Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, May 7, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் நான்கு




இந்த அத்தியாயத்தை ஆரம்பிபதற்கு முன்பு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதை படித்த சிலர் 'ஆட்டோ-பயோகிராபியா ?' என்று கேட்டார்கள்.. அவர்களுக்கு நன்றி. ஆனால் இந்த எண்ண ஓட்டங்கள் தொடர் ஒரு ஆட்டோ-பயோகிராபி அல்ல. அதெல்லாம் பெரிய விஷயம். ஆட்டோ-பயோகிராபி இஸ் எ பிரிவிலெஜ்ட் வேர்ட். அந்த அளவிற்கு நான் இன்னும்  வளர்ந்து விடவில்லை மேலும் என் வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிரும் தைரியமோ தகுதியோ எனக்கு இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய முதல் மாரத்தான் ஓட்ட அனுபவத்தை பற்றி எழுதும் முயற்சியில் என் வாழ்கை ஓட்டத்தில் உள்ள சுவாரசியம் என்று நான் கருதும் அனுபவங்களைக் கலந்து ஒரு ஜிகிர்தண்டாவாக கொடுக்க நினைக்கிறேன். அவ்வளவே. இனி அத்தியாயம் நான்கு.

ஸ்ரீதர் (பெயர் மாற்றப்படவில்லை). நம் வாழ்கைப் பாதையில் சற்று பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒருவர் நம் வாழ்கையின் திருப்பு முனையாக அமைந்திருப்பார்கள் . என் வாழ்க்கையில் பலர் அந்த வகையில் திருப்பு முனையாக இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீதர். இதை அவரிடம் நேரடியாக சொன்னதில்லை, மேலும் இப்போது அவருக்கும் எனக்கும் இப்போது நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் அவ்வபோது மனதின் ஒரு ஓரத்தில் வந்து தலைகாட்டி செல்லும் ஒரு சிலரில் ஸ்ரீதரும் இருக்கிறார். அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். படிப்பில் பெரிய பிடிப்பு இல்லாமல் ஏனோ தானோ என்று படிதுக் கொண்டிருந்த நேரம். ஸ்ரீதர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அந்த நேரத்தில் ஸ்ரீதர் தன் நண்பர்கள் அறிவழகன், மணிசேகர், கிச்சா என சில நண்பர்களுடன் சேர்த்து மாலை நேரத்தில் டியூஷன் எடுக்க ஆரம்பித்து இருந்தார். பெரிய இடம் எதுவும் இல்லாததால், சென்னை சைதாபேட்டையில் இருந்த (இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறன்) 'உதயம் மெடிகல்ஸ்' மேலே இருந்த ஒரு மொட்டை மாடியில் டியூஷன் ஆரம்பித்து இருந்தார்கள். அப்போது சும்மா மாலை நேரங்களில் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் என்னையும் சேர்த்து சில நண்பர்களைப் பார்த்து 'டேய் ஐஞ்சு மணிக்கு டியூஷன், வந்துருங்க' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார். முதல் நாள் பயந்து கொண்டே வேண்டா வெறுப்பாக சென்றேன். பள்ளிக்கூடத்தில் சுமார் நாற்பதுக்கும் மேல் மாணவர்கள் உள்ள வகுப்பில் சந்தடியில்லாமல் சென்று திரும்பும் எனக்கு, ஒன்-டு-ஒன் டியூஷன் எல்லாம் பெரும் பயத்தைக் கிளப்பிய காலகட்டம் அது. நமக்கு தெரியாதது எல்லாம் என்னவென்று மற்றவர்களுக்கு தெரிய வந்தால் ரொம்ப கேவலமாக இருக்குமே என்று கவலை தான் அதற்க்கு காரணம். பயந்து கொண்டே சென்ற என்னை அழைத்து சென்று தரையில் உட்கார்ந்து கணக்கு புத்தகத்தைப் திறந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் ஸ்ரீதர். ஹீரோ பேனாவில் பர்புள் கலர் இங்கில் முத்து முத்தான கையெழுத்தில் எழுதிய முதல் மனிதனை அன்று தான் பார்த்தேன். வெரி யுனிக் கலர். தனக்கு ஒரு விஷயம் தெரிந்தாலும் அதை மற்றவருக்கு புரியும் வகையில் கற்றுக் கொடுப்பது ஒரு கலை. ஒரு மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்த இளைஞனுக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுப்பதில் இவ்வளவு திறமையா என்று பின்னர் நான் வியக்காத நாள் இல்லை. ஸ்ரீதர் கற்றுக்கொடுக்கும் போது எனக்கு அதுவரை புரியாத கணக்கு பாடம் புரிந்தது. கணக்கு அடிப்படையிலே புரிதலில் அதல பாதாளத்தில் இருந்த என்னை பத்தாவது பாடத்திட்டத்திலே கூட இல்லாத பாலிடெக்னிக் பாடத்திட்ட கணக்குகளை போட வைத்தார். ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த விதத்தில் அல்ஜீப்ரா அல்வா சாப்பிடுவது போல இருந்தது. ட்ரிக்ணாமெட்ரி பொழுது போக்காக மாறியது. ஸ்ரீதரின் உதவியால் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றி எட்டு மதிப்பெண் எடுத்தேன். அந்த இரண்டு மதிப்பெண் கூட ஒரு சில்லி மிஸ்டேக்கினால் கோட்டை விட்டேன். பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்ததுமே ரெண்டு மார்க் போச்சுன்னு உணர்ந்து என்னையே நான் மனதில் திட்டிக்கொண்டு இருந்தேன். அதன் பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஸ்ரீதரிடம் தான் படித்தேன். ஸ்ரீதருக்கு நல்ல வேலை கிடைத்து பிஸியாக இருந்த நேரத்திலும் மாலை நேரத்தில் என்னையும் சேர்த்து பாலாஜி, சத்யா என பல நண்பர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுகொடுத்த அடிப்படை தான் பின்னர் அனைத்து தொழில்முறை சார்ந்த விஷயங்களில் எனக்கு உதவியது. இப்படி என் வாழ்வில் மிக முக்கிய திருப்பு முனையாக இருந்த ஸ்ரீதருக்கு இந்தப் பதிவின் மூலமாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கணக்கில் நல்ல மார்க் எடுத்தாலும் மற்ற சப்ஜெக்டில் எல்லாம் சுமார் மார்க் தான். இப்ப எல்லாம் பத்தாவது பாஸ் பண்ணின யாரை கேட்டாலும் ஐந்நூறுக்கு நானூற்றி ஐம்பது மதிப்பெண்ணுக்கு மேல் சொல்கிறார்கள். இப்படிதான் ஒருவர் பையன் மார்க் கம்மிதான், நானூத்தி ஐம்பத்தி ஐஞ்சு தான் எடுத்திருக்கான் என்றார். நானும் 'சென்னை 28' படத்தில் சின்ன பசங்களுடன் கிரிக்கெட்விளையாடும் சீனில், சிவா 'நானூறு ரூபா தான் இருக்கா', என்று லேசாக இழுத்தபடி கூறுவது போல, என்ன நானூத்தி ஐம்பத்தி அஞ்சு தானா, பரவால்லே பிளஸ் டூ லே இன்னும் நல்லா படிக்க சொல்லுங்க என்று நம்ம பத்தாவது டோட்டல் எல்லாம் இனிமேல் வெளியே சொல்லவே முடியாது போல மனதளவில் சொல்லிகொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். பத்தாவது முடித்ததும் கூட இருந்த எல்லாப் பயல்களும் எம்ப்லோய்மென்ட் எக்ஸ்சேஞ்ஜில் பதிய ஓடி நின்றபோது, நான் ஏனோ அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அடிச்சி பிடிச்சி பிளஸ் ஒன்னில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு எடுத்தேன். ஏன் கம்புயுட்டரை தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. டேய் பையாலஜி எடு அப்பத்தான் மெடிக்கல் எண்டரன்ஸ் எழுதலாம் என்று சொன்ன சிலரின் நம்பிக்கையை நினைத்து பெருமையாக இருந்தது. நம்மளையும் ஒரு டாக்டரா எல்லாம் எப்படி இவங்களால கற்பனை பண்ண முடியுது என்று நினைத்துக் கொண்டேன். கணக்கு நன்றாக புரிந்ததாலோ என்னவோ கம்ப்யூட்டர் கண்ணா பின்னா என புரிந்தது. அதற்கு கம்ப்யுடர் சையன்ஸ் மாஸ்டர் ஜான் முக்கிய காரணம். அவருக்கு அப்போது  ஒரு இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். பார்பதற்கு லேசாக தாடியெல்லாம் வைத்துக்கொண்டு பெரிய ஆள் போல இருந்தாலும் பாடம் நடத்தும் விதத்தில் என்னமோ நம்ம கூடப் படிக்குற ஒரு ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது போல இருக்கும். யோசிச்சு பாத்தீங்கனா, எக்ஸாமுக்கு முன்னாடி நாள் ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது நல்லா புரியும், ச்சே இதையா இவ்வளவு நாள் புரியாமே குழம்பிக்கிட்டு இருந்தோம் என்று தோன்றும். ஜான் சார் பாடம் எடுப்பதும் அப்படிதான். பாடம் இருக்கும் போதே எதாவது அவர் வாழ்கையில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை சொல்லி கிளாசையே ஒரு கலக்கு கலக்கி விடுவார். அது இல்லாவிட்டால் கிளாசில் யாரையாவது உதாரண புருஷனாக்கி அவனை கலாய்த்து விடுவார். ஒரு முறை பேசிக் ப்ரோக்ராம்மிங் பற்றி பாடம் எடுத்து கொண்டிருந்தார். அதில் GoSub/Return என்று ஒரு ஸ்டேட்மண்ட் வரும். அதை அவர் சொல்லிக் கொடுத்த விதமே தனி. எப்படி என்றால்...

