Friday, April 10, 2015

ட்வைலைட் - 55 வார்த்தை சிறுகதை



பத்து வயதே நிரம்பிய சிறுவன் மேடையில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தான்.

அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

ராபர்ட் மட்டும் மெதுவாக அருகில் இருந்த தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்.  நல்ல திறமை உள்ள பையன் தான். என்ன கடைவாய் பல்லு மட்டும் நம்மள மாதிரியே வாய்க்கு வெளியே நீளமாக வளர்ந்து இருந்தால் அவன் வளர்ந்த பின்னே உறிஞ்சி குடிக்க வசதியாக இருந்திருக்கும் என்றபடி கடை வாயின் ஓரத்தில் இருந்த ரத்தத்தை துடைத்தான்.


Thursday, April 9, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் மூன்று




இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த எண்ண ஓட்ட தொடர்கள் ஒரே நேர் கோட்டில் பயணிக்காது. அதாவது வயது வாரியாக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சி அல்ல. எண்பதுகளில் நிகழ்ந்த நிகழ்வினை இரண்டாயிரத்து பதினைந்துடன் முடிச்சு போடும் சாத்தியம் இந்தத் தொடர்களில் உண்டு. அதனால் நான் பத்தாவது படித்துகொண்டிருக்கும் போது நடந்த ஒரு விஷயத்தை சொல்லும் போது அதற்கான காரணம் ஆறாவது படிக்கும் போது ஏற்பட்டிருக்கலாம். அதை மேற்கோள் காட்ட ஆறாம் வகுப்பிற்கு தாவ வேண்டும் இருக்கு. சரி, இனி என்ன ஓட்டங்கள் அத்தியாயம் மூன்றைப் பார்போம்.

அத்தியாயம் மூன்று

முகத்தின் மேல் குளோரோபார்ம் நிறைந்த பையை அழுத்த அதன் வினோத நெடி நாசியில் ஏறியது. அந்த நெடியை உணரும் அதே நேரத்தில் உடைந்த வலது கையை யாரோ பிடித்து தூக்குவதை உணர முடிந்தது. ஆனால் அது வரை இருந்த வலி தூக்கும் போது இல்லை. அதன் பின்னர் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, நினைவு திரும்பியதும் முதலில் லேசாக குளிரை உணர்ந்தேன். கண்களை திறக்க முடியவில்லை. மேலே மின்விசிறி வேகமாக சுழல்வதை உணர முடிந்தது. உடல் குளிரில் லேசாக நடுங்கியது. என்ன மதினி இப்படி நடுங்குது என்று என் அம்மாவின் குரல் கேட்டது. கையில் ஏதோ கடினமாக கட்டபட்டிருந்தை வலியுடன் உணர்ந்தேன். லேசாக கண்களை திறந்து பார்க்க முடிந்தது. என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கையைப் பார்த்ததில் பெரிய மாவு கட்டு, மணிக்கட்டில் இருந்து கிட்டத்தட்ட தோள் வரைப் போடப்பட்டிருந்தது. ச்சே, ஒரு நிமிச விளையாட்டு புத்தி எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பார் என்று என் மனதிற்குள் என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் ஆட்டோவில் வீடு நோக்கி பயணம். வீட்டில் நுழைந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வாசலில் வந்து நின்று விட்டனர். எல்லோரும் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என்று கேட்டபடி ஒரே கூச்சல். ஸ்விம்மிங் பூல் போய் கையை ஒடச்சிகிட்டான், எதுக்கு இவனுக்கு ஸ்விம்மிங் எல்லாம் என்று அவர்களாகவே பேசிக் கொண்டனர்.  நானோ மனதிற்குள்  ஸ்விம்மிங் பூல் போய் வரும் வழியில் தான் கை உடைந்தது அதற்கும் ஸ்விம்மிங்கிற்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். 

