Monday, November 4, 2013

அக்கா எங்களையும் போட்டோ எடுக்குறியா

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, ஆடி பெருக்கிற்கு குடும்பத்துடன் பவானி சென்று விட்டு கொடிவேரி அணை செல்லலாம் என்று காலையில் அவரசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவள் அகிலா என்னிடம் வந்து டாடி, இன்னைக்கு நான் போட்டோ எல்லாம் எடுக்கட்டுமா என்று கேட்டாள்.

என்றைக்கும் இல்லாத அதிசயமாக, இது போன்ற கமிட்மெண்டில் எல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாத அகிலா அப்படி கேட்டதும், என் ஆச்சர்யத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று காமிராவை தூக்கி அவள் கையில் ஒப்படைத்தேன்.
அவள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக வந்திருந்தன.  அதுவும் பொதுவாக நாம் சாதரணமாக கொஞ்சம் கூட சட்டை செய்யாத பல விஷயங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. அதில் முக்கியமான ஓன்று கொடிவேரி அணையில் சிறு பொம்மைகள் மற்றும் மருதாணி அச்சு போன்றவற்றை விற்பவர்களை படம் எடுத்தது. முதலில் சிறு பொம்மைகள் விற்கும் ஒரு கடையை புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்துவிட்டு அருகில் இருந்த அச்சுகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு புகைபடம் எடுத்துக் கொண்டிருந்தாள். உடனே அந்தக் கடைகாரர் பாப்பா ஒரு நிமிஷம், நானும் உட்காந்துக்குறேன், என்னையும் போட்டோ எடுக்கமுடியுமா என்று தயங்கிய படி கேட்டார். உடனே அவர் போஸ் கொடுக்க தயாராகிவிட, அவரையும் சேர்த்து அவர் கடையை புகைப்படம் எடுத்தாள். அங்கு அவர்  விளையாடிகொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் இதைப் பார்த்தவுடன் அக்கா, அக்கா எங்களையும் போட்டோ எடுக்கிறியா என்று ஓடி வந்தனர். அவர்களை நிற்க வைத்து எல்லோரும் சிரிங்கனு சொல்லி புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்து காமிராவின் திரையில் அவர்களுக்கு காட்டியதும், அவர்கள் புன்னகை போஸ் கொடுக்கும் போது இருந்ததை விட ஆயிரம் மடங்கு விரிந்தது. நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தின் மூலம் அவர்களின் மனதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் புகைப் படங்களை கீழே காணலாம்.




Sunday, July 28, 2013

பாக்யா செய்தது சரியா

சுஜாதா அவர்களின் ஐம்பத்தைந்து வார்த்தைகள் கொண்ட ஈர்ப்பால் நானும் எனக்கு தோன்றுவதை கதை என்று கூறிக்கொண்டு, அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்தில் எழுதுவேன். நேற்று கோவை கிராஸ்கட் ரோட்டில் நடந்துகொண்டிருக்கும் போது, ஒரு பெட்டிக்கடையில் தொங்கிகொண்டிருந்த ஆனந்த விகடன் புத்தகத்தில் 'ஹன்சிகாவை காதலிக்கிறேன், எங்கள் திருமணம் நிச்சயம் - இது சிம்பு சிக்ஸர்' என்ற அட்டைப் படத்தை பார்த்து ஒரு ஆனந்த விகடன், குமுதம் மற்றும் பாக்யாவை வாங்கினேன். எப்போதும் பாக்யாவை வாங்காத நான் ஏதோ தோன்றியதால் அன்று வாங்கினேன். வீட்டிற்க்கு வந்ததும் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தை படித்துவிட்டு பாக்யாவை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். நேற்று இரவு தூக்கம் வராமல் பாக்யாவை புரட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு கதை எங்கேயோ படித்து போல இருந்தது. மேலும் சிலவரிகள் படித்ததும், அடப்பாவிங்களா இது நான் 2011-ல் என்னுடைய வலைத்தளத்தில் எழுதிய கதை என்று உரக்க கூறியபடி படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அந்த இரு கதைகளுக்கு அடியில் என் பெயரைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஈமெயில் அல்லது கமெண்ட் போட்டு, இது போல உங்கள் கதையை பிரசுரிக்க போகிறோம் என்று கூறியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். நம்ம எழுதியதை எல்லாம் கதைன்னு மதிச்சு பாக்யாவில் போட்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இது போல தெரியாமல் எத்தனை கதைகள் அச்சில் வந்திருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் பெரிதாக எதுவும் டிஸ்க்ளைமர் எல்லாம் என் வலைத்தளத்தில் போடாததால், பாக்யா செய்தது சரியா தவறா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் கதைகள் பிரசுரமானது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதைகளில் வலைதள முகவரிகளையும், பாக்யாவில் வந்த பாகத்தையும் கீழே காணலாம்.