ஒரு பொண்ணு வீட்டுல தனியா படிச்சிட்டு  இருக்கு. அப்ப நம்ம விஜயானந்த் போய் கதவை தட்டுறான்.

சார், என்னை ஏன் சார் இப்ப இழுக்குறீங்க ?

இருடா, ஒன்னும் இல்லை. அப்ப அந்த பொண்ணு என்ன பண்ணும். படிச்சிட்டு இருக்குற புக்க வைச்சிட்டு வந்து கதவை திறந்து விஜயானந்த் முன்னாடி நிக்கும்.

வேண்டாம் சார், வேற எக்சாம்பிள் வெச்சு சொல்லுங்க சார், என்று விஜயானந்த் கதறுவான். சார் கண்டின்யு பண்ணுங்க,  கண்டின்யு பண்ணுங்க  கிளாசே உற்சாகத்தில் சத்தம் போடும்.

அந்தப் பொண்ணு வாசல்லேயே விஜயானந்த நிக்க வெச்சு பேசி அணிப்பிட்டு திரும்பவும் போய் அது என்ன படிச்சிட்டு இருந்துச்சோ அதை கண்டின்யு பண்ணும். இது தாண்டா GoSub/Return. கம்ப்யூட்டர்லே GoSub-னா சொல்ற எடத்துக்கு போகும், அங்கே வேலை முடிஞ்சதும் Return சொன்னா  திரும்பவும் வந்து என்ன பண்ணிட்டு இருந்துச்சோ அதைப் பண்ணும்.

இது ஒரு சின்ன உதாரணம். அந்த வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும் இது மறந்திருக்காது. முன்னமே சொல்லியது போல சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் சரியாக செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் எதையும் புரிய வைக்கலாம். அவர் சொல்லிக் கொடுத்த அடிப்படை தான் இன்றைக்கும் கம்புயடரில் என் புரிதலுக்கு வித்து என்று சொல்லலாம்.

என்னதான் படிப்பு, விளையாட்டு, வேலை, திருமணம், குழந்தைகள் என்று காலச் சுழற்சியில் ஒரு இலைபோல காற்றடித்த திசையில் எல்லாம் நாம் பறந்து கொண்டது இருந்தாலும், எதோ ஒன்றை நாம் செய்ய நினைத்து அது சரியாக செட் ஆகாமல் இருந்திருக்கும். ஆனாலும் எவ்வளவு வயதானாலும் அதை தொடர்ந்து செய்யும் ஒரு ஆசை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி எனக்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான இடத்தில் இருந்த/இருக்கின்ற ஒரு விஷயம் பாட்டு. அதைப் பற்றி அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

ஓட்டம் தொடரும்.....


அத்தியாயம் ஓன்று 
அத்தியாயம் இரண்டு 
அத்தியாயம் மூன்று 






























Thursday, April 9, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் மூன்று




இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த எண்ண ஓட்ட தொடர்கள் ஒரே நேர் கோட்டில் பயணிக்காது. அதாவது வயது வாரியாக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சி அல்ல. எண்பதுகளில் நிகழ்ந்த நிகழ்வினை இரண்டாயிரத்து பதினைந்துடன் முடிச்சு போடும் சாத்தியம் இந்தத் தொடர்களில் உண்டு. அதனால் நான் பத்தாவது படித்துகொண்டிருக்கும் போது நடந்த ஒரு விஷயத்தை சொல்லும் போது அதற்கான காரணம் ஆறாவது படிக்கும் போது ஏற்பட்டிருக்கலாம். அதை மேற்கோள் காட்ட ஆறாம் வகுப்பிற்கு தாவ வேண்டும் இருக்கு. சரி, இனி என்ன ஓட்டங்கள் அத்தியாயம் மூன்றைப் பார்போம்.

