Tuesday, August 2, 2011

சென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்

நீங்கள் எப்போதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு பிரபல ஜவுளி கடைக்குள் சென்றுவிட்டு எதுவும் வாங்காமல் வெளியே வந்து இருகிறீர்களா. உள்ளே செல்லும் போது நம்மை வணக்கம் போட்டு வரவேற்பவர்கள், எதுவும் வாங்காமல் வெளியே வரும்போது - என்ன சார் எதுவும் வாங்கலியா, ஏன் எதற்கு என்று கேட்டு ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு முறை குடும்பத்துடன் சென்னை சில்க்ஸ் (சென்னையில்) கடைக்குள் சென்று பின்னர் நான் மட்டும் வெளியே வந்த போது அங்கு வாசலில் நிற்கும் சிப்பந்திகள் என்னை சுலபத்தில் விடவில்லை. அவர்களிடம் விளக்கம் கூறி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. இது நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கே - என்னடா இது கடைக்குள்ளே போயிட்டு ஒன்னும் வாங்காம வர விடமாட்டாங்க போல இருக்கே என்று எரிச்சல் பட்டவன் நான். இந்த முறை இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த கதையை கேளுங்கள்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடைக்கு மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். எங்கள் காரை ஒட்டி வந்த டிரைவரிடம், கடைக்கு கீழே உள்ளே பார்கிங் பகுதியில் பார்க் செய்துவிட்டு காத்திருக்குமாறு கூறிவிட்டு கடைக்குள் சென்றோம். உள்ளே சென்று நாங்கள் வாங்க விரும்பிய ஆடையை தேடி பார்த்தோம், எதுவும் சரியாக இல்லை. யாரவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்தோம். ஓரிருமுறை கேட்டும், அந்த பக்கம் யாரும் வரவில்லை. எங்களுக்கும் நேரம் இல்லாததால் சரி, இன்னொரு நாள் வந்து பாத்துக்கலாம், மத்த பொருள் எல்லாம் போய் வாங்கிட்டு வரலாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினோம். சென்ற முறை சென்னையில் ஏற்பட்டது போல, வெளியே செல்லும் போது யாரும் எங்களை கேள்வி கேட்கவில்லை. பரவால்லியே, இப்போ கொஞ்சம் மாறி இருக்கே நம்ம ஊரு என்று பெருமையுடன் கூறினேன். அதன் பிறகு, அருகில் மற்ற கடைகளுக்கு சென்றுவிட்டு சுமார் அரை மணிநேரம் கழித்து சென்னை சில்க்ஸ் வாசலுக்கு திரும்பினோம். ட்ரைவரை செல்போனில் அழைத்து கடை வாசலுக்கு வருமாறு கூறிவிட்டு காத்திருந்தோம். சில நிமிடங்களில் கார் வந்து நிற்க நாங்கள் உள்ளே உட்கார முற்படும் போது, அங்கு வேலை செய்யும் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்தார். அதுக்கு அப்புறம் எங்களுக்குள் நடந்த சம்பாஷணையை கீழே பாருங்கள்.

கொஞ்சம் நில்லுங்க, பர்சேஸ் ப்ரூப் எங்கே காட்டுங்க என்று சற்று அதிகாரமான குரலில் கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், சார், நாங்க வாங்கனும்னு நினைச்சு வந்த டிரஸ் கிடைக்கலே, தவிரவும் எங்களுக்கு கடையிலே உதவவும் யாரும் வரலே. அதனாலே வெளிலே வந்து வேறே பொருட்கள் வாங்கிட்டு கிளம்புறோம். பார்கிங் சார்ஜ் எதாவது வேணும்னா கூட குடுக்குறோம்னு பொறுமையா சொன்னேன்.

அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.

இது சுரீர் என்று எனக்கு கோபத்தை கூடிவிட்டது. என்னங்க இது அநியாயம், உங்க கடைக்கு ஒரு பொருள் வாங்கனும்னு வரோம், அது புடிக்கலேனா என்ன பண்றது. கார் பார்க் பண்ணினதுக்காக எதாவது வாங்கியே ஆகணுமா என்ன ?

ஆமாம் நீங்க கண்டிப்பா எதாவது வாங்கியே ஆகணும்.

சரி, நான் உங்கள் மேனேஜர் கூட பேசணும் என்றேன்.

இங்கே நான் தான் மேனேஜர், எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க.

ஒ, அப்படியா, இந்தாங்க நூறு ரூபா, இதை பார்கிங் சார்ஜா வேணும்னா வெச்சுகோங்க, இல்லேனா எதாவது பொருள் வாங்கினதா நினைச்சுங்கோங்க. பேமிலி கூட வந்து இருக்கேன், இப்படி நடு ரோட்டுலே வெச்சு பேச்சை வளர்க்க நான் விரும்பலே.

அதெல்லாம் முடியாது, நீங்க கடைக்குள்ளே வந்து எதாவது வாங்கியே ஆகணும்.

எனக்கு உஷ்ணம் கூடிவிட்டது. இங்கே பாருங்க, இந்த மாதிரி என்னை ஏதாவது வாங்கறதுக்கு கட்டாயபடுத்தினா, இனிமேல் இந்த கடைக்கு நான் வரமாட்டேன். அது உங்களுக்கு ஓகேன்னு நினைசீங்கனா நான் கடைக்குள்ளே வந்து எதாவது வாங்குறேன் என்றேன்.

சரி, நீங்க இனிமேல் கடைக்கு வரவேண்டாம், இப்போ உள்ளே வந்து எதாவது வாங்குங்க.

நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து  கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.

பின் குறிப்பு: இது பற்றி சென்னை சில்க்ஸ் வெப்சைட்டில் உள்ள எல்லா ஈமெயில் முகவரிக்கும் எழுதி சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை.



Wednesday, July 27, 2011

சொந்தம் - சிறுகதை


வாசலில் உட்கார்ந்து தினமணி படித்துகொண்டிருந்த குமரகுரு, உள்ளே பார்த்து ராஜி காபி என்னமா ஆச்சு என்று கேட்டது தான் தாமதம் - ஆமாம் இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லே.  இந்த மணி பையன், எப்பவும் திருச்சி வந்தா நம்ம வீட்டுக்கு தான் வருவான். இப்போ என்னமோ புதுசா நேரா அவன் பிரெண்ட் குமார்  வீட்டுக்கு போறான். அதை என்ன ஏதுன்னு போய் கேட்டீங்களா ? 

என்னமா பண்றது, அவன் பிரெண்ட் குமார் இத்தனை நாள் பரோடாலே வேலை பார்த்துட்டு இப்போதான் மாற்றலாகி திருச்சி வந்துருக்கான். அதான் அங்கே போறானோ என்னமோ, நீ மனசை போட்டு குழப்பிக்காமே வேலையை பாரு. 

