Friday, December 30, 2011

கூட்டாஞ்சோறு - Dec 30, 2011


நாட்டு நடப்பு:

சில நாட்களுக்கு முன்பு நாணயம் விகடனில் 'எகிறும் கைடுலைன் வேல்யூ... சுருளும் ரியல் எஸ்டேட்!'. தமிழகம் முழுவதும் சொத்துக்களுக்கான கைடுலைன் வேல்யூ (அரசு வழிகாட்டி மதிப்பு) கூடிய விரைவில் ஐந்து முதல் பத்து மடங்கு உயரப்போகிறது என்று கூறி இருக்கிறார்கள். இதனால் தாறுமாறாக விலை ஏறி இருக்கும் நில மதிப்பு குறைந்து அதனால் தங்கள் வருமானம் பாதிக்க படுமோ என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் கலங்கிதான் போய் இருக்கிறார்கள்.  அதென்னமோ தெரியவில்லை நம்  மக்களுக்கு நிலத்தின் விலையும், தங்கத்தின் விலையும் குறையவே குறையாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வால் அரசுக்கு கூடுதல் வருமானம், மற்றும் கருப்பு பண பரிமாற்றம் குறைய வாய்ப்பிருகிறது என்றே தோன்றுகிறது. இந்த கைடுலைன் வேல்யூ மாற்றத்தால் நிலம் மற்றும் பிளாட் வாங்கும் விலை குறையுமா, கைடுலைன் வேல்யூ -வை விட குறைவாக பத்திர பதிவு செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அஜய் பிரமல் அவரிடம் உள்ள பணத்தை எப்படி உபயோகிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் இருகிறாராம்.  எந்த ஒரு பெரிய வர்த்தக முதலீட்டிலும் தெளிவான வழிமுறைகள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் அவருடைய ஹெல்த்கேர் நிறுவனத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் சுமார் $3.8 பில்லியன் விற்றிருக்கிறார். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி, அதை 53 -ஆல் பெருக்கி, இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்கு போட்டு பாருங்கள்). அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய ரசாயன தொழிற்சாலை ஒன்றை பெரிது படுத்த விரும்புகிறார். ஆனால் அதை செயல்படுத்த கிட்டதட்ட ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். இதை வேலையை சீனாவில் சுமார் இரண்டாண்டுகளில் செய்து விடலாம் என்று கூறுகிறார். எதுக்கு நம்ம ஊருலே மட்டும் ஐஞ்சு வருஷம் ஆகுது, ஒருவேளை இவர் சிவாஜி தி பாஸ் மாதிரி அந்த ப்ராஜெக்ட் வேல்யுலே ரெண்டு பெர்சென்ட் வளர்ச்சி நிதிக்கு கொடுக்க மாட்டேனு சொல்லி இருப்பாரோ ?


அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு பொருளை வாங்கிவிட்டு (உபயோகப்படுத்தியப் பின் கூட) நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த கடைக்கு சென்று திருப்பி கொடுத்து விடலாம். ஒரு கேள்வியும் கேட்க்காமல், வரிகள் உட்பட மொத்த பணத்தையும் உடனே திருப்பி கொடுத்துவிடுவார்கள்.  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக ஏதாவது பொருளைக் கொடுக்கும் போது, அந்தப் பொருளுக்கான கிப்ட் ரெசிப்ட் ஒன்றையும் கொடுத்துவிடுவார்கள். பரிசைப் பெற்ற நபருக்கு அந்தப் பொருள் பிடிக்கவில்லை என்றால் அதைத் திருப்பி கொடுத்துவிட்டு வேறு பொருளோ அல்லது அதற்கு சமமான தொகையை கிப்ட் கார்டு ஆகவோ வாங்கிகொள்ளலாம். பொதுவாக மக்கள் யாரும் இந்தச் சலுகையை தவறாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.  இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவில் அதிகமான மக்கள் தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை ரிடர்ன் செய்திருகிறார்கள். மந்தமான பொருளாதாரமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.


அறிவியல் பிட்ஸ்: 

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்று உங்களைக் யாரவது கேட்டால், இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நினைத்துகொண்டு 24 மணி நேரம் என்று சொல்வீர்கள் தானே. ஆனால் உண்மையில் பூமி தன் அச்சில் ஒருமுறை சுழல இருபத்தி மூன்று மணி, 56 நிமிடங்கள், 4 வினாடிகள் தான் எடுத்துக் கொள்கிறது. இதை வானவியல் வல்லுனர்கள் 'Sidereal Day' என்கிறார்கள். அப்படி என்றால் மீதி நான்கு நிமிடங்கள் என்ன ஆகிறது என்ற கேள்வி எழும். பூமி தன் அச்சில் சுழலும் அதே நேரத்தில் சுமார் 1° முன்னோக்கி நகர்கிறது. இதை வேறு விதமாக சொல்லவேண்டும் என்றால் சூரியன் 1° பின்னோக்கி நகர்கிறது. சூரியனின் இந்த சிறு நகர்தல் மற்றும் பூமி தன் அச்சில் சுழலும் வேகத்தையும் கூட்டினால் வருவது தான் இருபத்தி நான்கு மணி நேரம். இதை 'Solar Days' என்கிறார்கள்.  இந்த விஷயம் மேலும் சிக்கலானது, இதை எளிமையாக புரிந்திகொள்ள மிகவும் சுருக்கமாக கூறி இருக்கிறேன். 