அத்தியாயம் மூன்று

முகத்தின் மேல் குளோரோபார்ம் நிறைந்த பையை அழுத்த அதன் வினோத நெடி நாசியில் ஏறியது. அந்த நெடியை உணரும் அதே நேரத்தில் உடைந்த வலது கையை யாரோ பிடித்து தூக்குவதை உணர முடிந்தது. ஆனால் அது வரை இருந்த வலி தூக்கும் போது இல்லை. அதன் பின்னர் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, நினைவு திரும்பியதும் முதலில் லேசாக குளிரை உணர்ந்தேன். கண்களை திறக்க முடியவில்லை. மேலே மின்விசிறி வேகமாக சுழல்வதை உணர முடிந்தது. உடல் குளிரில் லேசாக நடுங்கியது. என்ன மதினி இப்படி நடுங்குது என்று என் அம்மாவின் குரல் கேட்டது. கையில் ஏதோ கடினமாக கட்டபட்டிருந்தை வலியுடன் உணர்ந்தேன். லேசாக கண்களை திறந்து பார்க்க முடிந்தது. என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கையைப் பார்த்ததில் பெரிய மாவு கட்டு, மணிக்கட்டில் இருந்து கிட்டத்தட்ட தோள் வரைப் போடப்பட்டிருந்தது. ச்சே, ஒரு நிமிச விளையாட்டு புத்தி எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பார் என்று என் மனதிற்குள் என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் ஆட்டோவில் வீடு நோக்கி பயணம். வீட்டில் நுழைந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வாசலில் வந்து நின்று விட்டனர். எல்லோரும் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என்று கேட்டபடி ஒரே கூச்சல். ஸ்விம்மிங் பூல் போய் கையை ஒடச்சிகிட்டான், எதுக்கு இவனுக்கு ஸ்விம்மிங் எல்லாம் என்று அவர்களாகவே பேசிக் கொண்டனர்.  நானோ மனதிற்குள்  ஸ்விம்மிங் பூல் போய் வரும் வழியில் தான் கை உடைந்தது அதற்கும் ஸ்விம்மிங்கிற்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். 

நான் அந்த வருடம் பத்தாவது வகுப்பில் படித்துகொண்டிருந்தேன். ஏற்கனேவே படிப்பில் சுமார்.  இப்போது கை வேறு உடைந்து விட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன், ஆறாம் வகுப்பில் இருந்து இங்கிலீஷ் மீடியம். எல்லாவற்றையும் தமிழ் படித்துகொண்டிருந்த நான், கணக்கு முதற்கொண்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளானதும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலதான் முதலில் உணர்ந்தேன். அது சரியாகி ஓரளவிற்கு ஆங்கிலம் பிடிபட்டது ஒன்பதாம் வகுப்பில் தான். பத்தாவது எப்படியாவது நன்றாக படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்ட நேரத்தில் இப்படி நிகழ்ந்தது பெரும் கவலையைத் தந்தது. ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்லிகொள்ளும் நிலையும் தேவையும் இல்லாத ஒரு கால கட்டம் அது. அன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தியதை இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் பாடம் சரியாக நடத்தியதே இல்லை. முக்கால்வாசி நேரம் மரத்தடியில் தான் வகுப்பு. அதுவும் அறிவியல் போன்ற பாடங்களில் யாரவது ஒரு மாணவனை எழுந்து படிக்க சொல்வார்கள். அவ்வபோது தோன்றும் போது எதாவது சொல்லி புரிந்ததா என்று ஒரு கேள்வி. அவ்வளவு தான் அங்கே நான் கற்ற பாடம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வில் முப்பது ஐந்து மதிப்பெண் எடுத்தவர்கள் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு அப்போது அந்த பள்ளியில் இருந்திருந்தால் என்னையும் சேர்த்து வகுப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ் ஆகி இருக்க மாட்டார்கள். மிக மிக மோசமாக படிக்கும் மாணவர்களைத் தவிர எல்லோரையுமே அடுத்த வகுப்பிற்கு தூக்கி போட்டு விடுவார்கள். இது இப்படி இருக்க, நான் சந்திந்த எல்லா தமிழ் ஆசிரியர்களும் மிகவும் சிறப்பாக பாடம் நடத்தினர். அதில் தட்சிணாமூர்த்தி என்ற ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அழகே தனி. ஒவ்வொரு மாணவனுக்கும் அழகாக தமிழில் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார். உதாரணத்திற்கு, சைதாபேட்டையில் உள்ள கொசத்தெரு என்ற தெருவில் இருந்து வரும் மாணவனை வாடா கொசத்தெரு கோமகனே என்று கூப்பிடுவார்.

ஆனாலும் அப்போது எனக்கு தமிழ் மேல் பெரிய ஆர்வம் என்றெல்லாம் இல்லை. ஒரே விஷயம் கண்ணா பின்னா என திருக்குறள் படித்தேன். அதுவும் திருக்குறள் போட்டி ஒன்றில் ஆறாவது படிக்கும் போது கலந்துகொண்டேன். அதில் முதல் பரிசும் பெற்றேன். அதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அந்த போட்டிக்காக திருக்குறள் நிறைய படித்தேன். திருக்குறளைப் போன்ற ஒரு பொக்கிஷத்தை தமிழன் பெற்றது ஒரு வரப்ரசாதம். அதில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தனைக்கும் விடை இருக்கிறது. தந்தையின் கடமை, பிள்ளைகளின் கடமைகளில் தொடங்கி மருத்துவன், அரசன், காதலன் என வாழ்வின் அத்தனை நிலைகளிலும் நம்மை வழி நடத்தும் தகவல்கள் திருக்குறளில் உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் ஒரு திருக்குறள் புத்தகத்தையாவது வாங்கி வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.  இப்படி நான் படித்துகொண்டிருந்த நிலையில் கையையும் உடைத்துக் கொண்டேன். அதுவும் வலது கை, எழுத முடியாது. சுமார் மூன்று மாதங்கள் கை கட்டுடன் வீட்டிற்குள் இருந்தேன். பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்ததில் பொழுது போகாமல் ஒரு நாள் வரலாறு பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். நன்றாகப் புரிந்தது. நல்லாதானே இருக்கு,  இத்தனை நாள் ஏன் நாம இதை படிக்கலே என்று தோன்றியது. வலது கையில் எழுத முடியாததால் சில நாட்கள் இடது கையில் எழுத பழகினேன். ஆனாலும் கணக்கு மட்டும் புரியவே இல்லை. சரியான அடிப்படை கணிதம் கூட தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. கணக்கு புரியாததால் அறிவியலும் முழுவதுமாகப் புரியவில்லை.  படிக்காவிட்டால் வாழ்கை திசை மாறிப் போய்விடும் என்ற புரிதல் இருந்தது,  ஆனால் படித்தால் புரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த வேளையில்  என் வாழ்வில் நுழைந்தவர் ஸ்ரீதர்.