http://iniyaulavaaga.blogspot.in/2011/11/55.html
http://iniyaulavaaga.blogspot.in/2011/08/55.html




பருவம்



மகளுடம் சேர்ந்து சாலையில் நடக்கும் நேரத்தில்
அடிக்கடி திரும்பிப் பார்க்கும் சாலையோரத்து இளைஞர்கள்
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறார்கள்.




மரியான் - விமர்சனம் அல்ல

மரியான் படத்திற்கு ஆன்லைனில் புக் செய்துவிட்டு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள கவுன்டரில் நின்று கொண்டிருந்த நேரத்தில் அருகில் இன்னொரு கவுன்டரில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தன் மனைவியிடம் மரியான் டிக்கெட் இருக்காம், எடுத்துரட்டுமா என்று கேட்டுகொண்டிருந்தார். அதற்கு அவர் பின்னால் காக்கி சட்டை போட்டு (ஆட்டோ டிரைவராக இருக்கலாம்) நின்றுகொண்டிருந்த ஒருவர் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, சார் மரியான் வேண்டாம், அதுக்கு நீங்க சிங்கம் II இல்லைனா பட்டத்துயானை பார்க்கலாம் என்று கூறி எனக்கு பீதியை கிளப்பி விட்டார். சரி டிக்கெட்எடுத்தாகிவிட்டது, போய் பார்த்து விடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு சென்று தியேட்டரில் அமர்ந்தோம். படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிறிது நேரத்திலேயே அந்த காக்கி சட்டைக்காரரை மானசீகமாக இந்தப் படம் ஏன் சார் உங்களுக்கு பிடிக்கல என்று கேட்டேன். தனுஷ் நடிப்பு, ரஹ்மான் இசை, காமிரா, டைரக்க்ஷன் என்று எல்லாமே என்னைப் பொறுத்தவரை நன்றாகத் தான் இருந்தது. இடைவேளைக்கு அப்புறம் சிறிது மெதுவாக சென்றாலும் ரசிக்கும்படி இருந்தது. அதுவும் பசியில் பிடியில் இருக்கும் நேரத்தில் கற்பனையில் விருந்து சாப்பிடுவது சிம்ப்லி அமேசிங். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் சிரிக்கும் மக்களைப் பார்த்து, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என்று எழுந்து நின்று கத்தத் தோன்றியது. அதைத் தவிர பனிமலரிடம் தனுஷ் தொலைபேசியில் பேசும் காட்சி மற்றும் பாலைவனத்தில் சிறுத்தை சுற்றிவரும் காட்சிகளில் தனுஷின் நடிப்பு அற்புதம்.

