, உன்  பிரெண்ட் குமார் போன் பண்ணி இருந்தான் என்னமோ உன்னை அர்ஜண்டா பாக்கணுமாம், நீ வந்ததும் போன் பண்ண சொன்னான் என்று அப்பா கூறினார். பாத்துடா அவன் பாட்டுக்கு ஏதாவது பணம் வேணும்னு வந்து நிக்க போறான். ஏற்கனவே அவனுக்கு பணம் கொடுத்து ஏமாந்திருக்கே, இனிமேலும் ஏமாறாதே.  நீயே இப்பதான் ஒரு வேலைலே சேர்ந்து சுயமா நாலு காசு சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கே. நீ உன் இஷ்டத்துக்கு பணத்தை தூக்கி கொடுக்காதே என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்தார். அதெல்லாம் இல்லப்பா, நான் பாத்துக்குறேன். ஏற்கனவே ஸ்கூல் படிக்குற காலத்திலே இருந்து நிறைய அவனுக்கு செஞ்சிருக்கேன். இனிமேல் சும்மா அவனுக்கு கொடுக்க முடியாது. அவன் கிட்டே பேசும்போது கட் அண்ட் ரைட்டா சொல்லிடுறேன்.

அடுத்தநாள் காலையில் சிவா அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் போது அவன் செல்போன்  ஒலித்தது. எடுத்து ஹலோ என்றதும், டேய் சிவா, நான் குமார் பேசுறேன்டா, எப்படி இருக்கே...பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடா...உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஈவ்னிங் எங்கயாவது மீட் பண்ணலாமா ? என்று கேட்டவனிடம் சரி ஒரு ஆறு மணிக்குமேலே போன் பண்ணு, நான் ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாம்.

என்ன இவன் போன்லே ஒன்னும் சொல்லாம நேர்லே பேசணும்னு சொல்றானே, எதோ பெரிய அமௌன்ட் கேக்க போறான் போல இருக்கு. இனிமேல் முன்ன மாதிரி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிற வேண்டியது தான். எதோ சின்ன வயசிலே இருந்து கூடவே பழகிட்டானேனு கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் கொடுத்தது போதும் இதுக்கு மேலே இவன் கேட்கும் போதெல்லாம் தூக்கி கொடுக்க முடியாது என்று மனதிற்குள் சிவா குமுறிக்கொண்டிருந்தான். மாலை மணி 6:15, சிவாவின் செல்போன் ஒலித்தது. சிவா போன் எடுத்து ஹலோ என்றான். ஹலோ சிவா, குமார் பேசுறேன்டா, ஆறு மணிக்கு மேலே போன் பண்ண சொன்னியே...இன்னிக்கு ப்ரீயா, மீட் பண்ணலாமா என்றான். ஓ ஆமாம் குமார்...மறந்தே போய்டேன்...நீ என்ன பண்ணு, ஒரு ஏழு மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வந்துரு, நான் என்டரன்ஸ் கிட்டே வெயிட் பண்றேன், ஆனா அரைமணி நேரத்துக்கு மேலே பேச முடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கு என்று சற்று கண்டிப்பாக கூறினான் சிவா.

இல்லடா அரைமணி நேரம் போதும்...ஆனா முக்கியமான விஷயம், எங்கயும் போகாம வெயிட் பண்ணுடா.

மணி ஏழு பதினைந்து.  ஸ்பென்சர் பிளாசா.  சிவா பொறுமையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன இவன், என்னை ஏழு மணிக்கு வர சொல்லிவிட்டு இன்னும் இவனை காணும். இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணலாம், அவன் வரலேனா கிளம்பி போய்டே இருக்க வேண்டியதுதான். இவனை எல்லாம் மதிச்சி இங்கே வந்து வெயிட் பண்றேன், இவன் என்னடான இவ்வளவு லேட்டா வரான். இப்படி சிவா கோபப்பட்டு கொண்டிக்கும் போதே குமார் அங்கு வந்து சேர்ந்தான்.

