Sunday, March 11, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு புரிந்த ஐந்து விஷயங்கள்




சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் எழுதி இருந்த 'அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்' என்று ஒரு பதிவைப் படித்தேன். சரி அவருக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பது அவரது உரிமை. சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமலிடம் ரசிகர் ஒருவர் மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரடி போட்டியின் போது கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

சார், ஹேராம் படத்திலே கடைசி சில காட்சிகளில் எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு பக்கம் நெருப்பு எரியும் போது அதை மட்டும் கலரில் காட்டி இருப்பீர்கள். அது ஏன் என்று புரியவில்லை.

அதற்கு கமல் - நீங்கள் பிடிக்கலை என்று சொல்லாமல் புரியலை என்று சொல்லியதே நீங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ளத் தயாராக இருக்குறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. என்னுடைய சமூகக் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தன்னுள் கனன்று கொண்டுருந்த கோபத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு காட்டினேன் என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதை விட அவர் ஏன் அதை செய்கிறார் என்று அறிந்து கொண்டால் நம் அறிவும் வளரும் அந்த உறவில் சிக்கல் ஏற்பாடாமலும் இருக்கும். இது போல தனிப்பட்ட பதிவைப் பற்றி என் கருத்துக்களை நான் இதுவரை நேரடியாக எழுதியதில்லை. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது. அந்த பதிவரின் கருத்துக்களை // அடைப்பிற்குள்ளும், என் புரிதலை அதற்கு கீழேயும் கொடுத்திருக்கிறேன்.


//# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.//

இதில் எதுவும் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் குளிர் வாட்டும். அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் பள்ளிகளிலேயே முதலில் எப்படி மூக்கை சுத்தமாக சிந்தி அந்த நாப்கின்னை பத்திரமாக குப்பை தொட்டியில் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதலில் படிப்பை விட அவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொல்லிக் கொடுகிறார்கள். உதாரணதிற்கு எப்படி நன்றி சொல்வது, குளிருக்கு அணியும் கோட்டை எப்படி பத்திரமாக மாட்டுவது, ஒருவர் உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொது இடங்களில் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். நம்ம ஊரில் சாப்பிட்டுவிட்டு எல்லோர் முன்னிலையிலும் பெரிதாக ஏப்பம் விடுவதைப் போல் அமெரிக்கர்கள் செய்வதில்லை. அப்படியே மீறி ஏப்பம் வந்தாலும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்கள். பொது இடங்களில் லஜ்ஜை இல்லாமல் சிறுநீர் கழிப்பதில்லை. நீங்களே யோசித்து பாருங்கள், சளி வந்தால் போகிற போக்கில் சாலையில் துப்புவதை விட, எந்த இடம் என்றாலும் நாப்கினை உபயோகித்து சிந்தி அதைக் குப்பைத் தொட்டியில் போடுவது மேல் இல்லையா.

//# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.//

ஐயா ஓரிரு மாதத்திற்கு பின் அல்ல, குழந்தை பிறந்ததில் இருந்தே தனியாகத் தான் படுக்க வைப்பார்கள். இதற்கு காரணம் குழந்தையின் மீது உள்ள அக்கறையால் தான். குழந்தையை கூடப் படுக்க வைப்பதால் போர்வை மூடியோ அல்லது தலையணை மூடியோ மூச்சுத் திணறி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம ஊரில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லையா, அது போல் தான் இங்கு தனியாக கிரிபில் படுக்க வைப்பது. குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் அதற்கு பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவர்களும் இதையே பரிந்துறைக்கிறார்கள். இதை போய் ஐந்தறிவு ஆறறிவு பாசம் போன்றவற்றை சொல்லி குழப்பிக் கொள்ளகூடாது. குழந்தைகளைத் தனியாகப் படுக்கவைப்பதால் அவரகளுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

//# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//

பணம் இல்லாதாதால் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்ற நிலை எனக்குத் தெரிந்து எந்த அமெரிக்க குடிமகனுக்கும் வந்ததாக தெரியவில்லை. ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கும் என்றில்லை, அது இல்லாதவர்களுக்கும் பல இலவச முகாம்கள் இருக்கின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மேலும் இது விவாதத்திற்குரிய தலைப்பு.

//# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).//

எல்லா ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்கையை வைத்து கணக்குப் போடக் கூடாது. அமெரிக்காவில் உள்ள எலும்பைத் துளைக்கும் குளிரில் ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றினால் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து ஜன்னி வந்துவிடும் ஐயா. மேலும் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டியிருப்பார்கள். அதனால் நம்ம ஊரைப் போல் பாத்ரூமில் தண்ணீரை எல்லாம் ஊற்ற முடியாது. அப்படி ஊற்றினால் கிழே உள்ள தளத்தில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் உபயோகித்து நேரடியாக கழிவுகளைத் தொடாமல் பேப்பரை உபயோகித்து பின்னர் சோப்பு போட்டு கை கழுவுவதால் அதனால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பும் குறைவு.


//# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.//

அவர்களைப் பொறுத்தவரை தான் சரி என்று நினைப்பதை யோசிக்காமல் செய்வார்கள். ஐயோ நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. என்னதான் நினைத்த நேரம் விவாகரத்து செய்து கொண்டாலும், திருமண வாழ்க்கையில் கணவனோ மனைவியோ வேறொரு நபரிடம் உறவு வைத்துக்கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள். கணவனோ மனைவியோ நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே அடுத்த பெண்ணுடனோ, ஆடவனுடனோ உறவு வைத்துக் கொள்வதை விட பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு போவது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் இருதார மனம் எல்லாம் சட்டப்படி குற்றம். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருப்பதில்லை, அதனால் விவாகரத்து பெருகுகிறது. இப்போது இந்தியாவிலும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. அந்தக் காலத்தைப் போல கணவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலை இப்போது இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்.


Saturday, March 10, 2012

ஏன் சார் எழுதறதே இல்லை - 55 வார்த்தை சிறுகதை



என்ன சார், ரொம்ப நாளா புதுசா எதுவும் எழுதலே போல இருக்கு, என்ன ஆச்சு என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

அட நம்ப எழுதலேன்னு, இதே கேள்வியை நிறைய பேரு கேக்குறாங்களே என்கிற ஆச்சர்யம் தான்.

எங்கே சார், ஆபீஸ் வேலை ஏற்கனவே அதிகம், இப்போ ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதனாலே வேலை இன்னும் அதிகம். கண்டிப்பா எழுதுறேன்.

வீட்டிற்க்கு  வந்ததும்...எவன் கண்ணு பட்டுதோ ரெண்டு மாசமா எழுத முடியவில்லை என்று நினைத்தபடி தலைப்பை எழுதினேன் - தேவையற்ற  மூடநம்பிக்கைகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...