Saturday, January 29, 2011

கூட்டாஞ்சோறு - தைப்பொங்கல் திருவிழா - கனெக்டிகட் தமிழ் சங்கம்

சில விஷயங்களை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கை பரபரக்கும் போது, ஹா...அதுலே என்னத்த பெருசா எழுத முடியும், ஒரு நாலஞ்சு வரிக்கு மேலே எழுத முடியாதே என்று நான் தயங்கும் சில சின்ன சின்ன விஷயங்களை பற்றி எழுதவே இந்த கூட்டாஞ்சோறு என்கிற பகுதி...இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...

தைப்பொங்கல் திருவிழா - கனெக்டிகட் தமிழ் சங்கம்
-----------------------------------------------------------------
கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் சென்ற வாரம் சனிக்கிழமை மாலையில் தைப்பொங்கல் திருவிழா கொண்டாடினார்கள். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் என குழந்தைகள் மேடையில் பாடியது மிகவும் நன்றாக இருந்தது. அதை தொடர்ந்து ரவி பாலசுப்ரமணியத்தின் கடதரங்கம் என்ற புதுமையான இசை நிகழ்ச்சி நடந்தது. எட்டு கடங்கள் வைத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தில் இருக்குமாறு வைத்திருந்தார். உடன் தபலாவும் வயலினும் வாசித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த இசை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. அதை தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளைக்கு பின்னர், சவாலை சமாளி என்ற புதுமையான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடந்தது. பாட்டுக்கு பாட்டு என்றதும், சன் டிவியில் அப்துல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சி போல, இலக்கம் ஐந்தின் கீழ் ஏழு, பெருமாள் கோயில் தெரு, சென்னை ஆறுலட்சத்து பதினைந்தில் இருந்து வந்திருக்கும் இவர் தன் விருப்ப பாடலை பாடுவார் என்றும் அதை தொடர்ந்து, அ குறில் அல்ல ஆ நெடில் என்று எழுத்தை சொல்லி பாட சொல்வார்கள் போல என்று நினைத்தேன்.

அந்த நிகழ்ச்சி பற்றி என்ன என்று எனக்கு முதலில் சரிவர தெரியாவிட்டாலும், எதோ பாட்டு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி கண்டிப்பாக கலந்துகொண்டே ஆக வேண்டும் என்று எனக்குள்ளே இருக்கும் பாடகன்! கட்டளை போட்டுவிட்டான். வீட்டிலும் அனைவரும் கண்டிப்பா கலந்துக்கணும் என்று வற்புறுத்தியதால்! நான் சரி என்றேன். சரி எதோ பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்பதால் ப -வில் தொடங்கும் பாடல், அ -வில் தொடங்கும் பாடல் என்று கண்ணில் படுபவர்களை எல்லாம் கேட்க சொல்லி, பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்திருந்தேன். கடதரங்கம் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிறிய இடைவேளைக்கு பின்னர் சவாலை சமாளி நிகழ்ச்சி தொடங்கும் என்றும், பங்கேற்பதற்கு பெயர் கொடுத்தவர்கள் மேடைக்கு பின்னே உடனே வருமாறு அறிவித்தனர். நான் பெயர் ஏற்கனவே கொடுக்காவிட்டாலும் சரி சென்று பார்க்கலாம், கலந்து கொள்ள முடிந்தால் கலந்துகொள்ளலாம் என்று நினைத்துகொண்டு மேடையின் பின்புறம் சென்று பார்த்தேன். அங்கே போனவுடன்தான் தெரிந்தது, அது வினாடி வினா போன்ற நிகழ்ச்சி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் பாடி காட்டலாம். இப்படி வினாடி வினா என்று தெரிந்ததும் லேசாக உதறல் எடுத்தாலும், சரி ஆனது ஆகட்டும் கலந்துக்கலாம் என்று ஒரு முடிவெடுத்து ஒரு வழியாக மேடை ஏறினேன்.  போட்டி இதுதான்... நான்கு அணிகள், ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர். நான்கு சுற்றுக்கள். ஆ என்று தொடங்கும் பாட்டில் அந்த ஆ -வை மட்டும் ஒலிக்க செய்வார்கள். அதை வைத்து அந்த பாடல் என்ன என்று கண்டு பிடித்து, சில வரிகளை சரியாக பாடி காட்ட வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கு வரும் வாய்ப்பில் பாடலை கண்டுபிடித்தால் பத்து மதிப்பெண், அப்படி அவர்களுக்கு பாட்டு என்ன என்று தெரியாவிட்டால் அந்த கேள்வி அடுத்த அணிக்கு செல்லும், அப்படி அடுத்த அணி அந்த பாட்டை கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஐந்து மதிப்பெண். ஆனால் அடுத்த அணிக்கும் பாட்டு  தெரியாவிட்டால், கேள்வி அதற்கு அடுத்த அணிக்கு செல்லும். இப்படி எந்த அணிக்குமே தெரியாவிட்டால் கேள்வி பார்வையாளர்களிடம் கேட்கப்படும்.