சாரிடா சிவா, டிராபிக் அதான் கொஞ்சம் லேட் ஆச்சு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றான்.
ஏண்டா, இருபது நிமிஷமா வெயிட் பண்றேன், நான் அர்ஜண்டா போகணும்னு சொன்னேன் இல்லே. சரி சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்னு என்று படபடத்தான் சிவா.

என்ன சிவா, இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், எப்படி இருக்கேன்னு கூட ஒரு வார்த்தை கேட்காம...நீ என்னடான கால்லே சுடு தண்ணி ஊத்தினா மாதிரி பறக்குறே...

சாரிடா கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்,  சரி, என்ன விஷயம் சொல்லு...என்றான் சிவா.

நான் மலேசியாலே இருந்து இங்கேயே செட்டில் ஆகலாம்னு வந்துட்டேன்டா, நாளைக்கு கோயம்பத்தூர் போறேன், அதுக்கு முன்னாடி உன்னை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.

தெரியும்டா உனக்கு இப்போ பணம் தேவைப்படும்...அதான் என்னோட நினைப்பு வந்துருச்சு உனக்கு, இத்தனை நாள் எங்கடா இருந்தே, ஒரு கஷ்டம்னதும் கொஞ்சம் கூட வெக்கபடாம என்கிட்டே வந்து நிக்கிறியே... சாரிடா குமார், நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியுது...என்னாலே இப்போ ஏதும் உனக்கு பண உதவி செய்ய முடியாது. ஏற்கனவே உனக்கு நான் எவ்வளவோ செஞ்சுட்டேன், இனிமேல் என்னாலே உனக்கு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் லைப் இருக்கு, புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன்...சாரி...நான் கிளம்புறேன்.

குமார் ஒரு நிமிடம் வாயடைத்து போய் கண்கள் குளமாக நின்றான். அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க முயன்ற சிவாவை பார்த்து ஓடினான். சிவா, சிவா...ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசணும்டா, ப்ளீஸ் என்று தடுத்து நிறுத்தினான்...நான் சின்ன வயசிலே இருந்து உதவின்னு உன்னை தவிர வேற யார் கிட்டேயும் போய் கேட்டதில்லை. நீயும் நானும் சேர்ந்து வளர்ந்த உரிமையிலே தான் எப்பவும் உன்கிட்டே எனக்கு கஷ்டம்னா வந்து நிற்பேன். உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்து இருக்கேன்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியலேடா. மலேசியாவுக்கு வேலைக்கு போய் உன்கிட்டே வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா என்னோட விதி நான் நெனைச்ச மாதிரி வேலை அமையலே, சம்பளம் இல்லாம, சில நேரம் சாப்பாடு தூக்கம் இல்லாம ரெண்டு வருஷமா கஷ்டப்பட்டேன். உன்கிட்டே தரேன்னு சொன்ன பணத்தையும் தர முடியலே, வீட்டுக்கும் பணம் அனுப்ப முடியலே, இப்படி பல பிரச்சனைகளில் மாட்டிகிட்டேன். சரி விடு நடந்ததை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...ஆனா...இப்போ உன்கிட்டே பணம் வேணும்னு கேக்க வரலே சிவா. நான் மலேசியாவுலே இருக்கும் போது ஒருநாள் எதேச்சையா வாங்கின ஒரு லாட்டரி சீட்டுலே எனக்கு இருபது கோடி ரூபா விழுந்துது. அந்த பணம் கிடைச்சதும் முதல்லே உனக்கு தான் சொல்லனும்னு இங்கே கிளம்பி வந்தேன். என்னை பொருத்தவரைக்கும் நான் இன்னிக்கு இந்த நிலையிலே இருக்குறதுக்கு காரணம் நீ தான் சிவா. அதுக்கு கைமாறா என்னாலே எதுவுமே செய்ய முடியாது. நான் இது வரைக்கும் உனக்கு எதுவுமே கொடுத்ததில்லை. இந்த பெட்டிலே ஒரு கோடி ரூபா கேஷ் வெச்சு இருக்கேன், கூடவே ஒரு பிளான்க் செக்கும் வெச்சு இருக்கேன். நீ எவ்வளவு வேணும்னாலும் எழுதிக்கோ...தயவு செய்து மறுக்காம வாங்கிகோடா சிவா என்று நா தழுதழுக்க கூறி பெட்டியை கையில் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் சிலையாக நின்ற சிவா, அங்கிருந்து மெதுவாக நடந்து செல்லும் போது எதிரே ஒரு புத்தக கடையில் சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறள் என்று எழுதி அதன் கீழே எழுதி இருந்த குறள் தெரிந்தது.

தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார்.

Saturday, June 11, 2011

பொய்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்,  பொய்மையும் வாய்மை இடத்து  போன்ற வரிகளை பார்க்கும் போது,  நல்ல விஷயத்திற்காக ஒரு பொய் இல்லை பல பொய்கள் கூட  சொல்லலாம் என்று அறியலாம். ஆனால் பொய் சொல்வது தவறு என்று பல சான்றோர்கள் கூறவும், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது போன்ற பழமொழிகளில் இருந்தும் அறிகிறோம். அதனால் இந்த பதிவு பொய் சொல்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவோ அல்லது யாரும் பொய் சொல்லகூடாது என்கிற போதனையோ அல்ல. ஏன் பொய் சொல்கிறோம் என்கிற ஒரு அலசல் மட்டுமே. இங்கு 'சொல்கிறோம்' என்று உங்களையும் ஒரு உரிமையுடன் என்னுடன் சேர்த்து கொள்கிறேன். அப்படி நீங்கள் இதுவரை பொய்யே சொல்லதவராக இருந்தால், ப்ளீஸ் இதற்கு மேலே நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஏனென்றால் இதை படித்துவிட்டு நீங்கள் கெட்டுபோய் விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். முதலில் முக்கியமாக ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேன். இதை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயப்படுத்த எழுதவில்லை. பல நாட்களாக மனதில் நினைத்து கொண்டிருந்ததை இப்போது எழுதுகிறேன்.  சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொய் சொல்லி இருப்பார்கள்.  பொதுவாக பொய்யை சுயநலம் காரணமாகவோ அல்லது பயம் காரணமாகவோ சிறு வயதிலேயே கூற பழகி விடுகிறோம். சிறு வயதில் தவறு செய்து பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ இருந்து தப்பிக்க கூறும் சிறு சிறு பொய்களில் இருந்தே பொய்யெனும் குன்றா விளக்கை நாம் ஏற்ற துவங்கிவிடுகிறோம். இப்படி தொடங்கி பின்னர் வளர்ந்து வயது வந்ததும் அந்த அந்த நிலைக்கு ஏற்ப பல நேரங்களில் பொய் சொல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறோம். திருக்குறள் தொடங்கி பல சமய நூல்களில் கூட நல்ல விசயத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற கருத்து நமக்குள் திணிக்கபடுகிறது. பொதுவாக நன்மை தீமை என்பது அவரவர் நிலையில் இருந்து வேறுபடும். இதற்கு உதாரணமாக 'ஹே ராம்' என்ற திரைப்படத்தில் வரும் வசன வரிகளை கூறலாம். ஒரு ஓநாய் சிறிய குழந்தையை தூக்கிகொண்டு போனால் அது தவறில்லையா என்ற கேள்விக்கு அது அந்த ஓநாயாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் என்று பதில் வரும்.  மனிதனோ அல்லது விலங்கினமோ தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இயற்கையே கற்று கொடுத்திருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இங்கு சுயநலம் என்பது உயிர் வாழ்வது என்கிற மிக அடிபடையான உரிமையையே குறிக்கிறது.  கற்கால மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டு தன் உணவை தானே வேட்டையாடி உண்ணும் நிலையில் இருந்து பரிணாம வளர்ச்சியால்  இன்று  சமூகம், அறிவியல், அன்பு, காதல், குடும்பம், உறவு, நட்பு இப்படி பலவற்றை சொல்லிகொண்டே போகும் அளவில் பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறான்.