ஆமாம், இப்படி எதாவது சொல்லி என் வாயை அடைச்சிருங்க. எப்பவும் அத்தை அத்தைன்னு சுத்தி வருவான், இப்போ எல்லாம் பெரியமனுசங்க ஆகிட்டாங்க...ஹ்ம்ம்...என்ன பண்றது. அப்பா இல்லாத பையன்னு படிப்புக்கு அதுக்கு இதுக்குன்னு எவ்வளவு செஞ்சு இருப்போம். நன்றி இல்லாத ஜென்மங்க...எவ்வளவு செஞ்சாலும் நம்மளுக்கு மரியாதையை இல்லை பாருங்க என்று பொருமிய மனைவி ராஜியை லேசான கவலையுடன் பார்த்தார் குமரகுரு.

விடு ராஜி, நீ ஏன் இப்போ டென்ஷன் ஆகுறே. அவனா வந்து நம்ம கிட்டே உதவி கேட்டான், நாமலே தானே போய் செஞ்சோம். தவிரவும் அதுல நம்மளுக்கும் ஆதாயம் இருக்கும்னு தானே செஞ்சோம்.

நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்க. விட்டா, நீங்களே எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு காட்டி குடுத்திருவீங்க போல இருக்கு.  ஏய் ரேகா, சீக்கிரம் எழுந்து காலேஜுக்கு கிளம்பு, மணி இப்பவே ஏழு ஆச்சு என்று மகளிடம் கத்தினாள்.

மணியின் தந்தை அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே காலமாகிவிட்டதால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, அவன் அத்தை ராஜி அவனுடைய கல்லூரி படிப்பு செலவை வலிய சென்று ஏற்றுகொண்டாள்.

ஏன் ராஜி இப்படி ஒரு முடிவெடுத்தே, நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று குமரகுரு கேட்டபோது கூட - அட நீங்க கொஞ்சம் சும்மா இருங்க எல்லாம் எனக்கு தெரியும். மணி தங்கமான பையன், கல்லூரி செலவை நாம ஏத்துகிட்டு, அவனுக்கு படிப்பு முடிஞ்சு ஒரு வேலை கிடைச்சதும் - நம்ம பொண்ணு ரேகாவை அவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிரலாம். பையன் நம்ம சொந்தம் அதனாலே நம்ம சொத்தும் வெளிலே போனா மாதிரி இருக்காது. நம்ம பொண்ணும் கூடவே இருக்கும் என்று தன் கணக்கை கூறி வாயடைத்தாள்.

மணி இப்போது, கல்லூரி படிப்பு முடிந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறான். மாதம் ஒருமுறை திருச்சி வந்து அத்தை வீட்டில் தங்கி இருந்துவிட்டு செல்வான். ஆனால் இந்த முறை ஏனோ நண்பனின் வீட்டில் தங்க போவதாக சொல்லிவிட்டான்.

அது தான் ராஜியின் கோபத்திற்கு காரணம். நீங்க இப்போவே போய் அவனை கூட்டிட்டு வாங்க என்று பிடித்து தள்ளாத குறையாக குமரகுருவை அனுப்பி வைத்தாள். 

பொடிநடையாக அருகில் இருந்த நண்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த குமரகுரு, வாசலில் செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது மணியின் குரல் கேட்டது.

ஆமாண்டா குமார், இப்படி ஒரு எண்ணம் அவங்களுக்குள்ளே இருக்கும்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. என்னை எதோ பாசத்தால் மட்டும் தான் அத்தையும் மாமாவும் படிக்க வெச்சாங்கன்னு நினைச்சேன். ஆனா போன தடவை ஊருக்கு வந்திருக்கும் போது, நான் தூங்குறேன்னு நினைச்சு அத்தையும் மாமாவும் பேசிட்டு இருக்குறதை கேட்டுட்டேன்.அவங்க என்னை படிக்க வெச்சதே அவங்க சொத்தை பாதுகாக்கவும், ரேகாவை எனக்கு கட்டி கொடுக்கவும் தான் என்பதை தெரிஞ்சுகிட்டேன். நான் ரேகாவை கல்யாணம் செஞ்சுக்கிற கோணத்திலே பார்த்ததே இல்லை. என்னை விலை கொடுத்து வாங்குற ஒரு பொருள் மாதிரி அவங்க பார்க்கும் போது, நானும் ரேகாவும் கல்யாணம் பண்ணிகிட்டா எங்க வாழ்கை சந்தோசமா இருக்குமாங்கிறது சந்தேகம் தான். என்னை பொருத்தவரைக்கும், கல்யாணம்கிறது கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து சந்தோசமா வாழறதுக்கு தான். ஆனா இந்த கல்யாணத்துக்கு அப்புறம், எங்களுக்குள்ள வர சின்ன சின்ன விஷயத்தில் கூட நான் தான் விட்டுகொடுக்கனும்னு ரேகா எதிர்பார்கிறாளோ இல்லையோ அத்தையும் மாமாவும் எதிர்பார்பாங்க. அப்பிடி ஒரு வாழ்கை வாழறது எங்க ரெண்டு பேருக்குமே கஷ்டம்தான். அதனாலே தான் எனக்கு நன்றி கெட்டவன்னு பேரு வந்தாலும் பரவால்லேன்னு ரேகாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஒரு முடிவெடுத்தேன். இந்த நிலைலே எனக்கு அங்கே போய் தங்கவும் மனசு இல்லே, அதான் இங்கே வந்துட்டேன். இப்போ எங்க அத்தையும் மாமாவும் கேட்டா எனக்கு கல்யாணத்திலே விருப்பம் இல்லேன்னு சொல்லி கல்யாணமே செஞ்சுக்காம இருந்திட போறேன் என்றான் மணி. 

இதை கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற குமரகுரு, திரும்பவும் செருப்பை மாட்டிகொண்டு விறு விறுவென்று தன் வீடு நோக்கி நடந்தார். உள்ளே நுழைந்ததும், ராஜி ராஜி, கொஞ்சம் இங்கே கொஞ்சம் வா என்றார். 

என்னங்க அவ்ளோ அவசரம் என்ற ராஜியை பார்த்து, இங்கே பாரு ராஜி - ரேகா கல்யாணத்துக்கு இப்போ ஒன்னும் அவசரம் இல்லே, முதல்லே அவ படிப்பை முடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் வேளைக்கு போகட்டும். அப்புறமா அவ கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம். இப்போ நம்ம மணிக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வெக்கணும் என்றார். 

உங்களுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க என்று கூறிய மனைவி ராஜியை பார்த்து - இத்தனை வருஷம் நீ சொல்றதை நான் கேட்டுட்டேன், இந்த தடவை நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு என்று அழுத்தமாக கணீரென்ற குரலில் கூறினார்.

Monday, July 25, 2011

சார் கொஞ்சம் லைன்லே வாங்க ப்ளீஸ்...