நான் அந்த வருடம் பத்தாவது வகுப்பில் படித்துகொண்டிருந்தேன். ஏற்கனேவே படிப்பில் சுமார்.  இப்போது கை வேறு உடைந்து விட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன், ஆறாம் வகுப்பில் இருந்து இங்கிலீஷ் மீடியம். எல்லாவற்றையும் தமிழ் படித்துகொண்டிருந்த நான், கணக்கு முதற்கொண்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளானதும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலதான் முதலில் உணர்ந்தேன். அது சரியாகி ஓரளவிற்கு ஆங்கிலம் பிடிபட்டது ஒன்பதாம் வகுப்பில் தான். பத்தாவது எப்படியாவது நன்றாக படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்ட நேரத்தில் இப்படி நிகழ்ந்தது பெரும் கவலையைத் தந்தது. ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்லிகொள்ளும் நிலையும் தேவையும் இல்லாத ஒரு கால கட்டம் அது. அன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தியதை இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் பாடம் சரியாக நடத்தியதே இல்லை. முக்கால்வாசி நேரம் மரத்தடியில் தான் வகுப்பு. அதுவும் அறிவியல் போன்ற பாடங்களில் யாரவது ஒரு மாணவனை எழுந்து படிக்க சொல்வார்கள். அவ்வபோது தோன்றும் போது எதாவது சொல்லி புரிந்ததா என்று ஒரு கேள்வி. அவ்வளவு தான் அங்கே நான் கற்ற பாடம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வில் முப்பது ஐந்து மதிப்பெண் எடுத்தவர்கள் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு அப்போது அந்த பள்ளியில் இருந்திருந்தால் என்னையும் சேர்த்து வகுப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ் ஆகி இருக்க மாட்டார்கள். மிக மிக மோசமாக படிக்கும் மாணவர்களைத் தவிர எல்லோரையுமே அடுத்த வகுப்பிற்கு தூக்கி போட்டு விடுவார்கள். இது இப்படி இருக்க, நான் சந்திந்த எல்லா தமிழ் ஆசிரியர்களும் மிகவும் சிறப்பாக பாடம் நடத்தினர். அதில் தட்சிணாமூர்த்தி என்ற ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அழகே தனி. ஒவ்வொரு மாணவனுக்கும் அழகாக தமிழில் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார். உதாரணத்திற்கு, சைதாபேட்டையில் உள்ள கொசத்தெரு என்ற தெருவில் இருந்து வரும் மாணவனை வாடா கொசத்தெரு கோமகனே என்று கூப்பிடுவார்.

ஆனாலும் அப்போது எனக்கு தமிழ் மேல் பெரிய ஆர்வம் என்றெல்லாம் இல்லை. ஒரே விஷயம் கண்ணா பின்னா என திருக்குறள் படித்தேன். அதுவும் திருக்குறள் போட்டி ஒன்றில் ஆறாவது படிக்கும் போது கலந்துகொண்டேன். அதில் முதல் பரிசும் பெற்றேன். அதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அந்த போட்டிக்காக திருக்குறள் நிறைய படித்தேன். திருக்குறளைப் போன்ற ஒரு பொக்கிஷத்தை தமிழன் பெற்றது ஒரு வரப்ரசாதம். அதில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தனைக்கும் விடை இருக்கிறது. தந்தையின் கடமை, பிள்ளைகளின் கடமைகளில் தொடங்கி மருத்துவன், அரசன், காதலன் என வாழ்வின் அத்தனை நிலைகளிலும் நம்மை வழி நடத்தும் தகவல்கள் திருக்குறளில் உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் ஒரு திருக்குறள் புத்தகத்தையாவது வாங்கி வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.  இப்படி நான் படித்துகொண்டிருந்த நிலையில் கையையும் உடைத்துக் கொண்டேன். அதுவும் வலது கை, எழுத முடியாது. சுமார் மூன்று மாதங்கள் கை கட்டுடன் வீட்டிற்குள் இருந்தேன். பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்ததில் பொழுது போகாமல் ஒரு நாள் வரலாறு பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். நன்றாகப் புரிந்தது. நல்லாதானே இருக்கு,  இத்தனை நாள் ஏன் நாம இதை படிக்கலே என்று தோன்றியது. வலது கையில் எழுத முடியாததால் சில நாட்கள் இடது கையில் எழுத பழகினேன். ஆனாலும் கணக்கு மட்டும் புரியவே இல்லை. சரியான அடிப்படை கணிதம் கூட தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. கணக்கு புரியாததால் அறிவியலும் முழுவதுமாகப் புரியவில்லை.  படிக்காவிட்டால் வாழ்கை திசை மாறிப் போய்விடும் என்ற புரிதல் இருந்தது,  ஆனால் படித்தால் புரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த வேளையில்  என் வாழ்வில் நுழைந்தவர் ஸ்ரீதர்.