இந்த வாரம் என்ன வி.ஐ.பி வாரமா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வைகோவிடம் பேசினேன். இப்போது மரியான் படம் பார்த்து வெளியில் வரும்போது படத்தின் இயக்குனர் பரத்பாலா, அந்த மாலில் உள்ள ஒரு உணவகத்தில் எதோ வாங்கிகொண்டு நின்றிருந்தார். அவரிடம் சென்று இப்போது தான் படம் பார்த்துவிட்டு வருகிறோம், படம் நன்றாக இருந்தது என்று கூறியதும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை காண முடிந்தது. அவரே ஆவலாக பாட்டு எல்லாம் எப்படி இருந்தது என்றும் கேட்டார். அவர் அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டிருப்பதாக சொன்னதால், அவரை தாமதப்படுத்தாமல் வேகமாக ஒரு புகைப்படம் எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

வைகோவை சந்தித்தேன்


சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் திரு. வைகோ அவர்கள் நான் அமர்ந்திருந்த வரிசைக்கு அருகில் உள்ள வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வைகோ தான் என்று தெரிந்தாலும், வேறு யாராவதாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஏற்கனேவே சமீபத்தில் மும்பையில் நம்ம கொலைவெறி புகழ் அனிருத் போல ஒருவரைப் பார்த்து நீங்கள் அனிருத் தானே என்று கேட்டு பல்பு வாங்கி இருந்தது நினைவிற்கு வந்ததால் அமைதியாக இருக்கையில் உட்கார்ந்து விட்டேன். அவர் எதோ நெல்சன் மண்டேலா பற்றிய புத்தகத்தைப் படித்தபடி இருந்தார். விமானம் தரை இறங்கியதும் ஒரு சிலர் அவருக்கு வணக்கம் கூறியதைப் பார்த்ததும், அவர் வைகோ தான் என்று ஊர்ஜிதப்படுத்திகொண்டேன். இதுவரை எந்த பிரபலத்தையும் இவ்வளவு அருகில் பார்த்திராத காரணத்தினால் அருகில் சென்று பேச சற்று தயக்கமும் பயமுமாக இருந்தது. சற்று தயங்கியபடி அவர் அருகில் சென்று வணக்கம் கூறியதும், அவரே சரளமாக பெயர் என்ன, எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் பாஸ்டனில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியதும் பாஸ்டனை பற்றிய வரலாற்று சிறப்புகளைப் பற்றி பேசினார். சிறிது நேரம் பேசிய பின்னர் புகைப்படம் எடுத்துகொண்டு, என் கையில் இருந்த ஒரு புதிய புத்தகத்தில் அவர் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். மனித நேயமே உயர்வு என்று கையெழுத்திட்டு கொடுத்தார். பிரபலமான மனிதர்களை அருகில் பார்க்கும் போது சற்று பதட்டம் ஏற்பட்டாலும், அருகில் சென்றால் பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.




Thursday, June 6, 2013

தேசியகீதம் - ஒரு வரிக்கதை


டேய் எவண்டா அது...தேசியகீதம் போட்டு இருக்காங்க இல்ல, இப்ப பேசகூடாதுன்னு தெரியாது.