முதல் அணிக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசைஅமைத்த அன்னக்கிளி உன்னை தேடுதே பாடலில் முதலில் வரும் ஆ -வை மட்டும் ஒலிக்க வைத்தனர். கொஞ்சம் சிரமம் தான் என்று நினைத்த அந்த பாடலை மிக எளிதாக முதல் அணியினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அணியில் இருந்து ஒரு பெண்மணி மிக அருமையாக சில வரிகள் பாடினார். அந்த வரிசையில் என்னுடைய அணிக்கு இதயக்கோவில் படத்தில் இருந்து இதயம் ஒரு கோவில் பாடலில் ஆ ஒலிக்க செய்தனர். இதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடறா மாதிரி என்று மைக்கை பிடித்து மோகனின் இதயம் ஒரு கோவில் என்ற பாடலை பாடினேன். (அல்லது சுமாராக கத்தினேன்). பிறகு ஓ என்று தொடங்கும் பாடல் ஒலிக்க செய்து கேள்வி கேட்டனர். பின்னர் பாடலின் நடுவில் இருந்து இசையை ஒலிக்க செய்து என்ன பாடல் என்றும். மற்றொரு சுற்றில் குத்து பாடலில் சில வரிகளை படித்து (கவனிக்கவும் பாடி அல்ல படித்து) காட்டி என்ன பாடல் என்று கேட்டனர். இந்த சுற்றில் தான் ஒரு அணியை தவிர மற்ற அணிகள் கோட்டை விட்டன. அந்த குத்து பாட்டு சுற்றில் முதன்மையாக இருந்த அணியே போட்டியிலும் முதல் பரிசு பெற்றது. இப்படி நிகழ்ச்சி முடிந்ததும் அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.

பனிப்புயல்
-----------------
கனெக்டிகட் பகுதியில் இருக்கும்  பனியை பார்க்கும் போது வெள்ளி பனி மலையின் மீது உலாகுவோம் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஊரை சுற்றி பனி குவிந்து கிடக்கிறது. நேற்று மீண்டும் ஒரு பனி புயல் அடித்து வீட்டை சுற்றி ஏற்கனவே குவிந்திருக்கும் ஐந்தடி பனி குவியலுடன் மேலும் இரண்டடி பனி சேர்ந்தது. இந்த வின்டரில் மட்டும் இதுவரை மொத்தம் எழுபத்தி ஐந்து இஞ்சு (சுமார் ஏழு அடி)  மேலே பனி பொழிந்திருகிறது என்று கூறுகின்றனர்.  இந்த மாதம் மட்டும் சுமார் அறுபது இன்சுகள் பொழிந்திருக்கிறது. இருவழி சாலைகள் எல்லாம் குறுகி ஒற்றையடி பாதை ரேஞ்சுக்கு வந்துவிட்டன. பனியை எங்கே போடுவது என்று தெரியாமல் நிறைய இடங்களில் பனியை ஒரு கருவியை வைத்து சூடாக்கி கரைய வைக்கிறார்கள். இன்னும் ஏப்ரல் மாதம் வரை பனி பொழியும் வாய்ப்பு இருப்பதை நினைத்தாலே சற்று நடுங்குகிறது.





குடியரசு தின நாள்
-----------------------
குடியரசு தினத்தன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழனை போல சுதந்திர நிகழ்சிகளை டிவி சேனல்களில் பார்த்து ரசித்து நேரத்தை ஓட்டினேன். என்ன ஒரே வித்தியாசம், இங்கு விடுமுறை இல்லாததால், மாலை வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே ரிகார்ட் செய்து வைத்த நிகழ்சிகளை வீட்டில் அனைவரும் பார்த்துகொண்டிருந்தோம். ஆடுகளம் படத்தை பற்றி தனுஷ், வெற்றிமாறன் மற்றும் கதாநாயகி Taapsee (இந்த பேரை தமிழில் எழுத முயன்று பின்னர் விட்டுவிட்டேன்) பங்கேற்ற பேட்டி நன்றாக இருந்தது. தனுஷ் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். பொதுவாகவே தனுஷின் டான்ஸ் எனக்கு பிடிக்கும், இதில் ஒத்தை சொல்லாலே பாடலில் லுங்கியுடன் ஆடும் டான்ஸ் சூப்பரா இருந்தது.  இந்த நிகழ்ச்சியில் பார்த்த சில காட்சிகளே படத்தை பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது.


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...