ஓட்டம் தொடரும்.....


Monday, April 6, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு

 
இசை, நடனம், ஓவியம், எழுத்து போன்ற விஷயங்கள் மனிதனுக்கு கிடைத்த வரம். சில நேரங்களில் வாழ்கை ஓட்டத்தில் இது போன்ற அரிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது பெரும் பாடாகி விடுகிறது. எண்ண ஓட்டங்கள் என்ற தொடரின் முதல் அத்தியாயம் எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இப்போது தான் அடுத்த அத்தியாயம் எழுத முடிந்திருக்கிறது. இது என் மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கிக்கிடக்கும் எண்ண அலைகளை வார்த்தைகளாக்கும் ஒரு முயற்சியே. இதை படிப்பதால் உங்களுக்கு பெரிய பலன் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த கால கட்டத்தில் என்னுடன் கை கோர்த்து நடந்த ஒரு உணர்வை அளிக்கும் முயற்சி தான் எண்ண ஓட்டங்கள். இதைப்பற்றி தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல், நினைவுகளைக் கிளறி மனம் போன்ற போக்கில் எழுத முனைகிறேன். இனி எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு...

ஆனால், நான் பிடித்து ஆடிய விழுது அறுந்து கீழே விழுந்தேன். என்னுடைய உடல் பாரம் முழுவதும் வலது கையின் மேல் இருக்கும்படி விழுந்ததில் மணிக்கட்டுக்கு சற்று மேலே வலது கையில் எலும்பு முறிந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் கை பெரிதாக வீங்கி விட்டது. வலது கையின் பாரத்தை தாங்க முடியாமல், இடது கையால் தாங்கியபடி நடந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கூட இருந்தனர், ஆனால் அவர்களும் மிரட்சியில் இருந்தார்கள். பின்னர் மெதுவாக நடந்து குருநாத் ஸ்டோர் அருகே வந்ததும் ஒரு ரிக்சா வண்டி வந்தது. நண்பர்கள் அவரிடம் பேசி என்னை ரிக்சாவில் ஏற்றி விட்டனர். ஒரு வழியாக வீட்டின் அருகே வந்து சேர்ந்து வாசலில் இருந்த ஒரு கடையில் போட்டிருந்த ஸ்டூலில் மிகுந்த வலியுடன் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் என்னை சுற்றி கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் ஐயோ பாவம் என்று சொல்லியபடி பார்த்துகொண்டு நின்றார்கள். இதை சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார். அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கண் முன்னே ஒருவன் வலியால் துடித்துகொண்டிருக்கும் போது  பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டு நிற்பது சாத்தியமில்லாதது. ஆனால் அங்கே ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக அங்கு வந்த ரங்கண்ணன் (ரங்கன் என்பது அவர் பெயர் அதனுடன் அண்ணனை சேர்த்து நாங்கள் ரங்கண்ணா என்று கூப்பிடுவோம்), என்னடா ஆச்சு என்று பதறியபடி கேட்டார். கை முறிந்திருப்பதைப் பார்த்து அடப்பாவி என்று உரக்க கூறியபடி வீட்டின் உள்ளே சென்று ஒரு துணியை நனைத்து கையின் மேலே லேசாக சுற்றினார். என்னை கைதாங்கலாக அழைத்தபடி அருகில் இருந்த கௌரி பார்மசி சேட்டிடம், 'சேட்டு, ஒரு இருநூறு ரூபா குடு, பையன் கையை ஒட்சினு வந்து நிக்குறான்' என்றார். சேட் என் தந்தையின் நெருங்கிய நண்பர். மறு பேச்சு பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தார். கௌரி பார்மசி சேட் குணத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்தப் பதிவை படிக்கவும்.
 
பணம்  கிடைத்தவுடன் புத்தூர் போகலாமா அல்லது ராயபேட்டா மருத்துவமனை போகலாமா என்று எழுந்த விவாதத்தில், ரங்கண்ணன் உடனடியாக  சின்னபையன் புத்தூர் ட்ரீட்மென்ட் வலி தாங்க மாட்டான், ராயபேட்டாவே போயிறலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை கூட்டிச் சென்றார். ராயப்பேட்டை மருத்துவமனையை நெருங்கும் முன்னரே அதன் நெடி நாசியை துளைக்க ஆரம்பித்தது. அந்த நெடியே அடிவயிற்றில் ஒரு பயத்தைக் கிளப்பியது. எலும்பு முறிவுப் பிரிவிற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அங்கிருந்த மருத்துவர் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த மருத்துவர் என் கையைப் பார்த்ததும், பையனை பெட்லே படுக்க வெச்சு கையை தூக்கி கட்டுங்க என்றார். யாரோ ஒருவர் வந்து என்னை அழைத்துச்சென்று கையை தூக்கி ஒரு கம்பியில் கட்டி விட்டார். எனக்கோ வலது கையில் எலும்பு முறிவு, அவரோ ஒரு பெரிய கம்பியை என் இடது புறம் வைத்துக் அதில் வலது கையை தொங்கவிட்டார். ஏற்கனவே கையில் சொல்ல முடியாத அளவிற்கு வலி, அதில் ஒரு மாதிரி ஒருக்களித்துப் படுத்து இருந்தது மேலும் வலியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தனர். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் குளோரோபார்ம் நிறைந்த ரப்பர் பை போன்ற ஒன்றை என் முகத்தில் அழுத்தினார்.
 
ஓட்டம் தொடரும்.....


