Saturday, November 5, 2011

மனிதம் தொலையவில்லை


உங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்.  நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ,  புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

நாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.

முதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே  தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது.  அதே போல, எந்த நிறுவனமும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது.  ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.

3 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

nalla sonninga.....Namudya ennagal anaithum seriyanthu alla enbathai ithu pondra neragalil than Nam therinthu kolgirom....

Narayanan Narasingam said...

நாம் பார்க்கும் பார்வையை பொருத்து நம் எண்ணங்கள் சரியாக இருப்பதாகவே தோன்றுகின்றன. நாம் செய்வது எல்லாம் சரி என்று தோன்றுவதற்கும் இதுவே காரணம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விசு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...