Sunday, May 11, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 2

பட்டிமன்றப் படிப்பினை பதிவு எழுத இரண்டு காரணங்கள். அதில் முதல் காரணத்தை பாகம் 1 -ல் கூறிவிட்டேன். இப்போது இரண்டாவது காரணம்.

சாதாரணமாக நடைமுறைப் பேச்சை நகர்த்திச் செல்வதிலேயே சிரமப்படும் எனக்கு மேடைபேச்சு என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். ஆனாலும் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இது போன்ற நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அதை சரியாக செய்ய முயலுவேன். என்னிடம் பெரிய நிபுணத்துவம் எந்தத் துறையிலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை செய்ய நினைத்தால் அதற்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் மனம் மட்டுமே உண்டு.

உறவா நட்பா என்ற தலைப்பு கொஞ்சம் சிக்கலானது. எனக்கு உறவினர்களும் இருக்கிறார்கள் நண்பர்களும் இருக்கிறார்கள். நட்பை சார்ந்து பேசப்போகிறோம் என்பதை நினைத்தபோது சற்று யோசனையாத்தான் இருந்தது. ஏன் என்றால், எனக்கு உறவை விட நம்பிக்கை துரோகம் செய்த நண்பர்கள் பட்டியல் பெரியது. அதே நேரத்தில் உறவை விட நன்மைகள் செய்த நண்பர்கள் கூட்டமும் பெரியது. இது சிக்கலில் கொண்டு போய் விடுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே, இந்த பட்டிமன்ற பேச்சை கேட்டு இரண்டு தரப்பில் இருந்துமே விவாதங்கள் எழுந்தன. பட்டிமன்றங்களில் பேசும்போது எதாவது ஒரு தலைப்பை சார்ந்து தான் பேசுகிறோம். நட்பே வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் பேசியதால் எனக்கு பல நண்பர்கள் அவர்கள் தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நட்பை சார்ந்து நான் பேசியது என் விருப்பத்தின் பேரில் தான். பட்டிமன்றம் முடிந்தும் ஏன் இப்படி பேசினீர்கள் என்று மேடைக்கு வெளியே பல பட்டிமன்றங்கள் நடத்தும் அன்பர்களுக்கு பதில் கூறுவதுதான் இந்த இரண்டாவது காரணம். என்னைப் பொறுத்தவரை நல்ல உறவும் நட்பு தான், நல்ல நட்பும் உறவுதான். பலர் உறவை நட்புக்கு இணையாகவும், நட்பை உறவுக்கு இணையாகவும் கூறுவார்கள்.  உதாரணத்திற்கு, இவர் என் ப்ரெண்ட், ஆனா எனக்கு பிரதர் மாதிரி என்பதையும், நானும் அவளும் அம்மா பொண்ணு மாதிரி பழகறதில்லை, பிரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுகிறோம் என்பதையும் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் நம் சமூகத்தில் நண்பேண்டா வெற்றிபெற்றதைப் போல மாமேண்டா, மச்சாண்டா என்று எதுவும் வெற்றி பெறவில்லை.

உறவுகள் என்பது நம் ரத்த சொந்தங்கள், நண்பர்கள் நம் உணர்வு சொந்தங்கள் அவ்வளவு தான் வித்தியாசம். பொதுவாக உறவுகள் உதவி செய்தால் ஒன்று அதில் கடமை உணர்ச்சி இருக்கும் அல்லது நன்றிகடன் காரணமாக இருக்கும். உதாரணமாக என்ன இருந்தாலும் என் சித்தப்பா என்று செய்யும் உதவி இல்லாவிட்டால் அவங்க  குடும்பம்  நமக்கு செஞ்ச உதவிக்கு நாம என்ன செஞ்சாலும் ஈடாகாது என கடமை உணர்ச்சி மேலிட செய்யும் உதவி. ஆனால் நண்பன் (எளிமை கருதி நண்பன் என்று ஆண்பாலில் கூறுகிறேன்) செய்யும் உதவியில் பொதுவாக இப்படிப்பட்ட கடமை உணர்ச்சிகள் காரணமாக இருக்காது. எதோ ஒரு காரணத்திற்காக நட்பு உருவாகிறது. அப்படி உருவாகிய நட்பு ஒருவருக்கொருவர் எதையும் செய்யும் வலிமையை கொடுக்கிறது. அப்படி இல்லை, நட்பில் சுயநலம் இருக்கிறது, எதை வேண்டுமானாலும் நண்பன் செய்ய மாட்டான் என்று நீங்கள் சொன்னால்...அப்படிப்பட்ட நல்ல நண்பனை நீங்கள் இன்னும் சந்திக்கவில்லை என்பது தான் என் பதில்.  மேலும் அப்படிப்பட்ட நட்பை நீங்கள் மற்றொரு நண்பனுக்கு வழங்கினால் தான் உங்களுக்கு அதே போல ஒரு நண்பன் கிடைப்பான்.