ஓட்டம் தொடரும்.....


Tuesday, April 7, 2015

ரூல்ஸ்

லைப்ரரிலே படிச்சதும் புக்கை எடுத்த எடத்துலே வெக்க வேண்டாம்.

யாரும் ரூல்ஸை மதிக்கறதே இல்லே என்று பெரும் குரலெடுத்து கோபத்துடன் கத்திய லைப்ரரியனை படித்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர்.

Monday, April 6, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு

 
இசை, நடனம், ஓவியம், எழுத்து போன்ற விஷயங்கள் மனிதனுக்கு கிடைத்த வரம். சில நேரங்களில் வாழ்கை ஓட்டத்தில் இது போன்ற அரிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது பெரும் பாடாகி விடுகிறது. எண்ண ஓட்டங்கள் என்ற தொடரின் முதல் அத்தியாயம் எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இப்போது தான் அடுத்த அத்தியாயம் எழுத முடிந்திருக்கிறது. இது என் மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கிக்கிடக்கும் எண்ண அலைகளை வார்த்தைகளாக்கும் ஒரு முயற்சியே. இதை படிப்பதால் உங்களுக்கு பெரிய பலன் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த கால கட்டத்தில் என்னுடன் கை கோர்த்து நடந்த ஒரு உணர்வை அளிக்கும் முயற்சி தான் எண்ண ஓட்டங்கள். இதைப்பற்றி தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல், நினைவுகளைக் கிளறி மனம் போன்ற போக்கில் எழுத முனைகிறேன். இனி எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு...

ஆனால், நான் பிடித்து ஆடிய விழுது அறுந்து கீழே விழுந்தேன். என்னுடைய உடல் பாரம் முழுவதும் வலது கையின் மேல் இருக்கும்படி விழுந்ததில் மணிக்கட்டுக்கு சற்று மேலே வலது கையில் எலும்பு முறிந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் கை பெரிதாக வீங்கி விட்டது. வலது கையின் பாரத்தை தாங்க முடியாமல், இடது கையால் தாங்கியபடி நடந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கூட இருந்தனர், ஆனால் அவர்களும் மிரட்சியில் இருந்தார்கள். பின்னர் மெதுவாக நடந்து குருநாத் ஸ்டோர் அருகே வந்ததும் ஒரு ரிக்சா வண்டி வந்தது. நண்பர்கள் அவரிடம் பேசி என்னை ரிக்சாவில் ஏற்றி விட்டனர். ஒரு வழியாக வீட்டின் அருகே வந்து சேர்ந்து வாசலில் இருந்த ஒரு கடையில் போட்டிருந்த ஸ்டூலில் மிகுந்த வலியுடன் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் என்னை சுற்றி கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் ஐயோ பாவம் என்று சொல்லியபடி பார்த்துகொண்டு நின்றார்கள். இதை சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார். அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கண் முன்னே ஒருவன் வலியால் துடித்துகொண்டிருக்கும் போது  பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டு நிற்பது சாத்தியமில்லாதது. ஆனால் அங்கே ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக அங்கு வந்த ரங்கண்ணன் (ரங்கன் என்பது அவர் பெயர் அதனுடன் அண்ணனை சேர்த்து நாங்கள் ரங்கண்ணா என்று கூப்பிடுவோம்), என்னடா ஆச்சு என்று பதறியபடி கேட்டார். கை முறிந்திருப்பதைப் பார்த்து அடப்பாவி என்று உரக்க கூறியபடி வீட்டின் உள்ளே சென்று ஒரு துணியை நனைத்து கையின் மேலே லேசாக சுற்றினார். என்னை கைதாங்கலாக அழைத்தபடி அருகில் இருந்த கௌரி பார்மசி சேட்டிடம், 'சேட்டு, ஒரு இருநூறு ரூபா குடு, பையன் கையை ஒட்சினு வந்து நிக்குறான்' என்றார். சேட் என் தந்தையின் நெருங்கிய நண்பர். மறு பேச்சு பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தார். கௌரி பார்மசி சேட் குணத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்தப் பதிவை படிக்கவும்.
 