Monday, May 27, 2013

கமல்ஹாசன் என்ற தந்தைக்கு ஒரு சல்யுட்




சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் ஒரு பழைய பேட்டியை ஏதோ ஒரு இணையதளத்தில் பார்த்தேன். ஏழாம் அறிவு திரைப்படம் வந்த நேரத்தில் அந்தப் படத்தை பற்றி பேட்டி மற்றும் தொலைபேசியில் ரசிகர்கள்/ரசிகைகளுடன் பேசுவது போன்ற ஒரு நிகழ்ச்சி. சாதரணமாக இந்த மாதிரி போன் போட்டு நடிக நடிகைளிடம் பேசும் நிகழ்ச்சியை பார்த்தால் எனக்கு மகா எரிச்சல் வரும். ஆனால் ஏனோ இந்த நிகழ்ச்சியை அமைதியாக முழுவதும் பார்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தொலைபேசியில் பேசிய யாரும் உளறி கொட்டாமல், ரொம்பவும் வழியாமல் பேசினார்கள். இரண்டாவது காரணம் ஸ்ருதிஹாசனின் போலித்தனம் இல்லாத பேச்சு. ஆங்கங்கே ஆங்கிலம் கலந்து பேசினாலும், முடிந்த வரை நல்ல தமிழில் பேசினார். அந்தப் பெண்ணின் துளியும் கர்வம் இல்லாத பேசும் அழகும் என்னை வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் என்கிற பெரிய நடிகரின் பெண் என்கிற பந்தா எந்த இடத்திலும் தெரியவில்லை. தொலைபேசியில் பேசியவர்களிடம் கூட மிகவும் தன்மையுடன் பேசியது மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பேட்டியில் ஸ்ருதி கூறிய ஒரு வாக்கியம் தான் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. அது என்னவென்றால், 'என்னை என் அப்பா, இதைதான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை, நீ என்னவாக விரும்புகிறாயோ அந்தப் பாதையில் தாராளமாக செல், ஆனால் அதில் ஒரு எல்லை வைத்துக் கொள்ளாமல் முழு முயற்சியுடன் ஈடுபடு' என்பது தான். முதலில் கேட்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. பின்னால் யோசித்து பார்த்ததில் அப்படி ஒரு சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்ற கேள்வி எழாமல் போகவில்லை. நம் பிள்ளைகளை நாம் என்ன நினைகிறோமோ அதை செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். நீ என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை தாராளமாக செய் என்று கூறும் தைரியம் நான் பார்த்த அளவில் பல பெற்றோர்களிடம் இருந்தது இல்லை. அதற்கு முக்கிய காரணம், எங்கே பிள்ளைகள் எடுக்கும் முடிவு தவறாக போய்விடுமோ என்பதுதான். சரி நாம் அவர்களுக்கு காட்டும் வழி மட்டும் சரியாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. பொதுவாக ஒரு துறையில் இருப்பவர்கள், ஓன்று தன் பிள்ளைகளை அந்தத் துறையிலேயே கொண்டு வர முயற்சிப்பார்கள் அல்லது இந்தக் கஷ்டம் என்னோடு போகட்டும் நீயாவது வேறே வேலை செய் என்று கூறு வேறு வழி காட்ட முயற்சிப்பார்கள். நடிகர்களுக்கு ஆண் பிள்ளை இருந்தால், அந்த குழந்தை பிறந்தது முதல் நடிகனாக வருவதற்கு தேவையான அனைத்தையும் கற்று கொடுத்து தலை கீழாக நின்றாவது அவர்களை ஒரு பெரிய ஹீரோவாக ஆக முயற்சி செய்த பலரை நாம் பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் பெண் குழந்தைகளை நடிப்பு துறையில் நுழைக்காமல் இருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். கமல்ஹாசன் நினைத்திருந்தால் ஒரு நீ ஒரு பெரிய நடிகையாதான் வர வேண்டும் என்றோ அல்லது நீ சினிமா பக்கமே வரகூடாது என்றோ தன் பிள்ளைக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம். ஆனால் உனக்கு பிடித்ததை செய் என்பதற்கு ஒரு தில் வேண்டும். கமலிடம் பணம் இருக்கிறது, அந்த துணிச்சலில் தன் பிள்ளை எப்படி போனாலும் பின்னால் பணத்தால் சரி செய்து விடலாம், நம்மால் அது முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். ஓன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், எவ்வளவு பணம் இருந்தாலும் தன் பிள்ளைகள் நல்ல வழியில் தன் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அத்தனை பணமும் கை விட்டு போய் விட வாய்பிருக்கிறது. கமல் கண்டிப்பாக அதை உணர்ந்தவர் என்பதை திடமாக நம்புகிறேன். பிள்ளைகள் அவர்கள் விரும்பிய துறையில் சென்று வெற்றி பெறும்போது அதை பார்க்கும் பெற்றோர்களுக்கு எவ்வளவு பெருமிதமாக இருக்கும். மற்றபடி ஸ்ருதிஹாசன் இப்படி நடிக்கிறார், சொந்த வாழ்க்கையில் அப்படி நடக்கிறார் என்று குறை கூறுவதை ஏனோ என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. வாழ்கையில் நேர்மையாக, தனக்கு பிடித்தமான ஒன்றை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுபோல ஒரு மகிழ்ச்சி வேறு எதில் இருக்க முடியும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...