இன்னொரு விஷயம், நம்ம பிரெண்ட்ஸ் கிட்டே பேசும் போது 'மாமா, மச்சான்' என்று கூப்பிடுகிறோமே, அப்படி என்றால் நட்பைக் கூட உறவு வைத்து அழைப்பதில் தானே பெருமைப் படுகிறோம் என்ற கேள்வி. இதற்கு பதில், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிடுவதால் நாம் எந்த உறவின் பெயரை வைத்து கூப்பிடுகிறோமோ அந்த உறவு தான் உயர்ந்தது என்பதற்கில்லை. உதாரணத்திற்க்கு பல நாட்கள் பேசாமல் இருந்த நண்பனை பார்க்கும் போது நான் 'டேய் நாயே, ஒரு போன் பண்ண கூட உனக்கு தெரியாதா, அறிவு கெட்டவனே' என்று கண்ணா பின்னாவென்று திட்டுவேன். அதை அந்த நண்பன் சிரித்தபடி ஏற்றுக்கொள்வான். ஒரு குழந்தையை செல்லமாக நாய் குட்டி என்று அழைப்பதால் நமக்கு அந்தக் குழந்தையை விட நாய்க்குட்டி தான் பெரியது என்று அர்த்தம் இல்லை. அதனால் என்ன சொல்லி நண்பனை அழைக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.

இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால் பட்டிமன்றம் முடிந்துவிட்டது. நான் பேசிய பேச்சு என் கருத்து என்றாலும் அது மட்டுமே என் கருத்து என்று கருத வேண்டாம். அங்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் அவ்வளவு தான் கூற முடிந்தது, கூற முடியாத பல உறவின் பெருமையும், நட்பின் பெருமையும் நிறையவே இருக்கிறது. உறவு புனிதமானது, நட்பு பிராம்மாண்டமானது. அதனால் உறவு நட்பு   இரண்டையும் போற்றுவோம்.






















Monday, May 5, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 1


சமீபத்தில் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு ராஜா அவர்களின் தலைமையில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசினேன். பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்வில் பெரிதும் உதவுவது உறவா நட்பா ? இது எல்லா இடத்துலேயும் தொவச்சு போட்ட பழைய தலைப்பு தான். ஆனாலும் இங்கு பாஸ்டன் பகுதியில் நடக்கும் பல பட்டிமன்றங்களில் இந்தியாவா அமெரிக்காவா எது சிறந்தது  என்கிற ரீதியில் கேட்டு கேட்டு சலித்துப் போன காதுகளுக்கு இது சற்று வித்தியாசமான தலைப்பாகவே தோன்றியது.  பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா என்று கேட்ட தமிழ் சங்கத் தலைவர் திரு ராஜ் வேல்முருகனிடம்,  கண்டிப்பா பேசுகிறேன், ஆனால் இந்தியாவா அமெரிக்காவா என்ற தலைப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும் என்றேன். நான் சொன்னதால் அந்தத் தலைப்பு வைத்தார்களா இல்லை எதேச்சையாக வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் தலைப்பு எனக்கு பிடித்து இருந்தது.