Thursday, May 9, 2013

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஓன்று



சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் யாரவது வந்து மாரத்தான் ஓடினேன் என்று கூறி இருந்தால், ஓ அப்படியா! என்று ஒரு போலியான ஆச்சர்ய கேள்வி கேட்டுவிட்டு, அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என் சடார் என்று ட்ராக் மாறி இருப்பேன். ஆனால், இப்போ கொஞ்ச நாட்களாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பலவற்றிகாக அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும், புதிதாக ஒருவன் ஓடுவதற்காக நேரத்தை ஒதுக்கும் போது பல புருவ உயர்வுகளை சந்திக்க நேர்கிறது. என்ன சார், திடீர்னு ஓடறீங்க என்று சிலர் ஆச்சர்ய கேள்வி எழுப்பினர். ரன்னிங் பண்றது கால் மூட்டுகளுக்கு அவ்வளவு நல்லதில்லைங்க என்று சிலர் திடீர் டாக்டர்களாக மாறி அறிவுரை கூறினார்கள். என்னால எல்லாம் ஓட முடியாது என்று சிலர் தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்கள். சில நேரங்களில் எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று உடனடி பதில் சொல்ல முடியாது. ஏன் ஓடுகிறோம் என்ற கேள்வியை என்னையே நான் பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பல வித பதில்கள் மனதில் வந்து விழுகின்றன.என் எண்ண ஓட்டங்களை முடிந்த அளவு சுவாரசியமாக எழுத்தில் பகிர முயற்சிக்கிறேன். பொதுவாக ஓடுவதற்கு முன்னால் எந்த திசையில், எவ்வளவு தூரம் என்று மனதில் கணக்கு போட்டுகொண்டு செல்வேன். ஆனால் இந்த பதிவு எந்த திசையில் செல்லும், என்ன எழுதுவேன், எத்தனை அத்தியாயம் எழுதுவேன் என்று தெரியவில்லை. இனி என் ஓட்டம், உங்கள் பார்வைக்கு....



அத்தியாயம் ஓன்று - நீச்சல்

படிப்பு மட்டும் தான் முக்கியம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகள் எல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் என்று சொல்லாமல் சொல்லும் நடுத்தர வர்க்க குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்கு தெரிந்து எண்பதுகளில், நம்ம ஊரில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இருந்தது இல்லை. (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா ?).  அதுவும் நடுத்தர வர்கத்தில் உள்ள ஒருத்தன் சுமாரா படிச்சிட்டு, கிரிக்கெட் மட்டும் விளையாடுறேன்னு சொன்னா வீடு கூட்டும் தொ. கட்டையை எடுத்து அடிக்க வருவாங்க. மற்றபடி ஓட்டப்பந்தயம், கால்பந்து, நீச்சல் போன்றவைகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இங்கு அமெரிக்காவில் குழந்தைக்கு நடை பழக கற்றுகொடுப்பது போல சர்வ சாதாரணமாக நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஸ்விம்மிங் கற்று கொடுக்கிறார்கள். என் எட்டு வயது இளைய மகள், டைவிங் போர்டில் இருந்து குதித்து பதிமூன்று அடி ஆழத்தில் உள்ளே சென்று வெளியே வருவதை மகா ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு நிற்பேன். நமக்கு தெரிந்தது எல்லாம் கடப்பாரை நீச்சல் தான். கடப்பாரையை தண்ணீரில் போட்டால் கொஞ்ச தூரம் சென்று எப்படி நிற்குமோ அப்படி கொஞ்ச தூரம் நீந்தி பின் நின்று விடுவேன். என் உயரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு முடிந்த அளவு செல்ல மாட்டேன். அதுவும் சிறிய வயதில் நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்டதால் தான் சாத்தியமாகியது. சிறு வயதில் ஒரு முறை, சென்னை நந்தனம் அருகே இருக்கும் YMCA வில் உள்ள ஸ்விம்மிங் பூல் செல்லலாம் என்று கூறியதற்கு, சாராமாரியாக பலரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது. அப்படியும் திருட்டுதனமாக நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்று நீந்துவது ஒரு சுகமானா அனுபவம். அப்போது அங்கே அனுமதி கட்டணம், ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ என்று நினைக்கிறேன். ஸ்விம்மிங் பூல் உள்ளே சர்வ சாதாரணமாக நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும் மோதிக்கொண்டும் நீச்சல் அடிப்போம்.  சென்னை , சைதாபேட்டையில் இருந்து டீச்சர்ஸ் காலேஜ், தாடண்டர் நகர் வழியாக (சில நேரங்களில் B கிரௌண்ட் வழியாக) YMCA -விற்கு  நடந்தே அங்கு செல்வோம். அப்போது அங்கு நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். ஒரு முறை கமல் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படம் பெயர் வெற்றிவிழாவா அல்லது சூரசம்ஹாரமா என்று சரியாக நினைவில்லை. அநேகமாக வெற்றிவிழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். கமலை மிக அருகில் பார்த்த நானும் என் நண்பர்களும் ரொம்ப குஷியாகிவிட்டோம். ஆனால் கிட்டே போய் பேச பயம். அப்போது கமல் வேறு பயங்கரமா எக்சர்சைஸ் பண்ணி ஆர்ம்ஸ் ரெண்டையும், எங்களில் பலருக்கு அப்போதிருந்த தொடை சைஸ் -க்கு வைத்திருந்தார். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோகிராப் வாங்கலாம் என்று நினைக்கும் போது, கையில் பேப்பர் பேனா எதுவும் இல்லை. ஆமா ஸ்சூலுக்கு படிக்க போகும்போதே பேப்பர் பேனா கொண்டு போகாதவனுங்க, ஸ்விம்மிங் பூல் போகும் போதா கொண்டு போவோம். அப்படி இப்படி என்று பேப்பர், பேனா எல்லாம் யார்கிட்டயோ தேத்தி, கமல் கிட்டே போநூறு கலாம்னு பார்த்தா, அவர் ஒரு வேனில் உட்கார்ந்து சுவாரசியமாக பூரி மசாலை உள்ளே தள்ளிகொண்டிருந்தார். சரி, அவரை ப்ரீயா விட்டுரலாம்னு எங்களுக்குள்ளேயே பெருந்தன்மையா முடிவெடுத்து, அருகில் வெண்ணிற ஆடை மூர்த்தியை வைத்து படமாக்கிக் கொண்டிருந்த ஒரு உப்பு சப்பு இல்லாத காட்சியை பார்த்துவிட்டு நகர்ந்தோம். 