இது கொஞ்சம் புலம்பல் டைப் பதிவு. நான் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழம்பி போய் தான் இதை எழுதுகிறேன். சரி விஷத்திற்கு வருகிறேன். மற்ற எந்த விஷயத்தையும் விட யாராவது வரிசையில் நிற்காமல் முன்னே நுழைய முயற்சித்தால் எனக்கு கொஞ்சம் கோபம் வருகிறது. கொஞ்சம் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக, சம்பத்தப்பட்ட நபரை அழைத்து வரிசையில் வருமாறு  கூறினால், ஒரு சிலர் என்னை ஒரு கிண்டலான பார்வை பார்த்து விட்டு முன்னே சென்று நின்று கொள்வார்கள். இது கூட பரவாயில்லை, ஒரு சிலர் நான் ஒழுங்கா தான் லைன்லே வரேன், நீதான் முன்னாடி வந்து நிற்கிறே என்று விவாதம் செய்வார்கள். இது எதோ சினிமா தியேட்டரில் அல்லது ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் போன்ற இடத்தில் மட்டும் அல்லாமல்,  விமான நிலையத்தில் - மெத்த படித்த மேதாவிகள் போல் தோற்றம் அளிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களிடம் கூட நடக்கிறது. வரிசையில் நிற்காமல் முன்னே செல்பவர்களை அந்த சேவையை அளிக்கும் சிப்பந்திகளும் ஒன்றும் சொல்வதில்லை. வரிசையில் நிற்காமல் பல திசைகளில் இருந்து ஊர்ந்து வந்து அனைவரும் உள்ளே நிழைய முயற்சிப்பதை பார்க்கும் போது மகா எரிச்சலாக உள்ளது. 

இது வரிசையில் நிற்காமல் செல்லும் வழக்கம் தான் பல இடங்களில் சட்டத்தை மீற காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. போக்குவரத்தில் முந்துவது, முண்டியடித்து கொண்டு நடப்பது என கூறிக்கொண்டே போகலாம். முடிந்தவரை அவர்களிடம் பேசி அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தாலும், ஒரு சில நேரத்தில் அட போங்கடா எப்படியோ என்று அடக்கி வாசிக்க தோன்றுகிறது. நான் எல்லா விஷயத்திலும் பெர்பெக்ட் கிடையாது தான், ஆனாலும் நாம் சரின்னு நினைப்பதை எடுத்து சொல்லி, அது ஒருவரையாவது மாற்றாதா என்கிற நப்பாசையில் என் முயற்சியை விக்ரமாதித்தன் போல தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை ஊரோடு ஒத்து வாழ் என்பதை பின்பற்றாமல், நான் தான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்றனோ...நீங்களே சொல்லுங்க...

Saturday, July 23, 2011

நான் யோசிச்ச (அட நிஜமாங்க) பத்து


அமர்க்களம் படத்தில் வரும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலை போல, இதை எல்லாம் நம் தமிழ்நாட்டில் மக்களிடம் கேட்கலாம் என்று நான் நினைத்ததை இங்கு பட்டியலிடுகிறேன். இது எதோ வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து, இங்குள்ள குறைகளை கேலி செய்யும் எண்ணத்தில் கூறவில்லை. நம் மக்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டால் மேலும் நன்றாக இருக்குமே என்று என் மனதிற்குள் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு தான். 

  • எந்த ஒரு இடத்திலும் வரிசையில் நின்றால்...
  • அனைவரும் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடித்தால்...
  • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமாவது வழி விட்டு முன்னே செல்ல அனுமதித்தால்...
  • செல்போனில் சத்தமாக நம் காதுக்கு அருகே வந்து பேசாமல் இருந்தால்...
  • குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போட்டால்...
  • பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்றவைகளை செய்யாமல் இருந்தால்...
  • வாடிக்கையாளர்கள் சேவையை குறித்த நேரத்தில் சரியாக செய்து கொடுத்தால்...
  • தமிழ் தெரிந்தும் தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதை குறைத்தால்...
  • முடிந்தவரை சட்டத்தை மதித்தும், பணம் மற்றும் அதிகார பலத்தால் அதை வளைக்காமல் இருந்தால்...
  • நம்மை விட பண வசதியில் குறைந்தவர்களையும் சக மனிதர்களாக மதித்தால்...
இந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, July 9, 2011

இந்திய பயணம்

இங்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போ போன் பண்ணினாலும் நம்ம மக்கள் கேட்கிற ஒரு முக்கியமான கேள்வி, எப்போ இங்கே வரீங்க என்பது தான். நாமும் இந்த வருஷம் வரணும்னு ஒவ்வொரு வருசமும் சொல்லிக்கிட்டு இருப்போம். சரி சரி, சீக்கிரமா வாங்க, புள்ளைங்களை எல்லாம் தேடுது என்று நம்பிக்கையுடன் சொல்பவர்களை பார்த்து நம் மைன்ட் வாய்ஸ் இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்கு என்று கேட்க்கும். ஒரு சில புத்திசாலி இளவட்டங்கள் நேரடியாக - ஆமாம் எப்ப கேட்டாலும் இதே பதில் தான் சொல்றீங்க என்று மனதில் உள்ளதை தைரியமாக சொல்வார்கள். ஆமாம் அதுவும் சரிதான், நாம் ஏன் இப்படி பண்றோம்னு யோசிச்சு மனசுல தோணினதை இங்கே எழுதுறேன்.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளி விடுமுறையின் போது, இந்த வருஷம் இந்தியா போயிட்டு வரலாமாப்பா என்று வீட்டில் தங்கமணி ஒரு கேள்வி எழுப்புவார். நானும் சரி பாக்கலாம் என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு, அதை பற்றி மெதுவாக மனதில் அசை போட்டுகொண்டு அலுவலக வேலையோ அல்லது வீட்டு வேலையோ எதாவது ஒன்றில் மூழ்கி விடுவேன். அமெரிக்கா வந்த புதிதில் பல வருடங்களாக இங்கு வாழும் இந்தியர்களிடம் பேசும்போது நான் இந்தியா போய் ஐஞ்சு வருஷம் ஆச்சு, பத்து வருஷம் ஆச்சு என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி தான் அவ்ளோ நாள் இந்தியா பக்கம் போகாம இருக்காங்களோ என்று தோன்றும். ஒரு சிலரிடம் ஏங்க அவ்ளோ நாளா போகலே என்று கேட்டால், கிரீன் கார்டு போட்டு இருக்கோம், லீவ் இல்லை, குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே என்று ஏதாவது ஒரு பதில் வரும். இதை போன்ற பதில்களை கேட்கும் போது, நம் மனம் எப்படி 'Decision making' செய்கிறது என்பதை பற்றி படித்த புத்தக வரிகள் நியாபகம் வரும். பொதுவாக நாம் உள் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதற்கு ஏற்றமாதிரி ஆயிரம் காரணங்களை நம் மனம் அடுக்கி அந்த முடிவு சரி தான் என்று நம்மை சமாதானப்படுத்தும். அது தான் இங்கும் நடக்கிறதோ என்று தோன்றும்.

