Wednesday, December 7, 2011

கூட்டாஞ்சோறு - Dec 07, 2011

நாட்டு நடப்பு:

அமெரிக்காவில் உயிர் காக்கும் அவசர உதவி தேவை என்றால் 9-1-1 என்ற நம்பருக்கு போன் செய்தால் போதும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை, போலிஸ் என தேவைப்படும் உதவிக்கு ஏற்ப அனைத்தும் சில நிமிடங்களில் வந்து நிற்கும். போன் செய்து பேசவேண்டும் என்று கூட அவசியம் இல்லை, அந்த நம்பரை அழுத்தி விட்டு போனை வைத்து விட்டால் கூட போதும், சில நிமிடங்களில் இவர்கள் வந்து நம் வீட்டு வாசலில் நிற்பார்கள். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி ஒன்றை என்னால் நம்பவே முடியவில்லை. அது டென்நெஸ்ஸே (Tennessee) மாகாணத்தில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போதும் - அந்த வீட்டின் உரியமையாளர்கள் அருகில் இருக்கும் போதே, அங்குள்ள உள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் பார்த்துகொண்டு சும்மா இருந்தார்களாம். ஏனென்றால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு செலுத்த வேண்டிய வருடந்திர கட்டணம் $75 -ஐ செலுத்தவில்லையாம். இதை நம்பவே முடியவில்லை.  அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு தான் உண்மையான விவரம் தெரிந்து இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியை டிவியில் பார்த்தேன். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் திறமை பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். இது போன்ற குழந்தைகள் பங்கேற்று பாட்டு, காமெடி, மிமிக்ரி போன்றவைகளை செய்யும் போது ஒரு பல நேரங்களில் நன்றாக இருந்தாலும், சில சமயம் அவர்களின் வயதிற்கு மீறிய பேச்சு/பாடல் மகா எரிச்சலை ஏற்படுத்துகிறது. திண்டுகல்லு, திண்டுகல்லு பெரிய பூட்டு...என்று தொடங்கும் மோசமான இரட்டை அர்த்தப் பாடலை ஒரு ஏழு வயது குழந்தை பாடுவதைப் பார்த்து எப்படித் தான் அதன் பெற்றோர்கள் வாயெல்லாம் சிரிப்புடன் பூரித்துப் போகிறார்களோ தெரியவில்லை. இது கூட பரவாயில்லை, அதற்கு ஜட்ஜஸ் கொடுக்கும் கமெண்ட், நல்லா பாடி இருக்கே...ஆனாலும், இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி பாடணும் என்பது தான். இந்த மாதிரி பாட்டை எப்படி சின்னக் குழந்தையால் பீல் பண்ணி பாட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்றால், ஓன்று இவர்கள் பாடலின் வரிகளில் எல்லாம் கவனம் செலுத்துவது கிடையாது, இல்லை இதைப் போல பாடல்களைக் கேட்டு கேட்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்பதையே உணர முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பைத் தவிர மற்ற கலைகள் கற்றுத் தேர்வதில் எந்தத் தவறும் இல்லை. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியையும் தோல்வியையும் சந்திப்பதிலும் தவறு இல்லை. ஆனால் பங்கேற்கும் குழந்தைகள் வயதிற்கு ஏற்ப தரமான பாடல்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

அறிவியல் பிட்ஸ்:

நிலவை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:

  • சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் குடும்பம் தோன்றிய காலகட்டத்தில், பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவுள்ள ஒரு பாறை மோதியதால் உருவானது நிலவு.
  • முதலில் தோன்றியபோது நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை விட பல மடங்கு பெரிதாக தோன்றி இருக்கும்.
  • நிலவு வருடந்தோறும் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர்கள் விலகிச்சென்று கொண்டு இருக்கிறது. இது இப்படியே தொடரும் போது, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து முழுவதும் விலகிச் சென்றுவிடும்.
  • நிலவு பூமியை மணிக்கு 3683 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
  • பூமி தன் அச்சில் சுழலும் வேகமும், நிலவு தன் அச்சில் சுழலும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால், பூமியில் இருந்து நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
  • நிலவில் பிரதிபலிக்கும் ஒளி பூமியை வந்தடைய 1.3 வினாடிகள் ஆகும். (சூரிய ஒளி பூமிய வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும்)
  • நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைப் போல 1/6 பங்கு தான். உங்கள் எடை பூமியில் 75 கிலோ என்றால், நிலவில் 12.5 கிலோ மட்டுமே இருக்கும். இந்தக் குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக நிலவில் வலுவான வளிமண்டலம் கிடையாது.
  • பூமியின் மீது உள்ள நிலவின் ஈர்ப்பு விசை, பூமி ஒரே அச்சில் நிலையாக சுழல உதவுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுழலும் அச்சு சுமார் 90 டிகிரி வரை மாறக்கூடும். அப்படி மாறினால் பூமியில் சீதோசன நிலையில் பலத்த மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
  • நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் மட்டுபடுத்தப் படுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமி மேலும் வேகமாகச் சுழலக்கூடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய ஒரு நாள் 6 மணி நேரமே என்ற அளவிற்கு குறைந்துவிடும். அப்படி பூமி வேகமாக சுழலும் பட்சத்தில் நீடித்த வலுவான காற்று, தாவரங்களின் வளர்ச்சி, தூக்கம் போன்ற பல விஷயங்களில் மாறுதல்கள் ஏற்படும்.