இப்படி அப்பப்ப போய் நீச்சல் கத்துகிட்டு வந்தோம். ஆனால் அதற்கும் சில நாட்களில் வேட்டு வந்துவிட்டது. ஒரு நாள் நீச்சல் அடிச்சிட்டு திரும்பி வரும் போது வழக்கமா தண்ணீர் குடிக்கும் குழாயில் தண்ணீர் குடித்து பின்னர் அருகில் இருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, செந்தில்னு ஒருத்தன் ரஜினி மாதிரி இந்த விழுதுலே தொங்கி ஆடலாமனு கேட்டான் (பத்தவெச்சுட்டியே பரட்டை!). அப்போ வேற டிவியில் அடிக்கடி போடுற 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினி ஒரு பாட்டில் கௌபாய் மாதிரி உடையில் ஆலமரத்துக்கு கீழே குதிரையில் வந்துட்டே இருப்பார். குதிரையில் வேகமாக வரும்போதே அப்படியே தாவி ஆலமர விழுதை பிடிப்பார். குதிரை பாட்டுக்கு முன்னாடி போயிரும். ரஜினியோ அப்பிடியே கொஞ்ச தூரம் தொங்கியபடி முன்னாடி போய் நேரா குதிரை மேலே உட்காருவார். எப்டி போறான் பார்றா என்று நாங்கள் நண்பர்கள் சிலாகிதுக்கொள்வோம். ரஜினி கமலுக்கு எல்லாம் அவர் இவர் என்று மரியாதை கொடுத்து நாங்கள் தள்ளி வைத்ததில்லை. எம்ஜியார் சிவாஜி என்றால் மரியாதை கொடுத்து பேசுவோம். இந்தப் பய ஆலமர விழுதிலே ஆடலாம்னு சொன்னதும் எனக்கு அந்தக் காட்சி நியாபகம் வந்தது. உடனே நான் முதல்லே பண்றேன்னு ஒரு நான்கடி உயர சிறிய சுவற்றின் மேல் இருந்து குதித்து ஆலமர விழுதை பிடித்து ஆட நினைத்தேன். அதையெல்லாம் விட ரிஸ்கான கில்லி தாண்டு, பம்பரம், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆடும் எங்களுக்கு அது ஒரு ஜுஜுபி -யாக அந்த நேரத்தில் தோன்றியது.  சரி என்று முதல் ஆளாக சுவற்றில் ஏறினேன், தாவி விழுதை பிடித்தேன். நான்கைந்து முறை விழுதில் ஆடிவிட்டு கீழே குதித்து நின்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்...

ஓட்டம் தொடரும்...




Saturday, November 5, 2011

மனிதம் தொலையவில்லை


உங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்.  நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ,  புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

நாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.

முதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே  தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது.  அதே போல, எந்த நிறுவனமும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது.  ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.

Wednesday, October 26, 2011

தீபாவளி - சைதாபேட்டை நினைவுகள்





அனைவருக்கும், என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பல வருடங்களாக மனதில் நான் மெல்ல ஆசைப் போட்டுகொண்டிருந்ததை இன்று எழுத்தில் கூற முயற்சிக்கிறேன். இவை அத்தனையும் இனிமையான நினைவுகள் அல்ல, என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, நினைவில் பதிந்து என்னை விட்டு விலகாத நிகழ்வுகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இதோ என் தீபாவளி நினைவுகள்....

எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று சாதரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் வயிற்று போக்கிற்கு அரசு மருத்துமனையில் சேர்த்த என் தந்தை இளவயதிலேயே காலமாகிவிட்டார். விவரம் புரியாத வயதில், நான் முதன் முதலில்  பார்த்த உயிர் இழப்பு அது.  வீட்டில் தந்தையின் சடலம் கிடத்தப்பட்டு சுற்றி அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அவ்வபோது எல்லோரும் அழுவதைப் பார்த்து நானும் புரியாமல் அழுதேன். அழாதேடா, அப்பா எங்கேயும் போகலே, இன்னும் கொஞ்ச நாளில் வந்திடுவாரு என்று என்னை சமாதனப்படுத்த யாரோ கூறிய பொய்யை நம்பி என் அம்மாவிடம் சென்று அழாதேம்மா என்று கண்ணை துடைத்துவிட்டேன். ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகளுடன் வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படி விளையாடி கீழே விழுந்து மண்டையை வேறு உடைத்துகொண்டேன். என்னைத் தூக்கி கொண்டு டாக்டரிடம் ஓடியது ஒரு கூட்டம். தந்தையின் இழப்பின் வலி அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்காத போதும், இன்று வரை அந்த நினைவு என்னை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. தந்தையின் முகம் என்றாலே அன்று உயிரற்ற சடலமாகப் பார்த்தது தான் என் நினைவில் உள்ளது. அந்த வகையில் நான் கொஞ்சம் பரவாயில்லை. என்னை விட இரண்டு வயது இளையவனான என் சகோதரனுக்கு தந்தையின் முகம் என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது. தந்தை காலமாவதற்கு சில மாதங்கள் முன்பு தான் பல்லாவரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தோம். பல இடங்களில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டில் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் சுற்றி இருந்த உறவுகள் ஒவ்வொருவராக சென்றனர். தந்தையின் நினைவுகள் மற்றும் கடன் தொல்லையினால் அங்கு இருக்க முடியாமல், அதற்கு முன்பு இருந்த சைதாபேட்டையில் வாடகை வீடு பார்த்துக் குடியேறினோம்.

அங்கு குடியேறிய சில நாட்களில் தீபாவளி திருநாள் வந்தது. தந்தை இல்லாத முதல் தீபாவளி, அம்மா ஒருபுறம் அழுது கொண்டிருக்க, என் மனமோ புதுத்துணி, பட்டாசு என்று அலை பாய்ந்துகொண்டிருந்தது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது நாங்கள் சுற்றி யாரும் இல்லாமல் தனித்தீவில் விடப்பட்டது போல இருந்தது. அப்பொழுது தான் தந்தையில் இழப்பு லேசாகப் புரிந்தது. அது சுயநலம் தான், மறுக்கவில்லை. ஆனால் அந்த சுயநலம் தான், அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றியது. வீட்டில் ஒரு ஓரத்தில் அழுது கொண்டே முடங்கிக் கிடந்த நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவை திறக்க சென்ற அம்மாவின் பின்னல் நானும் ஓடினேன். கதவைத் திறந்ததும் அங்கு ஒருவர் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கௌரி பார்மசிலே இருந்து சேட் குடுத்து அனுப்பி இருகாரும்மா, ஸ்வீட், பசங்களுக்கு துணி, பட்டாசு எல்லாம் இருக்கு என்று அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார். அம்மாவிற்கு கண்ணில் கண்ணீர், எனக்கோ மனதில் மகிழ்ச்சி. அவசரமாக பெட்டியை திறந்து பார்த்து பூரித்தேன். வித விதமான பட்டாசுகள், ஸ்வீட் மற்றும் புதுத்துணி.  எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன்.  இத்தனையும் கொடுத்து அனுப்பிய, கௌரி பார்மசி சேட் வேறு யாரும் இல்லை, என் தந்தையின் நெருங்கிய நண்பர். மார்வாடி இனத்தை சேர்ந்த சேட் கண்டிப்பாக திருக்குறள் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பறிந்து காலத்தினால் செய்த உதவி அது. அன்று அந்த தீபாவளியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகு வசதியும் வாய்ப்பும் பெருக, எத்தனையோ தீபாவளி சிறப்பாக கொண்டாடினாலும், அவை எதுவும் என் நினைவில் அந்த அளவு நிற்கவில்லை. அந்த ஒரு துயரமான நேரத்தில் கிடைத்தப் புது துணிக்கும், பட்டாசுக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நினைக்கும் போது இப்போது சற்று வெட்கமாக இருந்தாலும், அந்த நிகழ்வை எங்காவது பதிய வேண்டும் என்று பல வருடங்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்ததின் விளைவே இந்த பதிவு. 