இங்கு வந்த புதிதில் வருஷத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒன்றரை வருஷத்துக்கு ஒரு முறையோ என்று இருந்த இந்திய பயணம், சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் இந்திய பயணம் என்று ஆகிவிடும். இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும், பலர் சொல்லும் முக்கியமான காரணம் பள்ளி விடுமுறை மற்றும் பயண செலவு தான்.  குழந்தைகள் வளரத்துவங்கி பள்ளி செல்லும் கால கட்டத்தில், இந்திய பயணம் என்பது பள்ளியின் கோடை விடுமுறையான ஜூன் தொடங்கி ஆகஸ்ட்-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரி கிட்டத்தட்ட மூணு மாசம் லீவ் இருக்கே அதுலே ஒரு மாசமாவது போயிட்டு வரலாமேன்னு கேட்டீங்கனா, அதுக்கு பதில் பிளைட் டிக்கெட் ரேட் தான். எல்லாருமே இந்த மூணு மாசத்துக்குள்ளே பயணம் செய்ய விரும்புவதால் பிளைட் டிக்கெட் எல்லாம் யானை வேலை சொல்லுவானுங்க. டிக்கெட் ரேட் தவிர இந்தியா போய் ஆகிற செலவு தனி. அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால் - சலூனில் போய் சவரம் செய்து விட்டு எவ்வளவு ஆச்சுங்க என்று கேட்டால் கூட, குடுங்க சார், நீங்களே பார்த்து குடுங்க என்று நம் சுயமரியாதைக்கு சவால் விடுவார். அது மட்டும் இல்லாமல் இந்தியா போகும் போது 'இண்டியா ஷாப்பிங்' என்று கூறி ஒரு இங்கு வாழும் நம் மக்கள் ஒரு அலப்பறை குடுப்பார்கள் பாருங்கள்...எப்பா தலையே சுத்தும். பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தன் பெருமையை பெரிதாக அவர்கள் வாழும் ஊரில் காட்ட முடியாது, இந்த மாதிரி இந்திய பயணத்தின் போது தான், என் இந்திய மண்ணில் நடந்து போன இடத்தில் கூட, ஒரு பத்து நிமிடமாவது சென்ட் வாசனை வீச வேண்டும் என்கிற ரேஞ்சில் விலை கொடுத்து பொருட்கள் வாங்குவார்கள். தனக்கு ஷாப்பிங் செய்வதோடு இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எதாவது வாங்கி போக வேண்டும். இப்படி செலவு கணக்கை போட்டு - சொப்பா இப்பவே கண்ண கட்டுதே என்று சிலர் இந்திய பயணத்திற்கு கல்தா குடுத்துவிடுவதும் உண்டு. இது புலி வாலை புடிச்ச கதை தான், பணம் சம்பாரிக்க வெளிநாட்டுக்கு வந்து, நம்ம சொந்தங்களை பாக்க போக கூட யோசிக்க வைக்கிற சமூக மற்றும் பொருளாதார கண்ணாமூச்சிலே மாட்டிகிறோம்.

இப்படி இருந்தா அப்ப எப்பதான் இந்தியா போயிட்டு வருவீங்க என்று நீங்க கேட்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிலருக்கு புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் சாப்பிடாமல் இருந்து அடுத்த மாதம் தொடங்கியதும் ஒரு கட்டு கட்ட ஆசை வரும் பாருங்கள், அதை போல சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் இந்தியா போயே ஆக வேண்டும் என்று ஆசை வரும் - அப்பொழுது மேலே கூறிய காரணங்கள் எல்லாம் தவிடு பொடியாகி,  என்ன டேட் ஆனாலும், என்ன ரேட் ஆனாலும் எட்றா டிக்கெட்டை இந்தியாவுக்கு என்று ஒரு வேகத்தில் டிக்கெட் முடிவு செய்யப்படும். அதன் பின்பு எல்லா ஏர்லைன்ஸ் வெப்சைட்களையும் போட்டு தாக்கி, பல டிராவல் ஏஜென்ட்களுக்கு குடைச்சல் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் எடுத்துருவோம். அப்படி எடுத்து முடித்ததுமே ஒரு வித உற்சாகம் வந்துவிடும். சரி அதே உற்சாகத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிடலாம் என்று முதலில் யாராவது ஒருவருக்கு போன் அடித்து அவருக்கு எப்போது வருகிறோம் எவ்வளவு நாள் தங்குகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நபருக்கு போன் அடித்து ஹலோ என்று சொல்வதற்குள், 'ஆமா, அடுத்த வாரம் வரீங்கன்னு கேள்விப்பட்டேன்' என்று நம்மை அதிர வைப்பார். இந்தியாவின் தொலைதொடர்ப்பு விஞ்ஞான வளர்ச்சியை பற்றி வியந்துகொண்டிருக்கும் போதே - அவனுக்கு தெரியுது, எங்களுக்கு எல்லாம் முதல்ல சொல்ல மாட்டீங்க என்று சற்று கோபத்துடன் கூறுவார். நாம் மனதிற்குள் ஐயா வடை யாருக்காவது ஒருத்தருக்கு தான் முதல்லே கிடைக்கும் என்று நினைத்துகொண்டு, ஹி ஹி...நான் உங்களுக்கு தான் முதல்லே போட்டேன், லைன் கிடைக்கலேன்னு அவருக்கு பண்ணி சொன்னேன் என்று ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டிவரும். 

என்னதான் சொல்லுங்க, இத்தனையையும் தாண்டி தமிழ்நாட்டிலே காலடி எடுத்து வைத்ததும் ஒரு சூப்பர் பீலிங் வருங்க. என்னை பொருத்தவரை சுத்தி இருக்குற மக்கள் யாருகிட்டே வேணும்னாலும் தமிழ்லே பேசலாம் என்கிற நினைப்பே ஒருவித போதை தான். நாம என்ன நினைச்சு என்ன ஆக போகுது...தமிழ்நாட்டிலே போஸ்ட் ஆபீஸ் போனா கூட - எஸ், வாட் டூ யு வான்ட் -னு கேக்குறாங்க. என்ன பண்ண தமிழ் நாட்டிலே தமிழ் பேசாததை பத்தி முன்பு தமிழா தமிளா என்கிற பதிவில் குமுறி இருக்கிறேன். அங்கே போய் சேர்ந்து ரெண்டாவது நாளே, நம்ம சொந்த பந்தங்கள் இத்தனை நாள் போனில் கேட்க முடியாமல், மனசுக்குள் பூட்டி வைத்திருந்த அனைத்தையும் எடுத்து நம் முன் வீச - நம்ம வாயும் சும்மா இருக்குமா, பெரிய நாட்டாமை மாதிரி எதாவது ஏடாகூடமா சொல்ல, அது சண்டையிலே போய் முடியும். என்ன தான் இருந்தாலும் நம்ம ஆளுங்க கிட்டே இருக்குற நல்ல குணம் என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்ச நாள்லே மறந்துட்டு திரும்பி சகஜமா பேச ஆரம்பிச்சிருவாங்க. யாரவது ஏன்னு கேட்டா என்னோட மாப்ளை கிட்டே நான் சண்டை போடாம வேறே யாரு போடுவா என்று பதில் வரும். சும்மாவா சொன்னாங்க - குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லைன்னு.  ஆனா ஒன்னு, நம்ம உறவுங்க மற்றும் நண்பர்கள் கூட இருந்து பழைய கதைகளை பேசி மனசு விட்டு பேசி சிரிக்கிறது இருக்கே அதுக்கு ஈடு இணை கிடையாது. அந்த சந்தோசத்திலே திளைத்துகிட்டு இருக்கும் போதே நம்ம திரும்பி கிளம்ப வேண்டிய நாள் வந்துரும். ஆனாலும் அந்த நினைவுகளை சுமந்து அடுத்த ட்ரிப் வரும் வரை ஓட்டலாம். 