சினிப் பட்டறை:



ஏழாம் அறிவு படம் பார்த்து, போதி தர்மரை பற்றி தெரிந்ததும் கொஞ்சம் பெருமையாக இருந்தது. இவரை எப்படி வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யாமல் விட்டார்கள். நம்ம கார்டூனிஸ்ட் மதன் கூட 'வந்தார்கள் வென்றார்கள்' போன்ற வரலாற்று புத்தகத்தில் இதை சொல்லாம விட்டுட்டாரே என்று நினைத்துகொண்டேன். அதன் பிறகு இணையத்தில் தேடிப் பார்த்ததில், போதி தர்மர் பாரசீகத்தில் இருந்து வந்தவர், புத்த மதத்தை சார்த்தவர் அல்லது பல்லவ மன்னனாகவும் இருக்கலாம் என்பது விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தவிர அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் கடல் வழியாக சீனாவை அடைந்தார் என்றும் கூறுகிறது. போதி தர்மரைப் பற்றி சரியான விவரம் எது என்று தெரியவில்லை. சரி சினிமாவைப் பொறுத்தவரை உண்மைகள் நிகழ்வுகளை கற்பனை கலந்து மாற்ற ஒரு இயக்குனருக்கு க்ரியேடிவிடி என்ற பேரில் உரிமை இருக்கிறது.  ஆனால் படம் ஆரம்பிக்கும் போது ஊரில் ஒரு தமிழனுக்கும் போதி தர்மனை பற்றி தெரியவில்லை, ஆனால் சீனாக்காரன், ஜப்பான்காரன் எல்லாருக்கும் தெரியுது என்பது போல தன் கோபத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பதிவு செய்திருக்கிறார். முருகதாஸ் அண்ணே, எங்களுக்கு தான் இவ்வளவு நாள் போதி தர்மரைப் பத்தி தெரியாம போச்சு, உங்களுக்குக்கும் இப்போ தானே தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு போதி தர்மரைப் பற்றி எப்படி தெரிந்தது என்பதிலேயே பல சர்ச்சைகள் ஓடிகிட்டு இருக்கு. சரி அப்படியே, உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு தமிழனா இந்தப் படத்தை தானே உங்க முதல் படமா எடுத்திருக்கணும், அதுவும் இல்லாம நீங்க, இந்தப் படத்திலே தெலுங்கிலே போதி தர்மர் குண்டூர்லே பிறந்ததாகவும், ஹிந்திலே தாரவிலே பிறந்தாதகவும் சொல்லி இருக்கீங்கனு கேள்விப்பட்டேன். அவர் தமிழ் நாட்டிலே காஞ்சிபுரத்திலே பிறந்தவர் என்று மற்ற மொழிகளிலும் சொல்லி இருக்கலாமே. என்ன இருந்தாலும் நீங்க உண்மையான தமிழண்ணே, உங்க வியாபாரத்திலே சரியா இருப்பீங்க. கஜினி படத்தின் கதையையே சுயமா யோசிச்சு நீங்களே எழுதுனது போல பேட்டி கொடுத்த ஆளு தானே நீங்க. அதை பார்க்கும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.  சரி படத்தில் எது எப்படி இருந்தாலும் சூரியாவின் உழைப்பிற்கு ஒரு சல்யுட் அடித்தே ஆகவேண்டும்.

ஒருமுறை சுஜாதா அவர்களிடம் வெற்றிப் படத்திற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு அவர், அது ஒரு 'தங்க விதி'. இத்தனை வருடம் சினிமா இன்டஸ்டிரியில் இருக்கிறேன் இன்னும் எனக்கு புரியவில்லை என்றாராம். மக்களிடம் எது வெற்றி பெரும் என்பது யாருக்கும் தெரியாது. கொலைவெறி பாடலும் அதைப் போலதான். இவ்வளவு பெரிய வரவேற்ப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வெற்றியால் தனுஷிற்கு, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருகிறது (ஹ்ம்ம், என்னத்தை சொல்ல) என்பதை பார்க்கும் போது 'தங்க விதி' இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டிருகிறது.

கருத்து கந்தசாமி: 

வார்த்தைகளும் தண்ணீர் போலதான், சுலபமாகக் கொட்டிவிடலாம் திரும்ப அல்ல முடியாது.

ரசித்த வீடியோ:


இதை பலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தினமும் நடக்கும் அணிவகுப்பு. இந்த அணிவகுப்பில் உள்ள ராணுவ வீரர்களை மிகுந்த கவனத்துடன்,  முக அமைப்பு மற்றும்  மீசை போன்றவற்றை பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்களாம். இவர்கள் காலை உயர்த்தி அடிக்கும் வீச்சினால் பிற்காலத்தில் அவர்கள் கால்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால் இப்போது கொஞ்சம் வீச்சின் வேகத்தை குறைத்து இருக்கிறார்களாம்.





2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

53-ஆல் பெருக்கி... வாழ்க வளமுடன். அறிவியல் பிட்ஸ்-simply Superb! தங்க விதி அருமை!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

Narayanan Narasingam said...

//@திண்டுக்கல் தனபாலன் said...//

வாங்க தனபாலன்,

53 என்ன, எத்தனை போட்டு பெருகினாலும், இந்தியாவின் விலைவாசி ஏற்றத்திற்கு முன்னால் இதெல்லாம் சும்மா ஜுஜுபி. அமெரிக்காவில் விலைவாசி ஏறினாலும், ரியல் எஸ்டேட் இப்போது சரிந்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவில் சம்பாரித்து விட்டு இந்தியாவில் வந்து ரிடயர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான். அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கும் பணத்தைக் கொண்டு இந்தியாவில் இப்போது ஒரு டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவதே சிரமம் தான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது தான் நிதர்சனம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...