பணம்  கிடைத்தவுடன் புத்தூர் போகலாமா அல்லது ராயபேட்டா மருத்துவமனை போகலாமா என்று எழுந்த விவாதத்தில், ரங்கண்ணன் உடனடியாக  சின்னபையன் புத்தூர் ட்ரீட்மென்ட் வலி தாங்க மாட்டான், ராயபேட்டாவே போயிறலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை கூட்டிச் சென்றார். ராயப்பேட்டை மருத்துவமனையை நெருங்கும் முன்னரே அதன் நெடி நாசியை துளைக்க ஆரம்பித்தது. அந்த நெடியே அடிவயிற்றில் ஒரு பயத்தைக் கிளப்பியது. எலும்பு முறிவுப் பிரிவிற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அங்கிருந்த மருத்துவர் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த மருத்துவர் என் கையைப் பார்த்ததும், பையனை பெட்லே படுக்க வெச்சு கையை தூக்கி கட்டுங்க என்றார். யாரோ ஒருவர் வந்து என்னை அழைத்துச்சென்று கையை தூக்கி ஒரு கம்பியில் கட்டி விட்டார். எனக்கோ வலது கையில் எலும்பு முறிவு, அவரோ ஒரு பெரிய கம்பியை என் இடது புறம் வைத்துக் அதில் வலது கையை தொங்கவிட்டார். ஏற்கனவே கையில் சொல்ல முடியாத அளவிற்கு வலி, அதில் ஒரு மாதிரி ஒருக்களித்துப் படுத்து இருந்தது மேலும் வலியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தனர். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் குளோரோபார்ம் நிறைந்த ரப்பர் பை போன்ற ஒன்றை என் முகத்தில் அழுத்தினார்.
 
ஓட்டம் தொடரும்.....


Sunday, May 11, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 2

பட்டிமன்றப் படிப்பினை பதிவு எழுத இரண்டு காரணங்கள். அதில் முதல் காரணத்தை பாகம் 1 -ல் கூறிவிட்டேன். இப்போது இரண்டாவது காரணம்.

சாதாரணமாக நடைமுறைப் பேச்சை நகர்த்திச் செல்வதிலேயே சிரமப்படும் எனக்கு மேடைபேச்சு என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். ஆனாலும் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இது போன்ற நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அதை சரியாக செய்ய முயலுவேன். என்னிடம் பெரிய நிபுணத்துவம் எந்தத் துறையிலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை செய்ய நினைத்தால் அதற்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் மனம் மட்டுமே உண்டு.