பின் குறிப்பு:

ஒரு முக்கியமான விஷயம் மகாஜனங்களே, இது யாரையும் மனசுல நினைச்சுட்டு போட்டு தாக்க எழுதவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் இந்தியா போக இருப்பதால், சும்மா எதோ மனசுல தோணினதை எழுதி இருக்கேன். இதுலே சொல்ற பல விஷயங்கள் நானும் பண்ணி இருக்கேன் அண்ட் பண்றேன். தப்பா நினைச்சுக்காம காமடியா நினைச்சிக்கோங்க.

Saturday, June 25, 2011

தினைத் துணை - சிறுகதை


ஞாயிற்றுகிழமை சாயங்காலம் சினிமா தியேட்டர் -ல் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிவாவின் செல்போன் ஒலித்தது. போனில் நவீன்...மாப்ளே, நம்ம குமாரை பாத்தேண்டா,  மலேசியாலே இருந்து நேத்து தான் வந்தானாம், உன்கிட்டே எதோ பண விஷயமா உடனே பேசணும்னு போன் நம்பர் கேட்டான். உன்னோட வீட்டு நம்பரும், செல் நம்பரும் குடுத்திருக்கேன்.

நீ ஏண்டா போன் நம்பரை அவனுக்கு குடுத்தே, நானே அவன் கூட பேசி வருஷ கணக்குல ஆச்சு...எப்பவும் பணம் கேட்டு என்னை நச்சரிப்பான்...இப்போ தான் கொஞ்ச நாளா அவன் தொல்லை இல்லாமல் இருந்தேன்.

இல்லடா சிவா, பாக்க பாவாமா இருந்தது, நீயும் அவனும் தானே ஸ்கூல்லே இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ்...ஏதாவது பிரச்சனையோ என்னமோ, என்கிட்டே சொல்ல தயங்குறான், அதான் உன் நம்பரை கொடுத்தேன்.

சார், நீங்க போன் பேசணும்னா கொஞ்சம் வெளிலே போய் பேசுங்க, இங்கே உக்காந்து பேசி ஏன் எல்லாருக்கும் தொல்லை குடுக்குறீங்க, பின்னால் இருந்து ஒரு குரல் வர...சற்று மெதுவாக...நவீன்...நான் இப்போ தியேட்டர் -லே இருக்கேன், அப்புறம் உனக்கு கால் பண்ணுறேன்...வெச்சுரு.  போனை வைத்த பின்னர் படத்தில் கவனமே ஓடவில்லை. இப்போ எதுக்கு இவன் பேசணும்னு சொல்றான் என்று குமாரின் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

சிவாவின் குடும்பம் விருதுநகரில் ஓரளவு வசதியான குடும்பம். அப்பா சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்தார்.  தாயார் வீட்டின் அருகிலேயே அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்தார். வீட்டின் அருகே இருந்த காரணத்தால் அதே பள்ளியில் சிவாவை சேர்த்து படிக்க வைத்தனர். அந்த பள்ளியில் தான் குமார் சிவாவின் நட்பு சிறு வயதிலேயே துளிர் விட துவங்கியது. குமாரின் தந்தை கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளியாக இருந்தார். குமாரும் தன் குடும்பத்தின் நிலை உணர்ந்து நன்றாக படித்தான். வகுப்பில் எப்போதும் அவன்தான் முதல் ரேங்க் வருவான். படிப்பிலும் விளையாட்டிலும் சரி குமார் பல நேரங்களில் சிவாவிற்கு குருவாக இருந்திருக்கிறான். கணக்கு அறிவியல் என பாடத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல் விளையாட்டில் பம்பரம் விடுவது, கில்லி விளையாடுவது, கிரிக்கெட்டில் ஸ்பின் போடுவது என பலவற்றை சிவாவிற்கு சொல்லிக்கொடுப்பான். சிவாவும் புத்தகங்கள், பென்சில், பேனா, விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள், தீபாவளி பட்டாசு என எல்லாவற்றையும் குமாருடன் பகிர்ந்து கொள்வான்.  இப்படி இருவரும் பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தனர். பள்ளிபடிப்பு முடிந்து  சிவா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சேர்ந்தான். சிவாவை விட ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றும் குமார் வசதி மற்றும் அவன் தந்தை உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதன் பிறகு இருவருக்கும் தொடர்பு அவ்வளவாக இல்லாமல் போனது. அவ்வபோது எதாவது அவசரத்தேவை என்றால் சிவாவிடம் வந்து பணம் வாங்கி செல்வான் குமார். ஆனால் கண்டிப்பாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவான். சிவாவும் முகம் சுழிக்காமல் முடிந்த அளவு அவனுக்கு உதவி வந்திருக்கிறான். கல்லூரி படிப்பு முடிந்து சிவா சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி -ல் சேர்ந்துவிட, குமாரிடம் நட்பு மேலும் படிபடியாக குறைந்தது. சிறு வயதில் பணம், அந்தஸ்து என்று பார்க்காமல் இருந்த சிவாவின் மனம் ஏனோ சற்று மாற தொடங்கியது. நகர வாழ்கையும் அங்கு கிடைத்த நட்பு வட்டாரத்தின் கவர்ச்சியும் குமாரின் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அவ்வபோது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தொலைபேசியில் அழைப்பதை கூட நிறுத்திவிட்டான். இதனிடையே குமார் யார் கையை காலையோ பிடித்து  மலேசியாவில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தான். அவன் மலேசியா செல்வதற்கு முன்பணமாக கட்ட வேண்டிய இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை, சிவாவை சந்தித்து பேசி கடனாக வாங்கி இருந்தான். மலேசியா சென்றதும் எப்படியாவது உடனே பணத்தை திருப்பி கொடுக்கிறேன் எனகூறி சென்றவன்தான், அதன் பின்னர் ஓரிரு முறை அழைத்து பேசி இருக்கிறானே தவிர அதன் பின்னர் பேசவும் இல்லை பணத்தை திருப்பி அனுப்பவும் இல்லை. சிவாவை பொறுத்த வரை இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும்,  நண்பன் ஏமாற்றி விட்டானோ என்று ஒரு சிறு எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் ஒடி விட்டது.