இப்படி வளர்ச்சி பெற்ற மனித இனம் தன் இனத்திற்கே செய்யும் தாக்குதல்கள் பல இருந்தாலும், அன்றாட வாழ்வில் உள்ள  சமூக உறவில் காணப்படும் பொய்யை பற்றி மட்டும் பார்ப்போம். நாம் பல நேரங்களில் சூழ்நிலைக்கு தக்கவாறு பொய் சொல்லி தப்பித்துகொள்ள முயல்வோம். இதில் மிக  முக்கியமாக சுய விருப்பங்களை பாதுகாத்து கொள்ளும் ஒருவித தற்காப்பு உணர்வே தலையோங்கி இருக்கும்.  இத்தகைய பொய்கள் காதலில், உறவில், நட்பில், வேலை பார்க்கும் இடத்தில் என்று பல இடங்களில் இருக்கும். இங்கு காதல், உறவு, நட்பு, வேலை பார்க்கும் இடம் என்ற அனைத்தையும் பொதுவாக உறவு என்று எடுத்து கொள்ளலாம். அடிபடையில் உறவில் ஏன் பொய் வருகிறது என்று பார்த்தால், அது பல நேரங்களில் அந்த உறவை தன்னிடம் தக்கவைத்து கொள்ளும் முயற்சியாக தான் இருக்கும். எங்கே அந்த உறவு நம்மை விட்டு பிரிந்து விடுமோ என்கிற ஒரு வித தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். உதாரணத்திற்கு ஒரு காதலன் தன் காதலியிடம் தான் இதற்கு முன் எந்த பெண்ணுடனும் பழகியது இல்லை என்று பொய் சொல்லலாம். எங்கே தன் பழைய காதலை அவளிடம்  சொன்னால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற பயத்தில் இத்தகைய பொய்யை கூறலாம். இது போன்ற பயமும், அதனால் கிடைக்கபோகும் தண்டனையும் தான் பொய் சொல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் ஒருவருடைய மனது புண்படகூடாது என்பதற்காக பொய் சொல்ல வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு பாட்டு நல்ல பாடுறீங்க, சாம்பார் சூப்பரா இருக்கு, இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு என்ற ரீதியில் சில பொய்களை சொல்ல நாம் தயங்குவதில்லை. இது போன்ற சிறு சிறு விசயங்களில் பொய் சொல்வதால் அந்த உறவு பலப்படுமேயன்றி பாதிக்கப்படாது. ஆனால் மற்ற சிக்கலான விஷயங்களை அடுத்தவர் மனம் புண்படகூடாது என்பதற்காக சில நேரங்களில் பொய் சொல்ல நேரிடும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு, என்றாவது அந்த விஷயம் தெரிய வந்தால்,  நாம் அவர்களுடைய நம்பிக்கையை  இழந்துவிடுவோம். இங்கு ஒருவர் தன்னிடம் நம்பிக்கை வைத்துள்ள மற்றொருவரிடம் பொய் சொல்லும் போது அந்த பொய் அவருக்கு தெரிய வரபோவதில்லை என்று திடமாக நம்புவதால் தான் கூறுகிறார். ஆனால் அந்த பொய் வெளியே தெரிந்தால் அது அந்த உறவை வெகுவாக காயப்படுத்தும். அது மட்டும் அல்லாமல் அந்த பொய் நெடுநாட்களாக வளர்த்த நம்பிக்கையை முறித்துவிடும். அவ்வாறு முறிந்த நம்பிக்கைய மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது மிகுந்த சிரமம், பல வருடங்கள் கூட ஆகலாம். மேலும் சிலர் சமுகத்தில் தன்னை அனைவரும் பெரிதாக மதிக்க வேண்டும் என்று பொய் சொல்வார்கள், எடுத்துக்காட்டாக குமாஸ்தாவாக இருக்கும் ஒருவர் தான் ஒரு பெரிய மேனேஜர் பதவியில் இருப்பது போல காட்டிகொள்வார், சைக்கிள் வைத்து இருக்கும் ஒருவர் பைக் வைத்திருப்பதாக சொல்வார். இப்படி பொய் சொல்லும் காரணங்களை பல விதமாக அடுக்கிகொண்டே போகலாம்.