எல்லா வேலைக்கும் மெசின் இந்த அமெரிக்க மண்ணில் இருந்தாலும் அந்தந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும்.  இது இங்கு வாழ்பவர்களுக்கு நன்றாகப் புரியும். அலுவலக வேலை, வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு மூன்று வாரத்திற்கு முன்பே அவ்வபோது தலைப்பை பற்றி மனதில் அசைபோட்டபடி இருந்தேன். இப்போது இங்கு குளிர் கொஞ்சம் குறைந்திருப்பதால் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கிறேன். (குளிர் காலங்களில் டிரெட் மில்லிடம் சரணாகதி). தனியாக ஓடுவதில் ஒரு வசதி இருக்கிறது. யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் நமக்கு தேவையானதை யோசிக்க முயற்சி செய்து சில நேரங்களில் வெற்றி பெறலாம். மனம் ஒரு குரங்கு என்பது அந்த நேரத்தில் நன்றாக புரியும். ஆனாலும் ஓட்டத்தின் போது எழும் சிந்தனைகளை அவ்வபோது குறிப்பெடுத்துக் கொள்வேன். எங்கள் அணியில் இருந்த நான்கு பேரும் அவ்வபோது தொலைபேசியில் பேசி யார் என்ன பேசுகிறோம் என்று பகிர்ந்துகொண்டோம். ஒரே விஷயத்தை அணியில் நால்வருமே பேசக் கூடாது என்பதால் நாங்கள் பேசும் விஷயத்தின் சாரத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதனிடையில் ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்டோம். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் நால்வருமே முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். இந்தப் பட்டிமன்றத்திற்காக ஓன்று சேர்ந்தோம். ஆனால் சில தொலைபேசி பேச்சு மற்றும் ஒரு சந்திப்பில் எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வந்து விட்டது. ஆனால் நங்கள் அனைவரும் வேறு வேறு அலைவரிசையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம். பல நேரங்களில் கார சாரமான விவாதங்கள் தொலைபேசியில் நிகழ்ந்தன. பல தகல்வல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு மனிதனிடமும் எவ்வளவு தகவல்கள், ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருகின்றன. ஆனால் அவை வெளியே வர வைக்க ஒரு கிரியா ஊக்கியாக ஒரு காரணம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பட்டிமன்றதால் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே. 

இந்த வரிகளை எழுதிகொண்டிருக்கும் போதே எதை நினைத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தோம், இப்பொழுது என்ன எழுதிகொண்டிருக்கிறோம் என்று ஒரு எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருகிறது. அது என் எழுத்தின் பலவீனமா அல்லது பலமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி பெரிதாக கவலைப் படவும் தோன்றவில்லை. சரி எதற்காக இந்தப் பதிவு என்று பார்ப்போம். அதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம், பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசிய ஒரு பெண்மணி. அவர் அனுமதி இல்லாமல் பெயரைக் குறிப்பிட எனக்கு மனம் வராததால் பெண்மணி என்று குறிப்பிடுகிறேன். எனக்கு ஏற்கனவே ஓரளவிற்கு அறிமுகம் ஆனவர் தான். இது போன்று ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். என்னைப் பார்த்ததும் என்ன நீங்க இப்போ எழுதறதே இல்லை என்று கேட்டார். பல நண்பர்கள் இதைப் போல சம்பிரதாயக் கேள்வி கேட்பார்கள். நானும் டைம் இல்லைங்க என்று ஒரு சப்பைக்கட்டு பதிலை சொல்லுவேன். இவரிடமும் அதே போல ஆமாங்க எழுதனும்னு மனதளவில் ஒருவித சலிப்போடு கூறினேன். ஆனால் அவர் நான் முக்கியமாகக் கருதும் ஒரு பதிவைப் பற்றி விலாவாரியாகக் கூறி, அதைப் படித்ததும் மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டதாகவும் கூறினார். அதற்கு மேல் அந்தப் பதிவில் வரும் ஒரு  நபரின் பெயரைக் குறிப்பிட்டதைக் கேட்டதும் நான் மனதளவில் வெட்கி தலை குனிந்தேன். இவ்வளவு நுணுக்கமாகப் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை நான் எப்படி எழுதி இருக்கிறேன் பார் என்கிற சுய தம்பட்டம் அடிக்கும் தொனியில் கூறவில்லை. நான் எழுத்து என கூறிக்கொள்ளும் கிறுக்கல்களின் நிலை எனக்கு நன்றாத் தெரியும். ஆனால் என் கிறுக்கல்களை வலை உலகின் முன் சமர்பிக்கும் போது அது எங்கோ யாரையோ சென்றடைந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மனதை அசைக்கிறது என்பதை நினைக்கும் போது ஒரு நெகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. அந்தப் பெண்மணிக்கு நன்றி. முடிந்த அளவு நிறைய எழுகிறேன் அம்மா. 

இரண்டாவது காரணம்...அடுத்தப் பதிவில் தொடரும்....






















வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி

வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...