Tuesday, August 9, 2011

இந்திய பயணம், பாரிஸ் மற்றும் பதிவு எழுதுவது


ஒரு வழியா இந்திய பயணத்தை முடிச்சிட்டு, அமெரிக்க வாழ்க்கையிலே ஓடுறதுக்கு திரும்பி வந்தாச்சு. ஏர்போர்டுக்கு வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் கண்கள் கலங்கி சிவந்து இருந்ததை கண்டு, நாங்களும் கலங்கி போய் கனத்த மனதுடன் தான் விடைகொடுத்தோம். இது போன்ற நேரங்களில் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன சொல்ல இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை தவிர...சரி சொல்ல வந்ததை விட்டுவிட்டு, இப்படி சீரியஸ் ட்ராக்குக்கு போகலே. இந்தியா வரும் வழியில் பாரிஸ் ட்ரான்சிட்-ல்  சுமார் பதினோரு மணிநேர டைம் இருந்ததால், ரொம்ப நாள் பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்த ஈபில் டவர் போய் பாத்துட்டு வந்தோம். பாரிஸில் அன்று அவ்வபோது மழை பெய்தது, ஆனாலும் ரெயின் கோட் வாங்கி அணிந்து கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம். பாரிஸில் ஈபில் டவர் தவிர இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்குனு உள்ளே போய் பாத்தாதான் தெரியுது. எல்லாம் அவ்வளவு அழகு. ஊருக்கு போனதும், ஒழுங்கா பிரெஞ்சு வரலாற்றை பற்றி படிக்கணும்னு நினைச்சுகிட்டேன். எதாவது நல்ல புத்தகம் தெரிந்தால் சொல்லுங்க.

பாரிஸ் போயிட்டு வர விசயத்திலே, முதல்லே ஏர்போர்ட் விட்டு வெளிலே போய்ட்டு திரும்பி நேரத்துலே வந்து பிளைட் பிடிக்க முடியுமான்னு ஒரே குழப்பமா இருந்தது. சரி இருக்கவே இருக்கு நம்ம ப்ளாக் சைட், அதுலே ஒரு பதிவு போட்டு கேட்டு பார்ப்போம். நம்மை பதிவையும் மதிச்சு படிக்க வருபவர்களில், யாரவது ஒருத்தர் பாரிஸ்லே இருந்து பதில் சொல்ல மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்க, யாரோ ஒருத்தர் பேர் சொல்லாம அனானி முகவரிலே இருந்து பதில் போட்டு இருந்தாரு. பாரிஸ் பற்றி விவரங்கள் அளித்த அந்த அன்பருக்கு என் நன்றிகள், நீங்க இந்த பதிவை படித்தீர்கள் என்றால் உங்கள் பெயரை குறிப்பிட  வேண்டுகிறேன். நம்ம ப்ளாக் எழுதறதுல எப்படி எல்லாம் உதவி கிடைக்குது பாத்தியா என்று தங்கமணியிடம் சொல்லி ரெண்டு நாள் சிலாகித்துகொண்டிருந்தேன். ஆமாம் கூகிள்லே போட்டா பதில் வந்து தானா விழுது, இதுக்கு போய் அந்த கம்ப்யுட்டரை முறைச்சு முறைச்சு பாத்துகிட்டு ப்ளாக் எழுதறது தேவையா என்று ஒரு முனுமுனுப்பு கேட்டது. ப்ளாக் எழுதுவதில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை இருக்குனு தெரியலே, நான் எப்போ ப்ளாக் எழுத உக்காந்தாலும் உடனே இதை பண்ணலியா அதை பண்ணலியா என்று வீட்டுலே இருக்கிற நண்டு சிண்டுங்க கூட வந்து வேறே எதாவது வேலை தருவாங்க. எனக்கெல்லாம் எழுத தோணுவதே பெரிய விஷயம், அதை எழுத ட்ரை பண்ணும் போது அதுக்கு வர தடைகள் இருக்குதே, எப்பா சொல்லி மாளாது. அதுலே தங்கமணி சொல்ற இன்னொரு விஷயம், 'நீங்க எழுதும் போது நீங்க ரொம்ப டென்சனா இருக்குற மாதிரி இருக்கு, எதுக்கு அப்பிடி டென்சனா எழுதணும்' என்று அக்கறையா கேக்குற கேள்விக்கெல்லாம் என்னத்தை பதில் சொல்றது. ஏதோ நான் எதையாவது எழுதி/கிறுக்கி முடித்தால் ஒரு வித திருப்தி கிடைகிறது. அதைவிட திருப்தி அதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது கிடைகிறது. அதனால் முடிந்த வரை நேரத்தை ஒதுக்கி மனதிற்கு தோன்றியதை எழுதுகிறேன். சரி இப்படி நான் பதிவு எழுதும் கதையை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். நான் சொல்லவந்ததை விட்டு விட்டு திரும்பவும் ரூட் மாறுகிறேன். என்ன சொல்லவந்தேன் ? ஆங்...இந்திய பயணம் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பொதுவாக நன்றாக கழிந்தது. எப்போதும் போல பயண நினைவுகளை அசை போட்டுகொண்டு அடுத்து முறை செல்வதற்காக காத்திருப்பு தொடர்கிறது. இங்கே சாம்பிளுக்கு ஒரு ஈபில் டவர் படம், மற்ற படங்களை தனியாக இன்னொரு பதிவில் போடுகிறேன்.



மேகமூட்டமான வானிலையில் ஈபில் டவர்



Friday, August 5, 2011

சைதாபேட்டை நினைவுகள்




என் பின்னால் சுமார் பத்து பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே ஒடி வந்துகொண்டிருந்தது. டேய் புடிரா, விட்டுற கூடாது...என்று ஆக்ரோஷமான குரல்கள் கேட்டது. எனக்கு எப்படி ஒரு வேகம் வந்ததோ தெரியவில்லை எல்லோருக்கும் முன்னே ஒடிகொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஓடும்போதும் என் கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. எனக்கும் என்னை பின்தொடர்ந்த கூட்டத்திற்கும் குறைந்தது பத்தடி தொலைவு இருக்குமாறு பார்துகொண்டேன். மூச்சிரைத்தது, போதும் ஓட்டத்தை விட்டுறலாமா என்று தோன்றியது. வேண்டாம், இப்போ விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. மனதிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகத்தை கூட்டினேன். இன்னும் சிறிது தூரம் தான் என்று எனக்குள் கூறிக்கொண்டு வானத்தை பார்த்தபடி ஓடினேன். இந்த மாதிரி ஒடிகொண்டிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், என்னை ஒரு வழி ஆகிவிடுவாள். ஆனாலும் ஆசை யாரை விட்டது, இப்போது என் நோக்கம் எல்லாம் வேகமாக ஓடுவதுதான். இதோ என் இலக்கை நெருங்கி விட்டேன். சற்றே வேகத்தை கூட்டி இரண்டடி தாவி டீலில் அறுந்து வந்த, அந்த 1 சீட் (sheet) ரெட்டை கண் பானா காத்தாடியை பிடித்தேன். 