சரி பொய் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதிலாக ஒரு நிகழ்வையோ அல்லது நிகழாத ஒன்றையோ மாற்றி கூறுவது பொய் என்று வைத்துகொள்வோம். சரி நான் பொய் சொல்லவில்லை, ஆனால் வேண்டும் என்றே உண்மையை மறைத்துவிட்டேன் என்றால் அது பொய் ஆகுமா என்ற கேள்விக்கு என்ன பதில் என்று பல முறை எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு விடை கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.  அதில் முதன்மையானது, அதை பற்றி நான் மறந்துவிட்டேன் என்று சொல்லி சுலபமாக தப்பித்து கொள்ளலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதை பொய் என்று கூற முடியாது. ஆனால் அந்த நிகழ்வை கூறக்கூடிய வகையில் பேச்சோ அல்லது மற்றொரு நிகழ்ச்சியோ நடந்தும், தெரிந்தே அந்த உண்மையை மறைத்திருந்தால் அதுவும் ஒருவகை  பொய் தான். முன்பு கூறியது போல் இதை பொய் என்று ஏற்றுகொள்வதில் அல்லது நிரூபிப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது.  இதில் மேலும் சிக்கலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியதை வெளியில் சொல்லலாமா என்பதாகும். அது சத்தியம், வாக்கு தவறாமை, நேர்மை போன்ற நியதிகளுக்குள் வந்துவிடுகிறது. அந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நேரடியாக ஒருவர் கேட்கும் போது அதை பற்றி தெரியாது என்று கூறிவிடலாம அல்லது உண்மையை போட்டு உடைத்துவிடலாம. அப்படி தெரியாது என்று கூறினால் பொய் சொல்கிறோம் என்று ஆகிவிடும், அப்படியல்லாமல்  உண்மையை கூறினால் நாம் வெளியில் சொல்ல மாட்டோம் என்று கொடுத்த வாக்கு என்ன ஆவது போன்ற பல சிக்கலான கேள்விகள் வரும். இது போன்ற சூழ்நிலையில் கொடுத்த வாக்கை காப்பாற்றி பொய் சொல்வதே நல்லது என்பது என் கருத்து.

பல நேரங்களில் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே  பொய் சொல்ல நேரிடும்.  ஒரு பொய்யை மறைக்க பல பொய்யை சொல்ல வேண்டியதாக இருக்கும் என்பதை போல, சிலர் ஏற்கனவே கூறிய பொய்யை காப்பாற்றுவதற்காக மேலும் பல பொய்களை சொல்லி பொய் சொல்வது பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.  தொழில் ரீதியாகவும்  பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை சிலருக்கு இருக்கும்.  வழக்கறிஞர்கள்  பெரும்பாலான நேரத்தில் பொய் சொல்ல வேண்டி இருக்கும். அது தொழில் தர்மம் என்ற கோட்பாட்டுகள் வந்துவிடும். மற்றபடி வியாபாரிகள் பொருளின் விலையை பற்றி கூறும் பொய்யும் இந்த வகை தான். மொத்தத்தில் பார்த்தால் ஏன் பொய் சொல்கிறோம் என்ற கேள்வியை விட, ஏன் பொய் சொல்லக்கூடாது என்கிற நிலை தான் இன்று இருக்கிறது. அதனால் அவரவர் சூழ்நிலையை பொருத்து சில பல பொய்களை சொல்வது மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானது. ஆனால் உறவுகள் பலப்பட முடிந்த அளவு அந்த உறவில் பொய் கலக்காமல் இருப்பதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடோ மாற்று கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...