உறவா நட்பா என்ற தலைப்பு கொஞ்சம் சிக்கலானது. எனக்கு உறவினர்களும் இருக்கிறார்கள் நண்பர்களும் இருக்கிறார்கள். நட்பை சார்ந்து பேசப்போகிறோம் என்பதை நினைத்தபோது சற்று யோசனையாத்தான் இருந்தது. ஏன் என்றால், எனக்கு உறவை விட நம்பிக்கை துரோகம் செய்த நண்பர்கள் பட்டியல் பெரியது. அதே நேரத்தில் உறவை விட நன்மைகள் செய்த நண்பர்கள் கூட்டமும் பெரியது. இது சிக்கலில் கொண்டு போய் விடுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே, இந்த பட்டிமன்ற பேச்சை கேட்டு இரண்டு தரப்பில் இருந்துமே விவாதங்கள் எழுந்தன. பட்டிமன்றங்களில் பேசும்போது எதாவது ஒரு தலைப்பை சார்ந்து தான் பேசுகிறோம். நட்பே வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் பேசியதால் எனக்கு பல நண்பர்கள் அவர்கள் தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நட்பை சார்ந்து நான் பேசியது என் விருப்பத்தின் பேரில் தான். பட்டிமன்றம் முடிந்தும் ஏன் இப்படி பேசினீர்கள் என்று மேடைக்கு வெளியே பல பட்டிமன்றங்கள் நடத்தும் அன்பர்களுக்கு பதில் கூறுவதுதான் இந்த இரண்டாவது காரணம். என்னைப் பொறுத்தவரை நல்ல உறவும் நட்பு தான், நல்ல நட்பும் உறவுதான். பலர் உறவை நட்புக்கு இணையாகவும், நட்பை உறவுக்கு இணையாகவும் கூறுவார்கள்.  உதாரணத்திற்கு, இவர் என் ப்ரெண்ட், ஆனா எனக்கு பிரதர் மாதிரி என்பதையும், நானும் அவளும் அம்மா பொண்ணு மாதிரி பழகறதில்லை, பிரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுகிறோம் என்பதையும் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் நம் சமூகத்தில் நண்பேண்டா வெற்றிபெற்றதைப் போல மாமேண்டா, மச்சாண்டா என்று எதுவும் வெற்றி பெறவில்லை.

உறவுகள் என்பது நம் ரத்த சொந்தங்கள், நண்பர்கள் நம் உணர்வு சொந்தங்கள் அவ்வளவு தான் வித்தியாசம். பொதுவாக உறவுகள் உதவி செய்தால் ஒன்று அதில் கடமை உணர்ச்சி இருக்கும் அல்லது நன்றிகடன் காரணமாக இருக்கும். உதாரணமாக என்ன இருந்தாலும் என் சித்தப்பா என்று செய்யும் உதவி இல்லாவிட்டால் அவங்க  குடும்பம்  நமக்கு செஞ்ச உதவிக்கு நாம என்ன செஞ்சாலும் ஈடாகாது என கடமை உணர்ச்சி மேலிட செய்யும் உதவி. ஆனால் நண்பன் (எளிமை கருதி நண்பன் என்று ஆண்பாலில் கூறுகிறேன்) செய்யும் உதவியில் பொதுவாக இப்படிப்பட்ட கடமை உணர்ச்சிகள் காரணமாக இருக்காது. எதோ ஒரு காரணத்திற்காக நட்பு உருவாகிறது. அப்படி உருவாகிய நட்பு ஒருவருக்கொருவர் எதையும் செய்யும் வலிமையை கொடுக்கிறது. அப்படி இல்லை, நட்பில் சுயநலம் இருக்கிறது, எதை வேண்டுமானாலும் நண்பன் செய்ய மாட்டான் என்று நீங்கள் சொன்னால்...அப்படிப்பட்ட நல்ல நண்பனை நீங்கள் இன்னும் சந்திக்கவில்லை என்பது தான் என் பதில்.  மேலும் அப்படிப்பட்ட நட்பை நீங்கள் மற்றொரு நண்பனுக்கு வழங்கினால் தான் உங்களுக்கு அதே போல ஒரு நண்பன் கிடைப்பான்.