பின் குறிப்பு: சென்னை, சைதாபேட்டையில் வளர்ந்த நான், சிறுவயது நினைவுகளை அவ்வபோது எடுத்துவிட நினைத்ததின் விளைவே இந்த மைக்ரோ சிறுகதை.

Tuesday, August 2, 2011

சென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்

நீங்கள் எப்போதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு பிரபல ஜவுளி கடைக்குள் சென்றுவிட்டு எதுவும் வாங்காமல் வெளியே வந்து இருகிறீர்களா. உள்ளே செல்லும் போது நம்மை வணக்கம் போட்டு வரவேற்பவர்கள், எதுவும் வாங்காமல் வெளியே வரும்போது - என்ன சார் எதுவும் வாங்கலியா, ஏன் எதற்கு என்று கேட்டு ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு முறை குடும்பத்துடன் சென்னை சில்க்ஸ் (சென்னையில்) கடைக்குள் சென்று பின்னர் நான் மட்டும் வெளியே வந்த போது அங்கு வாசலில் நிற்கும் சிப்பந்திகள் என்னை சுலபத்தில் விடவில்லை. அவர்களிடம் விளக்கம் கூறி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. இது நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கே - என்னடா இது கடைக்குள்ளே போயிட்டு ஒன்னும் வாங்காம வர விடமாட்டாங்க போல இருக்கே என்று எரிச்சல் பட்டவன் நான். இந்த முறை இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த கதையை கேளுங்கள்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடைக்கு மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். எங்கள் காரை ஒட்டி வந்த டிரைவரிடம், கடைக்கு கீழே உள்ளே பார்கிங் பகுதியில் பார்க் செய்துவிட்டு காத்திருக்குமாறு கூறிவிட்டு கடைக்குள் சென்றோம். உள்ளே சென்று நாங்கள் வாங்க விரும்பிய ஆடையை தேடி பார்த்தோம், எதுவும் சரியாக இல்லை. யாரவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்தோம். ஓரிருமுறை கேட்டும், அந்த பக்கம் யாரும் வரவில்லை. எங்களுக்கும் நேரம் இல்லாததால் சரி, இன்னொரு நாள் வந்து பாத்துக்கலாம், மத்த பொருள் எல்லாம் போய் வாங்கிட்டு வரலாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினோம். சென்ற முறை சென்னையில் ஏற்பட்டது போல, வெளியே செல்லும் போது யாரும் எங்களை கேள்வி கேட்கவில்லை. பரவால்லியே, இப்போ கொஞ்சம் மாறி இருக்கே நம்ம ஊரு என்று பெருமையுடன் கூறினேன். அதன் பிறகு, அருகில் மற்ற கடைகளுக்கு சென்றுவிட்டு சுமார் அரை மணிநேரம் கழித்து சென்னை சில்க்ஸ் வாசலுக்கு திரும்பினோம். ட்ரைவரை செல்போனில் அழைத்து கடை வாசலுக்கு வருமாறு கூறிவிட்டு காத்திருந்தோம். சில நிமிடங்களில் கார் வந்து நிற்க நாங்கள் உள்ளே உட்கார முற்படும் போது, அங்கு வேலை செய்யும் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்தார். அதுக்கு அப்புறம் எங்களுக்குள் நடந்த சம்பாஷணையை கீழே பாருங்கள்.

கொஞ்சம் நில்லுங்க, பர்சேஸ் ப்ரூப் எங்கே காட்டுங்க என்று சற்று அதிகாரமான குரலில் கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், சார், நாங்க வாங்கனும்னு நினைச்சு வந்த டிரஸ் கிடைக்கலே, தவிரவும் எங்களுக்கு கடையிலே உதவவும் யாரும் வரலே. அதனாலே வெளிலே வந்து வேறே பொருட்கள் வாங்கிட்டு கிளம்புறோம். பார்கிங் சார்ஜ் எதாவது வேணும்னா கூட குடுக்குறோம்னு பொறுமையா சொன்னேன்.

அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.

இது சுரீர் என்று எனக்கு கோபத்தை கூடிவிட்டது. என்னங்க இது அநியாயம், உங்க கடைக்கு ஒரு பொருள் வாங்கனும்னு வரோம், அது புடிக்கலேனா என்ன பண்றது. கார் பார்க் பண்ணினதுக்காக எதாவது வாங்கியே ஆகணுமா என்ன ?

ஆமாம் நீங்க கண்டிப்பா எதாவது வாங்கியே ஆகணும்.

சரி, நான் உங்கள் மேனேஜர் கூட பேசணும் என்றேன்.

இங்கே நான் தான் மேனேஜர், எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க.

ஒ, அப்படியா, இந்தாங்க நூறு ரூபா, இதை பார்கிங் சார்ஜா வேணும்னா வெச்சுகோங்க, இல்லேனா எதாவது பொருள் வாங்கினதா நினைச்சுங்கோங்க. பேமிலி கூட வந்து இருக்கேன், இப்படி நடு ரோட்டுலே வெச்சு பேச்சை வளர்க்க நான் விரும்பலே.

அதெல்லாம் முடியாது, நீங்க கடைக்குள்ளே வந்து எதாவது வாங்கியே ஆகணும்.

எனக்கு உஷ்ணம் கூடிவிட்டது. இங்கே பாருங்க, இந்த மாதிரி என்னை ஏதாவது வாங்கறதுக்கு கட்டாயபடுத்தினா, இனிமேல் இந்த கடைக்கு நான் வரமாட்டேன். அது உங்களுக்கு ஓகேன்னு நினைசீங்கனா நான் கடைக்குள்ளே வந்து எதாவது வாங்குறேன் என்றேன்.

சரி, நீங்க இனிமேல் கடைக்கு வரவேண்டாம், இப்போ உள்ளே வந்து எதாவது வாங்குங்க.

நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து  கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.

பின் குறிப்பு: இது பற்றி சென்னை சில்க்ஸ் வெப்சைட்டில் உள்ள எல்லா ஈமெயில் முகவரிக்கும் எழுதி சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...