இவ்வளவு நாட்கள் ஒரு தொடர்பும் இல்லாமல் இப்போது மட்டும் எங்கிருந்து இவனுக்கு என் நினைப்பு வந்தது என்று சிவா தன் மனதில் கோபபட்டுகொண்டே காரை ஒட்டியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சிவா எண்டா இவ்வளவு லேட்டு, உன்  பிரெண்ட் குமார் போன் பண்ணி இருந்தான் என்னமோ உன்னை அர்ஜண்டா பாக்கணுமாம், நீ வந்ததும் போன் பண்ண சொன்னான் என்று அப்பா கூறினார். பாத்துடா அவன் பாட்டுக்கு ஏதாவது பணம் வேணும்னு வந்து நிக்க போறான். ஏற்கனவே அவனுக்கு பணம் கொடுத்து ஏமாந்திருக்கே, இனிமேலும் ஏமாறாதே.  நீயே இப்பதான் ஒரு வேலைலே சேர்ந்து சுயமா நாலு காசு சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கே. நீ உன் இஷ்டத்துக்கு பணத்தை தூக்கி கொடுக்காதே என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்தார். அதெல்லாம் இல்லப்பா, நான் பாத்துக்குறேன். ஏற்கனவே ஸ்கூல் படிக்குற காலத்திலே இருந்து நிறைய அவனுக்கு செஞ்சிருக்கேன். இனிமேல் சும்மா அவனுக்கு கொடுக்க முடியாது. அவன் கிட்டே பேசும்போது கட் அண்ட் ரைட்டா சொல்லிடுறேன்.

அடுத்தநாள் காலையில் சிவா அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் போது அவன் செல்போன்  ஒலித்தது. எடுத்து ஹலோ என்றதும், டேய் சிவா, நான் குமார் பேசுறேன்டா, எப்படி இருக்கே...பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடா...உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஈவ்னிங் எங்கயாவது மீட் பண்ணலாமா ? என்று கேட்டவனிடம் சரி ஒரு ஆறு மணிக்குமேலே போன் பண்ணு, நான் ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாம்.

என்ன இவன் போன்லே ஒன்னும் சொல்லாம நேர்லே பேசணும்னு சொல்றானே, எதோ பெரிய அமௌன்ட் கேக்க போறான் போல இருக்கு. இனிமேல் முன்ன மாதிரி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிற வேண்டியது தான். எதோ சின்ன வயசிலே இருந்து கூடவே பழகிட்டானேனு கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் கொடுத்தது போதும் இதுக்கு மேலே இவன் கேட்கும் போதெல்லாம் தூக்கி கொடுக்க முடியாது என்று மனதிற்குள் சிவா குமுறிக்கொண்டிருந்தான். மாலை மணி 6:15, சிவாவின் செல்போன் ஒலித்தது. சிவா போன் எடுத்து ஹலோ என்றான். ஹலோ சிவா, குமார் பேசுறேன்டா, ஆறு மணிக்கு மேலே போன் பண்ண சொன்னியே...இன்னிக்கு ப்ரீயா, மீட் பண்ணலாமா என்றான். ஓ ஆமாம் குமார்...மறந்தே போய்டேன்...நீ என்ன பண்ணு, ஒரு ஏழு மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வந்துரு, நான் என்டரன்ஸ் கிட்டே வெயிட் பண்றேன், ஆனா அரைமணி நேரத்துக்கு மேலே பேச முடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கு என்று சற்று கண்டிப்பாக கூறினான் சிவா.

இல்லடா அரைமணி நேரம் போதும்...ஆனா முக்கியமான விஷயம், எங்கயும் போகாம வெயிட் பண்ணுடா.

மணி ஏழு பதினைந்து.  ஸ்பென்சர் பிளாசா.  சிவா பொறுமையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன இவன், என்னை ஏழு மணிக்கு வர சொல்லிவிட்டு இன்னும் இவனை காணும். இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணலாம், அவன் வரலேனா கிளம்பி போய்டே இருக்க வேண்டியதுதான். இவனை எல்லாம் மதிச்சி இங்கே வந்து வெயிட் பண்றேன், இவன் என்னடான இவ்வளவு லேட்டா வரான். இப்படி சிவா கோபப்பட்டு கொண்டிக்கும் போதே குமார் அங்கு வந்து சேர்ந்தான்.

சாரிடா சிவா, டிராபிக் அதான் கொஞ்சம் லேட் ஆச்சு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றான்.
ஏண்டா, இருபது நிமிஷமா வெயிட் பண்றேன், நான் அர்ஜண்டா போகணும்னு சொன்னேன் இல்லே. சரி சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்னு என்று படபடத்தான் சிவா.

என்ன சிவா, இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், எப்படி இருக்கேன்னு கூட ஒரு வார்த்தை கேட்காம...நீ என்னடான கால்லே சுடு தண்ணி ஊத்தினா மாதிரி பறக்குறே...

சாரிடா கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்,  சரி, என்ன விஷயம் சொல்லு...என்றான் சிவா.

நான் மலேசியாலே இருந்து இங்கேயே செட்டில் ஆகலாம்னு வந்துட்டேன்டா, நாளைக்கு கோயம்பத்தூர் போறேன், அதுக்கு முன்னாடி உன்னை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.

தெரியும்டா உனக்கு இப்போ பணம் தேவைப்படும்...அதான் என்னோட நினைப்பு வந்துருச்சு உனக்கு, இத்தனை நாள் எங்கடா இருந்தே, ஒரு கஷ்டம்னதும் கொஞ்சம் கூட வெக்கபடாம என்கிட்டே வந்து நிக்கிறியே... சாரிடா குமார், நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியுது...என்னாலே இப்போ ஏதும் உனக்கு பண உதவி செய்ய முடியாது. ஏற்கனவே உனக்கு நான் எவ்வளவோ செஞ்சுட்டேன், இனிமேல் என்னாலே உனக்கு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் லைப் இருக்கு, புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன்...சாரி...நான் கிளம்புறேன்.