இன்னொரு விஷயம், நம்ம பிரெண்ட்ஸ் கிட்டே பேசும் போது 'மாமா, மச்சான்' என்று கூப்பிடுகிறோமே, அப்படி என்றால் நட்பைக் கூட உறவு வைத்து அழைப்பதில் தானே பெருமைப் படுகிறோம் என்ற கேள்வி. இதற்கு பதில், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிடுவதால் நாம் எந்த உறவின் பெயரை வைத்து கூப்பிடுகிறோமோ அந்த உறவு தான் உயர்ந்தது என்பதற்கில்லை. உதாரணத்திற்க்கு பல நாட்கள் பேசாமல் இருந்த நண்பனை பார்க்கும் போது நான் 'டேய் நாயே, ஒரு போன் பண்ண கூட உனக்கு தெரியாதா, அறிவு கெட்டவனே' என்று கண்ணா பின்னாவென்று திட்டுவேன். அதை அந்த நண்பன் சிரித்தபடி ஏற்றுக்கொள்வான். ஒரு குழந்தையை செல்லமாக நாய் குட்டி என்று அழைப்பதால் நமக்கு அந்தக் குழந்தையை விட நாய்க்குட்டி தான் பெரியது என்று அர்த்தம் இல்லை. அதனால் என்ன சொல்லி நண்பனை அழைக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.

இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால் பட்டிமன்றம் முடிந்துவிட்டது. நான் பேசிய பேச்சு என் கருத்து என்றாலும் அது மட்டுமே என் கருத்து என்று கருத வேண்டாம். அங்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் அவ்வளவு தான் கூற முடிந்தது, கூற முடியாத பல உறவின் பெருமையும், நட்பின் பெருமையும் நிறையவே இருக்கிறது. உறவு புனிதமானது, நட்பு பிராம்மாண்டமானது. அதனால் உறவு நட்பு   இரண்டையும் போற்றுவோம்.






















Monday, May 5, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 1


சமீபத்தில் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு ராஜா அவர்களின் தலைமையில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசினேன். பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்வில் பெரிதும் உதவுவது உறவா நட்பா ? இது எல்லா இடத்துலேயும் தொவச்சு போட்ட பழைய தலைப்பு தான். ஆனாலும் இங்கு பாஸ்டன் பகுதியில் நடக்கும் பல பட்டிமன்றங்களில் இந்தியாவா அமெரிக்காவா எது சிறந்தது  என்கிற ரீதியில் கேட்டு கேட்டு சலித்துப் போன காதுகளுக்கு இது சற்று வித்தியாசமான தலைப்பாகவே தோன்றியது.  பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா என்று கேட்ட தமிழ் சங்கத் தலைவர் திரு ராஜ் வேல்முருகனிடம்,  கண்டிப்பா பேசுகிறேன், ஆனால் இந்தியாவா அமெரிக்காவா என்ற தலைப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும் என்றேன். நான் சொன்னதால் அந்தத் தலைப்பு வைத்தார்களா இல்லை எதேச்சையாக வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் தலைப்பு எனக்கு பிடித்து இருந்தது.