சினிப் பட்டறை:


எந்திரன் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கம் நண்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஒரு பாடல் காட்சியில் எந்திரன் ரோபோ கெட்டப்பிலும், இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் தோன்றுகிறாராம். ரஜினி மற்றும் கமலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பாடல் காட்சியில் எடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கிறது. விஜயுடன் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக படத்தில் வேலை செய்தவர்கள் கூறி இருகிறார்களாம். ஒரு சில நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனேவே கேட்ட மாதிரி இருக்கே என்று தோன்ற வைக்கும். இதில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்தது இந்தக் கொலைவெறிப் பாடல். பதினெட்டு லட்சம் ஹிட், அன்பரசன் முதல் அமிதாபச்சன் வரை பாராட்டுகிறார்கள்...ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். அது ஏன் என்று தான் புரியவில்லை. ஒரு பாட்டை ஓன்று அதன் இசைக்காக ரசிக்கலாம் அல்லது பாடல் வரிகளுக்காக ரசிக்கலாம். அது வேகமான இசையோ அல்லது மிதமான மெலடி என்று எதுவானாலும் ரசிக்கலாம். உதாரணத்திற்கு, சிம்புவின் 'எவண்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்தப் பாட்டில் உள்ள இசையின் வேகம் பிடித்திருந்தது. (நான் சிம்புவின் ரசிகன் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயவைத் தவிர சிம்புவின் எந்தப் படத்தையும் நான் ரசித்ததில்லை). அப்படி இசை பெரிதாக பேசும்படி இல்லாவிட்டால் கூட அதன் வரிகளுக்காக ரசிக்கலாம். உதாரணம் 'அவள் அப்படிதான்' படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை' பாடல். இந்தப் பாடலின் வீடியோ இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். ஆனால் இவை இரண்டுமே இல்லாததாக எனக்குத் தோன்றும் கொலைவெறிப் பாட்டை ஊரே ஏன் ரசிக்கிறது என்று புரியவில்லை. இதைதான் ஜெனரேஷன் கேப் என்று கூறுகிறார்களோ என்று தெரியவில்லை. இன்னும் இதே மாதிரி எத்தனை பாட்டு வரப்போகிறதோ. என்னை மாதிரி உங்களில் யாருக்காவது கொலைவெறி பாட்டு பிடிக்காவிட்டால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா,  மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.



கருத்து கந்தசாமி:

நண்பர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள், உங்களைத் தான் அவர்கள் பிரதிபலிப்பார்கள்.

ரசித்த வீடியோ:





2 comments:

Unknown said...

KOLAVERI is liked by many people like me........since it is peppy and catchy.....

Narayanan Narasingam said...

//@Visu said...
KOLAVERI is liked by many people like me........since it is peppy and catchy.....//

கரெக்ட். நிறைய பேருக்கு பிடித்து இ ருக்கு. ஆனா, நிறைய பேருக்கு பிடித்து இருப்பதால் மட்டுமே அது நல்ல படைப்பா இருக்க முடியாது. உலகில்எத்தனையோ கெட்ட விஷயங்களை பலர் விரும்புகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, வரிசையா இங்கிலீஷ் வார்த்தைகளைப் போட்டு, அங்கே அங்கே கொஞ்சம் மியூசிக் போட்டு வந்து இருக்கிற பாட்டு அவ்வளவு தான். இன்னும் சில மாதங்களில் இந்தப் பாட்டை மக்கள் மறந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...