குமார் ஒரு நிமிடம் வாயடைத்து போய் கண்கள் குளமாக நின்றான். அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க முயன்ற சிவாவை பார்த்து ஓடினான். சிவா, சிவா...ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசணும்டா, ப்ளீஸ் என்று தடுத்து நிறுத்தினான்...நான் சின்ன வயசிலே இருந்து உதவின்னு உன்னை தவிர வேற யார் கிட்டேயும் போய் கேட்டதில்லை. நீயும் நானும் சேர்ந்து வளர்ந்த உரிமையிலே தான் எப்பவும் உன்கிட்டே எனக்கு கஷ்டம்னா வந்து நிற்பேன். உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்து இருக்கேன்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியலேடா. மலேசியாவுக்கு வேலைக்கு போய் உன்கிட்டே வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா என்னோட விதி நான் நெனைச்ச மாதிரி வேலை அமையலே, சம்பளம் இல்லாம, சில நேரம் சாப்பாடு தூக்கம் இல்லாம ரெண்டு வருஷமா கஷ்டப்பட்டேன். உன்கிட்டே தரேன்னு சொன்ன பணத்தையும் தர முடியலே, வீட்டுக்கும் பணம் அனுப்ப முடியலே, இப்படி பல பிரச்சனைகளில் மாட்டிகிட்டேன். சரி விடு நடந்ததை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...ஆனா...இப்போ உன்கிட்டே பணம் வேணும்னு கேக்க வரலே சிவா. நான் மலேசியாவுலே இருக்கும் போது ஒருநாள் எதேச்சையா வாங்கின ஒரு லாட்டரி சீட்டுலே எனக்கு இருபது கோடி ரூபா விழுந்துது. அந்த பணம் கிடைச்சதும் முதல்லே உனக்கு தான் சொல்லனும்னு இங்கே கிளம்பி வந்தேன். என்னை பொருத்தவரைக்கும் நான் இன்னிக்கு இந்த நிலையிலே இருக்குறதுக்கு காரணம் நீ தான் சிவா. அதுக்கு கைமாறா என்னாலே எதுவுமே செய்ய முடியாது. நான் இது வரைக்கும் உனக்கு எதுவுமே கொடுத்ததில்லை. இந்த பெட்டிலே ஒரு கோடி ரூபா கேஷ் வெச்சு இருக்கேன், கூடவே ஒரு பிளான்க் செக்கும் வெச்சு இருக்கேன். நீ எவ்வளவு வேணும்னாலும் எழுதிக்கோ...தயவு செய்து மறுக்காம வாங்கிகோடா சிவா என்று நா தழுதழுக்க கூறி பெட்டியை கையில் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் சிலையாக நின்ற சிவா, அங்கிருந்து மெதுவாக நடந்து செல்லும் போது எதிரே ஒரு புத்தக கடையில் சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறள் என்று எழுதி அதன் கீழே எழுதி இருந்த குறள் தெரிந்தது.

தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார்.

Saturday, June 11, 2011

பொய்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்,  பொய்மையும் வாய்மை இடத்து  போன்ற வரிகளை பார்க்கும் போது,  நல்ல விஷயத்திற்காக ஒரு பொய் இல்லை பல பொய்கள் கூட  சொல்லலாம் என்று அறியலாம். ஆனால் பொய் சொல்வது தவறு என்று பல சான்றோர்கள் கூறவும், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது போன்ற பழமொழிகளில் இருந்தும் அறிகிறோம். அதனால் இந்த பதிவு பொய் சொல்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவோ அல்லது யாரும் பொய் சொல்லகூடாது என்கிற போதனையோ அல்ல. ஏன் பொய் சொல்கிறோம் என்கிற ஒரு அலசல் மட்டுமே. இங்கு 'சொல்கிறோம்' என்று உங்களையும் ஒரு உரிமையுடன் என்னுடன் சேர்த்து கொள்கிறேன். அப்படி நீங்கள் இதுவரை பொய்யே சொல்லதவராக இருந்தால், ப்ளீஸ் இதற்கு மேலே நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஏனென்றால் இதை படித்துவிட்டு நீங்கள் கெட்டுபோய் விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். முதலில் முக்கியமாக ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேன். இதை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயப்படுத்த எழுதவில்லை. பல நாட்களாக மனதில் நினைத்து கொண்டிருந்ததை இப்போது எழுதுகிறேன்.  சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொய் சொல்லி இருப்பார்கள்.  பொதுவாக பொய்யை சுயநலம் காரணமாகவோ அல்லது பயம் காரணமாகவோ சிறு வயதிலேயே கூற பழகி விடுகிறோம். சிறு வயதில் தவறு செய்து பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ இருந்து தப்பிக்க கூறும் சிறு சிறு பொய்களில் இருந்தே பொய்யெனும் குன்றா விளக்கை நாம் ஏற்ற துவங்கிவிடுகிறோம். இப்படி தொடங்கி பின்னர் வளர்ந்து வயது வந்ததும் அந்த அந்த நிலைக்கு ஏற்ப பல நேரங்களில் பொய் சொல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறோம். திருக்குறள் தொடங்கி பல சமய நூல்களில் கூட நல்ல விசயத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற கருத்து நமக்குள் திணிக்கபடுகிறது. பொதுவாக நன்மை தீமை என்பது அவரவர் நிலையில் இருந்து வேறுபடும். இதற்கு உதாரணமாக 'ஹே ராம்' என்ற திரைப்படத்தில் வரும் வசன வரிகளை கூறலாம். ஒரு ஓநாய் சிறிய குழந்தையை தூக்கிகொண்டு போனால் அது தவறில்லையா என்ற கேள்விக்கு அது அந்த ஓநாயாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் என்று பதில் வரும்.  மனிதனோ அல்லது விலங்கினமோ தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இயற்கையே கற்று கொடுத்திருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இங்கு சுயநலம் என்பது உயிர் வாழ்வது என்கிற மிக அடிபடையான உரிமையையே குறிக்கிறது.  கற்கால மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டு தன் உணவை தானே வேட்டையாடி உண்ணும் நிலையில் இருந்து பரிணாம வளர்ச்சியால்  இன்று  சமூகம், அறிவியல், அன்பு, காதல், குடும்பம், உறவு, நட்பு இப்படி பலவற்றை சொல்லிகொண்டே போகும் அளவில் பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறான்.