எல்லா வேலைக்கும் மெசின் இந்த அமெரிக்க மண்ணில் இருந்தாலும் அந்தந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும்.  இது இங்கு வாழ்பவர்களுக்கு நன்றாகப் புரியும். அலுவலக வேலை, வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு மூன்று வாரத்திற்கு முன்பே அவ்வபோது தலைப்பை பற்றி மனதில் அசைபோட்டபடி இருந்தேன். இப்போது இங்கு குளிர் கொஞ்சம் குறைந்திருப்பதால் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கிறேன். (குளிர் காலங்களில் டிரெட் மில்லிடம் சரணாகதி). தனியாக ஓடுவதில் ஒரு வசதி இருக்கிறது. யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் நமக்கு தேவையானதை யோசிக்க முயற்சி செய்து சில நேரங்களில் வெற்றி பெறலாம். மனம் ஒரு குரங்கு என்பது அந்த நேரத்தில் நன்றாக புரியும். ஆனாலும் ஓட்டத்தின் போது எழும் சிந்தனைகளை அவ்வபோது குறிப்பெடுத்துக் கொள்வேன். எங்கள் அணியில் இருந்த நான்கு பேரும் அவ்வபோது தொலைபேசியில் பேசி யார் என்ன பேசுகிறோம் என்று பகிர்ந்துகொண்டோம். ஒரே விஷயத்தை அணியில் நால்வருமே பேசக் கூடாது என்பதால் நாங்கள் பேசும் விஷயத்தின் சாரத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதனிடையில் ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்டோம். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் நால்வருமே முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். இந்தப் பட்டிமன்றத்திற்காக ஓன்று சேர்ந்தோம். ஆனால் சில தொலைபேசி பேச்சு மற்றும் ஒரு சந்திப்பில் எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வந்து விட்டது. ஆனால் நங்கள் அனைவரும் வேறு வேறு அலைவரிசையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம். பல நேரங்களில் கார சாரமான விவாதங்கள் தொலைபேசியில் நிகழ்ந்தன. பல தகல்வல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு மனிதனிடமும் எவ்வளவு தகவல்கள், ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருகின்றன. ஆனால் அவை வெளியே வர வைக்க ஒரு கிரியா ஊக்கியாக ஒரு காரணம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பட்டிமன்றதால் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே. 

இந்த வரிகளை எழுதிகொண்டிருக்கும் போதே எதை நினைத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தோம், இப்பொழுது என்ன எழுதிகொண்டிருக்கிறோம் என்று ஒரு எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருகிறது. அது என் எழுத்தின் பலவீனமா அல்லது பலமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி பெரிதாக கவலைப் படவும் தோன்றவில்லை. சரி எதற்காக இந்தப் பதிவு என்று பார்ப்போம். அதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம், பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசிய ஒரு பெண்மணி. அவர் அனுமதி இல்லாமல் பெயரைக் குறிப்பிட எனக்கு மனம் வராததால் பெண்மணி என்று குறிப்பிடுகிறேன். எனக்கு ஏற்கனவே ஓரளவிற்கு அறிமுகம் ஆனவர் தான். இது போன்று ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். என்னைப் பார்த்ததும் என்ன நீங்க இப்போ எழுதறதே இல்லை என்று கேட்டார். பல நண்பர்கள் இதைப் போல சம்பிரதாயக் கேள்வி கேட்பார்கள். நானும் டைம் இல்லைங்க என்று ஒரு சப்பைக்கட்டு பதிலை சொல்லுவேன். இவரிடமும் அதே போல ஆமாங்க எழுதனும்னு மனதளவில் ஒருவித சலிப்போடு கூறினேன். ஆனால் அவர் நான் முக்கியமாகக் கருதும் ஒரு பதிவைப் பற்றி விலாவாரியாகக் கூறி, அதைப் படித்ததும் மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டதாகவும் கூறினார். அதற்கு மேல் அந்தப் பதிவில் வரும் ஒரு  நபரின் பெயரைக் குறிப்பிட்டதைக் கேட்டதும் நான் மனதளவில் வெட்கி தலை குனிந்தேன். இவ்வளவு நுணுக்கமாகப் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை நான் எப்படி எழுதி இருக்கிறேன் பார் என்கிற சுய தம்பட்டம் அடிக்கும் தொனியில் கூறவில்லை. நான் எழுத்து என கூறிக்கொள்ளும் கிறுக்கல்களின் நிலை எனக்கு நன்றாத் தெரியும். ஆனால் என் கிறுக்கல்களை வலை உலகின் முன் சமர்பிக்கும் போது அது எங்கோ யாரையோ சென்றடைந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மனதை அசைக்கிறது என்பதை நினைக்கும் போது ஒரு நெகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. அந்தப் பெண்மணிக்கு நன்றி. முடிந்த அளவு நிறைய எழுகிறேன் அம்மா. 

இரண்டாவது காரணம்...அடுத்தப் பதிவில் தொடரும்....






















வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி

வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...