இப்படி வளர்ச்சி பெற்ற மனித இனம் தன் இனத்திற்கே செய்யும் தாக்குதல்கள் பல இருந்தாலும், அன்றாட வாழ்வில் உள்ள  சமூக உறவில் காணப்படும் பொய்யை பற்றி மட்டும் பார்ப்போம். நாம் பல நேரங்களில் சூழ்நிலைக்கு தக்கவாறு பொய் சொல்லி தப்பித்துகொள்ள முயல்வோம். இதில் மிக  முக்கியமாக சுய விருப்பங்களை பாதுகாத்து கொள்ளும் ஒருவித தற்காப்பு உணர்வே தலையோங்கி இருக்கும்.  இத்தகைய பொய்கள் காதலில், உறவில், நட்பில், வேலை பார்க்கும் இடத்தில் என்று பல இடங்களில் இருக்கும். இங்கு காதல், உறவு, நட்பு, வேலை பார்க்கும் இடம் என்ற அனைத்தையும் பொதுவாக உறவு என்று எடுத்து கொள்ளலாம். அடிபடையில் உறவில் ஏன் பொய் வருகிறது என்று பார்த்தால், அது பல நேரங்களில் அந்த உறவை தன்னிடம் தக்கவைத்து கொள்ளும் முயற்சியாக தான் இருக்கும். எங்கே அந்த உறவு நம்மை விட்டு பிரிந்து விடுமோ என்கிற ஒரு வித தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். உதாரணத்திற்கு ஒரு காதலன் தன் காதலியிடம் தான் இதற்கு முன் எந்த பெண்ணுடனும் பழகியது இல்லை என்று பொய் சொல்லலாம். எங்கே தன் பழைய காதலை அவளிடம்  சொன்னால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற பயத்தில் இத்தகைய பொய்யை கூறலாம். இது போன்ற பயமும், அதனால் கிடைக்கபோகும் தண்டனையும் தான் பொய் சொல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் ஒருவருடைய மனது புண்படகூடாது என்பதற்காக பொய் சொல்ல வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு பாட்டு நல்ல பாடுறீங்க, சாம்பார் சூப்பரா இருக்கு, இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு என்ற ரீதியில் சில பொய்களை சொல்ல நாம் தயங்குவதில்லை. இது போன்ற சிறு சிறு விசயங்களில் பொய் சொல்வதால் அந்த உறவு பலப்படுமேயன்றி பாதிக்கப்படாது. ஆனால் மற்ற சிக்கலான விஷயங்களை அடுத்தவர் மனம் புண்படகூடாது என்பதற்காக சில நேரங்களில் பொய் சொல்ல நேரிடும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு, என்றாவது அந்த விஷயம் தெரிய வந்தால்,  நாம் அவர்களுடைய நம்பிக்கையை  இழந்துவிடுவோம். இங்கு ஒருவர் தன்னிடம் நம்பிக்கை வைத்துள்ள மற்றொருவரிடம் பொய் சொல்லும் போது அந்த பொய் அவருக்கு தெரிய வரபோவதில்லை என்று திடமாக நம்புவதால் தான் கூறுகிறார். ஆனால் அந்த பொய் வெளியே தெரிந்தால் அது அந்த உறவை வெகுவாக காயப்படுத்தும். அது மட்டும் அல்லாமல் அந்த பொய் நெடுநாட்களாக வளர்த்த நம்பிக்கையை முறித்துவிடும். அவ்வாறு முறிந்த நம்பிக்கைய மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது மிகுந்த சிரமம், பல வருடங்கள் கூட ஆகலாம். மேலும் சிலர் சமுகத்தில் தன்னை அனைவரும் பெரிதாக மதிக்க வேண்டும் என்று பொய் சொல்வார்கள், எடுத்துக்காட்டாக குமாஸ்தாவாக இருக்கும் ஒருவர் தான் ஒரு பெரிய மேனேஜர் பதவியில் இருப்பது போல காட்டிகொள்வார், சைக்கிள் வைத்து இருக்கும் ஒருவர் பைக் வைத்திருப்பதாக சொல்வார். இப்படி பொய் சொல்லும் காரணங்களை பல விதமாக அடுக்கிகொண்டே போகலாம்.

சரி பொய் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதிலாக ஒரு நிகழ்வையோ அல்லது நிகழாத ஒன்றையோ மாற்றி கூறுவது பொய் என்று வைத்துகொள்வோம். சரி நான் பொய் சொல்லவில்லை, ஆனால் வேண்டும் என்றே உண்மையை மறைத்துவிட்டேன் என்றால் அது பொய் ஆகுமா என்ற கேள்விக்கு என்ன பதில் என்று பல முறை எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு விடை கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.  அதில் முதன்மையானது, அதை பற்றி நான் மறந்துவிட்டேன் என்று சொல்லி சுலபமாக தப்பித்து கொள்ளலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதை பொய் என்று கூற முடியாது. ஆனால் அந்த நிகழ்வை கூறக்கூடிய வகையில் பேச்சோ அல்லது மற்றொரு நிகழ்ச்சியோ நடந்தும், தெரிந்தே அந்த உண்மையை மறைத்திருந்தால் அதுவும் ஒருவகை  பொய் தான். முன்பு கூறியது போல் இதை பொய் என்று ஏற்றுகொள்வதில் அல்லது நிரூபிப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது.  இதில் மேலும் சிக்கலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியதை வெளியில் சொல்லலாமா என்பதாகும். அது சத்தியம், வாக்கு தவறாமை, நேர்மை போன்ற நியதிகளுக்குள் வந்துவிடுகிறது. அந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நேரடியாக ஒருவர் கேட்கும் போது அதை பற்றி தெரியாது என்று கூறிவிடலாம அல்லது உண்மையை போட்டு உடைத்துவிடலாம. அப்படி தெரியாது என்று கூறினால் பொய் சொல்கிறோம் என்று ஆகிவிடும், அப்படியல்லாமல்  உண்மையை கூறினால் நாம் வெளியில் சொல்ல மாட்டோம் என்று கொடுத்த வாக்கு என்ன ஆவது போன்ற பல சிக்கலான கேள்விகள் வரும். இது போன்ற சூழ்நிலையில் கொடுத்த வாக்கை காப்பாற்றி பொய் சொல்வதே நல்லது என்பது என் கருத்து.

பல நேரங்களில் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே  பொய் சொல்ல நேரிடும்.  ஒரு பொய்யை மறைக்க பல பொய்யை சொல்ல வேண்டியதாக இருக்கும் என்பதை போல, சிலர் ஏற்கனவே கூறிய பொய்யை காப்பாற்றுவதற்காக மேலும் பல பொய்களை சொல்லி பொய் சொல்வது பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.  தொழில் ரீதியாகவும்  பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை சிலருக்கு இருக்கும்.  வழக்கறிஞர்கள்  பெரும்பாலான நேரத்தில் பொய் சொல்ல வேண்டி இருக்கும். அது தொழில் தர்மம் என்ற கோட்பாட்டுகள் வந்துவிடும். மற்றபடி வியாபாரிகள் பொருளின் விலையை பற்றி கூறும் பொய்யும் இந்த வகை தான். மொத்தத்தில் பார்த்தால் ஏன் பொய் சொல்கிறோம் என்ற கேள்வியை விட, ஏன் பொய் சொல்லக்கூடாது என்கிற நிலை தான் இன்று இருக்கிறது. அதனால் அவரவர் சூழ்நிலையை பொருத்து சில பல பொய்களை சொல்வது மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானது. ஆனால் உறவுகள் பலப்பட முடிந்த அளவு அந்த உறவில் பொய் கலக்காமல் இருப்பதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடோ மாற்று கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...